ஏழாவது வாசல்/மாந்தோப்பு

விக்கிமூலம் இலிருந்து

மாந்தோப்பு

ஓர் ஊருக்குப் பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருந்தது. அந்த மாந்தோப்பு வழியாக இரண்டு மனிதர்கள் சென்றனர்.

சித்திரை மாதம்! மாமரங்களில் தங்கக்கட்டிகள் போல் மாம்பழங்கள் பழுத்துக்தொங்கிக் கொண்டிருந்தன. பார்த்தவர் கண்ணைப் பறிக்கும் வண்ணம் அவை கொத்துக் கொத்தாகத் தொங்கின. இருவரும் அண்ணாந்துப் பார்த்தனர். ஒரு மனிதன் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அங்குள்ள மாமரங்களை எண்ணினான். ஒரு மரத்தில் சுமார் எத்தனை பழங்கள் இருக்கும் என்று கணக்குப் போட்டான். அதைப் பெருக்கிப் பார்த்தான். ஒரு மாம்பழம் என்ன விலை போகும் என்று எண்ணிப் பார்த்தான். மொத்த மாம்பழமும் எத்தனை ரூபாய் ஆகும் என்று கணக்குப் போட்டான். தோப்பின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்தான். இப்படியாக அவன் சிந்தனையும் கணக்கும் நீண்டு கொண்டே போயிற்று.

மற்றொரு மனிதன், நேரே தோட்டக்காரனிடம் சென்றான். மாம்பழங்களின் அருமையைப் புகழ்ந்து சொன்னான். அதுபோன்ற நல்ல ஜாதி மாம்பழங்கள் நாட்டில் கிடைப்பது அரிது என்றுசொன்னான். தோட்டக்காரனுக்கு மனம் குளிர்ந்து போய் விட்டது. இருவரும் நண்பர்களாகி விட்டார்கள். தோட்டக்காரன் அவனுக்குச் சிலபழங்களைப் பறித்துக்கொடுத்தான். உண்மையிலேயே அவை சுவையான மாம்பழங்கள். அவற்றை வாங்கித்தின்றுவிட்டு. மகிழ்ச்சியாக அந்த மனிதன் திரும்பினான்.

இந்த இரண்டு மனிதர்களில் யார் அறிவாளி? தோட்டக் காரனுடன் நட்புக் கொண்டு மாம்பழம் தின்றவனா? தோப்புக்கு விலை மதிப்புப் போட்டவனா?

வீண் சிந்தனைகள் இன்பம் விளைப்பதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஏழாவது_வாசல்/மாந்தோப்பு&oldid=988569" இலிருந்து மீள்விக்கப்பட்டது