கலைக்களஞ்சியம்/அம்பெலிபெரீ

விக்கிமூலம் இலிருந்து

அம்பெலிபெரீ (Umbelliferae) கொத்துமல்லிக் குடும்பம் : இந்திய நாட்டில் இக் குடும்பத்தைச் சேர்ந்த பல செடிகள் சம்பாரங்களாகப் பயிர் செய்யப்படுகின்றன. கொத்துமல்லி, சீரகம், பெருஞ்சீரகம், சதகுப்பை, ஓமம், கேக்கு விதை, பெருங்காயம் முதலியவை இந்த வகுப்புச் செடிகள். மஞ்சள் முள்ளங்கி (Carrot) இதே குடும்பத்தைச் சேர்ந்தது. இதைச்சேர்ந்த பல காட்டுச் செடிகள் மலைகளில் வளர்கின்றன. மிக வுயர்ந்த மலைகளில் ஆல்பைன் தாவரங்களாகச் சில வளர்கின்றன.

இது மிகவும் பெரிய குடும்பம் ; முக்கியமானது. செடி வழக்கமாக வளரும் பாங்கும் அதன் கனிகளும் இந்தக்குடும்பத்துச் செடியை எளிதில் அறிந்து கொள்வதற்கு உதவும் அடையாளங்கள். இவை பெரும்பாலும் சிறு செடிகள்; சில குற்றுச் செடிகள். தண்டு உள்ளே குழாய் போன்றது. இலைகள் தனி யொழுங்குள்ளவை. அவற்றின் அடியானது கணுவில் தண்டைச் சுற்றித் தழுவியிருக்கும். இலையடிச் சிற்றிலை கிடையாது. இலைகள் மிகவும் மெல்லிய பாகங்களாகப் பிரிந்திருக்கும். பூங்கொத்துப் பெரும்பாலும் கூட்டுக் குடைமஞ்சரி ; சிலவற்றில் தனிக்குடை மஞ்சரி. பூ பெரும்பாலும் இருபால் உள்ளது; ஒழுங்கானஅமைப்பு உள்ளது. சில சமயம் ஒருபால் பூக்களும் உண்டு. அடிக்கடி ஒரு மஞ்சரியின் ஓரத்திலுள்ள பூக்கள் ஒழுங்கற்றவையாயும் ஒருதளச் சமமாயும் இருக்கும். புல்லி சிறியது. மிகச் சிறிய 5 இதழ்கள் உண்டு. சிலவற்றில் புல்லியே இராது. அல்லி 5 தனி; பெரும்பாலும் வெண்மை அல்லது மஞ்சள். நுனி மடிந்திருக்கலாம். கேசரம் 5. சூலகம் பூவின் கீழுள்ளது. 2 சூலிலைக் கூட்டுச் சூற்பையின்மேல் ஆதான மண்டலம் (Disc) உண்டு. அதில் பூந்தேன் சுரக்கும். சூல் தண்டு இரண்டு. சூற்பை இரண்டு அறையுள்ளது. அறைக்கு ஒரு சூல். கனி பிரிசுவர் வெடிகனி (Schizocarp). இரண்டு பிளவாகப் (Mericarp) பிரியும். ஒவ்வொரு பிளவின் மேலும் பழுக்களைப்போல உப்பிக்கொண்டு 5 வரம்புகள் உண்டு.

கொத்துமல்லி

கிளை : இலைகளும் பூங்கொத்துக்களும் 1. பூவெட்டுப் படம். (பூக்காம்பிலை. புல்லிப்பற்கள் 5. அல்லி 5. கேசரம் 5. இரண்டு அறைகளுள்ள சூற்பை).

2. சூற்பையின் குறுக்கு வெட்டு (இரண்டு அறைகள்.

அறைக்கு ஒரு விதை. அறைச் சுவரில் எண்ணெய்க் குழாய்கள்).

வரம்புகளுக்கு நடுவே தவாளிப்புப்போன்ற பள்ளங்கள் உண்டு. இந்தப் பள்ளங்களின் அடியில் எண்ணெய்க் குழாய்கள் இருக்கின்றன. இவற்றில் வாசனைத் திரவியம் இருக்கிறது. விதையில் முளைசூழ் தசையுண்டு. புரோட்டீனும், எண்ணெயும் இதிலிருக்கும் உணவுப் பொருள்கள். கரு மிகச் சிறியது.

மகரந்தச் சேர்க்கை : இந்தப் பூக்களில் முதலில் கேசரங்கள் முதிரும். பூந்தேன் மேலேயே இருப்பதால் பூச்சிகளுக்கு எளிதாக அகப்படும். குறுநாக்குடைய பூச்சிகளாகிய ஈயும் வண்டும் இந்தப் பூக்களுக்கு வருகின்றன. மொக்கில் கேசரங்கள் உள் மடிந்திருக்கின்றன. அவற்றை அல்லி யிதழ்கள் மூடிக் காக்கின்றன. இவை ஒவ்வொன்றாக நீண்டு, இவற்றின் பைகள் வெடிக்கின்றன. பிறகு ஒவ்வொன்றாக உதிர்ந்து விடுகின்றன. இதனால் ஒரு பூவிற்குப் பூச்சிகள் சில நாட்கள் வரையில் வந்து கொண்டிருக்கலாம். பார்க்க: ஓமம், கொத்து மல்லி, சதகுப்பை, சீரகம், பெருங்காயம், பெருஞ்சீரகம்.