ஏழாவது வாசல்/கோயிலும் உள்ளமும்

விக்கிமூலம் இலிருந்து

கோயிலும் உள்ளமும்

ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் பத்மலோசனன். அவ்வூரார் அவனை “பொடோ” என்று விளையாட்டாக அழைப்பார்கள்.

அந்த ஊரில் ஒரு பாழடைந்த கோயில் இருந்தது. அங்கு தெய்வத்தின் சிலை இல்லை. எங்கும் புல்பூண்டு முளைத்து, காக்கை, குருவி வெளவால் ஆகியவற்றினால் அசுத்த மடைந்து கோயில் ஒரே நாற்றமாக இருந்தது. அதனால் அங்கே யாரும் போவதில்லை,

ஒருநாள் திடீரென்று அந்தக் கோயிலின் மணி ஓசை முழங்கிற்று. தொடர்ந்து கோயில் மணி அடிக்கவே ஆங்காங்கிருந்து பலர் கோயிலை நோக்கி வந்தார்கள்.

கோயிலை யாரோ சுத்தம் செய்து தெய்வம் வைத்துப்பூஜை ஆரம்பித்திருக்கிறார்கள் என்று ஊர் மக்கள் நினைத்துக் கொண்டார்கள், எனவே கோயிலை நோக்கிக் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவன் விடுவிடுவென்று கோயிலுக்குள் நுழைந்தான். கோயில் பழைய நிலையிலேயே இருந்தது. எங்கும் அசுத்தமாகவே கிடந்தது. தெய்வமும் கொண்டுவந்து வைக்கப்படவில்லை. இந்த நிலையில் மணியடிப்பவர் யார்? என்று அந்த மனிதன் கவனித்தான். அது ‘பொடோ’ தான்.

“அடே, பொடோ உள்ளே தெய்வம் இல்லை. நீ கோயிலைக் கூட்டிப் பெருக்கிக் கழுவிச் சுத்தப்படுத்தவும் இல்லை. வெளவால்களும் பறவைகளும் இன்னும் அகன்று போகவும் இல்லை. சிறிது கூடச் செம்மைப் படுத்தாமல், நீ இப்படி மணியடித்து ஊரைக் கூட்டியது வீணாய்ப் போயிற்றே என்று பலவாறு கூறித் துயருற்றான்.

சுத்தப்படுத்தாமலும், தெய்வம் இல்லாமலும் மணியடித்து ஆரவாரப் படுத்துகின்ற பொடோவைப் போன்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள்.

மனத்தில் உள்ள தீமைகளை அகற்றிச்சுத்தப்படுத்தாமலும், மனத்தில் இறைவனை நிறுத்தி வணங்காமலும், வீணாக கடவுளைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் பேசுகின்றவர்கள் பொடோவைப் போன்றவர்கள் தானே.

முதலில் நல்ல எண்ணம் வேண்டும்! இரண்டாவது இறைவனிடத்தில் அன்பு வேண்டும் அதன்பிறகு தான் கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும்.