எனது நாடக வாழ்க்கை/தமிழகம் திரும்பினோம்

விக்கிமூலம் இலிருந்து
தமிழகம் திரும்பினோம்

கொழும்பில் இரண்டு மாதங்கள் நடித்த பிறகு, மேலும் பல ஊர்களுக்கு வரவேண்டுமென்று சண்முகம் பிள்ளை வற்புறுத்தினார். கொழும்பில் ஏற்பட்ட மூக்குப்பரி கலக அனுபவத்தால் வேறு ஊர்களுக்குப் போக நாங்கள் சம்மதிக்கவில்லை. நாடகங்கள் முடிந்தன.கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு எல்லோரும் புறப்பட்டோம். எதிர்பாராத நிலையில் எங்களுக்கு எதுவும் அபாயம் ஏற்படாதிருக்கச் சண்முகம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இருந்தாலும் கடைசி நிமிஷத்தில் என்ன நேருமோவென்று நடிகர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். மூக்குப்பரி சமரசமாகப் போய்விட்டதால் எல்லோரையும் பார்க்கவேண்டுமென்று ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். சிற்றப்பா அவர் அருகிலேயே நின்று கொண்டு ஜாக்கிரதையாக அவரது ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். முக்குப்பரியின் சிவப்பேறிய கண்கள் கோபால் பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. பெரியண்ணாவிடம் மட்டும் மூக்குப்பரி அபார மதிப்பு வைத்திருந்தார். பெரியண்ணா அவரை நெருங்கி, “யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார். “என்னை முதலில் அடித்தானே, அந்தத் தைரியசாலியைப் பார்க்க வேண்டும். அந்த ஆசாமி எங்கே?” என்று கேட்டார் அவர். “ஒரு அவசர காரியமாக அவர், முன்பே ஊருக்குப் போய்விட்டாரே” என்றார் பெரிய அண்ணா. இந்தச் செய்தியை அறிந்ததும் மூக்குப்பரி, ‘ஆஹா மோசம் போய்விட்டேனே; அவனையல்லவா தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டிருந்தேன்’ என்று வருத்தப்பட்டார். இதை மூக்குப்பரி வாய்விட்டுச் சொல்லியதும், எங்களுக்கெல்லாம் குலை நடுக்கம் எடுத்தது. அதற்குள் ரயிலும் புறப்பட்டு விட்டது. எல்லோரும் மீண்டும் கப்பலிலும், ரயிலிலுமாகப் பிரயாணம் செய்து கரூருக்கு வந்து சேர்ந்தோம்.

கலைவாணர் ஊடல்

கரூரில் மீண்டும் நாடகங்கள் தொடங்கின. என். எஸ். கிருஷ்ணனுக்கும் சிற்றப்பாவுக்கும். ஏதோ சிறு தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணனுக்குப் பெரியண்ணா அதிகமாகச் சலுகை கொடுத்து விட்டதாகவும், அதனால் தன்னை அவன் மதிப்பதில்லை யென்றும் சிற்றப்பா புகார் செய்தார். பெரியண்ணா என். எஸ். கிருஷ்ணனைக் கூப்பிட்டுக்கேட்டார். அவருடைய பதில் திருப்தி யளிக்கவில்லை. எனவே, உடனடியாகக் கணக்குத் தீர்த்து, அவரைக் கம்பெனியிலிருந்து நிறுத்தி விட்டார்.

எங்களுக்கு நிரம்பவும் கவலையாயிருந்தது. கலைவாணர் கம்பெனியின் முக்கிய நடிகராக மட்டும் இல்லை. எங்கள் எல்லோருடைய உள்ளங்களையும். கவர்ந்திருந்தார். மீண்டும் அவரைக் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளச் சின்னண்ணா எவ்வளவோ முயன்றார். பயனளிக்கவில்லை. கலைவாணரும் உடனே ஊருக்குப் போகவில்லை. அவருக்குக் கம்பெனியை விட்டுப் போக மனமுமில்லை. கம்பெனி வீட்டு அருகிலேயே ஒரு தனி அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, அடிக்கடி எங்கள் கண்ணில் படும்படியாகப் போவதும் வருவதுமாக இருந்தார். ஒரு நாள் “கள்வர் தலைவன்” நாடகம் நடைபெற்றது. அதற்கு டிக்கட் எடுத்துக் கொண்டு முன்வரிசையில் வந்து உட்கார்ந்து நாடகம்பார்த்தார். அவர், நாடகத்தில் ‘வயத்தான்’ என்ற பாத்திரத்தை ஏற்று, மிகச் சிறப்பாக நடிப்பார். அந்தப் பாத்திரத்தை அன்று, மற்றொரு நகைச்சுவை நடிகராகிய சுந்தரமையர் போட்டிருந்தார். ஒருவருக்கும் நாடகத்தில் மனம் செல்லவில்லை. என்.எஸ். கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டு நடித்தார்கள். பல நடிகர்கள் பகல் நேரங்களில் அவருடைய தனியறைக்குப் போய்ப் பேசிக் கொண்டிருப்பது வழக்கமாகி விட்டது. என். எஸ். கிருஷ்ணன் விலகியதும் தன் தந்தைக்குக்கடிதம் எழுதியிருப்பார்போல் தெரிகிறது. நாலந்து நாட்களில் அவரது தந்தையார் சுடலைமுத்துப் பிள்ளை நாகர்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார். சிற்றப்பாவுடன் கலந்து பேசினார். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததால் ஒன்றாகவே போய்க் குடித்துவிட்டு வந்தார்கள். குடியினால் ஏற்படும் நட்பு மிகவும் வலிமையானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மை. பிறகு சிற்றப்பாவே வந்து கிருஷ்ணனை மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பெரியண்ணாவிடம் சிபாரிசு செய்தார். சுமார் பதினைந்து நாட்கள் கம்பெனியோடு கலைவாணருக்கிருந்து வந்த ஊடல் நீங்கியது. மீண்டும் கம்பெனியில் சேர்த்துக்கொள்ளப் பெற்றார்.

கலைவாணரின் ஆற்றல்

அந்த நாளிலேயே என். எஸ். கிருஷ்ணனுக்கு அபாரமான திறமை இருந்தது. ஆர்மோனியம் வாசிப்பார். மிருதங்கம் வாசிப்பார்; ஒவியம் வரைவார். ஒவியர் கே. மாதவனிடம் அவருக்கு நெருங்கிய நட்புறவு இருந்தது. மாதவன் அவர்கள், என். எஸ். கிருஷ்ணனின் ஓவியக் கலை உணர்ச்சியை வளர்ப்பதில் பெரும் பங்கு கொண்டார். மாதவனும் மிருதங்கம் வாசிக்கக் கூடியவர்; இராகங்களை அற்புதமாகப் பாடுவார். கே. ஆர். ராமசாமிக்கு, மாதவன் அடிக்கடி இசைப்பயிற்சி அளிப்பதுண்டு.

ஒருநாள், நாடகத்தில் மிருதங்கம் வாசிப்பவருக்கு உடல் நலம் கெட்டுவிட்டது. வேறு யாரும் கிடைக்கவில்லை. அந்த நெருக்கடியில், அன்று என். எஸ். கிருஷ்ணன்தான் மிருதங்கம் வாசித்து, நாடகத்தைச் சிறப்பாக நடத்தினார். இதே போன்று சில நாடகங்களுக்கு என். எஸ். கிருஷ்ணன் ஆர்மோனியம் வாசிக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட்டதுண்டு. ஒவியர் மாதவன் இல்லாத நேரங்களில் காட்சிகளும் வரைந்து கொடுத்திருக்கிறார். பொதுவாகக் கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகல கலா வல்லவராகவே விளங்கி வந்தார். அவரைப் பற்றிய அபூர்வமான குறிப்புகள் மேலும் தொடருமாதலால் இப்போது இவ்வளவோடு விட்டுவிட்டு மேலே செல்லுகிறேன்.

கே. பி. சுந்தராம்பாள் அம்மையார்

கரூரிலிருந்தபோது எங்களுக்கும் திருமதி கே. பி. சுந்தராம்பாள் அம்மையாருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். பவளக்கொடி நாடகத்தில் நான் கிருஷ்ணனாக நடிப்பேன். அந்த வேடத்திற்குரிய பாடல்கள் சிலவற்றை, எனக்குச் சொல்லிக் கொடுத்தார். நாங்களும் அவர் வீட்டிற்குப் போவதுண்டு. ஒருநாள் எங்கள் தாயாருடன் கொடுமுடியிலுள்ள தமது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். காவேரியில் எல்லோருமாகக் குளித்துவிட்டு, பாடல் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் தென்பாண்டிக் கொடுமுடி ஈஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டோம். பிறகு அம்மையார் இல்லத்தில் தங்கி விருந்து புசித்தோம். அப்போது அவர் எஸ்.ஜி.கிட்டப்பா ஐயரோடு ஊடல் கொண்டிருந்த இடைக் காலம். அவரது இல்லத்தில் கிட்டப்பா ஐயருடன் அவர் எடுத்துக் கொண்ட பல்வேறு புகைப்படங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் என்னிடம் காண்பித்துத் தமது குறைகளையெல்லாம் கதை கதையாகச் சொன்னார். எங்கள் தாயாருக்கு, கே. பி. எஸ். மீது அதிகமான பற்றுதல் ஏற்பட்டிருந்தது. கரூருக்குப் போகும் பொழுதெல்லாம் நாங்கள் சுந்தராம்பாள் அம்மையார் வீட்டுக்குப் போகாமல் இருப்பதில்லை.

மேனகா அரங்கேற்றம்

கரூர் முடிந்து, வேறு பல ஊர்களுக்குச் சென்றபின் மதுரைக்கு வந்தோம். மீண்டும் வாத்தியார் கந்தசாமி தமது முதலியார், புதல்வரோடு வந்து சேர்ந்தார். இம்முறை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்னும் அருமையான நாவலை, நாடகமாகத் தயாரித்தார். திருநெல்வேலி யிலிருந்தபோது பாடம் கொடுக்கப்பெற்றது. - நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி மேனகா, தம்பி பகவதி வராகசாமியாகவும், எம். கே. ராதா டிப்டிக் கலெக்டர் சாம்பசிவமாகவும், என். எஸ். கிருஷ்ணன் சாமா ஐயராகவும் நடிக்க ஏற்பாடாயிற்று. மேனகாவில் நான் நைனமுகமதுவாகவும், தாசி கமலமாகவும் ஒரே சமயத்தில் இரு வேடங்களில் நடித்தேன். பெண்வேடம் புனைபவர்கள் அப்போது கம்பெனியில் பலர் இருந்தார்கள். என்றாலும், தாசி கமலம் நான்தான் நடிக்கவேண்டு மென்று வாத்தியாரும் கலைவாணரும் விரும்பினார்கள். வேறு வழி யின்றி நான் அதை ஏற்றுக் கொண்டேன். மேனகாவுக்கு ஏராளமான பொருள் செலவு செய்து காட்சிகளையும், உடைகளையும் தயாரித்தோம். கல்லிடைக்குறிச்சியில் மேனகா அரங்கேறியது. கே. ஆர். ராமசாமி மேனகா பாத்திரத்தை மிக அற்புதமாக. நடித்தார். அருமையாகப் பாடினார். மாயூரம் வேதகாயகனாரின் ‘நாயகர் பட்சமடி எனக்கது ஆயிரம் லட்சமடி’ என்ற பாடலை அவர் பிலஹரி இராகத்தில் பாடியது, இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. பகவதிக்கும், ராமசாமிக்கும் கணவன் மனைவி இணைப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. இந்த இணைப்புப் பொருத்தத்தைப் பார்த்து, மேலும் பல நாடகங்களில் கணவன் மனைவி பாத்திரங்கள் இவர்களுக்கே அளிக்கப்பட்டன. மேனகாவுக்கு நல்ல பேரும், புகழும் கிடைத்தன. மேனகா அரங் கேறியபின், நாங்கள் நடித்த எல்லா நாடகங்களிலும் இதுவே முதன்மையாக நின்றது.

கல்லிடைக்குறிச்சி எழில் மிக்க சிற்றுார். வாய்க்காலிலும், தாமிரபரணி ஆற்றிலும் நிறையத் தண்ணிர் ஓடிக்கொண் டிருந்தது. எல்லோரும் காலையில் ஆற்றில் குதித்து விளையாடிக் குளித்து விட்டுத்தான் வீடு திரும்புவோம். கல்லிடைக்குறிச்சி டாக்டர் சங்கரய்யரும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் பிரபல மாணவர்கள். தேசீய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அவர்கள் எங்கள் நடிகர்களிடம் மிகுந்த அன்பு காட்டினார்கள். நாடகக் கொட்டகைக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்தது. எங் களுக்கு ஏதாவது தலைவலி,காய்ச்சல்என்றால் உடனே சங்கரய்யர் வீட்டுக்குப் போவோம். அவர்கள் வீடு, எங்கள் சொந்த வீடு மாதிரி, அந்த அளவுக்கு நெருங்கிப் பழகினோம்.

மேனகா நாடகம் பல வகையில் எங்களுக்குத் தொல்லை கொடுத்தது. முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் ஊரில் “இந்துப் பெண்ணை ஒரு முஸ்லீமுக்கு விற்பதா?” என்று கூறி, இந்துக்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். ஜாதி இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஊரில், “ஒரு முஸ்லீமை அயோக்கியணாகக் காட்டுவதா?” என்று கூறி, முஸ்லீம்கள் நாடகத்தை எதிர்ப்பார்கள். இப்படியே பல ஊர்களில் எங்களுக்குச் சிரமம் ஏற்பட்டு வந்தது. ஆனால், எல்லா ஊர்களிலும் நடுநிலையோடு நாடகம் பார்க்கும் ரசிகர்களும் இருப்பார்களல்லவா? அவர்களின் துணையோடு இந்த எதிர்ப்புக்களை யெல்லாம் சமாளித்து வந்தோம்.