கலிங்கத்துப் பரணி/களம் பாடியது

விக்கிமூலம் இலிருந்து

களச் சிறப்பு[தொகு]

472

தேவாசுர ராமாயண மாபாரத முளவென்
றோவாவுரை ஓயும்படி உளதப் பொருகளமே. 1

பேய் வேண்டக் காளி அணுகல்[தொகு]

473

காலக்கள மதுகண்டரு ளிறைவீகடி தெனவே
ஆலக்கள முடையான்மகி ழமுதக்கள மணுகி 2

காளி களங்கண்டு வியத்தல்[தொகு]

474

என்னேயொரு செருவெங்கள மெனவேயதி சயமுற்
றந்நேரிழை யலகைக்கண மவைகண்டிட மொழியும். 3

யானையும் கப்பலும் விளக்கம்[தொகு]

475

உடலின்மேற் பலகாயஞ் சொரிந்து பின்கால்
உடன்பதைப்ப வுதிரத்தே யொழுகும் யானை
கடலின்மேற் கலந்தொடரப் பின்னே செல்லுங்
கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின். 4



குதிரையும் குதிரைத் தறியும்[தொகு]

476

நெடுங்குதிரை மிசைக்கலணை சரியப் பாய்ந்து
நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று
படுங்குருதிக் கடும்புனலை யடைக்கப் பாய்ந்த
பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின். 5

வீரர் முகமலர்ந்து கிடந்தமை[தொகு]

477

விருந்தினரும் வறியவரு நெருங்கி யுண்ண
மேன்மேலு முகம்மலரு மேலோர் போலப்
பருந்தினமுங் கழுகினமுந் தாமே யுண்ணப்
பதுமமுக மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். 6

வீரர்களும் கருமிகளும்[தொகு]

478

சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
சாருநர்போல் வீரருடல் தரிக்கு மாவி
போமளவு மவரருகே யிருந்து விட்டுப்
போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். 7

வண்டும் விலைமாதரும்[தொகு]

479

மாமழைபோற் பொழிகின்ற தான வாரி
மறித்துவிழுங் கடகளிற்றை வெறுத்து வானோர்
பூமழைமேற் பாய்ந்தெழுந்து நிரந்த வண்டு
பொருட்பெண்டிர் போன்றமையுங் காண்மின்காண்மின். 8

கொடியொடு கிடக்கும் யானைகள்[தொகு]

480

சாய்ந்துவிழுங் கடகளிற்றி னுடனே சாய்ந்து
தடங்குருதி மிசைப்படியுங் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங்
கற்புடைமா தரையொத்தல் காண்மின் காண்மின். 9

கணவரைத் தேடும் மகளிர்[தொகு]

481

தங்கணவ ருடன்றாமும் போக வென்றே
சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிட மெங்கே யென்றென்
றிடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின். 10

ஆவி சோரும் மனைவி[தொகு]

482

வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
மணியதரத் தேதேனும் வடுவுண் டாயோ
நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து
நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின். 11

கணவனைத் தழுவி உயிர்விடும் பெண்[தொகு]

483

தரைமகள்தன் கொழுநன்ற னுடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளி ரவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின். 12

தலை பெற்ற மனைவி செயல்[தொகு]

484

பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
போர்முகத்தி லெவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே யெங்கே யென்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின். 13

கருமேகம் செம்மேகத்தை ஒத்திருத்தல்[தொகு]

485

ஆடற்று ரங்கம்பி டித் தாளை யாளோட
டித்துப்பு டைத்தவ்வி ரும்புண்ணினீர்
ஓடித்தெ றிக்கக் கருங்கொண்டல் செங்கொண்டல்
ஒக்கின்ற விவ்வாறு காண்மின்களோ. 14

கருங்காகம் வெண்காகத்தை ஒத்திருத்தல்[தொகு]

486

நெருங்காக வச்செங் களத்தே
தயங்கும் நிணப்போர்வை மூடிக்கொளக்
கருங்காகம் வெண்காக மாய்நின்ற
வாமுன்பு காணாத காண்மின்களோ. 15

போர்க்களம் தாமரைக் குளத்தை ஒத்திருத்தல்[தொகு]

487

மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா
சடையொக்க வடுசெங்க ளம்பங்க யப்பொய்கை யாமாறு காண்மின்களோ. 16

வீரர் மூங்கிலை ஒத்திருத்தல்[தொகு]

488

வெயிற்றாரை வேல்சூழ வுந்தைக்க மண்மேல்வி ழாவீரர் வேழம்பர்தங்
கயிற்றாலி ழுப்புண்டு சாயாது நிற்குங்க ழாயொத்தல் காண்மின்களோ. 17

பருந்தும் கழுகும் துன்புறல்[தொகு]

489

இருப்புக்க வந்தத்தின் மீதேற லுஞ்சூர ரெஃகம்பு தைக்கஇறகைப்
பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட ஈதோர்ப ருந்தாடல் காண்மின்களோ. 18

படைத்தலைவர் கடனாற்றல்[தொகு]

490

வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து றாமேவில் வாள்வீரர் வாணாளுகக்
கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற றச்செய்த கைம்மாறு காண்மின்களோ. 19

எழுந்தாடும் வீரர் தலை[தொகு]

491

யானைப்ப டைச்சூரர் நேரான போழ்தற்றெ ழுந்தாடு கின்றார்தலை
மானச்ச யப்பாவை விட்டாடும் அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ. 20

வானில் கண்ட காட்சி[தொகு]

492

எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய்
ஏறுமா னவர்கள்தா மெண்ணுதற் கருமையிற்
கதிர்விசும் பதனிலே யிதனிலும் பெரியதோர்
காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ. 21

குருதிக் கடல்[தொகு]

493

அவரிபஞ் சொரிமதங் கழியெனப் புகமடுத்
தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தங்
கவரிவெண் ணுரைநிரைத் தவருடற் குருதியிற்
கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ. 22

யானைகள் மலைகளை ஒத்தல்[தொகு]

494

புவிபுரந் தருள்செயுஞ் சயதர னொருமுறைப்
புணரிமே லணைபடப் பொருவில்விற் குனிதலிற்
கவிகுலங் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக்
கரிகளின் பிணமிதிற் காண்மினோ காண்மினோ. 23

வீரர் வியத்தல்[தொகு]

495

உற்றவா யம்புதம் பரிசையுங் கருவியும்
உருவிமார் பகலமு முருவிவீழ் செருநர்விற்
கற்றவா வொருவன்விற் கற்றவா வென்றுதங்
கைம்மறித் தவரையுங் காண்மினோ காண்மினோ. 24

வீரர்தம் உடலங்கள் தேவர்களை ஒத்தல்[தொகு]

496

விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய்
மீதுபோ முயிர்களே யன்றியே யின்றுதங்
கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களுங்
கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ. 25

வெட்டுண்ட யானைத்தலைகள் சம்மட்டியை ஒத்தல்[தொகு]

497

பிறைப்பெ ரும்பணை வேழ முன்னொடு பின்று ணிந்துத ரைப்படுங்
குறைத்த லைத்துணி கொல்ல னெஃகெறி கூட மொத்தமை காண்மினோ. 26

வேல் பறித்து சாயும் வீரர்[தொகு]

498

வாயி னிற்புகு வேல்கள் பற்றுவ லக்கை யோடுநி லத்திடைச்
சாயு மற்றவர் காள மூதிகள் தம்மை யொத்தமை காண்மினோ. 27

வீரர் படகோட்டிகளை ஒத்தல்[தொகு]

499

படவூன்று நெடுங்குந்த மார்பி னின்று
பறித்ததனை நிலத்தூன்றித் தேர்மே னிற்பார்
படவூன்றி விடுந்தொழிலோ ரென்ன முன்னம்
பசுங்குருதி தோன்றுமால் காண்மின் காண்மின். 28

நிணமென அம்பு பற்றிய பருந்தின் நிலை[தொகு]

500

வாயகலம் பரத்தமொடு நிணங்கொண் டோட
மற்றதனை வள்ளுகிரின் பருந்து கோணல்
வாயகலம் பரத்தினிடைக் கௌவி வல்வாய்
வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணங் காண்மின். 29

பிணந்தின்ற பூதம் வரும் தோற்றம்[தொகு]

501

சாதுரங்கத் தலைவனைப்போர்க் களத்தில் வந்த
தழைவயிற்றுப் பூதந்தா னருந்தி மிக்க
சாதுரங்கந் தலைசுமந்து கமஞ்சூற் கொண்டு
தனிப்படுங்கா ரெனவருமத் தன்மை காண்மின். 30

விழுப்புண்பட்ட யானை வீரர்[தொகு]

502

முதுகுவடிப் படியிருக்கு மென்ன நிற்கு
முனைக்களிற்றோர் செருக்களத்து முந்து தங்கண்
முதுகுவடுப் படுமென்ற வடுவை யஞ்சி
முன்னம்வடுப் பட்டாரை யின்னங் காண்மின். 31

கூழ் அடுமாறு கூறல்[தொகு]

503

களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக்
குளமடைபட் டதுபோலுங் குருதி யாடிக் கூழடுமி னென்றருளக் கும்பிட் டாங்கே. 32

பேய்கள் அழைத்தல்[தொகு]

504

குறுமோ டீநெடு நிணமா லாய்குடை கலதீ கூரெயி றீநீலி
மறிமா டீகுதிர் வயிறீ கூழட வாரீர் கூழட வாரீரே. 33

பல் விளக்கல்[தொகு]

505

பறிந்த மருப்பின் வெண்கோலாற் பல்லை விளக்கிக் கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழுவெலும்பை வாங்கி நாக்கை வழியீரே. 34

நகம் நீக்கலும் எண்ணெய் தேய்த்தலும்[தொகு]

506

வாயம் புகளா முகிர்கொள்ளி வாங்கி யுகிரை வாங்கீரே
பாயுங் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே. 35

இரத்தத்தில் குளித்தல்[தொகு]

507

எண்ணெய் போக வெண்மூளை யென்னுங் களியான் மயிர் குழப்பிப்
பண்ணை யாகக் குருதிமடுப் பாய்ந்து நீந்தி யாடிரே. 36

கரையிலிருந்தே குளிப்பீர்[தொகு]

508

குருதிக் குட்ட மித்தனையுங் கோலும் வேலுங் குந்தமுமே
கருவிக் கட்டு மாட்டாதீர் கரைக்கே யிருந்து குளியீரே. 37

ஆடை உடுத்தல்[தொகு]

509

ஆழ்ந்த குருதி மடுநீந்தி யங்கே யினையா திங்கேறி
வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம் விரித்து விரித்துப் புனையீரே. 38

கைவளையும் காலணியும்[தொகு]

510

மதங்கொள் கரியின் கோளகையை மணிச்சூ டகமாச் செறியீரே
பதங்கொள் புரவிப் படிதரளப் பொற்பா டகமாப் புனையீரே. 39

காதணி[தொகு]

511

ஈண்டுஞ் செருவிற் படுவீர ரெறியும் பாரா வளையடுக்கி
வேண்டு மளவும் வாய்நெகிழ்த்து விடுகம் பிகளாப் புனையீரே. 40

காப்பணியும் காதணியும்[தொகு]

512

பணைத்த பனைவெங் கரிக்கரத்தாற் பரிய பருநாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள்கம்பிட் டிரட்டை வாளி யேற்றீரே. 41

தோளணியும் முத்து மாலையும்[தொகு]

513

பட்ட புரவிக் கவிகுரத்தாற் பாகு வலயஞ் சாத்தீரே
இட்ட சுரிசங் கெடுத்துக்கோத் தேகா வலியுஞ் சாத்தீரே. 42

வன்னசரம் அணிதல்[தொகு]

514

பொருசின வீரர்தங் கண்மணியும் போதக மத்தக முத்தும்வாங்கி
வரிசை யறிந்து நரம்பிற்கோத்து வன்ன சரங்க ளணியீரே. 43

உணவின் பொருட்டு எழுக[தொகு]

515

கொள்ளு மெனைப்பல கோலமென்மேற் கொண்டிட வேளையு மீதூர
உள்ளும் புறம்பும் வெதும்புங்காண் உண்பத னுக்கொருப் படுவீரே. 44

சமையலறை அமைத்தல்[தொகு]

516

மாகாய மதமலையின் பிணமலைமேல் வன்கழுகின் சிறகாற் செய்த
ஆகாய மேற்கட்டி யதன்கீழே அடுக்களைகொண் டடுமி னம்மா. 45

மெழுகல் கோலமிடல் அடுப்பமைத்தல்[தொகு]

517

பொழிமதத்தா னிலமெழுகிப் பொடிந்துதிர்ந்த பொடித்தரளப் பிண்டி தீட்டி
அழிமதத்த மத்தகத்தை யடுப்பாகக் கடுப்பாக்கொண் டடுமி னம்மா. 46

பானையை அடுப்பில் ஏற்றல்[தொகு]

518

கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு தலையுங் காலும்
அற்றுவீ ழானைப் பானை அடுப்பினி லேற்று மம்மா. 47

உண்பொருள் கொணர்தல்[தொகு]

519

வெண்டயிருஞ் செந்தயிரும் விராய்க்கிடந்த கிழான்போல வீரர் மூளைத்
தண்டயிரு மிடைவித்த புளிதமுமாத் தாழிதொறுந் தம்மி னம்மா. 48

உலைநீர் ஊற்றல்[தொகு]

520

கொலையினுட் படுகரிக் குழிசியுட் கூழினுக்
குலையெனக் குதிரையின் உதிரமே சொரிமினோ. 49

உப்பும் காயமும் இடல்[தொகு]

521

துள்ளிவெங் களனில்வீழ் துரகவெண் பல்லெனும்
உள்ளியுங் கிள்ளியிட் டுகிரினுப் பிடுமினோ. 50

தீ மூட்டல்[தொகு]

522

தனிவிசும் படையினும் படைஞர்கண் டவிர்கிலா
முனிவெனுங் கனலைநீர் மூளவைத் திடுமினோ. 51

விறகு கொண்டு எரித்தல்[தொகு]

523

குந்தமும் பகழியுங் கோல்களும் வேலுமாம்
இந்தனம் பலவெடுத் திடைமடுத் தெரிமினோ. 52

பல்லும் பழவரிசியும்[தொகு]

524

கல்லைக் கறித்துப் பல்முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்தம்
பல்லைத் தகர்த்துப் பழவரிசி ஆகப் பண்ணிக் கொள்ளீரே. 53

அரிசியும் குற்றும் உரலும்[தொகு]

525

சுவைக்கு முடிவிற் கூழினுக்குச் சொரியு மரிசி வரியெயிறா
அவைக்கு முரல்க ளெனக்குரல்கள் அவிந்த முரசங் கொள்ளீரே. 54

அரிசி குற்றல்[தொகு]

526

இந்த வுரற்க ணிவ்வரிசி எல்லாம் பெய்து கொல்யானைத்
தந்த வுலக்கை தனையோச்சிச் சலுக்கு முலுக்கெனக் குற்றீரே. 55

காளியைப் பாடி அரிசி குற்றல்[தொகு]

527

தணந்த மெலிவு தான்றீரத் தடித்த வுடல்வெம் பசிதீரப்
பிணந்தரு நாச்சியைப் பாடீரே பெருந்திரு வாட்டியைப் பாடீரே. 56

குலோத்துங்கனைப் பாடிக் குற்றல்[தொகு]

528

கவன நெடும்பரி வீரதரன் காவிரி நாடுடை யானிருதோள்
அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே. 57

சேர பாண்டியரை வென்றலை கூறிக் குற்றல்[தொகு]

529

மன்னர் புரந்தரன் வாளபயன் வாரண மிங்கு மதம்படவே
தென்ன ருடைந்தமை பாடீரே சேர ருடைந்தமை பாடீரே. 58

சேர பாண்டியர் வணங்கியமை கூறிக் குற்றல்[தொகு]

530

வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர் தங்கண் மணிமுடியும்
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே. 59

வடவேந்தரை வென்றமை கூறிக் குற்றல்[தொகு]

531

ஒளிறு நெடும்படை வாளபயற் குத்தர பூமிய ரிட்டதிறைக்
களிறு வரும்படி பாடீரே கடமத நாறுவ பாடீரே. 60

பகைவர் பணிந்தமை கூறிக் குற்றல்[தொகு]

532

பௌவ மடங்க வளைந்தகுடைப் பண்டித சோழன் மலர்க்கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலையா டியவலி பாடீரே. 61

உலகம் இன்புற ஆண்டமை கூறிக் குற்றல்[தொகு]

533

எற்றைப் பகலினும் வெள்ளணிநாள் இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே குலோத்துங்க சோழனைப் பாடீரே. 62

கருணாகரனைப் பாடிக் குற்றல்[தொகு]

534

வண்டை வளம்பதி பாடீரே மல்லையுங் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே. 63

தொண்டையர் வேந்தனைப் பாடிக் குற்றல்[தொகு]

535

காட்டிய வேழ வணிவாரிக் கலிங்கப் பரணிநங் காவலன்மேற்
சூட்டிய தோன்றலைப் பாடீரே தொண்டையர் வேந்தனைப் பாடீரே. 64

குலோத்துங்கன் புகழ் பாடிக் குற்றல்[தொகு]

536

இடைபார்த்துத் திறைகாட்டி இறைவிதிருப் புருவத்தின்
கடைபார்த்துத் தலைவணங்குங் கதிர்முடி நூறாயிரமே. 65

பலவேந்தர் அடி வணங்கல் கூறி குற்றல்[தொகு]

537

முடிசூடு முடியொன்றே முதலபய னெங்கோமான்
அடிசூடு முடியெண்ணில் ஆயிரம் நூறாயிரமே. 66

திறைதரா வேந்தர் அழிந்தமை கூறிக் குற்றல்[தொகு]

538

முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை யிடாவேந்தர்
அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே. 67

பார்வேந்தர் படும் சிறுமை கூறிக் குற்றல்[தொகு]

539

தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையிற்
பார்வேந்தர் படுகின்ற பரிபவம்நூ றாயிரமே. 68

மறை ஓம்பியமை கூறிக் குற்றல்[தொகு]

540

தாங்காரப் புயத்தபயன் தண்ணளியாற் புயல்வளர்க்கும்
ஓங்கார மந்திரமும் ஒப்பிலநூ றாயிரமே. 69

பாராண்ட புகழ்பாடிக் குற்றல்[தொகு]

541

போர்தாங்குங் களிற்றபயன் புயமிரண்டு மெந்நாளும்
பார்தாங்கப் பரந்தீர்ந்த பணிப்பணநூ றாயிரமே. 70

திருமால் எனப் பாடிக் குற்றல்[தொகு]

542

நாற்கடலைக் கவித்தகுடை நரதுங்க னமுதமெழப்
பாற்கடலைக் கடைந்தருளும் பணைப்புயநூ றாயிரமே. 71

தோள் இரண்டால் துணித்தமை[தொகு]

543

தாளிரண்டா னிலவேந்தர் தலைதாங்குஞ் சயதுங்கன்
தோளிரண்டால் வாணனைமுன் துணித்ததோ ளாயிரமே. 72

தூது நடந்தான்[தொகு]

544

சூழிமுகக் களிற்றபயன் தூதுநடந் தருளியநாள்
ஆழிமுதற் படையெடுத்த அணிநெடுந்தோ ளாயிரமே. 73

அரிசி புடைத்தல்[தொகு]

545

பல்லரிசி யாவுமிகப் பழவரிசி தாமாகச்
சல்லவட்ட மெனுஞ்சுளகால் தவிடுபடப் புடையீரே. 74

அரிசியை அளத்தல்[தொகு]

546

பாணிகளா னிலந்திருத்திப் படைக்கலிங்க ரணிபகழித்
தூணிகளே நாழிகளாத் தூணிமா வளவீரே. 75

உலையில் இடல்[தொகு]

547

விரற்புட்டி லவைசிறிய விற்கூடை பெரியனகொண்
டுரற்பட்ட வரிசிமுகந் துலைகடொறுஞ் சொரியீரே. 76

துடுப்பும் அகப்பையும்[தொகு]

548

களப்பரணிக் கூழ்பொங்கி வழியாமற் கைதுடுப்பா
அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாகக் கொள்ளீரே. 77


கூழைச் சுவை பார்த்தல்[தொகு]

549

வைப்புக் காணு நமக்கின்று வாரீர் கூழை யெல்லீரும்
உப்புப் பார்க்க வொருதுள்ளி உள்ளங் கையிற் கொள்ளீரே. 78

கூழை நன்கு கிண்டுதல்[தொகு]

550

அழலைக் கையிற் கொள்ளாமே அடுப்பை யவித்துக் கைத்துடுப்பாற்
சுழலச் சுழலப் புடையெங்குந் துழாவித் துழாவிக் கொள்ளீரே. 79

பதம் பார்த்துக் கூழ் இறக்கல்[தொகு]

551

பற்றிப் பாரீ ரினிக்கூழின் பதமுஞ் சுவையும் பண்டுண்ட
மற்றைக் கூழின் மிகநன்று வாரீ ரிழிச்ச வாரீரே. 80

பானைப் பிடித்து இறக்கல்[தொகு]

552

எடுத்துக் கைகள் வேகாமே இவுளித் துணியிட் டிருமருங்கும்
அடுத்துப் பிடித்து மெத்தெனவே அடுப்பி னின்று மிழிச்சீரே. 81

கூழின் மிகுதி[தொகு]

553

ஒருவாய் கொண்டே யிதுதொலைய உண்ண வொண்ணா தென்றென்று
வெருவா நின்றீ ராயிரம்வாய் வேண்டு மோவிக் கூழுணவே. 82

நாத் தோய்க்கின் கூழ் சுவறும்[தொகு]

554

வெந்த இரும்பிற் புகும்புனல்போல் வெந்தீப் பசியால் வெந்தெரியும்
இந்த விடம்பை நாத்தோய்க்கில் இக்கூ ழெல்லாஞ் சுவறாதோ. 83

உண்டு மிகுமோ[தொகு]

555

பண்டு மிகுமோ பரணிக்கூழ் பார கத்தி லறியேமோ
உண்டு மிகுமோ நீர்சொன்ன உபாய மிதுவுஞ் செய்குவமே. 84

உணவுக்குமுன் நீர் வைத்துக் கொள்ளல்[தொகு]

556

வெம்புங் குருதிப் பேராற்றில் வேண்டுந் தண்ணீர் வேழத்தின்
கும்பங் களிலே முகந்தெடுத்துக் குளிர வைத்துக் கொள்ளீரே. 85

நிலத்தைத் தூய்மை செய்தல்[தொகு]

557

சோருங் களிற்றின் வாலதியாற் சுழல வலகிட் டலைகுருதி
நீருந் தெளித்துக் கலம்வைக்க நிலமே சமைத்துக் கொள்ளீரே. 86

உண்கலம் அமைத்தல்[தொகு]

558

போர்மண் டலிகர் கேடகத்தின் புளகச் சின்னம் பரப்பீரே
பார்மண் டலிகர் தலைமண்டை பலமண் டைகளாக் கொள்ளீரே. 87

பொன் வெள்ளிக் கலங்கள்[தொகு]

559

அழிந்த கலிங்கர் பொற்பரிசை அவைபொற் கலமாக் கொள்ளீரே
விழுந்த தவளக் குடைமின்னும் வெள்ளிக் கலமாக் கொள்ளீரே. 88

கூழ் பங்கிடக் கருவி கொள்ளல்[தொகு]

560

நிலத்தைச் சமைத்துக் கொள்ளீரே நெடுங்கைக் களிற்றி னிருசெவியாங்
கலத்திற் கொள்ளக் குறையாத கலங்கள் பெருக்கிக் கொள்ளீரே. 89

பகல் விளக்கும் பா ஆடையும்[தொகு]

561

கதம்பெற் றார்க்குஞ் செறுநர்விழிக் கனலு நிணமு மணங்கின்பாற்
பதம்பெற் றார்க்குப் பகல்விளக்கும் பாவா டையுமாக் கொள்ளீரே. 90

உணவுண்ண அழைத்தல்[தொகு]

562

பரிசு படவே கலம்பரப்பிப் பந்தி பந்தி படவுங்கள்
வரிசை யுடனே யிருந்துண்ண வாரீர் கூழை வாரீரே. 91

தலைகளை அகப்பைகளாகக் கொள்ளல்[தொகு]

563

கங்கா புரியின் மதிற்புறத்துக் கருதார் சிரம்போய் மிகவீழ
இங்கே தலையின் வேல்பாய்ந்த இவைமூ ழைகளாக் கொள்ளீரே. 92

மடைப்பேய்களுக்கு ஆணை[தொகு]

564

கிடைக்கப் பொருது மணலூரிற் கீழ்நா ளட்ட பரணிக்கூழ்
படைத்துப் பயின்ற மடைப்பேய்கள் பந்தி தோறும் வாரீரே. 93

பார்ப்பனப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

565

அவதி யில்லாச் சுவைக்கூழ்கண் டங்காந் தங்காந் தடிக்கடியும்
பவதி பிட்சாந் தேகியெனும் பனவப் பேய்க்கு வாரீரே. 94

சமணப் பேய்களுக்குக் கூழ் வார்த்தல்[தொகு]

566

உயிரைக் கொல்லாச் சமண்பேய்கள் ஒருபோழ் துண்ணு மவையுண்ண
மயிரைப் பார்த்து நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே. 95

புத்தப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

567

முழுத்தோல் போர்க்கும் புத்தப்பேய் மூளைக் கூழை நாக்குழறக்
கழுத்தே கிட்ட மணந்திரியாக் கஞ்சி யாக வாரீரே. 96

பார்வைப் பேய்க்குக் கூழை வார்த்தல்[தொகு]

568

கொய்த விறைச்சி யுறுப்பனைத்துங் கொள்ளுங் கூழை வெள்ளாட்டின்
பைத லிறைச்சி தின்றுலர்ந்த பார்வைப் பேய்க்கு வாரீரே. 97

குருட்டுப் பேய்க்குக் கூழை வார்த்தல்[தொகு]

569

ஊணா தரிக்குங் கள்ளப்பேய் ஒளித்துக் கொண்ட கலந்தடவிக்
காணா தரற்றுங் குருட்டுப்பேய் கைக்கே கூழை வாரீரே. 98

ஊமைப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

570

பையாப் போடு பசிகாட்டிப் பதலை நிறைந்த கூழ்காட்டிக்
கையா லுரைக்கு மூமைப்பேய் கைக்கே கூழை வாரீரே. 99

கருவுற்ற பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

571

அடைத்த செவிகள் திறந்தனவால் அடியேற் கென்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணுஞ் சூற்பேய்க் கின்னுஞ் சொரியீரே. 100

மூடப்பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

572

பொல்லா வோட்டைக் கலத்துக்கூழ் புறத்தே யொழுக மறித்துப்பார்த்
தெல்லாங் கவிழ்த்துத் திகைத்திருக்கும் இழுதைப் பேய்க்கு வாரீரே. 101

நோக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

573

துதிக்கைத் துணியைப் பல்லின்மேற் செவ்வே நிறுத்தித் துதிக்கையின்
நுதிக்கே கூழை வாரென்னும் நோக்கப் பேய்க்கு வாரீரே. 102

கூத்திப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

574

தடியான் மடுத்துக் கூழெல்லாந் தானே பருகித் தன்கணவன்
குடியா னென்று தான்குடிக்குங் கூத்திப் பேய்க்கு வாரீரே. 103

விருந்துப் பேய்க்கும் ஊர்ப்பேய்க்கும் கூழ் வார்த்தல்[தொகு]

575

வருகூழ்ப் பரணிக் களங்கண்டு வந்த பேயை முன்னூட்டி
ஒருகூழ்ப் பரணி நாமிருக்கும் ஊர்க்கட் பேய்க்கு வாரீரே. 104

கனாக்கண்டு உரைத்த பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

576

இரவு கனவு கண்டபேய்க் கிற்றைக் கன்றி நாளைக்கும்
புரவி யுரித்தோற் பட்டைக்கே கூழைப் பொதிந்து வையீரே. 105

கணக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்[தொகு]

577

இணக்க மில்லா நமையெல்லாம் எண்ணிக் கண்டே மென்றுரைக்குங்
கணக்கப் பேய்க்கு மகங்களிக்கக் கையா லெடுத்து வாரீரே. 106

பேய்கள் உண்ணல்[தொகு]

578

மென்குடர் வெள்ளை குதட்டிரே மெல்விர லிஞ்சி யதுக்கீரே
முன்கை யெலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே. 107

579

அள்ளி யருகிருந் துண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டென்னும்
உள்ளி கறித்துக்கொண் டுண்ணீரே ஊதி வரன்றிக்கொண் டுண்ணீரே. 108

580

தமக்கொரு வாயொடு வாய்மூன்றுந் தாமினி தாப்படைத் துக்கொண்டு
நமக்கொரு வாய்தந்த நான்முகனார் நாணும் படிகளித் துண்ணீரே. 109

581

ஓடி யுடல்வியர்த் துண்ணீரே உந்தி பறந்திளைத் துண்ணீரே
ஆடி யசைந்தசைந் துண்ணீரே அற்ற தறவறிந் துண்ணீரே. 110

வாய் கழுவல்[தொகு]

582

கொதித்த கரியின் கும்பத்துக் குளிர்ந்த தண்ணீர் தனைமொண்டு
பொதுத்த தொளையாற் புகமடுத்துப் புசித்த வாயைப் பூசீரே. 111

வெற்றிலை போடுதல்[தொகு]

583

பண்ணு மிவுளிச் செவிச்சுருளும் பரட்டிற் பிளவும் படுகலிங்கர்
கண்ணின் மணியிற் சுண்ணாம்புங் கலந்து மடித்துத் தின்னீரே. 112

புரையேற்றம் நீங்குவதற்கு மருந்து[தொகு]

584

பெருக்கத் தின்றீர் தாம்பூலம் பிழைக்கச் செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே. 113

பேய்கள் களிப்பு மிகுதியால் கூத்தாடல்[தொகு]

585

என்று களித்துக் குமண்டையிட்டே ஏப்ப மிட்டுப் பருத்துநின்ற
குன்று குனிப்பன போற்களத்துக் கும்பிட் டேநட மிட்டனவே. 114

பாடி நின்று ஆடின[தொகு]

586

வாசி கிடக்கக் கலிங்கரோட மானத னேவிய சேனைவீரர்
தூசி யெழுந்தமை பாடிநின்று தூசியு மிட்டுநின் றாடினவே. 115

வென்றி பாடி ஆடின[தொகு]

587

பொருகை தவிர்ந்து கலிங்கரோடப் போக புரந்தரன் விட்டதண்டின்
இருகையும் வென்றதொர் வென்றிபாடி இருகையும் வீசிநின் றாடினவே. 116

பேய்கள் களிப்பு மிகுதியால் விளையாடல்[தொகு]

588

வழுதியர் வரைமுழை நுழைவடி விதுவென மதகரி வயிறுகள் புகநுழை வனசில
எழுதிய சிலையவர் செறிகடல் விழுமவை இதுவென வழிகுரு தியின்விழு வனசில. 117

உருள்வன சில மறிவன சில[தொகு]

589

உருவிய சுரிகையொ டுயர்கணை விடுபடை உருள்வடி விதுவென உருள்வன சிலசில
வெருவிய வடுநர்த முடைவடி விதுவென விரிதலை யதனொடு மறிவன சிலசில. 118

பேய்கள் குலோத்துங்கனை வாழ்த்துதல்[தொகு]

590

உபய மெனும்பிறப் பாளரேத்த உரைத்த கலிங்கர் தமைவென்ற
அபய னருளினைப் பாடினவே அணிசெறி தோளினை வாழ்த்தினவே. 119

வயப் புகழ் வாழ்த்தின[தொகு]

591

திசையிற் பலநர பாலர்முன்னே தெரிந்துரைக் குஞ்சிசு பாலன்வைத
வசையில் வயப்புழ் வாழ்த்தினவே மனுகுல தீபனை வாழ்த்தினவே. 120

பொன்னித் துறைவனை வாழ்த்தின[தொகு]

592

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே. 121

உலகுய்ய வந்தானை வாழ்த்தின[தொகு]

593

ஆழிக ளேழுமொ ராழியின்கீழ் அடிப்பட வந்த வகலிடத்தை
ஊழிதொ றூழியுங் காத்தளிக்கும் உலகுய்ய வந்தானை வாழ்த்தினவே. 122

கரிகாலனோடு ஒப்பிட்டு வாழ்த்தின[தொகு]

594

பூப்பது மத்தன் படைத்தமைத்த புவியை யிரண்டா வதும்படைத்துக்
காப்பது மென்கட னென்றுகாத்த கரிகாலச் சோழனை வாழ்த்தினவே. 123

வாழ்த்து[தொகு]

595

யாவ ருங்களிசி றக்க வேதருமம் எங்கு மென்றுமுள தாகவே
தேவ ரின்னருள் தழைக்க வேமுனிவர் செய்த வப்பயன்வி ளைக்கவே. 124

596

வேத நன்னெறி பரக்க வேஅ பயன் வென்ற வெங்கலிக ரக்கவே
பூத லம்புகழ்ப ரக்க வேபுவி நிலைக்க வேபுயல்சு ரக்கவே. 125