கனிச்சாறு 1/077-089

விக்கிமூலம் இலிருந்து

73  செந்தமிழ் தந்த சிறை!

எந்தமிழ் மொழிக்கும் எந்தமி ழர்க்கும்
வந்த இழிவெலாம், வருந்துயர் எல்லாம்
துடைத்திடச் சிறைக்குள் தொண்ணூ றாண்டுகள்
அடைத்துக் கிடக்கப் படுவேன் என்னினும்
உள்ளமும் உயிரும் உவந்துடன் ஒப்புவேன்!
கள்ள மிலாவென் மனைவியும் மக்களும்
என்னைப் பிரிந்திட வேண்டும் என்னினும்
அன்னைத் தமிழ்க்கென அகமகிழ்ந் திசைவேன்!

எவ்வாற் றானும் எந்தமிழ் நாடும்
செவ்விய தமிழும் சிறப்புற் றிலங்க
வேண்டும் என்பதே என்னுயிர் விழைவாம்!
ஈண்டியான் பெற்ற ஈரிரு மாதக்
கடுஞ்சிறை வாழ்வு எம் கன்னித் தமிழையும்
கொடுந்துயர்ப் பட்ட எந்தமிழ்க் குலத்தையும்
ஒருபடி உயர்த்தும் என்னின் உண்மையாய்
இருபடி வாழ்ந்தேன் என்றே இயம்புவேன்!

இவ்வுடல் தானும் இதனுள் ஓடும்
ஒவ்விய குருதியும் உணர்வும் நரம்பும்
எந்தமிழ்த் தாய்க்கும் எந்தமி ழர்க்கும்
சொந்தம் என்பதால் சோர்வெனக் கில்லை!

என்னிலை தமிழர்க்கு இனியநல் உணர்வினை
முன்னினும் பன்மடங் காக உயர்த்துக!

தன்னிலை மறந்த தமிழர்க்கு என்சிறை
முன்னிலை உணர்த்தி முழுவுணர் வூட்டுக!

அற்றைப் பெருநிலை அறவே மறந்து
குற்றுயி ருற்றயெந் தமிழ்க்குடி உயர்க!

செந்தமிழ் நாடும் செந்தமிழ் மக்களும்
முந்தை துறந்த மொய்ம்புகழ் மீண்டும்
முளைத்துக் கிளைத்து மூண்டுபுடை விரிக!
களைத்துக் கிடக்கும் எம் தமிழுளம் களிக்க!

ஆண்டுகொண் டிருக்கும் அரசுப்பட் டாளம்
மாண்டுகொண் டிருக்கும் தமிழரை மதிக்க
மீண்டுகொண் டிருக்கும் உரிமை உணர்வினைத்
தூண்டுங் கோலென என்சிறை துலங்குக!

ஒற்றுமை பேசி உரிமையை மறுக்கும்
வெற்றுரை அரசின் வீண்செய லெல்லாம்
குற்றுமி போலத் தமிழர்முன் குலைக!
மற்று அவர் ஆட்சி மண்ணுள் புதைக!

இனியுந் தமிழர் எழாமற் போயின்
கனிந்திடும் உரிமைக் கனிச்சுவை நுகரார்!

மலர்ந்திடும் தமிழக மாட்சிமை அறியார்!
உலர்ந்திடுஞ் சருகா உதிர்ந்திழிந் தழிவார்!

இறுதியாய்த் தமிழரை ஒன்று வேண்டுவேன்!
உறுதி உளத்துடன் பன்முறை உன்னுக!

தமிழ்மொழி தாழ்ந்தால் தமிழினம் வாழுமா?
தமிழ்மொழி சிதைந்தால் தமிழர் உயர்வரா?
இந்திய அரசினர் இந்தி மொழிக்குத்
தந்த உயர்வு தமிழ்க்குவேண் டாவா?

மொழிச்சிறப் பழித்து மொழியுணர் வழித்தால்
எழுச்சி யின்றித் தமிழினம் இன்றினும்
அடிமை யுற்றுத் தாழ்ந்தழி யாதா?
மிடிமை முற்றும் மீண்டும் வராதா?

ஆகலின் தமிழரே தமிழ்உணர் வாக்குக
சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது?
செந்தமிழ் தந்தது சிறையெனில் இதனினும்
எந்தமிழ் உள்ளம் எதற்கினி மகிழும்?
வீழாது தமிழ்ப்பயிர் விளையத்
தாழாது வித்துக தமிழைத் தமிழரே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_1/077-089&oldid=1515067" இலிருந்து மீள்விக்கப்பட்டது