கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து
முடிவுரை

கிருஸ்தவத் தொண்டர்களால் தமிழ்மொழி அடைந்த மேம்பாடு இதுவரை சொல்லியவற்றால் ஒருவாறு விளங்கும். பொதுமறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறளின் செம்மையை உலகறியக் காட்டிய பெருமை அன்னவர்க்கே உரியதாகும். திருக்குறளின் ஆசிரியராகிய திருவள்ளுவரை மெய்ஞ்ஞான ஒளியாகக் கண்டார் வீரமாமுனிவர். "ஞானத் திருவிளக்கு எறிப்பத் தெளிந்து உணர்ந்து, எங்கும் ஒரு விளக்கென நின்று உயர்ந்த திருவள்ளுவர்“ என்பது வீரமாமுனிவர் வாய்மொழி[1] வள்ளுவர் வழங்கிய திருக்குறள் உலகத்தார்க்கெல்லாம் ஒரு பொதுவுடைமை என்று கருதினார் முனிவர் ; கீழ் நாட்டில் எழுந்த ஞானக் கதிரொளி மேலை நாட்டிலும் வீசுதல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் ; அவ்வாசையால் திருக்குறளின் இருபாலை லத்தீன் மொழியின் வாயிலாக அறிவுலகத்திற்கு ஊட்டினார். அதன் நலமறிந்த கிரால் என்னும் நல்லறிஞர் திருக்குறளின் முப்பாலையும் ஜெர்மானியத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் எல்லீசரும், துருவரும் சில பாகங்களை மொழி பெயர்த்தனர்[2]. போப்பையர் அதனை முற்றும் மொழிபெயர்த்தருளினார். பிரஞ்சு மொழியில் திருக்குறளின் இன்பச் சுவையை ஏற்றியவர் ஏரியல் என்னும் அறிஞர்[3]. அவருக்குப் பின் லெமிரேசர் என்பவர் திருக்குறள் முழுமையும் பிரஞ்சு மொழியில் எழுதிப் போந்தார்.[4] இங்ஙனம் பல தொண்டர்கள் பணி செய்த பான்மையாலேயே

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

என்று பாடும் பெருமை இன்று தமிழ் நாட்டார்க்குக் கிடைத்தது.

கிருஸ்து மத வேதமாகிய பைபிளைத் தமிழில் மொழி பெயர்க்கும் சிறந்த பணியில் ஈடுபட்டார் சில தொண்டர். பாப்ரீசியர் என்னும் ஜெர்மானியப் பாதிரியார் பைபிளைப் பரிவுடன் மொழி பெயர்த்தார். ஆயினும் அதனை எல்லோரும் நன்றென ஏற்றுக்கொள்ளவில்லை. அதிற் கண்ட குறைபாடுகளை நீக்கி, குற்றம் களைந்து, செப்பனிடும் பணியைச் சென்னை பைபிள் சங்கத்தார். ரேனியஸ் ஐயரிடம் ஒப்புவித்தனர். அவர் அந் நூலைத் திருத்துவதிற் பயனில்லை என்றறிந்து தாமே ஒரு மொழி பெயர்ப்புச் செய்து தந்தார், அதனைப் பைபிள் சங்கத்தார் ஏற்றுக்கொள்ள வில்லை. இதற்கிடையில் யாழ்ப்பாணத்தில் கிருஸ்தவப் பணி செய்து கொண்டிருந்த பெர்சிவல் ஐயர் தமது மொழி பெயர்ப்பைப் பைபிள் சங்கத்தில் சமர்ப்பித்தார். அதனையும் அச்சங்கத்தார் விருப்புடன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந் நிலையில் கிருஸ்தவ வேத நூலைப் பல்லோரும் ஏற்றுப் போற்றும் வகையில் மொழி பெயர்த்தல் தனிப்பட்ட ஒருவரால் முடிவதன்று என்று - கருதிய கிருஸ்து மத சங்கத்தார் பன்னிருவர் அடங்கிய ஒரு கழகத்தை அமைத்து, அப்பணியை அதனிடம் ஒப்புவித்தனர். பவர் என்பவர் அக் கழகத்தின் தலைவர்.[5] கால்டுவெல் ஐயரும், சார்சந்தரும் அதன் அங்கத்தினரில் இருவர். தமிழ்ப் புலமை வாய்ந்த முத்தைய பிள்ளை கழகத்தார்க்கு உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவர்கள் பல்லாண்டு. பழுதறப் பணி செய்து 1871-ம் ஆண்டில் தமிழ். பைபிளை வெளியிட்டார்கள். ஆங்கில நாட்டு இளவரசர் திருநெல்வேலிக்கு விஜயம் செய்தபோது தமிழ் பைபிளை அவர்க்குக் கையுறையாக அளித்து மகிழ்ந்தனர் கிருஸ்துமத சங்கத்தார்[6].

தமிழ் பைபிளை வெளியிடும் பணியை மேற்கொண்ட கழகத்தில் தமிழ்ப் புலவராக விளங்கிய முத்தைய பிள்ளை என்பவர் இரக்ஷணிய கவிஞராகிய கிருஷ்ண பிள்ளையின் தம்பியாவர். அவர் இலக்கியமும் இலக்கணமும் முறையாகக் கற்றறிந்தவர்; தத்துவ ஆராய்ச்சியில் தனிப் பற்றுடையவர் ; ஜன விநோதனி என்னும் வாரத் தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராகச் சில காலம் பணி செய்தவர்; 'வேதாந்த சாரம்' முதலிய பல வசன நூல்களை இயற்றியவர்[7]. தமிழ் பைபிளுக்கு அவர் செய்த சேவை சாலச் சிறந்ததாகும்.

இங்ஙனம் ஆங்கிலமும் தமிழும் அறிந்த கிருஸ்தவத் தொண்டர்கள் சிறந்த தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், உயர்ந்த ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தும் நற்பணி செய்து வரும்பொழுது, சில அறிஞர் தமிழ் நாட்டில் வழங்கும் பழமொழிகளை ஆராயத் தலைப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகளுண்டு. அவற்றால் மக்களின் பழக்க வழக்கங்களும் பண்பாடும் நன்கு புலனாகும். தமிழ்நாடு தொன்று தொட்டுப் பயிர்த்தொழிலில் ஈடுபட்ட நாடாதலால் அத் தொழிலடியாகப் பிறந்த பழமொழிகள் இங்கு மிகுதியாக வழங்கும், 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது ஒரு பழமொழி. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது மற்றொரு பழமொழி. பண்டைத் தமிழறிஞர் இப் பழமொழிகளின் பெருமை யறிந்து போற்றினார்கள். முன்றுறை அரையர் என்னும் தொல்லாசிரியர் சங்க காலத்தில் வழங்கிய பழமொழிகளில் நானூற்றைத் தொகுத்துப் 'பழமொழி நானூறு' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அதற்குப் பின்பு நெடுங்காலமாகப் பல்கிப் பரவிய பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் கிருஸ்தவத் தொண்டரே யாவர்.

பெர்சிவல் என்னும் பெரியார். ஏறக்குறைய இரண்டாயிரம் பழமொழிகளைத் திரட்டி அச்சிட்டு வெளிப் படுத்தினார்[8]. சென்னையில் சிறந்த தமிழறிஞராய் விளங்கிய லாசரஸ் ஐயர் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் வழங்கிய பழமொழிகளைச் சேகரித்துப் பெரு நூலாக வெளியிட்டார். பத்தாயிரம் பழமொழிகள் அந் நூலிற் காணப்படும்.[9] அதனைப் பின்பற்றித் தமிழில் எழுந்த பழமொழி நூல்கள் பலவாகும்.

தமிழ்நாட்டாரது பழமையான நாகரிகத்தை உலகமெல்லாம் அறியும் வகை செய்தல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் பல கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர். அந்த வகையில் கால்டுவெல் ஐயர் ஆற்றிய தொண்டு என்றும் தமிழ் நாட்டாருக்கு ஊக்கம் அளிப்பதாகும். தமிழகத்தில் மறைந்து கிடக்கும் மாநகரங்களையும், தூர்ந்து கிடக்கும் துறைமுகங்களையும், அவர் துருவிப் பார்க்க முற்பட்டார். சங்க காலத்திலும், இடைக் காலத்திலும் பெருமையுற்று விளங்கிய கொற்கைத் துறையையும், காயல் துறையையும் அவர் அகழ்ந்து பார்த்து அறிந்த உண்மைகளை ஆர்வத்தோடு வெளியிட்டார். கொற்கைத் துறை போன்ற பழந்துறைகள் தமிழ் நாட்டில் இன்னும் பல உண்டு. காவிரியாறு கடலிற் பாயுமிடத்தில் சோழ நாட்டுப் பெருந்துறைமுகப் பட்டினம் முற்காலத்தில் இருந்தது, அதனைக் காவிரிப்பூம் பட்டினம் என்றும், பூம்புகார் நகரம் - என்றும், பண்டைப் புலவர் பாராட்டினார்கள். சங்க நூல்களில் அதன் பெருமை விரிவாகக் கூறப்படுகின்றது. இன்னும் சேர நாட்டில் பெரியாறு கடலிற் கலக்குமிடத்தில் முசிறி யென்னும் துறைமுக நகரம். அமைந்திருந்தது. எனவே, பழங்காலத்தில் பாண்டி நாட்டுத் துறைமுகம் கொற்கை ; சோழ நாட்டுத் துறைமுகம் காவிரிப்பூம் பட்டினம்; சேர நாட்டுத் துறைமுகம் முசிறி என்பது தமிழ் இலக்கியத்தால் நன்கு புலனாகின்றது[10]. இத் துறைமுகப் பட்டினங்களெல்லாம் இப்பொழுது தூர்ந்து அழிந்து கிடக்கின்றன. இன்னும் நெல்லை நாட்டிலுள்ள ஆதிச்சநல்லூர் மேட்டிலும், புதுச்சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேட்டிலும் பழைய நாகரிகம் புதைந்து கிடப்பதாகத் தெரிகின்றது. ஜாகர் என்னும் ஜெர்மானிய அறிஞர் ஆதிச்சநல்லூர் மேட்டின் ஒரு பாகத்தை அகழ்ந்து ஆராய்ந்தார் ; கண்டெடுத்த பழம் பொருள்களைப் பெர்லின் நகரத்திற்குக் கொண்டு சென்றார்[11]. அதனை அறிந்த இந்திய அரசாங்கத்தார் ரேயர் என்ற ஆங்கில அறிஞரை யனுப்பி அம்மேட்டை ஆராய்ந்தனர் ; எளிதிற் கிடைத்த பொருள்களைச் சென்னைக் காட்சிச்சாலையில் வைத்தனர்[12]. ஆயினும் நூறு ஏக்கர் அளவுள்ள ஆதிச்சநல்லூர் மேடு பழம் பொருளடங்கிய பண்டசாலையாக இன்றும் ஆராய்ச்சியாளர் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றது. இவ்வண்ணமே புதுவை நாட்டில் செஞ்சியாற்றின் கரையிலுள்ள அரிக்கன்மேடு, ஒரு புதையுண்ட நகரமாயிருத்தல் கூடும் என்று சில அடையாளங்களாற் கண்டு, பிரஞ்சு அரசாங்கத்தார் அதனை ஆராய்வதற்கு இசைந்துள்ளனர்[13].

இங்ஙனம் தமிழகத்தில் அடங்கிக் கிடக்கும். நாகரிகச் சின்னங்களைத் துலக்கினால் தமிழ் நாட்டின் பழம் பெருமை விளங்கும் என்று கருதினார் கால்டுவெல் ஐயர். சென்னைச் சர்வ கலாசாலைப் பெரு விழாவில் அவர் இக் கருத்தை விரித்துரைத்தார்[14] ; பட்டம் பெற்ற மாணவர்களிற் சிலரேனும் இத்தகைய பணியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று, ஆர்வத்தோடு பேசினார் ; கற்கோயில்களில் அமைந்த சாசனங்களும், மறைந்து கிடக்கும் மாநகரங்களும் வெளிப்படும் காலமே தமிழ் நாடு ஏற்றமுறும் காலம் என்று எடுத்துரைத்தார். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் நல்வழி காட்டிய கிருஸ்த்தவத் தொண்டர் அனைவருக்கும் தமிழ். நாட்டாரது. நன்றி என்றும் உரியதாகும்.


குறிப்புகள்

  1. தொன்னூல் விளக்கம், ப. 1.02.
  2. The edition jointly brought out by Drew and the great Ramanuja Kavirayar is an excellent one. But - it goes' only up to:63 chapters out of a total of 133.
    -Preface to V.V. S. Iyer's Tirukkural.
  3. M. Ariel speaks of Tirukkural as 'the imaster-piece of Tamil literature-one of the highest and purest expressions of human thought'
    —Letter published in the Journal Asiatique, 1848.

    M. Ariel refers to a translation of the Kural into French by some author about 1767 which is to the found in the Bibliotheque Nationale of Paris.

    —Preface to v. V: S. Iyer's Tirukkural.
  4. M, Lamairesse has more recently published a complete translation in French which, however, is little better than a bad paraphrase—ibid, p. 20.
  5. Bower, was an Anglo-indian, who worked in the S. P. G. Mission and obtained the degree of D. D.. from Lambeth. -
    -The. C. M. S. in Tinnevelly : p. 152.
  6. The complete Tamil Bible was published in 1871 and copies of it and of the Prayer Book beautifully bound were presented to the Prince of Wales when he visited Tinnevelly in 1875 --ibid. p. 152.
  7. சென்னை ஹைக்கோர்ட்டில் நீதிபதியாக இருந்தவரும் Council of state என்னும் சட்டசபையின் உறுப்பினராக இருந்தவரும் ஆகிய சர். டேவிட் தேவதாஸ் இவருடைய புதல்வர்.
  8. இந்நூல் யாழ்ப்பாணத்தில் 1843-ம் ஆண்டில் அச்சிடப்பட்டது.
  9. The Dictionary of Tamil Proverbs" is the most cortiplete collection : ever - made and a 'valuable contribution to Tamil Literature: '
    - Tamil Literature, M's. Pp. 358.
  10. கொச்சி நாட்டிலுள்ள கிராங்கனூர் என்னும் கொடுங்கோளூரே பண்டை முசிறி என்பர்.
  11. Tinnevelly Gazetteer, p 424.
  12. Madras Museum
  13. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு, 18
  14. Address delivered at the convocation of the university of Madras in 1879.