கலைக்களஞ்சியம்/அகத்தியர்

விக்கிமூலம் இலிருந்து

அகத்தியர் : செந்தமிழ் மொழிக்குச் சிறந்த்தோர் இலக்கணத்தைப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பே அளித்த பெருமையை அகத்தியருக்கு அளித்துவருகிறோம். அதனால்தான் தமிழை அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு என்றனர். அகத்தியர்
அகத்தியர்
தஞ்சாவூர் ஜில்லா நல்லூர்க் கோயிலில் உள்ளது
உதவி : தொல் பொருள் இலாகா

என்ற உடன் ஒரு குறுகிய வடிவம்தான் எல்லோருடைய மனதிலேயும் தோன்றுகிறது. மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது. காலத்தையும் இடத்தையும் கடந்தவர் இவர். சாதாரண மனித நிலையிலிருந்து கடவுள் நிலைவரைக்கும் தமிழ் மக்கள் இவரைக் கொண்டு சென்றிருக்கின்றனர். இவருக்குக் கோவில் சமைத்தும் வழிபடுகின்றனர்.

இன்று அகத்தியர் பலரைப் பற்றி கேள்விப்படுகிறோம். அகத்தியம் என்ற நூலை இயற்றிய அகத்தியர் முதற் சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்பர். இன்று அந்நூலில் உள்ளவாகக் காட்டப்படும் சூத்திரங்கள் அத்தனைப் பழையன என்று பலரும் ஒப்புவதில்லை. இவரே தேவாரவாரங்களை எல்லாம் திரட்டியிருக்க முடியுமா அன்றி சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தை ஒட்டி வடமொழியில் அகத்தியர் பக்த விலாசம் என்ற நூலைச் செய்திருக்க முடியுமா —என்ற வினாக்கள் எழுகின்றன. மேலும் இவர் கடல் கடந்து கடாரம் அடைந்து, இந்தோனீசியா சென்று, போர்னியோ, குசத்திவீபா முதலிய தீவுகளில் தங்கி, இறுதியாகச் சாயாம் அடைந்து, அங்கிருந்து கம்போடியா சென்று, யசோமதியரை மணந்து வாழ்ந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சிலர் அகத்தியரைப்பற்றி வருவன வெல்லாம் புனை கதை என்று கொள்கின்றனர். ஆரியர் தமிழ் நாடு போந்ததையே அகத்தியர் தமிழ் நாடு போந்தார் என்று கூறுகின்றனர் என்றும் கூறுவர். இன்னுஞ்சிலர், அகத்தியர்கள் பலர் பல காலத்தில் பல இடங்களில் வாழ்ந்தவர் என்பர். அவர் தம்முள் சிலர் தமிழர் சிலர் ஆரியர் எனவும் கூறுவர்.

தமிழ் நூல்களில் தமிழ் அகத்தியரைப் பறிறிய, சில குறிப்புகளை சிலப்பதிகாரம், மணிமேகலை, பரிபாடல் போன்ற நூல்களில் வருகின்றன. மேலும் அகத்தியரைப் பற்றி வேள்விக்குடி சின்னமனூர் செப்பேட்டில் பாண்டிய புரோகிதர் அகத்தியர் என்று ஒரு குறிப்பு வருகிறது.

இறையனார் அகப்பொருள் உரையிலிருந்து தலைச்சங்கத்தில் அகத்தியனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார் என்றும், அவர் செய்த நூலாகிய அகத்தியம் என்பதே அக்காலத்திய இலக்கணமாக இருந்தது என்றும், அது 12,000 சூத்திரங்களால் ஆகியது என்றும், இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைப் பற்றியும் கூறுவது என்றும் அறிகின்றோம். உரையாசிரியர்களால் ஆங்காங்கே மேற்கோளாக எடுத்தாளப்படுகின்ற சில சூத்திரங்களைத் தவிர நூல் முழுமையும் கிடைத்திலது.

இடைச்சங்க காலத்தும் ஓர் அகத்தியரைக் காண்கின்றோம். இக்காலத்தும் அகத்தியமே தமிழ் மொழிக்கு இலக்கணமாக அமைந்துள்ளது. தொல்காப்பியர், அதங்கோட்டாசான், பனம்பாரனார் முதலிய பன்னிருவரும் அகத்தியர் மாணவர் என்றும், இவர்கள் இயற்றிய நூலே பன்னிரு படலம் ஆயிற்று என்றும் புறப் பொருள் வெண்பா மாலை, பன்னிரு படலம் என்ற நூல்களின் பாயிரத்தால் அறிகின்றோம். முதற் சங்கத்திற்கும் இரண்டாஞ் சங்கத்திற்கும் இடையே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கழிந்துள்ளமையின் இரு சங்கங்களிலும் இருந்தவர் இருவேறு அகத்தியர் எனக் கொள்ளுதலே அமைவுடைத்தாம்.

இவர்களைத் தவிர வேதகால அகத்தியர், பாரதகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் என்று பல அகத்தியர்களைப் பற்றியும் கேள்விப்படுகின்றோம். மற்றும் எத்துணையோ அகத்தியர்களைப் பற்றிக் குறிப்புக்கள் கந்த புராணம், காஞ்சிப் புராணம் என்ற புராணங்களிலும், இன்னும் பிற தலபுராணங்களிலும் வருகின்றன. இமயமலையில் சிவபெருமான் இமவான் மகளாகத் தோன்றிய பார்வதி தேவியாரை மணந்தபோது வடதிசையில் யாவரும் கூடியதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அவ்வாறு உயர்ந்த தென்னாட்டைச் சமன் செய்ய அகத்திய முனிவரை இந்நாட்டிற்குச் சிவனார் அனுப்பிவைத்தார் என்றும், வரும் வழியில் விந்த மலையினை அடக்கி விந்தம் அடக்கிய வித்தகர் எனப் பேரும் பெற்றார் என்றும் அறிகின்றோம். கந்த புராணத்தில் அகத்தியர் விதர்ப்பர்கோன் மகளாகிய உலோபாமுத்திரையை மணந்து சித்தன் என்னும் புதல்வனையும் அளித்தார் என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. வான்மீகி இராமாயணத்தும் அகத்தியர் பொதிய மலையில் வாழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பிலிருந்து அகத்தியர் தமிழ் முனிவர் என்பதும், இராமாயண காலத்திலேயே தென்னாட்டில் பொதியமலைச் சாரலில் வாழ்ந்து தமிழ் வளர்த்து வந்தார் என்பதும் பெறப்படுகின்றன. அவர் தமிழ் அகத்தியரேயாவர்; தமிழ் நாட்டவரேயாவர்.

பிற்காலத்தே பதினெண் சித்தர்களுள் ஒருசில அகத்தியரைக் காண்கின்றோம். அவர்கள் வைத்திய நூல்கள் பல இயற்றியுள்ளனர். நமது நாட்டில் பிற்காலத்தில் வந்த புலவர்கள் தாங்கள் எழுதிய நூல்களுக்கெல்லாம் தங்கள் பெயரை இடாமல் அகத்தியர் பெயரையே இட்டனர்; அதனால்தான் இன்று நூற்றுக்கு மேலான நூல்கள் அகத்தியர் இயற்றியனவாக ஓலைச் சுவடிகளாக இன்னும் அச்சிடப்பெறாமல் இருக்கின்றன. அத்தகைய நூல்களின் பல பெயர்கள் கீழ்க் கலைக் கையெழுத்துப் பிரதி நூல் தொகுதியில் வெளியிடப்பட்டுள்ளன. அகத்தியர் சித்த வைத்தியம், ஆறெழுத்தந்தாதி, கருப்ப சூத்திரம், வாகடம், பூசா விதி, ரஸவாத சூத்திரம் எட்டு, அகத்தியர் ஞானம் பன்னிரண்டு போன்ற எண்ணிறந்த நூல்கள் இருக்க இந்த நூல்களின் தமிழ் நடையும், கூறும் பொருளும் இவற்றைப் பாடியவர்கள் புலமை மிக்கவர் அல்லர் என்பதைக் காட்டுகின்றன.

சுருங்கக் கூறின், அகத்தியர் என்ற பெயருடைய தமிழ் முனிவர் ஒருவர் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தார்; அவர் தலைச்சங்கப் புலவராக விளங்கினார்;

அகத்தியம் என்ற நூலை இயற்றியருளினார். ஆனால், அந்நூல் முழுமையும் கிடைக்கப் பெறவில்லை. தொல்காப்பியர் ஆசிரியரும் அகத்தியர் ஆவர்; இவர்களைத் தவிர வடநாட்டு அகத்தியர் சிலரும் இருந்தனர் எனலாம். தமிழ் நாட்டில் அகத்தியர் என்பாரே இல்லை என்றும் வடநாட்டு அகத்தியரைப் பார்த்துத் தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அகத்தியர் ஒருசிலரைப் படைத்துக் கொண்டனர் என்றும் ஆரிய அகத்தியருக்குக் கூறப்பட்டவற்றை எல்லாம் தமிழ் அகத்தியருக்கு ஏற்றிக் கூறுகின்றனர் என்றும் சிலர் கூறுவர்; இது பொருந்தாக் கூற்றாகும். குறுகிய வடிவம் கொண்டவர். கடல் நீரைக் குடித்தவர், குடத்தில் பிறந்தவர், மித்திரனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர் போன்ற கதைகள் எல்லாம் பின்னர் எழுந்த புனைகதைகளாகும். இப்புனைகதைகளுக்கு முடிசூட்டுமாறு பல புலவர்கள் அகத்தியர் என்ற பெயரால் நூல் பல இயற்றி எல்லோரையும் மயங்கவைத்து விட்டனர்.