என் சுயசரிதை/கல்வித் துறைக்காக உழைத்தது

விக்கிமூலம் இலிருந்து

கல்வித் துறைக்காக உழைத்தது

சென்னை பல்கலை கழகத்தில் (University) நான் தமிழ் பாஷையின் சார்பாக ஒரு செனெட் அங்கத்தினனாக பிரிட்டிஷ் ராஜாங்கத்தாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் உழைத்து வந்தேன். அன்றியும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் ஒரு அங்கத்தினனாக காலஞ்சென்ற ராஜா சர். அண்ணாமலை செட்டியாரால் நியமிக்கப்பட்டு சில வருடங்கள் அதன் வேலையில் கலந்து கொண்டேன். அண்ணாமலை நகரில் பன்முறை நாடகங்களைப்பற்றி சொற்பொழிவு செய்தேன்.

மேலும் ‘சென்னை ஸ்கூல் புக் லிட்ரெச்சர் சொசைடி’ என்னும் சங்கத்தில் ஒரு கமிட்டி அங்கத்தினாக பல் வருடங்களாக தமிழ் அபிவிருத்திக்காக உழைத்து வருகிறேன். இச் சபையானது நான் பிறப்பதற்கு முன்பாக என் தகப்பனார் முதலிய பல சென்னை வாசிகளால் ஏற்படுத்தப்பட்டதாம்.