கனிச்சாறு 1/021-089

விக்கிமூலம் இலிருந்து

18  தமிழ்க்கு மூவுடைமை!

எடுப்பு


நீயே - செந்தமிழ்த் தாயே! - நான்
நினையறிந் தவன்; ஒரு சேயே! - முன்
நிலைகெட மிகவும்நொந் தாயே; - என்
நெஞ்சினில் எழுந்தது; எழுந்தது - தீயே! - நீயே

தொடுப்பு


ஓயேன்; இனியுன்றன் உழைப்பினில் சாயேன்!
உடல் பொருள் ஆவியும் ஈவேன்! ஈவேன்! - நீயே

முடிப்பு


காயே விழைவார்; கனிச்சுவை அறியார்!
கண்விழிப்பார்; உளம் விழியார்; - தமிழ்த்
தாயே! நின்னறம் நின்பொருள் பேணார்!
தம்செயல் அறிவுக்கு நாணார்! நாணார்! - நீயே

அயல்மொழி பயில்வார், அதனடி துயில்வார்!
அரும்பொருள் அயில்வார்; நினையார்; - மதி
மயலுறப் பிறன்கைச் சிறுபொருள் ஆனார்!
மற்றிவர் செயலுக்குக் கூனார்! கூனார்! - நீயே

பால்கறந் தேபிற கன்றினுக் கூட்டியே,
வால்கறப் பார்கழி மூடர்! - அது
போல்சிறந் தாயுனைப் பிறர்கொளத் தந்தார்!
புன்மொழி அறிந்துளம் நொந்தார்! நொந்தார்! - நீயே

–1962
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/021-089&oldid=1514508" இலிருந்து மீள்விக்கப்பட்டது