உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/கவிதை
54. கவிதை
பெரிய கவிஞன் ஒவ்வொருவனும் ஒரு ஆச்சாரியனே. அவ்விதம் கருதப்படவே நானும் விரும்புகின்றேன்.
ஆராய்ச்சி என்பது மரத்திலிருந்து அடிக்கடி பூக்களுடன் புழுக்களையும் எடுத்துக் கொள்ளும்.
கூறியது யார் என்று அறிவதற்குக் கூறியதை மட்டுமே ஆராய்க.
ஆறுதலளிக்கும் தோத்திரப் பாடல்கள் மனத்தைச் சந்தோஷமும் சாந்தியும் உள்ள நிலைமையில் வைக்கும்.
நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.
இதயத்தில் நல்லுணர்ச்சிகளை ஏற்படுத்துவதைத் தவிர ஏனையவெல்லாம் பேதமை என்று கருதுவதே கவிஞனின் நோக்கமும் தொழிலுமாகும்.
உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
கவிச்சுவையும் உணர்ச்சியும் பொருந்திய இலக்கியங்களே தினசரி உபயோகத்திற்குத் தேவை.
உயர்ந்த லட்சியங்களுக்காக உத்தம புருஷர்கள் அனுபவிக்கும் இன்பத்தையேனும் துன்பத்தையேனும் உணர்ச்சி உண்டாக்கும் சிறந்த முறையில் வெளியிடுவதே உண்மையான கவிகள்.
இலக்கிய ஊழியர் மட்டுமல்ல, எந்தப் பொது ஜன ஊழியரும் எளிய முறையிலேயே வாழவேண்டும் என்பது என் அபிப்பபிராயம்.
தன் வாழ்வில் ஒருமுறையேனும் கவிஞனாய் இருந்திராதவன் துர் அதிர்ஷ்டசாலியே.
அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்,
அழகுடைய பொருள் அந்தமில் ஆநந்தம் ஆகும்.
நாம் செய்ய வேண்டியதைக் காட்டுபவர் தீர்க்கதரிசி; நாம் நேசிக்க வேண்டியதைக் காட்டுபவர் கவிஞர்.
அனைவரிடத்திலும் கவிதையம்சம் உண்டு. முற்றிலும் கவிதையம்சமாக உள்ளவர் யாருமிலர். கவிதையைச் சரியாக வாசிக்கக் கூடியவர் அனைவரும் கவிஞரே.
கவிதை துக்கத்தின் சகோதரி. துக்கம் அறிந்தவன் கவிஞன். ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் ஒருகவி, ஒவ்வொரு இதயமும் ஒருகீதம்.
கவிதையின் லட்சியம் நன்றாய் யோசிக்கச் செய்வதன்று, உண்மையை உணரச் செய்வதேயாகும்.
உன்னிடம் கொஞ்சமாவது கவிதையில்லாவிட்டால் நீ எங்கும் கவிதையைக் காணமாட்டாய்.
கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே யாவான்.
கவிதை வெற்றி பெறுவது அழுவதை மாற்றுவதிலும் மனத்திற்குத் திருப்தி அளிப்பதிலுமில்லை. அடைய முடியாததை அடைவதற்காக மறுபடியும் முயற்சி செய்யும்படி நம்மை எழுப்பி விடுவதிலேயே உண்டு.
கண்ணுள்ளவன் கவிஞன்.
எனக்கு தேசத்துக்கு வேண்டிய பாடங்களைப் பாடும் பாக்கியம் கிடைத்தால் போதும் யார் வேண்டுமானாலும் சட்டங்கள் செய்யும் அதிகாரத்தை வகித்துக் கொள்ளட்டும்.
உயர்ந்த கவிதையை சிருஷ்டிக்க விரும்புபவன் தன் வாழ்வு முழுவதையுமே ஒரு உன்னதக் கவிதையாக ஆக்கிக்கொள்ளக் கடவன்.
★ ★ ★