உமார் கயாம்/44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!

விக்கிமூலம் இலிருந்து

44. உலகம் சுற்றவில்லை; உமார், உளறாதே!

விண்மீன் வீட்டிற்கு உமார் திரும்பியதைக் கண்டு, அங்கிருந்த பேராசிரியர்கள் தங்கள் தலைவன் திரும்பிவந்ததற்காக மகிழ்ந்தார்கள்.

உமார் தான் செய்யப்போகும் புதிய ஆராய்ச்சியைப்பற்றி விளக்கிக் கூறியபோது அவர்கள், ‘இது என்ன சாதாரண விஷயம்! இதிலே ஒன்றும் அதிசயமில்லை. விளையாடும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் இது அதிசயமாகத் தென்படலாம்’ என்று கூறினார்கள்.

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வானவெளியில் சுற்றி வருகிறது என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதற்கு வெகு நேரமாகவில்லை, அவர்கள் இந்த விஷயத்தைச் சிறு குழந்தைகள் கூடப்புரிந்து கொள்ளும் என்றார்கள்.

ஆனால் அதை நிரூபிக்க உமார் மிகுந்த உழைப்பைக் கைக்கொண்டான். தன்னுடைய ஆராய்ச்சிக் கூடத்தின் வட்டச் சுவரிலே, வானத்தில் உள்ள இராசிகளின் அடையாளங்களை வரிசையாக எழுதச் செய்தான். அந்தக் கூடத்தின் தளத்தைத் தோண்டியெடுத்து நட்டநடுவிலே ஒரு பெரிய மரத்துணும், அந்தத் துணோடு சேர்ந்த ஒரு வட்டமேடையும் அமைக்கச் செய்தான்.

அந்த மேடைக்குக் கீழே ஆட்கள் நின்று தூணிலே பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு சுற்றினால் அந்த வட்டமேடையும் சுற்றும்படியாக ஓர் இயந்திரம்போல அமைத்தான்.

ஆனால் வட்டமேடை புதிதாகப் பார்ப்பவர்களுக்கு, அது ஒரு மேடை என்று தெரியாதபடி, தரையோடு தரையாக அமைக்கப்பட்டது.

உமாருடைய நண்பன், இந்துவாக இருந்த வேதாத்தி காசாலி இப்போது நிசாப்பூர் கல்லூரி தலைமைப் பேராசிரியனாக இருந்தான். இஸ்லாத்திலே சேர்ந்து பெரும் பெயரும் புகழும் அடைந்து, ‘இஸ்லாத்தின் சான்று’ என்று பெரும் சிறப்புப்பெயர் எடுத்துவிட்டான். அவன் ஒரு கருத்துச் சொன்னால் இஸ்லாமிய உலகம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய அத்தனை பெரிய செல்வாக்கு அடைந்திருந்தான்.

எனவே உமார் அவனுடைய ஆதரவைத் தேடிக் கொண்டால் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு நாடெங்கும் செல்வாக்கு ஏற்பட்டு முல்லாக்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எண்ணினான். அதோடு அந்த வேதாந்த உண்மைகளை ஆய்ந்து ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை வாய்ந்தவன் என்று உமார் ஏற்கெனவே பழகித் தெரிந்து கொண்டிருந்தான். ஆனால் காலப்போக்கு அவனுக்குப் புகழளித்ததோடு மனமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை உமார் அறிந்து கொள்ளவில்லை!

காசாலியின் ஆதரவைப் பெறுவதற்காக அவனுக்கு விஷயத்தை விளங்க வைப்பதற்காக உமார் காசாலியை தன் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அழைத்தான். ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்த பேராசிரியர்கள் காசாலியை சகல மரியாதைகளோடும் வரவேற்றார்கள்.

உமாரும் தன் கையாலேயே அந்த வேதாந்திக்கு சர்பத்தும் பழங்களும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தான்.

வேடிக்கை பார்த்திருந்த கூட்டம் கூடத்திலே ஒரு புறத்திலே உட்கார்ந்திருந்தது. உமார், வேதாந்தியை அழைத்துச்சென்று கூடத்தின் நடுவிலே நிறுத்தி சுவர்ப்புறத்தைக் காண்பித்தான். சுவரில் இருந்த சித்திரங்களைப் பார்த்துக்கொண்டே, அந்த மேடையில் சுற்றிவந்த காசாலி ‘இதென்ன வானவீதியின் அமைப்பு இங்கே மேஷம், ரிஷபம் முதல் மீனம் ஈறாக உள்ள பனிரென்டு இராசிகளை வரைந்திருக்கிறாய். இவற்றைக் காட்டத்தானா என்னை அழைத்து வந்தாய்?’ என்று கேட்டான்.

‘இல்லை, இதோ முதல் இராசியைப் பார்த்துக்கொண்டு நில்லுங்கள், அந்த மேஷத்தையே பார்த்துக் கொண்டு அசையாமல் நில்லுங்கள். ஓர் அடிகூட நகராதீர்கள், பயப்படாமல் நில்லுங்கள், எந்தவிதமான துன்பமும் ஏற்படாது. ஆனால் இந்த இராசிகளும் ஏன் இந்தக் கோட்டை முழுவதுமே தங்களைச் சுற்றிவரப்போகிறது’ என்று கூறிவிட்டு உமார் தன் இருக்கைக்குச் சென்றான்.

கோபுரமாவது, சுற்றுவதாவது உமார் விளையாட்டுக்குச் சொல்லுகிறான் என்று காசாலி நினைத்தான். ஆனால் உமார் தன் இருக்கையில் இருந்தபடியே கைகளைத் தட்டினான். காசாலியின் காலுக்குக் கீழே, ஏதோ கிரீச்சிட்டது. அவன் உடல் ஒரு குலுங்குக் குலுங்கியது. என்ன ஆச்சரியம், கோபுரம் அப்படியே தரையோடு சேர்ந்து சுழலத் தொடங்கியது. நேரம் ஆகஆக வேகமாகச் சுழன்றது, கோபுரத்தோடு சேர்ந்து மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய பன்னிரெண்டு ராசிகளும் சுழன்றன. காசாலி பயந்துபோய்க் கூச்சலிட்டான். ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்பட்டது. காசாலி கீழே விழுந்தான், சுற்றுவதும் நின்றது.

‘ஆய்வல்லா! ஆண்டவனே! உண்மையாகவே இந்தக் கோபுரம் சுழன்றதே!’ என்று வியந்தான்.

அவனுடைய மாணவன் ஒருவன் ‘ஆசிரியரே! கோபுரம் சுழலவில்லை. நீங்கள்தான் சுழன்றீர்கள். நாங்கள் பார்த்தோம்!’ என்று கூறினான்.

‘இல்லை, நான் நகரவேயில்லை.’

நீங்கள் நகரவேயில்லை, நீங்கள் நின்ற இடம் சுழன்றது. இத்தனை பெரிய கட்டிடம் சக்கரம்போல் சுழலுமா? சுழலும்படி செய்யத்தான் முடியுமா? என்று உமார் கூறினான்.

‘நான் நின்ற இடம் எப்படிச் சுழலும்?’

‘இதோ இந்த மரத்துணைக் கீழே இருந்தபடி சுற்றினால் நீங்கள் இருந்த இடம் சக்கரம்போல் சுழலும். நான் கையைத் தட்டியதும், கீழே இருந்த என் வேலைக்காரர்கள் இதை சுழற்றினார்கள்!’

காசாலி, அவமான உணர்ச்சியுடன், ‘நீ ஏன், என்னைக் கூட்டிவந்து இப்படிப் பிள்ளை விளையாட்டுக் காண்பித்தாய்?’ என்று கேட்டான்.

‘ஏனென்றால், இந்த நாட்டிலேயே நீங்கள்தான் பெரிய அறிவாளி. தாங்கள் கண்ணால் கண்டதை உலகத்துக்கு எடுத்துச் சொன்னால், தங்கள் பேச்சை உலகம் காது கொடுத்துக் கேட்கும். முதலில் நீங்கள் நடந்து சுற்றிப் பார்த்தீர்கள். இரண்டாவது தடவை கோபுரம் சுழல்வதுபோல் காட்சியளித்தது, எதனால்?’

‘நான் நகரவில்லை. ஆனால், தந்திரமாக எனக்குத் தெரியாமலே நான் சுழற்றப்பட்டேன். இந்தத் தந்திரம்தான் நீ மதத்துரோகிகளிடம் படித்து வந்த பாடமா?’ என்று கோபத்துடன் காசாலி கேட்டான்.

‘ஒவ்வொருநாள் இரவும், நட்சத்திரக் கூட்டங்கள் உங்களைச்சுற்றி வருவதாகத் தோன்றியது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் அசையவேயில்லை. ஆகையால், நட்சத்திரங்கள் என்னைச்சுற்றி வருகின்றன என்று சொல்கிறீர்கள். ஆனால், உண்மை அதுவல்ல, நட்சத்திரங்கள் அசையவில்லை. அவை இருந்த இடத்திலேயே இருக்கின்றன. நாம் இருக்கும் பூமிதான் வானவீதியில் சுழன்று வருகிறது. ஆனால், அது நமக்குத் தெரியாமல் சுழலுவதால் நாம் நட்சத்திரங்கள் சுற்றுகின்றன என்று எண்ணுகிறோம். உண்மையில் பூமிதான் சுழன்று வருகிறது என்று உமார் விளக்கினான்.

‘இல்லை, வானவெளியில் நடுமத்தியிலே, என்றும் அசையாமல் இருக்கும்படிதான் அல்லா இந்தப் பூமியை ஏற்படுத்தி யிருக்கிறார்!’ என்று காசாலி உறுதியாகக் கூறினான்.

‘இஸ்லாத்தின் சான்று - எங்கள் பேராசிரியர். அவரை உம்முன் மண்டியிடச் செய்வதற்காக நீர் தந்திரம் செய்திருக்கிறீர். வானசாஸ்திரியாரே! வேண்டாம் இந்த விபரீத புத்தி!’ என்று காசாலியின் மாணவன் ஒருவன் கத்தினான்.

‘அல்லாவின் அருளின்படிதான் எல்லாம் நடக்கும். அல்லா, பூமியைச்சுற்றி வரும்படிதான் நட்சத்திரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று மற்றொருவன் கூவினான்.