கலைக்களஞ்சியம்/ஆடு தீண்டாப்பாளை

விக்கிமூலம் இலிருந்து

ஆடு தீண்டாப்பாளை (ஆடுதின்னாப் பாளை) தரையில் படர்ந்து கிடக்கும் சிறு செடி. பருத்தி விளையும் கரிசல் நிலத்தில்
ஆடு தீண்டாப்பாளை
பெரிதும் கொடுமையான களையாக இருக்கிறது. கிளைகள் தரைக்கு கீழேயிருக்கும். தண்டில் இருந்து வளரும். இந்தச்செடி தண்டில்லாத வேரிலிருந்து முளைக்கும். இலையின்மேல் நீலவெண்மை நிறமுள்ள பூசு படிந்திருக்கும். பூ ¾ அங்குல நீளம்; இலைக்கணுச் சந்தில் தனித்தனியாக உண்டாகும். இதழ் குழாய் வடிவமான கூட்டிதழ். குழாய்குள்ளே மயிர்கள் உண்டு. அவையெல்லாம் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். கேசரங்கள் 6. சூல் முடிக்கு கீழே சூல்தண்டைச் சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலறை பூவின் மற்ற வுறுப்புகளுக்கு கீழுள்ளது; 6 அறைகளுள்ளது. கனி வெடி கனி. வெடித்த கனி உறிபோலத் தோன்றும். விதைகள் எளிதில் காற்றில் அடித்துக்கொண்டு போகக் கூடியவை.

இதில் மகரந்தச் சேர்க்கை நடப்பது வினோதமாக இருக்கின்றது. ஒரே பூவில் கேசரமும் சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்கின்றது. சூல் முடி முதலில் பக்குவப்பட்டுவிடுகின்றது. சிறு இதழ்க்குழாய் வழியாக உள்ளே போகும்போது அதிலுள்ள மயிர்கள் கீழ் நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையின்றிப் போகும். உள்ளே போனதும் இதன் உடம்பு சூல்முடியில் படும். இது கொண்டுவந்த மகரந்தம் பக்குவமாக இருக்கின்ற அந்தச் சூல்முடியில் ஒட்டிக்கொள்ளும். ஈ வெளியே வர முயன்றால் மயிர்கள் அதற்கு வழியில் ஈட்டிகள் போல நீட்டிக் கொண்டிருப்பதால் வர முடிவதில்லை. ஆதலால் அது உள்ளேயே சுழன்றுகொண்டிருக்கும். இந்தக் காலத்துக்குள் சூலடியைச் சுற்றியுள்ள மகரந்தப் பைகள் முதிர்ந்து வெடிக்கும். தூள் அங்குச் சுழலும் ஈயினுடலில் நன்றாக ஒட்டிக்கொள்ளும். இதற்குள் முதலில் ஈ நுழைந்ததும் ஏற்பட்ட மகரந்தச் சேர்க்கையால் சூலில் கருத்தரித்தவுடன் இதழ்க் குழாயிலுள்ள மயிர்களெல்லாம் வாடிவிடும். பூவும் நிமிர்ந்திருந்தது சற்று வளையும். இப்போது ஈ வெளிவருவது எளிது. வந்து வேறொரு பூவுக்குப் போகும். இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை இந்தப் பூவில் நடக்கிறது. குடும்பம் : அரிஸ்டோலோக்கியேசீ (Aristolochia- ceae); இனம் : அரிஸ்டோலோக்கியா பிராக்டியேட்டா (Aristolochia bracteata).