ஊசிகள்/பக்கம் 45-54

விக்கிமூலம் இலிருந்து



நாங்கள் நினைத்தால்...?




நாங்கள் நினைத்தால்
நாலே நாளில்
பக்கத்தில் உள்ள
பட்டிகட் கெல்லாம்
போக்கு வரத்துப்
போய்வர நல்ல
பாதை போடுவோம்......

நாங்கள் நினைத்தால்
பாதையில் போய்வரும்
போக்குவரத்தைப்
பொசுக்கிப் போடுவோம்...

நாங்கள் மாணவர்கள்!



 சரண்



ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்......
     காட்டில் மலையில்
     கண்படாதிருந்த
     இரவுக் கொள்ளையர்
     இதயம் வெளுத்துச்
     சரணடைந்தார்களாம்
     சபதம் செய்தார்களாம்

ம.பி. முதல்வர் -
மகிழ்ச்சி அடைகிறார்......

அது சரி,

    நாட்டில் தெருவில்
    நடமாடு கின்ற
    பாக்கியுள்ள
    பகற்கொள்ளையர்கள்
    என்றைக்குச்சரண்
    அடைய எண்ணமாம்!

'ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்.
மக்கள் எப்போது
மகிழ்ச்சி அடைவதாம்?



மாயம்



மண்ணைக் கொடுத்தால்
சர்க்கரையாக
மாற்றுவானாம் ஒரு
மாயக்காரன்......

இதனைப் போய்ச்சிலர்
பெரிதாய்ப்புகழ்கிறார்

நாங்கள்
ஆட்டக்காரரை
அனுப்பி வைத்தால்
கடத்தல்காரராய்
மாற்றி அனுப்புவாய்-
அடடாஉன்றன்
மாயமே மாயம்
மலாய் பூமியே!

எதிரொளி



பெரிய நாட்டின்
பிரதமர் பொறுப்புடன்
மந்திரி மார்கள்
மத்தியில் சொன்னார்:

"விருந்தைக் குறைப்பீர்!
வெளிநாட்டுக்குப்
பறந்து போகும்
பழக்கம் குறைப்பீர்

தொலைப்பேசியிலே
சலசலவென்றே
பேசித் தொலைப்பதைப்
பெரிதும் குறைப்பீர்

குளுகுளு காரில்
கூட்டங்களுக்குச்
செல்வதைக் குறைப்பீர்
செலவைக் குறைப்பீர்......!"

எங்கோஇருந்தோர்

எதிரொளி கேட்டது:

“பிரியம் மிகுந்த
பிரதமரே
உமது
மந்திரிசபையின்
எண்ணிக்கையை நீர்
கொஞ்சம் குறைப்பீர்
கொஞ்சம்......”



 நவயுகக் காதல்



உனக்கும் எனக்கும்
ஒரேஊர்
வாசுதேவ நல்லூர்......

நீயும் நானும்
ஒரே மதம்......
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்புங் கூட......

உன்றன்தந்தையும்
என்றன்தந்தையும்
சொந்தக்காரர்கள்
மைத்துனன்மார்கள்

எனவே
செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

துண்டு விழுந்தது



அந்தி மாலையில்
அந்த மேடையில்......

'இங்கே பலப்பல
இரங்கற் கூட்டம்
நடப்பதுண்டு.”
நானும் தலைமை
வகிப்பதுண்டு.,
உங்கள் முயற்சியை
வாழ்த்துவ துண்டு.,
மக்களும் கேட்டு
மகிழ்வ துண்டு.........

தலைவர் வாயில்
அடிக்கடி துண்டு
விழக்காரணம்-அவர்
கழுத்தில் துண்டு
விழாக் காரணமென
விரைவில் புரிந்தது

அவசரக்காரன்





மூன்று வருடம் முன்னால்...

அருப்புக் கோட்டை
அழகர்சாமி
காசநோயின்
காரணமாக
இருமி இருமி
எலும்பாய் மாறி
ஆஸ்டின்பட்டி
அரசினர்
மருத்துவ மனைக்கு
மனுப்போட்டானாம் -
வந்து தங்கி
வைத்தியம் பார்க்க.

போன செவ்வாயோ
புதனோ
அவனுக்கு
அனுமதி வழங்கி
அஞ்சல் போனதாம்!

அதற்குள் என்ன அவசரம்?



போன மார்கழியிலோ
தையிலோ, பொல்லாக்
காலன் போட்ட
கடிதம் கண்டதும்
போய்ச்சேர்ந்தானாம்
புத்தியில்லாமல்


அழகர்சாமி
அவசரக்காரன்!

சிந்தனை ஒன்றுடையார்


மராட்டியத்தில்
சிவாஜி சேனை
வங்காளத்தில்
துர்க்காசேனை
அரியானாவில்
ஆசாத் சேனை
கர்நாடகத்தில்
திப்பு சேனை
கேரள சேனை
ஆந்திரசேனை

அம்மாதாயே,
உன்றன்புதல்வர்
சோடை போகவில்லை
உன்னைப் போலவே
சிந்தனை ஒன்றுடையார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஊசிகள்/பக்கம்_45-54&oldid=1013718" இலிருந்து மீள்விக்கப்பட்டது