எனது நாடக வாழ்க்கை/நடிப்பிசைப் புலவர் ராமசாமி

விக்கிமூலம் இலிருந்து
நடிப்பிசைப் புலவர் ராமசாமி

ஈரோட்டில் நாடகங்கள் சுமாரான வசூலில் நடைபெற்றன. நாவல் நாடகங்களில் பெரியண்ணா முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். ஈரோட்டிலிருந்து மீண்டும் கோவைக்கு வந்தோம். நாங்கள் தாயாருடன் இருக்கத் தனி வீடு கிடைக்காததால் தாயார் மட்டும் ஈரோட்டிலேயே தங்க நேர்ந்தது, நாங்கள் கோவைக்கு வந்தபின் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் ஈரோட்டில் நாடகங்கள் நடித்தார்கள். அவர்கள் அப்போது சி. கன்னையா கம்பெனியார் தயாரித்திருந்ததைப்போல் ஏராளமாகப் பொருட் செலவு செய்து, தசாவதாரம் நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தார்கள். நாவல் நாடகங்களை அதிகமாக நடிப்பதில்லை. எங்கள் தாயார் ஈரோட்டிலேயே இருந்ததால், ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நடிகர்களில் சிலர், அவர்களைப் பார்த்துப்போக அடிக்கடி வந்தார்கள். அப்படி வந்த சில நடிகர்கிளில் ஒருவர்தான் கே.ஆர்.ராமசாமி அவருக்கு எங்கள் கம்பெனிக்கு வரவேண்டுமென்ற ஆவல் இருந்தது. அந்த ஆவலை எங்கள் அன்னையாரிடம் சொல்லி,எப்படியாவது தன்னைக் கம்பெனியில் சேர்த்து விடுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது கே. ஆர். ராமசாமிக்குப் பதிமூன்று வயதிருக்கும். அவருடைய தகப்பனாருக்கு எழுதி, அதற்கு ஏற்பாடு செய்யுமாறு அன்னையார் சொல்லி விட்டார்கள். திடீரென்று ஒருநாள் கே. ஆர். ராமசாமி தன்னந் தனியே புறப்பட்டுக் கோவைக்கு வந்து சேர்ந்தார். ஈரோட்டி லிருந்து அம்மாதான், தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அம்மாவும், நடிகர்கள் சிலர் வந்து போகும் செய்திகளைப் பெரிய அண்ணாவுக்குக் கடிதமூலம் அறிவித்திருந்தார்கள். கே. ஆர். ராமசாமியைப் பாடச் சொல்லிக் கேட்டவுடன் எல்லோருக்கும் நிரம்பவும் பிடித்து விட்டது. அவருடைய சாரீரம் மிகவும் இனிமையாகவும், கெம்பீரமாகவும் இருந்தது. பெரியண்ணா அவரைக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதித்து விட்டார். மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் அப்போது ஆசிரிய ஸ்தானத்தில் இருந்தவர் காளி. என். ரத்தினம். அவர் பெரியண்ணாவுக்குக் கடிதம் கொடுத்து, ஒருவரை அனுப்பியிருந்தார். அவர் வந்ததும் பெரியண்ணா, ராமசாமிக்கு விருப்பமிருந்தால் அழைத்துப் போவதில் எங்களுக்கொன்றும் தடையில்லை என்று கூறினார். வந்தவர் என்னென்னவோ சொல்லிராமசாமியை அழைத்துப் போக முயன்றார், எதுவும் பலிக்கவில்லை. ஒரே உறுதியாக ராமசாமி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்கு வரமுடியாதென்று மறுத்துவிட்டார். ராமசாமிக்கு உடனடியாக அபிமன்யு, சுந்தரி நாடகத்தில் கிருஷ்ணன் வேடம் கொடுக்கப் பட்டது.

யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை

கோவை முடிந்து தாராபுரம் சென்றோம். தாராபுரத்தில் இருந்தபோது, கொழும்புக்கு வரவேண்டுமென்று யாழ்ப்பாணம் சண்முகம் பிள்ளை வந்து அழைத்தார். இவர் அந்த நாளில் இலங்கையில் பிரசித்தி பெற்ற காண்ட்ராக்டர். இவரைப்பற்றி” நிறைய கேள்விப்பட்டிருந்தோம். எஸ். ஜி. கிட்டப்பாவை முதன் முதலாக இலங்கைக்குக் கொண்டு சென்றவர் சண்முகம் பிள்ளை தான் என்று சிலர் பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். போகவரச்செலவு நீக்கி, மாதம் ஒன்றுக்கு ஆருயிரம்ரூபாய் பேசி, மாதம் பதினறு நாடகங்கள் நடத்துவதாக ஒப்பந்தம் செய்யப் பட்டது. ஒப்பந்தம் முடிந்ததும் கரூருக்கு வந்து சேர்ந்தோம்.

சம்பளத் தகராறு

கொழும்புப் பயணம் நிச்சயமானதும் எல்லோரும்: சம்பளம் அதிகம் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். அந்த நாளில் இலங்கைக்குப் பயணம் என்றால், மாதம் இருபது ரூபாய் சம்பளம் பெறும் ஒருவருக்கு இலங்கையில் நாற்பதும், பர்மாவில் அறுபதும், மலையாவில் எண்பதுமாகச் சம்பளம் கொடுக்கவேண்டும். கொழும்புவுக்கு எல்லோருக்கும் இரட்டிப்புச் சம்பளம் தருவதாகப் பெரியண்ணா ஒப்புக்கொண்டார். கரூரில் சில நாடகங்கள் நடித்தபின் இலங்கைக்குப் பயணமானோம்.