உமார் கயாம்/6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!

விக்கிமூலம் இலிருந்து

6. பகைவனுக்கருளும் பண்புள்ள சுல்தான்!

அந்த மலைப் பள்ளத்தாக்கின் மறு கோடியிலே சுல்தான் ஆல்ப் அர்சலான் அவர்களுடைய கூடாரம் அடிக்கப்பட்டது.

அந்தக் கூடாரத்தின் வாசலிலே துருக்கி அமீர்கள் கூட்டங் கூட்டமாக வந்து நுழைந்தார்கள். மத்தியிலே விரிக்கப்பட்டிருந்த நடை பாதைச் சமுக்காளத்தின் இருபக்கத்திலும் பலர் குழுமியிருந்தார்கள். நடைபாதைச் சமுக்காளத்தின் ஒரு கோடியிலே இருந்த மூன்று பேரையும் பார்ப்பதற்காக அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் இடித்துக் கொண்டும் தோளுக்குமேல் எட்டிப்பார்த்துக் கொண்டும் நின்றார்கள். அந்த மூன்று பேரும் யார் என்றால், ரோமானஸ் டயஜீன்ஸ் என்ற ரோமானியர்களின் பேரரசர். அந்தப் பேரரசர், போர்க்களத்தில் அடிபட்டு முர்ச்சையுற்றுக் கிடந்தபோது, அவரைக் கண்டு பிடித்துக் கொண்டு வந்து, சுல்தான் காலடியிலே ஒப்படைத்த ஒரு முஸ்லிம் அடிமை, சுல்தான் ஆல்ப் அர்சலான் ஆகியோர்தாம்.

ரோமானஸ் என்ற கிறிஸ்தவப் பேரரசன், சுல்தான் அவர்களின் முன்னாலே மண்டியிட்டு வணங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டார். தலைகுனிந்த தன்னுடைய அரசியல் கைதியின் கழுத்தின்மேலே தன் காலடியைத் தூக்கி ஒருமுறை வைத்தெடுத்த பிறகு அவரை வலப்புறத்திலேயிருந்த ஆசனமெத்தையொன்றில் அமர வைத்தார் சுல்தான். கிழக்கையும் மேற்கையும் ஆளும் அந்தப் பேரரசர்கள் இருவரும் முதன்முதலாக நேருக்கு நேராகப் பேசிக்கொள்வதைப் பார்க்க அங்கு கூடியிருந்தவர்கள் மிக ஆவலாக இருந்தார்கள். சுல்தான் ஆல்ப் அர்சலான், அரசியல் கைதியான அந்தக் கிறிஸ்துவப் பேரரசர் ரோமானஸைப் பார்த்துக்கேட்டார்: “நான் உம்முடைய கைதியாக்கப்பட்டு உம் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தப்பட்டால், நீர் என்னிடம் எவ்வாறு நடந்து கொள்வீர்? சொல்லும்” . இதுதான் அவருடைய கேள்வி.

கேள்வி மொழிபெயர்த்துச் சொல்லப்பட்டதும் ரோமானஸ் சற்றுத் தலைநிமிர்ந்து சிரித்துவிட்டு “தங்களை மிகக் கொடுமையாக நடத்துவேன்” என்றார்.

சுல்தான் அவர்களின் இருண்ட முகத்திலே ஒரு புன்னகை மின்னியது. “இப்பொழுது நான் உம்மை என்ன செய்வேன் என்று எதிர்பார்க்கிறீர்? என்று மறுபடியும் கேட்டார்.

பிடிபட்ட அந்தக் கிறிஸ்துவச் சக்கரவர்த்தி, கூர்மையான தன் எதிரிகளின் முகங்களை ஒருமுறை கவனித்துவிட்டு ஒரு தீர்மானத்திற்கு வந்து பதில் கூறினார்.

“இந்த இடத்திலேயே தாங்கள் என்னை வாளால் சீவிக் கொன்றுவிடலாம், அல்லது தங்களுடைய நாட்டுக்கு என்னை இரும்புச் சங்கிலிகளால் பிணைத்து அழைத்துக்கொண்டு போகலாம், அல்லது என்னிடமிருந்து விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு விடுவிக்கலாம். இம்மூன்றில் எதையாவது செய்வீர்களென்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இந்தக் கிறிஸ்தவச் சக்கரவர்த்தியின் வார்த்தைகள் ஆல்ப் அர்சலான் அவர்களின் உள்ளத்திலே ஒரு விருப்பத்தை உண்டாக்கின. ஆண்மை குறையாத ஒருவனைத் தாம் அடிமைப்படுத்தியதை நினைக்க அவருக்குப் பெருமிதமாக இருந்தது. ரோமாபுரியின் சீஸர் ஒருவனுடைய கழுத்திலே தாம் காலடிவைக்க நேர்ந்தது, அவருக்குப் பெருமையாக இருந்தது.

“நான் உம்மை என்ன செய்வதென்று முடிவு செய்துவிட்டேன், என்ன தெரியுமா? என்று சுல்தான் அவர்கள் கேட்டவுடனே, தகப்பனாருக்குப் பின்னாலே வீற்றிருந்த இளஞ்சிங்கம் முன்னாலே நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கைகள் இடுப்பைத் தடவின. முஸ்லீம்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் இரண்டு அரசர்களுமே இறந்து போவார்களென்றும், சோதிடம் சொல்லப்பட்டதை அவன் மறக்கவில்லை.

சுல்தான் தான் சொல்ல வந்ததைத் தொடர்ந்து “உம்மிடமிருந்து நான் விடுதலைப் பணம் பெற்றுக் கொண்டு, ஆண்டுதோறும் கப்பங்கட்ட வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் பேரில் நான் உம்மை விடுதலை செய்கிறேன். எல்லாவிதமான மரியாதைகளுடனும் படைவீரர்களுடனும் உம்முடைய தேசத்திற்கு நான் உம்மை அனுப்பி வைக்கிறேன்” என்று முடித்தார். இளஞ்சிங்கம் பெருமூச்சு விட்டுக்கொண்டே, தன் இருக்கையில் சாய்ந்தான்.

நிசாப்பூரைச் சேர்ந்த அந்த இளம் மாணவன் அவனுக்குச் சொன்ன சோதிடம் பலிக்க வேண்டுமானால் கிறிஸ்தவ அரசன் அந்த இடத்திலேயே கொலையாளியால் கொல்லப்பட்டிருக்க வேண்டாமோ?

இளஞ்சிங்கத்தின் கனவு - இப்படி ஆயிற்று.