எனது நாடக வாழ்க்கை/நாடக உலகில் ஒளவையார்

விக்கிமூலம் இலிருந்து
நாடக உலகில் ஒளவயைார்


தமிழ் மூதாட்டி ஒளவையாரை நாடக மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்பது எங்கள் நீண்ட நாளைய அவா. மதுரை நகர மக்கள் அளித்த பேராதரவினல் அதுவும் சாத்திய மாயிற்று. ஒளவையாரை அரங்கேற்றியதுதான் எங்கள் நாடக வாழ்க்கையின் வெற்றிச் சின்னமெனக் கருதுகிறோம்.

நாடகாசிரியர் எதிராஜுலு

இராஜபாளையத்தில் இருந்தபொழுது, போர்டு பாடசாலைத் தமிழாசிரியர் பி. எதிராஜுலு நாயுடு எங்களுக்கு அறிமுகமானார். ஒளவையாரை மேடைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற என் ஆர்வத்தை அவரிடம் கூறினேன். உடனே எழுதித் தருவதாக வாக்களித்தார். நாடகத்தை நல்ல முறையில் தொகுத்து மதுரையிலே கொடுத்தார். ஒளவை நாடக நிகழ்ச்சிகள் ஒன்றாேடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒளவைப் பெருமாட்டியையே மையமாகக் கொண்டு, பல்வேறு இடங்களில், பல சந்தர்ப்பங்களில் நிகழும் பலதிறப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பே இந் நாடகம். கல்வி முறை, அரசு முறை, நீதிமுறை, உழவு முறை, இல்லற முறை முதலிய அரும்பெரும் உறுதிப் பொருள்களாகிய மக்களது ஒழுக்க வழக்க நியமங்கள் அனைத்தும் நகைச்சுவையோடு கலந்து இந் நாடகத்தில் தரப்படுகின்றன. ஒளவையை நடிக்க ஆசைப்பட்டோம். நாடகமும் கையில் கிடைத்தது. இனித் தனித்தனியே பாடங்கள் எழுதி நடிகர்களுக்குக் கொடுக்க வேண்டும். இங்கேதான் வந்தது சங்கடம்.

ஒளவையாராக யார் நடிப்பது?

தமிழ் நாடக உலகில் இறவாத புகழுடைய நாடகமாகப் பண்டிதருக்கும் பாமரருக்கும் மகிழ்வூட்டிப் பண்பை வளர்க்கும் நாடகமாக-புகழின் எல்லையைக் கண்ட நாடகமாக ஒளவையார்

நாடகம் நாடக உலக வரலாற்றிலேயே அழியாத இடம் பெற்று விட்டது. இத்தனைச் சிறப்புக்களையும் பெற்ற ஒளவையாரின் பாத்திரத்தைத் தாங்கி நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும், இதைப் பற்றிய விவரங்களும் மிகச் சுவையானவை.

ஒளவையாராக யார் நடிப்பது? ... இரண்டொரு நாட்கள் இதைப்பற்றி நன்கு விவாதித்தோம். அப்போது ஆசிரியராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும் இருந்த சின்னண்ணா டி. கே. முத்துசாமியும், நானும் தனியே இருந்து பலமுறை இதைப் பற்றிப் பேசினோம். முடிவு காண இயலவில்லை. குழுவின் முக்கிய நடிகர் கே. ஆர். இராமசாமி சிறுவதில் மேனகாவாகவும்; மற்றும் சில நாடகங்களில் கதாநாயகியாகவும் திறம்பெற நடித்தவர். எல்லோரையும்விட நன்றாகப் பாடும் ஆற்றல் அவருக்கிருந்தது. ஒளவைக்கு விருத்தப் பாக்கள் அதிகமாக இருந்தமையால் கே. ஆர். இராமசாமியை ஒளவையாராகப் போடுமாறு அண்ணாவிடம் ஆலோசனை கூறினேன். இதுபற்றி நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆரிடம் கேட்டபோது, அவர் “ஐயையோ, நான் பெண் வேடம் புனைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அந்தப் பழக்கமெல்லாம் எனக்கு இப்போது வராது. நான் நடித்தால் நன்றாய் இராது” என்று உறுதியாகச் சொல்லி மறுத்துவிட்டார். நானும் இளமையில் பெண்வேடம் பூண்டவன். அஃது பழைய கதையாதலால் என்னை ஒளவையாராய்ப் போட வேண்டுமென்ற எண்ணமே யாருக்கும் எழவில்லை.

கடைசியாக ஒருநாள், ‘இன்று யாரையாவது ஒருவரை முடிவு செய்வது; அல்லது நாடகத்தையே கைவிடுவது’ என்ற தீர்மானத்துடன் சின்னண்ணாவும் நானும் கலந்து பேசினோம். எங்கள் குழுவிலுள்ள ஒரே பெண் நடிகை எம். எஸ். திரெளபதி. அவளோ சிறுபெண். எனவே, வழக்கமாகப் பெண் வேடம் தாங்கிவந்த நடிகர்களில் ஒருவர்தான் போட வேண்டும். அவர்களில் நன்றாகப் பாடக்கூடியவர்கள் யாருமில்லை. ஏ. பி. நாக ராஜன் அப்போது சேலத்துக்குப் போயிருந்தார். அவர் மீண்டும் கம்பெனிக்குத் திரும்புவது சந்தேகமாக இருந்தது. எனவே எவரையும் உறுதி செய்ய இயலாமல் திண்டாடினோம். என் வரையில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

தாங்களே நடிக்க வேண்டும்!

சின்னண்ணா, வேடம் புனைவதை நிறுத்திச் சில ஆண்டுகளே ஆயின. ஆனால், இறுதிவரை பெண் வேடங்களிலேயே நடித்தவர். எப்போதாவது மேனகா நடைபெற நேர்ந்தால் அவர்தாம் பெருந்தேவியாக நடிப்பார். அண்ணாவின் நடிப்புத் திறமையில் எனக்குப் பூர்ண நம்பிக்கை இருந்தது. அவரை எப்படியாவது சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்று எனக்குள் முடிவு செய்து கொண்டேன். அவர் இதை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டாரென்று தெரியும். எனவே பெரிய பீடிகை போட்டிக் கொண்டு பேசத் தொடங்கினேன்.

“அண்ணா, நாடகத்தில் தமிழ்ச் சுவை முக்கியம். பாடும் போதும், பேசும்போதும் வார்த்தைகள் தெளிவாக இல்லாவிட்டால் நாடகமே நன்றாக இராது. எல்லாக் காட்சிகளிலும் ஒளவையார் வரவேண்டியிருக்கிறது. அனைத்தும் அறிவுரைகளாகவே நிறைந்திருக்கின்றன. ஒளவையாராக நடிப்பவர் மிகத் திறமையாக நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான்கு மணி நேரம் கிழவியையே பார்த்துக்கொண்டு சபையோர் நாடகத்தை ரசிக்க முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறினேன்.

“அது சரி,எதற்காக இவ்வளவு பீடிகை?” என்றார் அண்ணா.

“தயவு செய்து ஒளவையார் வேடத்தைத் தாங்களே புனைய வேண்டும். நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானல் இதைத் தவிர வேறு வழியில்லை” என்று அழுத்தமாகத் தெரிவித்தேன். அருகிலிருந்த நடிக நண்பர்களும் இதனை மகிழ்வோடு ஆமோதித்தார்கள். சின்னண்ணா சிறிதும் எதிர்பார்க்கவில்லை. திகைப்படைந்தார். “சேச்சே, என்னால் முடியாது. அந்தக் காலம் போய் விட்டது” என்றார். இதைச் சொல்லிவிட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். நான் விடவில்லை. மேலும் உற்சாகத்தோடு பேசினேன். ஒளவையாராக நடிப்பவர் என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் வைக்கவேண்டும்; எப்படியெல்லாம் நடிக்கவேண்டும் என்பனவற்றை விரிவாக எடுத்து மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டே போனேன். திடீரென்று இடைமறித்து, “ஏண்டா,

இவ்வளவு தூரம் இந்தப் பாத்திரத்தைப் பற்றி என்னிடம் விளக்குகிறாயே; நீயே ஒளவையாராக நடித்தால் என்ன?” என்றார்.

அதிர்ச்சியும் துணிவும்

நான் அதிர்ச்சியடைந்தேன். அண்ணா இப்படிச் சொல்வா ரென்று எதிர்பார்க்கவேயில்லை. ஏதோ சொல்லி மறுத்தேன். சிறிது நேரம் வாதம் நடந்தது. இறுதியாக அவர் எழுந்து,

“ஒளவையார் வேடத்தை நீ புனைவதாக இருந்தால் நாடகத்தை நடத்துவோம்; இல்லாவிட்டால் இந்த நாடகமே வேண்டாம்”

என்று சொல்லிப்போய் விட்டார். ஒளவையாரை அரங்கில் காணத்துடித்த என் உள்ளத்திற்கு, இதுபெரும் சோதனையாகவே இருந்தது. நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஒளவையார் நாடகம் நடைபெறப் போவதில்லை! இந்த நிலை எனக்கு மிகவும் வேதனையைத் தந்தது. தனியே இருந்து சில மணி நேரம் சிந்தித்தேன். சோதனையில் தேறினேன். துணிவோடு அண்ணாவிடம் சென்றேன். “நானே ஒளவையாராக நடிக்கிறேன்” என ஏற்றுக் கொண்டேன்.

அதே நினைவு; அதே சிந்தனை

அன்று முதல் இரவும் பகலும் ஔவையைப் பற்றியே சிந்தித்தேன். ஔவை மூதாட்டியைப் பற்றி அறிஞர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தையும் வாங்கிப் படித்தேன். வீதிகளில் போகும் போதும் வரும்போதும் வயது முதிர்ந்தோர் எதிர்ப்பட்டால் சற்று நின்று உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவேன். மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதுகூட, சபையில் எதிரேவீற்றிருக்கும் பாட்டிமார்களின் உருவங்கள் என் கவனத்தைக் கவர்ந்தன. ஒளவையைப் பற்றியே நாள்தோறும் சிந்தித்துச் சிந்தித்துத் தெளிவு பெற முயன்றேன்.

கம்பெனி நடிகர் பி. எஸ். வேங்கடாசலம் மாம்பழக் கவிச் சிங்க நாவலரின் பரம்பரையைச் சேர்ந்தவர். ஒளவை நாடகத்திற்குப் பாடல்கள் இயற்றும் பொறுப்பினைத் தமக்கு அளிக்க

வேண்டுமென அவர் சின்னண்ணாவிடம் விரும்பிக் கேட்டார். அவர் பாடல்கள் இயற்றக்கூடிய திறமையுடையவரென்று அது வரையில் எனக்குத் தெரியாது. இரட்டிப்பு மகிழ்வோடு அவரையே பாடல்கள் எழுத அனுமதித்தார் அண்ணா. பெரும்பாலான பாடல்கள் ஒளவையாரே பாடியவை. இவற்றைத்தவிர மாகாகவி பாரதியார், புரட்சிக் கவினார் பாரதிதாசனார், கவிமணி தேசிக விநாயகனார், இசைச் செல்வர் இலட்சுமணப்பிள்ளை, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோரின், ‘தமிழ்த் திருநாடுதனைப் பெற்ற’, ‘இனிமைத் தமிழ்மொழி எமது’, ‘மங்கையராகப் பிறப் பதற்கே’, ஒன்றே உயர்சமயம், ‘தேகம் நிலையுள்ள தல்லவே’ ஆகிய பாடல்களையும் நாடகத்தில் தக்க இடத்தில் சேர்த்துக் கொண்டோம். இவற்றைத் தவிர சில பாடல்களே தேவை பட்டன. அவற்றை வேங்கடாசலம் மிக நன்றாக இயற்றி உதவினார். அவரே நாடகத்தில் பாரி வள்ளலாகவும் நடித்தார்.

டி. என். சிவதானுவும், பிரண்டுராமசாமியும் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்றனார். அவர்கள் ஏற்றபாத்திரங்கள் அனைத்தும் ஒளவையாரின் நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவை. எனவே ஒளவையாரின் பாத்திரத்திற்கு மேலும் பெருமை சேர்க் கும் வகையில் அவர்களுடைய நகைச்சுவை அமையவேண்டும் என ஆலோசனைக் கூறினேன்.

கலைமகள் தடுமாறினாள்

ஒளவையின் தொடக்க நாளிலேயே சில சகுனத் தடைகள் ஏற்பட்டன. நாடகத்தின் முதல் காட்சி இது. வானத்தில் மேகங்களின் இடையே செந்தாமரையில் பிரமனும், வெண்தாமரையில் கலைமகளும் தோன்றுகின்றனார். பிரமன் பூலோகத்தில் ஒளவையாக அவதரித்து அருந்தமிழ் மொழிக்குத் தொண்டு புரிந்து வருமாறு கலைவாணிக்கு ஆணையிடுகிறார். கலைமகள் அயனின் ஆணைக்கு அடிபணிகிறார். செந்தாமரை, வெண்தாமரை, இரண்டையும் பெரிதாகச்செய்து அவற்றின் நடுவே பிரம்மனையும், கலைமகளையும் இருத்தித் தாமரைகளின் இதழ்களை மூடிவிட்டு, இருதாமரைகளை யும் வால் பெட்டியோடு இணைத்து வைப்போம். முதல் வேட்டுக்குப் பிரமன் தோன்றுவார். இரண்டாவது வேட்டுக்குக் கலைமகள் காட்சி அளிப்பார். வேட்டுச்சத்தம் கேட்டாலும் தாமரையை இணைத்திருக்கும் வால்பெட்டியின் கயிற்றை உள்ளிருந்தபடியே இழுக்க வேண்டும். மேகங்களின் இடையே தாமரை மொட்டு மேலெழுந்துதோன்றும். பின்பு இதழ்கள் விரிந்துமலரும், பிரமன் பேசுவார். அதே போன்று கலைமகளும் காட்சி தரவேண்டும். வால் பெட்டியைத் தாங்கி நிற்கும் இரும்புக் குழாய் தெரியாமல் இருக்க அதனைத் தாமரைத் தண்டுபோல் தோன்றும் வண்ணம் பச்சை நிறம் பூசிவிடுவோம். கலைமகள் பேசியதும் காட்சி முடிகிறது. இதனை முதல் நாள் இரவே பல முறை ஒத்திகை பார்த்து வைத்திருந்தோம். காட்சி தொடங்கியது. வேட்டுச் சத்தம் கேட்டதும் செந்தாமரை மொட்டு உயர்ந்தது, பின்பு இதழ்கள் விரிந்து மலர, பிரமன் தோன்றினார். அவையோர் ஆர்வத்தோடு கைதட்டிப் பாராட்டினார். இரண்டாவது வேட்டுக்கு வெண்தாமரை மொட்டு உயர்ந்து மலர்ந்தது. அதில் வீற்றிருந்த கலைமகள் அசைந்தாடித் தள்ளாடித் தடுமாறிக் கீழே விழுந்து மேகத் தட்டிக்குள் மறைந்தாள். அவையில் சில அனுதாப ஒலிகள் கேட்டன. திரைவிடப்பட்டது. வால் பெட்டி உயரும்போது சிறிது சமாளித்துக்கொள்ளாது கலைமகளாக நடித்த பையன் ஆடியதால், மலர் விரிந்ததும் கிழே விழ நேர்ந்தது. மீண்டும் கலைமகளைத் தூக்கி உட்கார வைத்துக் காட்சியை ஒருவாறு முடித்தோம். ஆரம்பநாளிலேயே அசம்பாவிதம் ஏற்பட்டதால் ஒளவை நாடக வெற்றியில் யாருக்கும் நம்பிக்கை ஏற்பட வில்லை. கலைமகள் தடுமாறி விழுந்தது பெரிய சகுனத்தடை என்றார்கள். நான் இதனாதெல்லாம் சிறிதும் சோர்ந்து விடவில்லை. வசூல் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் நாடகம் தொடர்ந்து பதினேழு நாட்கள் நடந்தது. புலவர்களும் அறிஞர்களும் வந்து பார்த்து என்னை உளமாரப் பாராட்டி உற்சாகப் படுத்தினார்கள். வேறு சில நாடகங்கள் நடந்தபின் மீண்டும் வடலூர் இராமலிங்க சாமிகள் மடத்தின் நிதிக்காக ஒளவை யாரையே நடித்தோம். அன்று வாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி வாழ்த்தினார்கள்.

எங்கள் குறிக்கோள்

ஒளவையாராக வேடம் புனேந்து நடிப்பதற்கு நானும்எனது முன்னோர்களும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்றே எண்ணினேன். நான்பெற்ற அரிய பேற்றினை எண்ணி யெண்ணிப் பெருமிதம் அடைந்தேன். நாடகத்திற்கு வசூலாகவில்லை. என்றாலும் என்னைப் பொறுத்தவரையில் ஒளவையாராக நடித்தபின் எனக்கு ஆன்மீக நிறைவு ஏற்பட்டது. மக்களின் வரவேற்புக்குரிய நாடகங்களையே நடிப்பது எங்கள் குறிக்கோள் அன்று. மக்களுக்கு எதைச் சொல்ல வேண்டும் என்று எண்ணாகிறோமோ, எது தேவையென்று நினைக்கிறோமோ அத்தகைய நாடகங்களையே இது வரை நடித்து வந்திருக்கிறோம். அவ்வாறு நடிக்கப்பெறும் நல்ல நாடகங்களுக்குப் பொது மக்களின் வரவேற்பினைப்பெற்றுத் தர அறிஞர்களின் ஆதரவும் பத்திரிகைகளின் பாராட்டுரைகளும் எங்களுக்கு மிகவும் உதவியிருக்கின்றன. குமாஸ்தாவின் பெண்ணைத் தொடங்கிய நாளில் போதுமான ஆதரவில்லை. ஆனால், மதுரையில் அமோகமான வரவேற்புக் கிடைத்தது. அஃதே போன்று ஒளவை யாருக்கும் ஆதரவு கிடைக்குமென்று உறுதியாக நம்பினோம்.

ஒளவையாரைப் பார்த்த புலவர் நல்லசிவன் பிள்ளை “நாடகக்கலைக்கு நல்ல காலம் பிறந்தது” என்று எழுதினார். “நீங்கள் கூத்தாடிகள் அல்ல; மாபெருங் கலைஞர்கள்,” என்று மதுரைச் சங்கப் புலவர் நா. கிருஷ்ணசாமி நாயுடு பாராட்டியிருந்தார். உற்சாகம் எங்களை ஊக்கியது. மதுரையில் நாடகம் தொடங்கி ஏறத்தாழ ஒராண்டு முடிந்தது. மேலும் சில புதியநாடகங்களைத் தயாரித்து, மதுரையம் பதியிலேயே அரங்கேற்ற எண்ணினோம். அதற்குள் உலகில் போர்ச் சூழல் உருவாகிவிட்டது.