எனது நாடக வாழ்க்கை/இலங்கைப் பயணம்

விக்கிமூலம் இலிருந்து

இலங்கைப் பயணம்

1928ஆம் ஆண்டில் இலங்கைக்கு முதன் முறையாக ரயில் மூலமாகப் புறப்பட்டோம். பயணம் மிகவும் கஷ்டமாக இருந்தது. தனுஷ்கோடியை நெருங்கியதும் மண்டபம் கேம்ப்பில் எங்களை இறக்கி விட்டார்கள். ஒரு வார காலம் அங்கேயே தங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது, வைத்தியர் சண்முகம்பிள்ளை ஏற்கனவே ஒரு நாடகக் கம்பெனியைக் கொண்டு போயிருக்கிறாரென்றும், அவர்களே இன்னும் திருப்பிக்கொண்டுவந்து சேர்க்காததால் நாங்கள் போக இயலாதென்றும் சொல்லப்பட்டது. ஒரு கல் மண்டபத்தில் தங்கி, நாற்றம் பிடித்த அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டுக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டோம். சண்முகம்பிள்ளை எப்படியோ நிலைமையைச் சமாளித்து, இலங்கைக்கு எங்களைக் கொண்டு போக அனுமதி பெற்றுவிட்டார். ஒருவாரத்திற்குப் பின் தனுஷ்கோடி போய்க் கப்பலேறினோம். கப்பலில் வீசிய மணம் சிலபேருக்குப் பிடிக்கவில்லை. தலைச்சுற்று, மயக்கம் எல்லாம் வந்தன. இரவு எட்டு மணியளவில் தலைமன்னார் போய்ச் சேர்ந்தோம். தலைமன்னரில் கொழும்புக்குப் புறப்பட ரயில் காத்துக் கொண்டிருந்தது. எல்லோரும் விழுந்தடித்துக்கொண்டு ரயிலில் போய் ஏறினோம். ரயிலில் உட்காரவே இடமில்லை. மிகவும் நெருக்கடி. இடையில் லுங்கியும், மேலே ஜாக்கெட் மட்டும் போட்ட சிங்களப் பெண்கள் சிலர் வந்து, நெருக்கித் தள்ளிக் கொண்டு உட்கார்ந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. அலுப்பு மிகுதியாக இருந்ததால் நான் விரைவில் உறங்கி விட்டேன். அதிகாலேயில் கொழும்பு மருதானே ரயில் நிலையத் திற்கு வந்து சேர்ந்தோம். சண்முகம்பிள்ளை எங்களை வரவேற்று ஜிந்தும்பிட்டி ஹாலுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஜிங்தும்பிட்டி ஹால்

அப்பொழுது கொழும்பில் நாடகம் நடைபெறும் பெரிய தியேட்டர் ஒன்றுதானிருந்தது. அதுதான் ஜிந்தும்பிட்டி ஹால். சுமார் இரண்டாயிரம் பேர் தாராளமாக உட்காரக்கூடிய நாடக அரங்கம். தரை இல்லை. அதற்குப் பதிலாக ஏறக்குறைய ஆயிரம் பேர் வசதியாக உட்காரக் கூடிய முறையில் காலரி அமைத்திருத்தது. 5, 4, 3, 2, 1 எனக் கட்டணம் வைத்து, ஐந்து வகுப்புகள் பிரித்திருந்தார்கள். இந்தக் கட்டணம் நாங்கள் தமிழ்நாட்டில்: அந்த நாளில் கேள்விப்படாத கட்டணம். நாடகக் கொட்டகை இருந்த இடம் ஒரு பெரிய சுற்று வட்டகைக்குள் காலனிபோல் தனியிடமாக இருந்தது. கொட்டகை இருந்த வட்டகைக் குள்ளேயே சுமார் பத்து வீடுகளுக்கு மேலிருந்தன. முதல் வீடு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. அந்த வீட்டில் குடியேறினோம். அடிக்கடி நாடகங்களை ஒத்திகைப் பார்க்கவும், பகல் நேரங்களில் விளையாடவும் கொட்டகை எங்களுக்கு வசதியாக இருந்தது. தம்பி பகவதி, கே. ஆர். ராமசாமி, பிரண்ட் ராமசாமி, சகஸ்ரநாமம் இவர்களையெல்லாம் சாப்பாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில், கொட்டகையில்தான் பார்க்கலாம். நாடகமேடையில் முழுதும் பலகை போட்டு, அடியில் ஒரு ஆள் உயரம் வசதியாக இடமிருந்ததால் வெயில் படாது ஓடிவிளையாடுவதற்கு செளகரியமாக இருந்தது. காலரி போட்டிருந்த இடத்திலும் அதே போன்று வசதியிருந்தது. இவ்விரு இடங்களையும் நாங்கள் விளையாடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டோம். பகல் நேரம் முழுதும் அங்குதானிருப்போம்.

பெருங் கலகம்

நாடகம் தொடங்கியது. நல்ல வசூலாயிற்று. வைத்தியர் சண்முகம்பிள்ளை ஒரே உற்சாகமாக இருந்தார். நாற்காலி,பெஞ்சி, காலரிக்குரிய வாயில்களில் நிற்பதற்காக நாலைந்து பேரை நிரந்தரமாக வைத்திருந்தார். அவர்களில் மூக்குப்பரி என்பவர் ஒருவர். நல்ல ஆஜானுபாகுவான ஆசாமி. பார்ப்பதற்கே பயமாக இருக்கும். ஏறத்தாழ எட்டடி உயரமிருப்பார். அவர் எப்போதும் கொட்டகையில்தான் படுத்துக் கொள்வது வழக்கம். பிற்பகல் நேரங்களில் மூக்குப்பரி குடித்துவிட்டுவந்து அட்டகாசம் செய்வார். இரவு நாடகமாதலால், பகல் உணவுக்குப்பின் எல்லோரும் உறங்குவார்கள். இவர் யாரையும் உறங்கவிடாமல் உபத்திரவம் செய்வார். ஒருநாள் தம்பி பகவதியைப் பிரியத்தோடு தூக்கிக் கீழே போட்டுவிட்டார். வேண்டுமென்று போட வில்லை. குடிவெறியில் தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு நேர்ந்துவிட்டது. இந்தச் செய்தி சிற்றப்பா காதுக்கு எட்டியதும் அவர் சண்முகம் பிள்ளையிடம் புகார் செய்தார். மூக்குப்பரியைக் கண்டிப்பதாகச் சண்முகம்பிள்ளைக் கூறினார். மூக்குப்பரியின் அட்டகாசம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஒருநாள் பிற்பகலில் மூக்குப்பரி நன்றாகக் குடித்துவிட்டு வந்து வழக்கம்போல் ரெளடித்தனம் செய்துகொண்டிருந்தார். செய்தி அறிந்ததும் கம்பெனி வீட்டிலிருந்து எல்லோரும் ஓடினார்கள். முதலில் போன கம்பெனி பலசாலி கோபாலபிள்ளை, மூக்குப் பரியை ஒரே அறையில் கீழே வீழ்த்தினார். சிற்றப்பா மூக்குப்பரியை இடுக்குப் பிடிப்போட்டுப் பிடித்துக்கொண்டார். அந்தப்பிடி இரும்புப் பிடியாக இருந்தது. கம்பெனியில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் மூக்குப்பரியை ஆசை தீர அடித்துத் தமது வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். பெரியண்ணா ஒருவர் மட்டும் இந்த அடிதடியில் கலந்துகொள்ளவில்லை. அடித்துக் கட்டிப் போட்டுவிட்டு எல்லோரும் போய்விட்டார்கள். சற்று நேரம் கழித்துப் போதை தெளிந்தபின் அவர் எழுந்தார். கொட்டகையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குத்துணையாக ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தாரைத் திரட்டிக் கொண்டு மீண்டும் கொட்டகைக்குள் நுழைந்தார்.

அப்போது நாவல் நாடகங்களில் பயன்படுத்துவதற்காக நாங்கள் ரிவால்வர் வைத்திருந்தோம். பொய்த் தோட்டாக்களை உபயோகிப்பதற்குத்தான் அனுமதி இருந்தது. ஆனால் உண்மையான தோட்டாக்களை உபயோகிக்கவும் அனுமதி இருப்பதாக ஒரு வதந்தியைப் பரப்பி விட்டிருந்தோம். நாடகங்களில் நாங்கள் ரிவால்வர் உபயோகிப்பதை மூக்குப்பரி பார்த்திருந்தார். எனவே இந்த வதந்தியை அவரும் நம்பியிருந்தார். சிற்றப்பா ரிவால்வரைக் கையில் வைத்துக்கொண்டு கலகக் கூட்டத்தார் யாராவது கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவதாகப் பயமுறுத்தினார். உயிருக்குப் பயந்த கலகக் கூட்டம் உள்ளே நுழையாமல் வாயிலுக்கு வெளியிலேயே நின்று கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. சிற்றப்பாவையும், முதலில் தன்னை அடித்து வீழ்த்திய கோபால் பிள்ளையையும் கொன்று விடுவதாக மூக்குப்பரி சபதம் செய்திருப்பதாக அறிந்தோம். இரவு நேரங்களில் உறக்கமே வருவதில்லை. எந்த நேரத்திலும் என்ன நடக்குமோவென்று அச்சமாயிருந்தது.

நீதி மன்றத்தில்

கண்ட்ராக்டர் சண்முகம் பிள்ளை எதுவும் நேராதென்று எங்களுக்கெல்லாம் தைரியம் கூறினார். இந்தக் கலகத்தால் யாரும் வெளியே போகவோ, எதையும் பார்க்கவோ இயலாமல் மிகுந்த கஷ்டப்பட்டோம். எங்களுக்கும், மூக்குப்பரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சிற்றப்பா நீதிமன்றத்திற்குப் போகும்போது அவருக்குப் பாதுகாப்பாக இரு போலீஸ்காரர்களும், கொழும்பிலே இருந்த வேறு சில தமிழ் வீரர்களும் உதவினார்கள், மூக்குப் பரியும் அவரது ஆட்கள் சிலரும் எந்நேரமும் கொட்டகையின் வெளி வாயிலருகே ஒரு கட்டையில்தான் உட்கார்ந்திருப்பார்கள். அவர்கள் நிலையையும் உறுதியையும் கண்ட பெரியண்ணா, எந்தக் காரணத்தைக்கொண்டும் யாரும் வெளியே போகக்கூடாதென்று உத்தரவு போட்டு விட்டார். எல்லோரும் இறுதிவரை கொட்டகையிலேயே அடைபட்டுக் கிடந்தார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சமரசமாய்ப் போகச் சண்முகம்பிள்ளை ஏற்பாடு செய்தார். சிற்றப்பாவையும் மூக்குப்பரியையும் இணைத்து வைத்தார். மூக்குப்பரிக்குத் தன்னை முதலில் அடித்த ஒருவரை மட்டுந்தான் நன்றாகத் தெரியும். அவரை மாத்திரம் எப்படியாவது தீர்த்துக் கட்டி விடுவதென்று முடிவு செய்து கொண்டார்.

நாங்கள் செய்த தந்திரம்

மூக்குப்பரிக்குத் தெரியாமல் கோபால்பிள்ளையைத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவிடப் பெரியண்ணா ஏற்பாடுகள் செய்தார். கோபால்பிள்ளை நல்ல வீர உள்ளம் படைத்தவர். எனவே, அவர் இவ்வாறு கோழைத்தனமாக ஓடிப்போகச் சம்மதிக்க வில்லை. என்றாலும், குழுவின் பொது நன்மையைக் கருதிப் பெரியண்ணா வற்புறுத்தவே ஒருவாறு இசைந்தார். ஒருநாள் மூக்குப்பரி வெளியில் இல்லாத சமயம் பார்த்து, தந்திரமாகக் கோபால் பிள்ளையை வெளியேற்றி ரயிலுக்கு அனுப்பிவைத்தோம். அவர் எவ்வித இடையூறுமின்றிக் கரூர் போய் சேர்ந்தார். கரூரிலிருந்து கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி ஏற்பட்டது

நாடகம் நல்ல வசூலுடன் நடைபெற்று வந்தது. யாழ்ப் பாணம் சண்முகம் பிள்ளைக்கு என்னை நிரம்பவும் பிடித்திருந்ததால், அவருடைய வேண்டுகோளின் பேரில் நான் சில நாடகங்களில் கதாநாயகனாக நடித்தேன். சத்தியவான் சாவித்திரியில் நாரதராகவே நடித்து வந்த நான், கொழும்பில் சத்தியவாகை நடித்தேன். சண்முகம்பிள்ளை என்னை மிகவும் பாராட்டினார். வெளியே எங்கும் போக முடியாததைப்பற்றி நாங்கள் - நடிகர்கள் கவலைப் படவில்லை. பகல் நேரங்களில் விளையாடுவதற்கு வேண்டிய வசதி கள் இருந்ததால் மகிழ்ச்சியாகவே பொழுதைப் போக்கிைேம்.

கலைவாணர் கற்பனையும் மன்னிப்பும்

ஒருநாள் மனோகரா நாடகம் நடந்தது.வழக்கம்போல் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் வசந்தனக நடித்தார். அவர் எந்த நாடகத்திலும் கற்பனையாக ஏதாவது வேடிக்கை செய்வார். அவரும் சின்னண்ணாவும் இதுபற்றி வீட்டிலேயே திட்டம் போட்டுப் பேசி முடிவு செய்து கொள்வார்கள். மனோகரனில் நந்தவனக் காட்சி நடைபெற்றது. வசந்தன் கல்லாசனத்தின் இழே ஒளிந்திருந்து மனோகரன் தன் தாயார் பத்மாவதியிடம் சபதம் செய்வதைக் கேட்கும் காட்சி அது. பத்மாவதி போன பின் விஜயாள் வந்து மனோகரன விளையாட அழைக்கிறாள். மலர் மாலையால் அவனைக் கட்டி இழுக்கிறாள். இந்தச் சமயத்தில் ராஜப் பிரியன் வந்து மனோகரனக் கேலி செய்கிறான், வசந்தன் கல்லா சனத்தின் கீழிருந்து வெளியே வருகிறான். முதுகு வளைந்துபோய் விட்டதாகப் புலம்புகிறான். அவனுடைய பைத்தியச் செயல்களைக் கண்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். வசந்தனின் தாய்வசந்தசேனை வருகிறாள். அவன் தன் தாயிடம் புகார் செய்கிறான். மனோஹரனும் விஜயாளும் தனியே ஒருபுறம் நின்று சிரிக்கிறார்கள். உடனே வசந்தன், “அண்ணாத்தே, நீ அந்த்ப் பொண்ணை வச்சுக்கிட்டு சிரி; நான் இந்தப்பொண்ணை வச்சுக்கிட்டுச் சிரிக்கிறேன்" என்று தன் தாயைக் கட்டிக் கொள்கிறான். இதைக் கேட்டு மேலும் எல்லோரும் சிரிக்கிறார்கள்.

கலைவாணர் பேசிய இந்த வசனம், பம்மல் சம்பந்தனரின் நாடகத்தில் இல்லை. என். எஸ். கே. கற்பனையாகப் பேசியது. இந்த வசனத்துக்குச் சபையில் பெருத்த கைதட்டல் ஏற்பட்டது. காட்சி முடிந்ததும் சண்முகம்பிள்ளை உள்ளே வந்தார். என். எஸ் . கிருஷ்ணனைக் கூப்பிட்டார்.

“என்னப்பா, மனோஹரன் மனைவியை வைத்துக் கொண்டு சிரித்தால், வசந்தன் தன் தாயை வைத்துக் கொண்டு சிரிப்பதாகச்சொல்வதா? என்னதான் பைத்தியக்காரனாக இருந்தாலும் தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டாமா?” சண்முகம் பிள்ளையின் கேள்வி இது. என். எஸ். கிருஷ்ணன் அவர் இவ்வாறு கேட்பாரென்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் கேட்டபின் நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே!

  • ஆசிரியர் சம்பந்த முதலியார் அப்படித்தான் எழுதியிருக்கிறார், அதைத்தான் பேசினேன்” என்றார் கலைவாணர்.

சண்முகம் பிள்ளைக்குக் கோபம் வந்து விட்டது. “என்னப்பா, கதையளக்கிறாய்? சம்பந்த முதலியாரை எனக்குத் தெரியாதா? நான் இப்பொழுதுதான மனோகரன் நாடகம் பார்க்கிறேன். அவருடைய நாடகத்தையே நான்தானே இங்கு நடத்தினேன். எனக்குத் தெரியாதா?” என்றார். என். எஸ். கே. இதன் பிறகு வாதாடவில்லை. தான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறி, அவரிடம் மன்னிக்க வேண்டினார். கலைவாணர் அவ்வாறு அடங்கிப் போனதும், மன்னிப்பு கேட்டதும் எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவர் எங்கள் குழுவிலிருந்த காலம்வரை, மன்னிப்புக் கோரியது, இதுதான் முதல் தடவை. மேலும். சண்முகம் பிள்ளையிடம் வாதாடாமல் சமரசமாகப் போனதற்கு நாங்கள் எல்லோரும் சந்தோஷப் பட்டோம். கலைவாணரைப் பாராட்டினோம்.