கால்டுவெல் ஒப்பிலக்கணம்/029-033

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

௩. திராவிடப் பெருங்குழுவியல்பு


மக்கட் டொகுதியமைப்பு முறையை ஆராய்ந்து காண்போமாயின், தனிப்பட்ட வகையில் மக்கள் என்றும், நெருங்கிய உறவினராய மக்கள் பலர் ஒன்றுசேர்ந்த குடும்பம் என்றும், பலகுடும்பங்கள் சேர்ந்த கிளை யென்றும், பலகிளைகளைக் கொண்ட இனம் என்றும், பல இனங்களாலாய குழுவென்றும், பல குழுக்கள் அடங்கிய பெருங்குழு வென்றும் நிரல்பட விளங்கக் காணலாம். நடைமுறையில் சிக்கல்கள் ஏற்படாவாறும், தெளிவு கருதியும் இவ் வகுப்பினை மக்களால் தேர்ந்து கொள்ளப்பட்ட தொன்றாகும். தொழிலொற்றுமை, உறவுமுறை, அடிமையாப்பு முதலிய பற்பல ஏதுக்களை முன்னிட்டு மக்கள் இவ்வகுப்பினையை மேற்கொண்டனர். தொழில் கருதிப் பெயர் பூண்டுள்ள பிரிவினர்களும், தம் முன்னேர்களின் பெயர்களையே சிறப்புப் பெயர்களாக அமைத்துக் கொண்ட குடும்பத்தினரும், இன்னும் இவைபோன்ற பல ஏதுக்களை முன்னிட்டுத் தனித்தனியாய்ப் பெயர் பூண்டுள்ள பற்பல குடும்பத்தினர்களும் ஒரே குலப்பெயரை யுடையாாயிருக்கல் கூடும். இக் குலத்தினரிடை வழங்குவது பெரும்பாலும் ஒரே மொழியாக இருத்தலும் கூடும். ஒரு குடும்பத்தினர் தங்குடும்பத்தினர்க் குள்ளேயே கொள்வனை கொடுப்பனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை; ஆனால் இயன்ற வரையில் ஒரே குலத்தினுக்குள் அவ்வாறு செய்துகொள்ளல் வேண்டும். இவ்வியல்பே இந்தியநாட்டின் பண்டைப் பெருங்குடிகள் பலரிடத்துங் காணப்பட்ட தொன்றாகும்.

இனி, இத்தகைய பல இனங்களை யுட்கொண்ட திராவிடக் குழுவைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். திராவிட இனத்தாரின் தொன்மைநலங் கெடாத நிலையைக் காண வேண்டின் சோட்டாநாகபுரியிலுள்ள திராவிடக் குழுவினரைக் தான் நோக்கவேண்டும். அவர்கள் பல இனங்கள் ஒன்றுசேர்ந்த குழுவினர். ஒவ்வோரினத்தையுஞ் சேர்ந்த பல குலங்களில் ஒவ்வொன்றற்கும் பெரும்பாலும் ஒரு செடி அல்லது விலங்கின் பெயரேதான் குலப்பெயராக விருக்கும். ஒவ்வொரு குலத்தினருக்கும், அவர்களுக்கென்று ஏற்பட்ட தனியான நாட்டாண்மைக் கழக மொன்றிருக்கும்; அக்கழகத் தலைவகை நாட்டாண்மைக்கார னொருவனிருப்பான்; அவனுக் குதவிபுரிய ஒரு சின்ன நாட்டாண்மைக் காரனும், ஊர்ப் பெரிய பூசாரி யொருவனும், ஏனைச் சிறு தெய்வங்களுக்குப் பலியிட்டுப் படைப்பதற்கென வமர்த்தப்பட்ட சிறு பூசாரிகள் பலரு மிருப்பார்கள்.

இனி, ஒரிஸாவிலுள்ள[1] கந்தர்கள்[2] திராவிடக் குழுவைச் சேர்ந்தவர்களே. நிலம் நன்கு விளைந்து பலனளிக்கவும், ஊர்மக்கள் நோய்வாய்ப் படாமலிருக்கவும் வேண்டி ஒருகாலத்தில் அவர்கள் நிலமகளுக்கு மக்களையே வெட்டிப் பொங்கலிட்டு (நரபலி) வந்ததுண்டு. இக் கந்தர்கள் ஐம்பது கொச்சி[3] அல்லது குலத்தவர்கள். ஒவ்வொரு கொச்சியும் ஒரு முற்றம்[4] அல்லது சிற்றுாரின் பெயரைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு குலத்க வரும் தாங்க ளெல்லோரும் ஒரே மூதாதையின் வழிவந்தவர்களென்று கூறிக் கொள்வார்கள்; இயன்றவரையில் தத்தங் குலப்பெயருடைய சிற்றூரிலேயே இருந்து வாழ்ந்துவருவார்கள்.

நாமலைகளில் [5] வசிக்கும் மங்கோலாய்ட் இனத்தவர்களும் கந்தர்களைப் போன்று பல குலங்களைக் கொண்டவர்களே. அவர்கள் மொழியிற் குலப்பிரிவு ஒவ்வொன்றற்கும் கேள்[6] என்று பெயர். ஒவ்வொரு கேளைச்சேர்ந்த மக்களெல்லோரும் ஒன்றுபட ஒரே ஊரில் வாழ்ந்து வருவார்கள். ஆனால், அவர்களுடைய சிறப்பியல்பொன்றென்ன வென்றால், தஞ்சிற்றூரைச் சேர்ந்த தங்கள் குலத்தவர்களே நட்பினர் என்றும், ஏனை ஊர்களைச் சேர்ந்த பிறகுலத்தினர்கள் எல்லோருமே தங்கள் பகைவர்கள் என்றுங் கருதுவதேயாம். ஆகவே, தங்கள் சிற்றாரைச் சுற்றி அகழ்போன்ற பள்ளம் ஒன்றைத் தோண்டிக் கொள்வார்கள் ; அப்பள்ளம் நிறைய கூர்மை பொருங்கிய மூங்கிற் கப்பணங்களை[7] அடித்து வைப்பார்கள் ; அப்பள்ளத்தைத் தாண்டித் தாங்கள் உள்ளே செல்லுவதற்கும், வெளியே வருவதற்கும் பயன்படுமாறு நூலேணிபோன்ற ஒன்றை வைத்திருப்பார்கள். மகளிரைச் சிறையெடுப்பது கருதி இக்கேளினருக்குள் ஒருவருக்கொருவரிடையே அடிக்கடி படையெடுப்பும், பூசலும் நிகழ்வதுண்டு.

இனி, துருக்க-ஐரானியர்களென்ற இனத்தாரிடையே இரண்டு தனிப்பட்ட பிரிவுகள் உள. உறவின் முறையை அடிப்படையாகக் கொண்டு ஒன்று சேர்ந்த தொகுதி முதற் பிரிவாகும். ஆஃப்கானிஸ்தானத்திலுள்ள[8] பதான்ஸ்[9] என்ற பட்டாணிகள் இம்முறைபற்றி ஒரினமாகப் பிரிக்கப்பட்டவர்களே; பஷ்டு[10] என்ற மொழியை அவர்கள் பேசுவதாலேயே “பதான்ஸ்” என்றழைக்கப்பட்டனர் போலும். மற்ருெரு பிரிவோ, உறவின் முறையினர் என்ற கட்டுப்பாடின்றி, வழிவழி நட்புப் [11] பூண்டவர்கள் என்ற முறைபற்றி ஒன்று சேர்ந்த பல குலத்தினரைக் கொண்டதாகும். வேளாக்மாறி [12]. என்ற ஒரு பகுப்பினரை இதற்குக் காட்டாக எடுத்துக் கூறலாம். பிராகுவியர், பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த வேளாகர், ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த வேளாகர், கேத்திரர்கள்,[13] ஆஃப்கானியர், [14]ஜாதர் முதலிய பல்வேறு குலத்தவர்கள் இப்பிரிவினுள் இடம் பெற்றவர்களே. இவர்கள் மத்திய ஆசியாப் பகுதியைச் சேர்ந்தவர்களென்று கருதப்படுபவர்கள்.

இனி, பிராகுவியர், வேளாகர் என்ற இருபிரிவினர்களும் தாய்வழி முறையே சிறந்தவழி முறையென்று கருதிச் சிறப்பிக்கும் கொள்கையர்கள் ; ஆகவே, பெண் மக்களுக்கு ஏற்றங் கூறுபவர்கள். ஆஃப்கானியரோ,தாயினுஞ் சிறந்தது தந்தை வழிமுறையென்று கருதுபவர்கள் : அதனல் பெண் மக்களை விலைபடுபொருள் எனக்கருதி நடத்தி வருபவர்கள் ; பெண்களைப் பொருள்கருதி அடிமைகளாக விற்பவர்கள்.

  1. 1. Orissa.
  2. 2. Khonds.
  3. 3. Gochi.
  4. 4. Mụta.
  5. 5. Naga Hills.
  6. 1. Khel
  7. 2. Calthrop
  8. 3. Afghanistan
  9. 4. Pathans.
  10. 5. Pashtu
  11. 6. Blood-feud.
  12. 7. The Marri of Baloch
  13. 1. Khetrans.
  14. 2. Jats.