உலகத்தமிழ்/வினாத்தாள் விடவில்லை

விக்கிமூலம் இலிருந்து

2. வினாத்தாள் விடவில்லை

டெஹ்ரானுக்கு தொண்ணூறு கிலோ துாரத்தில் பறக்கும்போது இப்படியொரு அறிவிப்பு வந்தது.

“டெஹ்ரானுக்குத் தொண்ணுாறு கிலோவில் இருக்கிறோம். ஆகவே இறங்கத் தொடங்குகிறோம். 31000 அடியிலிருந்து 19000 அடிக்குச் சில நிமிடங்களில் இறங்கிவிடுவோம். அவரவர் இடத்தில் அமர்ந்து, கச்சைகளைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று அறிவிக்கப் பட்டது.

மிக உயரத்தில் இருந்தாலும், முன்னெச்சரிக்கையாக, முன்னதாகாகவே தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இது பதிய வைத்தது. தன் உணர்ச்சிகளே , தன் நாவைக் கட்டி வைத்தால்தான் சட்டென்று உயரத்தில் இருந்து கிழே இறங்கினாலும் தீங்கு விளையாது. நிலையில் திரியாது பெருமையோடு வாழ முடியும் என்னும் தெளிவு பிறந்தது.

டெஹ்ரானைக் குறித்த நேரத்தில் அடைந்து விட்டோம். டெஹ்ரான் விமான நிலயத்தில், பயணிகள் தங்குமிடத்தில், இளைஞர் இருவர் முன் வந்து, “எவ்வளவு தூரம் செல்கிறிர்கள்?” என்று தமிழில் வினவினர். சென்னை எம். ஐ. டி. யில் பெளதிகத் துறை ஆசிரியராகவுள்ள திரு. வெங்கடேசன் ஒருவர்; மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும், மற்ற கேரம் சாடர்டு அக்கௌண்டண்டாகவும் பணியாற்றும் திரு சந்திரன் மற்றொருவர். இருவரும் 'புல்பிரைட்' உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு மேல்படிப்பிற்குச் செல்கிறார்கள்

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் 9.500 பேர் உள்ளனர். அவர்களுள் எண்ணுாறு, தொள்ளாயிரம் பேர் தமிழ் நாட்டவர். ஆகவே அவர்கள் நம் நாட்டில் இருப்பதாகவே நினைத்துக்கொண்டு அமைதியாகவும் நன்றாகவும் படித்துத் தங்களுக்கு நன்மையும் நாட்டுக்குப் பெருமையும் தேடிக்கொண்டு வர வாழ்த்தினேன். பாடத் திறமையோடு ஆங்கில மொழி அறிவும் நன்றாக இருந்ததால், அவ்விளைஞர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பட்டிக் காட்டுப் பரமசிவன்களுக்கு இவ்வாய்ப்புகள் வேண்டுமே? அவர்கள் ஆங்கில அறிவும் வளர்ந்தால் நன்மை.

டெஹ்ரான் விமான நிலையத்திலே பயணிகள் தங்குமிடத்தில் நான் கண்டதைச் சொல்லவேண்டும் அல்லவா? அங்கே மேனாட்டு நாகரிகம் விரைந்து பரவுகிறது. பெண்களில் பலர், மேனாட்டுப் பெண்களைப் போலக் கெளன் அணிந்திருந்தனர். முழங்காலுக்கு மேல் ஆன கெளன் போட்டுக்கொண்டிருந்த அவர்கள் ஏனோ முக்காடும் போட்டிருந்தார்கள்; 'பர்தா'வின் பயன் எதையும் அந்த முக்காடு கொடுப்பதாகத் தோன்றவில்லை. ஆனாலும் குட்டைக் கௌன் அணிந்திருந்த பெண்கள் அதை ஏன் விடவில்லை? நெடுநாளாகத் தொடரும் பழக்கம், பயன்படாத போதும், நீங்காச் சுமையாகத் தொடர்வதற்கு இது ஒர் எடுத்துக் காட்டாகும்.

முக்காடில்லாத, குட்டைக் கெளன் அணிந்த இளம் பெண்கள் இருவர் பயணிகளிடம் ஆங்கில வினாத்தாள்களை வழங்கினர். காலமெல்லாம், வினாத்தாள்; அது வெளியாகாமல் இருக்க வேண்டுமே; தவறாகாதிருக்க வேண்டுமே; பாடத் திட்டத்திற்கு அப்பால் போகாதிருக்க வேண்டுமே," என்ற கவலையோடு இருக்கும் எனக்கு இது சிறிது எரிச்சலை ஊட்டிற்று. ஆயினும், அதைப் பூர்த்தி செய்து தரும்படி நல்ல ஆங்கில உச்சரிப்போடு இனிமையாக வேண்டியதைத் தட்ட முடியவில்லை. வினாத்தாளைப் பார்த்தேன். பெயர் குறிப்பிடக் கேட்கவில்லை. " எங்கள் ஊரில் தங்குவீர்களா? தங்காவிட்டால் காரணம் என்ன? காலமின் மையா? இங்குள்ள வசதிக்குறைவா? இங்கு உங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை?" இப்படிப்பட்ட கேள்விகள் இருந்தன. நாங்கள் மூவரும்-தமிழர்கள் பதில் எழுதிக்கொடுத்தோம். இரான் நாட்டிற்குப் பயணிகள் வருவதைப் பெருக்குவதற்காக இந்த ஆய்வு என்று குறித்திருந்தார்கள். பெண்கள் இத்தகைய வேலை மட்டுமா செய்கிறார்கள்? துப்புரவுப் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் பெண்கள் செய்யக் கண்டோம். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாவதற்கான இவ்வறிகுறிகள் நம்பிக்கை ஊட்டுவன.

டெஹ்ரானை விட்டுப் புறப்பட்டோம் அங்கு ஆஸ்திரேலியக் குடும்பம் ஒன்று விமானத்தில் ஏறியது. கணவன், மனைவி, நான்கு வயதுப் பையன் ஒரு வயதுக் குழந்தை ஆக நால்வர். பையன் துருதுரு வென்று இருந்தான். என் பக்கத்தில் இருந்த சாளரத்தின் வழியே பார்ப்பதற்காக அருகில் வந்து நின்றன். புதியவனாகிய என்னை எப்படித் தாண்டிப் போவது என்று தயங்கினான். "மாமாவிற்கு 'ஹலோ' சொல்லி விட்டு அனுமதிகேள்" என்று தந்தை ஊக்குவித்தார். "ஹலோ மாமா, சாளரம் வழியே பார்க்கலாமா?" என்று கேட்டான், நான் அனுமதித்தேன். வேடிக்கை பார்த்து அவன் மகிழ்ந்தான்; எனக்குக் காட்டிக்காட்டிப் பூரித்தான். இன்பத்தைத் தனியே துய்க்க முடியுமா!

நாங்கள் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தோம். கீழே கண்ணுக் கெட்டிய தூரம் வெள்ளை வெளேரென்று மேகக் கடல். விமானத்திற்குச் சில அடி உயரத்தில் கருமேகம். இரண்டையும் சுட்டிக்காட்டிச் சிறுவன் சிரித்தான்.

இஸ்தான்புல் நகரத்தின் மேல் 900 கிலோ வேகத்தில் பறக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. அதை எட்டிப் பார்த்துவிட்டு, தந்தையிடமிருந்த நிலப் படத்தில் அந்தரைக் காட்டும்படி கேட்டான். தந்தை படத்தை விரித்தார். சிட்னியைக் காட்டினர். சிங்கப்பூரைக் காட்டினார். வந்த வழியெல்லாம் காட்டிக் கொண்டு . வந்தார். சிறுவன் இயல்பாகக் கற்றான்; எளிதாகக் கற்றான். பத்து வயதுப் பையனான பிறகே நில நூல் பாடத்தில் முதல் முதலாகச் சிட்னியையும் சிங்கப், பூரையும் பற்றிக் கேட்கப் போகிற எங்களுர்ப் பையன் பின்தங்காமல் என் செய்வான்?

ஆஸ்திரேலியர் நான்கு வயது மகனைக் கட்டிப் போடாமல், இங்கும் அங்கும் நின்று காணவும் கேட்கவும் கற்கவும் பொறுமையாக உதவினார். துணை நின்றார், கைக்குழந்தையையும் அப்போதைக்கப்போது ஏந்தி விளயாட்டுக் காட்டிவந்தார். நம் காட்டுத் தந்தையர்களும் இப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, மனைவியின் பொறுப்புகளில் பங்கு ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெஹ்ரானுக்கம் பிராங்க்போர்ட்டிற்கு மிடையில் மீண்டும் ‘தண்ணி’; அப்புறம் பகல் உணவு. மாமிச உணவுத்தட்டை எனக்குக் கொடுக்கமுயன்றார் நான், மரக்கறி உணவினன்’ என்றேன். சில நிமிடங்கள் கழித்து வந்து “மரக்கறி உணவு வரவில்லே. தகவல் இல்லை போலும்” என்று போய்விட்டார் 'பரிமாறுபவர்'. நான் மரக்கறி உணவினன் என்று தில்லிவரை தகவல் கொடுத்தவர்கள், மேற்கொண்டு ஏனோ கொடுக்கவில்லை, அதுவும் நன்மையாகவே முடிந்தது. டெஹ்ரானிலிருந்து பிராங்க்போர்ட்டிற்கும், பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்கும் பட்டினியாகவே பயணம் செய்ததால், செரியாமைக்கு ஆளாகாமல் தப்பினேன்.

டெஹ்ரான்-பிராங்க்போர்ட் பயணம் ஐந்தரை மணிக்குமேல் ஆயிற்று. ஒரே மூச்சில் நீண்ட நேரம் பறக்க வேண்டியதாயிற்று. மனத்தில் சலிப்புத் தட்டிற்று. அப்போது இக் கட்டுரை எழுதத் தொடங்கினேன்.

கிழக்கே இருந்து மேற்கே சென்றால் மணி நேரம் குறைந்து கொண்டே போகும். எங்கெங்கே இறங்குகிறோமோ, அங்கெல்லாம் மணியைப் பார்த்து மாற்றி வைத்துக் கொள்வது உண்டு. ஊருக்கு ஊர் மாற்றாமல் கடைசியாக மாற்றிக்கொள்வோமென்று இருந்து விட்டேன். பிராங்க்போர்ட்டில் இறங்கியபோது என் கைக்கடிகாரத்தில் 7-40 மணி (இரவு). ஆனால் பிராங்க்போர்ட் நேரம் பிற்பகல் 3 மணி. சென்னைக்கும் பிராங்க்போர்ட்டிற்கும் மணி வேற்றுமை 4-மணி 40 நிமிடங்களாகும். மணிக்கணக்கில் நாமே முந்தி மூத்த குடி; கருத்திலும் உழைப்பிலும் கூட முந்தியிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?