கனிச்சாறு 1/009-089

விக்கிமூலம் இலிருந்து

6  முத்தமிழ் முப்பது!

1. பாட்டுப் பத்து

1.மூத்த வுணர்வின் முதிர்வசையால் உள்ளணுக்கள்

யாத்த வரியிசையே பாட்டு.

2.வல்லார் நினைத்த நினைவலைகள் வந்துறுத்தச்

சொல்லால் எதிரொலித்தல் பாட்டு.

3.காற்றின் நுணித்தாய்க் கருத்தலைகள் உள்ளூறி

ஊற்றுப் பெருக்குவதே பாட்டு!

4.கிடந்த வொழுங்கின் உணர்வலைகள் நெஞ்சில்

நடந்த வொழுங்கிசையே பாட்டு.

5.ஊன்றும் இறையொளிமூண் டுள்ளக் கனலெழுப்பத்

தோன்றும் உணர்வொலியே பாட்டு.

6.மூண்ட நெடுநினைவால் முற்றும் உளக்கனியைக்

கீண்ட வொலியூற்றே பாட்டு.

7.அண்ட வெளியொலியை ஆகத் தணுப்புகுத்தி

விண்ட வுணர்வொழுங்கே பாட்டு.

8.தோற்றம் நிலைப்பொடுக்கம் என்னுந் தொலையுணர்வின்

ஏற்றம் விளக்கொலியே பாட்டு.

9.அணுவை அணுத்துடிப்பை ஆன்றெ வொளியின்

அணுவை ஒலியாக்கல் பாட்டு.

10.என்றும் இருப்ப தினியொன் றிருப்பதுபோல்

என்றும் இருப்பதுவே பாட்டு.


2. கூத்துப் பத்து

1.தானதுவா யெண்ண அதுதானே வந்துளொன்றி
ஊனணுவை யுந்துவதே கூத்து.

2.புலம்பற்றி யுள்பற்றிப் பூதங்கள் பற்றித்
துலங்கசைவைத் தோற்றுவதே கூத்து.

3.கண்ணொளியை மெய்யொளிர்ப்பக்
காதொலியை வாயுதிர்ப்பத்
திண்ணணுவில் நெஞ்சாடல் கூத்து.

4.கோடி யணுத்திரளும் கூத்தன் உளக்கயிற்றில்
ஆடி வுணர்வியக்கல் கூத்து.

5.வாங்குணர்வை யேந்தி வழங்குணர்வால் காண்பார்க்குள்
ஓங்குணர்வைப் பாய்ச்சுவதே கூத்து.

6.அண்ட வியக்கத்தை ஆன்றணுக்கள் ஏற்றியங்கி
விண்டு விளக்குவதே கூத்து.

7.நாடித் துடிப்புமுயிர் நற்றுடிப்பும் ஓரிசையுள்
ஓடித் துடிப்பெடுத்தல் கூத்து.

8.அணுவோ டணுமோதி யஃதிரண்டாய் விண்டுள்
உணர்ந்தாடி வீறுவதே கூத்து.

9.மின்னணுக்கள் வீழ மிளிரணுக்கள் தாமியங்க
மன்னுணர்வை யாட்டுவதே கூத்து.

10.புதைத்த உளத்துணர்வைப் பொன்றா வெளியுட்
சிதைக்கச் சிலிர்ப்பதுவே கூத்து.


3. இயற் பத்து

1.நிற்றல் நிலைமாறல் நீடிசைத்தல் ஆடலெனக்
கற்றல் ஒடுங்கல் இயல்.

2.ஊன்றல் உணர்தல் ஒளியேற உள்ளாடி
ஆன்றல் அவிதல் இயல்.

3.பிணைதல் பிளத்தல் பிறந்திசைந்தே ஆடி
இணைதல் புதைதல் இயல்.

4.தோன்றல் துலங்கலொரு துண்ணணுவாய் மின்னியுளம்
நோன்றல் நுடங்கல் இயல்.

5.ஏறல் இளைந்தொளிர்தல் எண்ணிறந்து மாறியுயிர்
ஆறல் அடங்கல் இயல்.

6.பிறங்கல் புலனுயர்தல் பீடுணர்வால் ஆழ்ந்துள்
உறங்கல் ஒடுங்கல் இயல்.

7.பொங்கல் புணர்தல் பொதியுடம்பு விட்டவுயிர்
தொங்கல் துதைதல் இயல்.

8.சோம்பல் சுடர்தல் சுரப்பித்தல் உள் நிறைந்து
கூம்பல் குமைதல் இயல்.

9.விசைந்தேறி உள்விளங்கி விண்டவுயிர் சோர
இசைந்தாடி ஒன்றல் இயல்.

10.எடுத்தல் இயங்கல் இசைந்தாடி உள்ளம்
படுத்தல் மடுத்தல் இயல்.

- 1957
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/009-089&oldid=1514324" இலிருந்து மீள்விக்கப்பட்டது