உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/புத்தகங்கள்

விக்கிமூலம் இலிருந்து

55. புத்தகங்கள்

ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா.

-ஸிட்னி ஸ்மித்
நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே

நூலும் உயிராற்றல் உடையதாகும்.

-மில்டன்

நல்ல புஸ்தகமே தலை சிறந்த நண்பன் இன்று போலவே என்றும்.

- மார்டின் டப்பர்

உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும்.

- தோரோ

தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே. புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்!

-பைரன்

வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே.

-ரஸ்கின்

மருந்தைப் போலவே நூல்களையும் விஷயமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று.

-ஸ்கிரன்

எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்- "நூல் கற்கும் சுவை" யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது.

-ஹெர்ஷல்

இக்காலத்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லையோ? நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே.

-கார்லைல்
என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ?
-ஷேக்ஸ்பியர்

தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும்.

-ஆவ்பரி

இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.

-கார்லைல்

ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும்.

-மார்லி

தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே.

-ஆவ்பரி

சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று.

-நீபூர்

நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை.

-ஜயினரியான

சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை.

- கதே

புஸ்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிரா. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை.

-க்ராப்
சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை.
-பேக்கன்

அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதே யாகும்.

-பாக்ஸ்டர்

மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனே அறிவை- ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.

-மில்டன்

அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம் ஆனால் நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புஸ்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான்.

-ராபர்ட் ஹால்

என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.

-மாஜினி

சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே.

-மெல்வில்

ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.

-லாம்
படிப்பில் பிரியமில்லாத அரசனாயிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன்.
-மக்காலே

★ ★ ★