உமார் கயாம்/43. தலையிட்டால் கொலை நடக்கும்!

விக்கிமூலம் இலிருந்து

43. தலையிட்டால் கொலை நடக்கும்!

அடுத்த நாள் காலையில் ஊர் முழுவதும் இரவு நிகழ்ச்சியைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது. உண்மையான மதப்பற்றும், அரச பக்தியும் அரசாங்க நலன் கருதும் எண்ணமுமுள்ள ஊழியரான நிசாம் அல்முல்க் அவர்கள், தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதையும் பொருட்படுத்தாமல், சுல்தான் மாலிக்ஷா அவர்களின் இருப்பிடத்திற்கு வந்தார்.

‘என் சுல்தான் அவர்களே! கட்டளையிடுங்கள்! அந்தக் கொலைகாரர்களான ஏழாவது கொள்கைக்காரர்களை வேட்டையாடி, நம் சாம்ராஜ்யத்திலேயே இல்லாமல் தொலைத்து விடுகிறேன். தங்கள் நிழலில் வாழ்வோரிடமே கப்பம் வசூலித்துக் கொண்டு, தங்களுக்கு அறைகூவும் அவர்கள் தலைவன் என்ன ஆகிறானென்று பார்க்கலாம்!’ என்று இறைஞ்சினார்.

‘நான் தொந்தரவு கொடுக்கும் ஒவ்வொரு நாயையும் விரட்டிக் கொண்டிருக்க முடியாது’ என்று சிறிதுகூட நிலைமையை உணராமல் சுல்தான் பதில் அளித்தார்.

நிசாம், அவர்களுடைய கழுகுக்கூட்டைப் பற்றியும், வளர்ச்சியைப் பற்றியும், பயங்கரச் செயல்களைப் பற்றியும் எடுத்துரைத்தார்.

சுல்தானுடைய ஆட்சி வீழ்ந்து புதியஅரசு எழப்போவதாக ஹாஸான் தீர்க்கதரிசனம் கூறியிருப்பதையும் கூறினார். அதற்கு, சுல்தான் ‘ஒவ்வொரு புதிய தீர்க்கதரிசியையும் தீர்த்துக் கொண்டிருப்பதாக இருந்தால் நான் வேட்டையாடுவது எப்போது? மற்ற காரியங்களைச் செய்வது எப்போது’ என்று கேட்டார்.

நிசாம் என்ன சொல்லியும் சுல்தான் கேட்கவில்லை. ஒருமுறை சுல்தான் தன்மீது அவநம்பிக்கை கொண்டபோதே, தன்னுடைய செல்வாக்குப் போய்விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட நிசாம், சலாம் செய்து விடைபெற்றுத் திரும்பிவிட்டார்.

விதியின் சக்கரம் மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. காற்றடித்து அணைந்து போகும் விளக்குகள் போல எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தைவிட்டுப் போயின. புதிய உயிர்கள் தோன்றின. இஸ்பகானிலிருந்த சுல்தான், நிசாப்பூர் நோக்கிப் புறப்பட்டார். நிசாம், பதவியைவிட்டு விலகிவிட்டாலும் தன் குறிப்புப் புத்தகங்களிலே பலபுதிய ஏடுகளை எழுதிக் கொண்டிருந்தார்.

நிசாப்பூருக்குச் செல்லும் வழியிலே சுல்தான் கூடாரம் அடித்திருந்தார். ஒருநாள் அந்தக் கூடாரத்திற்கு நேரே வானத்தில் ஒருவால் நட்சத்திரம் தோன்றியது. உமாரை அழைத்துவரச் சான்னார். இதன் அறிகுறி என்ன என்று கேட்டார். ஏதோ அபாயத்தின் அறிகுறி என்று உமார் சொன்னான்.

சுல்தானுக்கு அபாயமாகத் தோன்றியது ஹாஸான் ஒருவனே! வேறு எந்த அபாயமும் அந்தச்சமயத்தில் இல்லை. எனவே, ஒரு தளபதியை அழைத்து, பட்டாளத்தின் ஒரு பகுதியுடன் சென்று காஸ்வின் நகருக்கு வடக்கேயுள்ள மலைகளில் அமைந்துள்ள கழுகுக்கூடு என்ற கோட்டையை நிர்மூலமாக்கிவிட்டு வரும்படி ஆணையிட்டார்.

நிசாப்பூருக்குச் செல்ல அவருக்குப் பயமாக இருந்தது. எனவே வேட்டையாடும் சாக்கில் கூடாரத்திலேயே தங்கினார். உமாரையும் தன்னைவிட்டுப் பிரியலாகாதென்று ஆணையிட்டார்.

நள்ளிரவிலே அது நடந்தது. பிரபுக்கள் வாழும் பகுதியிலே ஓர் இளைஞன் வந்தான். நிசாம் அல்முல்க் அவர்களுடைய வீட்டைத்தேடிச் சென்று, ஏதோ வேண்டுகோள் விண்ணப்பிக்க வந்திருப்பதாகக் கூறினான். நிசாம் அவர்கள் எதிரில் வந்ததும், மற்றவர்கள் கவனித்துத் தடுக்கும் முன்பாகக் கத்தியால் குத்தி விட்டான். அந்த முதியவர், வாழ்நாளெல்லால் அக்கறை கொண்ட அந்தப்பெரிய மனிதர் வாழ்வின் கதை இவ்வாறாக முடிந்தது.

பிடிபட்ட அந்த இளைஞன் உடல், காவல்காரர்களால் பிய்த்தெறியப்பட்டது. சொர்க்கத்தைப்பற்றி ஏதோ சொல்லிக் கொண்டு அவன் உயிர் விட்டான்.

இதைக் கேள்விப்பட்ட சுல்தான், துர்க்குறியின செயல் இவ்வாறு நிறைவேறிவிட்டது என்று வருத்தத்துடன் கூறினார்.

நிசாமை நினைக்கும்போது அவருக்குத் தாங்கமுடியாத துக்கம் ஏற்பட்டது. நிசாமின் குறிப்பேடுகளைப் படித்துப் பார்த்த அவர் ஏற்கெனவே அனுப்பிய படைகளுடன், மேற்கொண்டு சில படைகளையும் கழுகுக்கூடு நோக்கியனுப்பினார்.

கொலைகாரர்களின் இருப்பிடத்தைக் குலைத்தெறியும்படி உத்தரவிட்டார் நிசாமின் குறிப்புகள் அந்தப் புதிய மதத்தின் பயங்கரத் தன்மையை அவருக்கு நன்றாக உணர்த்தின.

உமாரை நோக்கி,‘ நிசாம் அல்முல்க் உண்மையான ஊழியர். நான் இங்கேயேயிருந்து அவருக்காக ஒருமாதம் துக்கம் கொண்டாடப் போகிறேன். நீ வேண்டுமானால் நிசாப்பூருக்குப் போகலாம்’ என்று கூறிவிட்டார்.

ஹாஸானுடைய கோட்டை தொடர்ந்து தாக்கப்பட்டது. ஏதோ ஒர் இரகசிய வழியாக உள்ளுக்கும் வெளியேயும் மாறி மாறித்திரிந்தான் ஹாஸான். தான் எப்போதும் கோட்டைக்குள்ளேயே இருப்பதாக மற்றவர்களை நம்பவைத்தான். அவனுடைய ஆட்கள், நாடெங்கும், புதிய தூதர் மாறிவரும் நாள் ருங்கிவிட்டதென்று தங்கள் பொய்ப் பிரசாரங்களை நடத்தினார்கள்.

மாலிக்ஷாதான் நிசாமை ஆள் வைத்துக் கொன்றுவிட்டார் என்று சிலர் பேசினார்கள். ஏதோ தெய்வீக சக்திதான் தன் தூதனையனுப்பிக் கொன்றுவிட்டதென்று சிலர் கூறினார்கள்.

நாடெங்கும் பலப்பல வதந்திகள் உலவத் தொடங்கின.