கனிச்சாறு 1/049-089

விக்கிமூலம் இலிருந்து

46  குருடும் பேதையும்


பாப்பித் துயர்ந்த பாவலர் முன்னாள்
பயந்ததமிழ்த்,
தோப்பிற் புகுந்துமேல் தோலும் இருக்கச்
சுளையெடுத்து
யாப்பிற் புகுத்தியே யானும் புலவனென்
பானையுங்கை
கூப்பித் தொழுவதோ கூர்த்தறி வில்லாக்
குருடர்களே!

ஊறித் திளைத்ததம் காமக் கழிவின்
உணர்வுகளை
நாறித் துளும்பிடும் சொற்களால் தீட்டி
நயப்பவனைக்
காறிச் சழக்கென் றுமிழ்வதல் லால்ஓர்
கலைஞனெனக்
கூறிப் புகழ்வதோ ஓங்கறி வில்லாத
குள்ளர்களே!

ஊசிப் புழுத்த கருத்தை உளந்தாழ்
இழிவுரையால்
பூசிக் கலவை மொழியால் அடுக்கிப்
புளுகுவரைக்
கூசித் திருத்துவ தல்லால் தமிழ்தேர்
குரிசிலெனப்
பேசித் திரிவதோ மெய்யறி வில்லாத
பேதைகளே!

-1976

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/049-089&oldid=1514538" இலிருந்து மீள்விக்கப்பட்டது