கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கடவுள்களின் கதைகள்

விக்கிமூலம் இலிருந்து
2. கடவுள்களின் கதைகள்

அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட செயலுக்கும் ஒவ்வொரு கடவுள் பொறுப்பாக இருப்பதால், அந்தந்தக் கடவுளுக்கு வேண்டிக் கொண்டும், விண்ணப்பித்துக் கொண்டும் காணிக்கை அளித்தால், மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதுதான் அந்த அமைதித் தூது.

தூய நீர்க்கடவுளான அன்கி, ஒருமுறை தண்ணீரால் மனித இனத்தை அழிக்க முற்பட்டபோது, மக்கள் படகு மூலம் தப்பித்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்தியதன்றி, உயிர்ப் பொருட்களை படைத்தார்கள். கடவுள்களும் ஈக்கள் வடிவம் கொண்டு, பறந்து வந்து அவர்கள் படைத்த உணவுப் பொருட்களை உண்டு மகிழ்ந்ததாக ஒரு கதை.

கடவுள்களை வணங்க, வாழ்த்த என்பதுடன் நில்லாமல், பிரார்த்தனை என்றும் காணிக்கை என்றும் வளர்ந்து, இறுதியில் வேள்வி, உயிர்ப்பலி உணவுப் படையல் என்று விரிந்து வந்தது என்பதை நாம் இங்கே தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலக் கட்டம் கி.மு. 1200 வது ஆண்டிலிருந்து வந்தது. என்பது நமது ஆய்வுக்கு உரிய கருத்தாகும்.

கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று பைபிள் கூறுவதையும் முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

பைபிள் குறிப்பு:

ஆதியில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார். முதல் அறு நாட்களில், வெளிச்சம் உண்டாக்கி, இரவு பகல் என்று பிரித்தார். ஆகாய மண்டலத்தை அமைத்தார். நீர்ப்பகுதியை ஒதுக்கினார். விளை பொருட்களை உண்டாக்கினார். சூரிய சந்திரர்களை, ஆகாய மண்டலத்தில் உதயமாக்கினார். கோடிக்கணக்கான உயிர்ப் பிறவிகளை உற்பத்தி செய்தார். மிருகங்களைப் படைத்தார்.

அதன்பிறகு, நமது சாயலின் படி, நமக்கொப்பாக மனிதனை உண்டாக்குவோமாக, சமுத்திர மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், காட்டு மிருகங்களையும், பூவுலகம் முழுவதையும், பூமியிலுள்ள ஊர்வன யாவற்றையும், அவர்கள் ஆளக் கடவர்கள் என்று கடவுள் சொன்னார்.

கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார்.

கடவுளின் சாயலாகவே அவனைப் படைத்தார்.

இப்படி விளக்கம் தருகிறது விவிலிய நூல் ஆகவே, கடவுள்தாம் மனிதனைப் படைத்தார் என்ற செய்தியையும் அநேக மதங்களின் வேத நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால், அதே நேரத்தில், மனிதர்கள்தாம் கடவுள்களைப் படைத்தார்கள் என்ற சேதியையும் நாம் இங்கே தெரிந்து கொள்வது பயன் தரத்தக்கதாகும்.

கடவுள்கள் யார்?

மனிதர்கள் தங்களுக்கு மேற்பட்ட அதீதமான சக்திபடைத்தவைகளைக் கண்டு முதலில் பயந்தனர். பிறகு மதித்தனர். பிறகு துதித்தனர் பின்னர் அடிபணிந்து, அவைகளே கதி என்று நம்பினர். அப்படியே வழிவழியாக, மரபாக, மதமாக மாற்றிக் கொண்டனர்.

மக்கள் பயந்ததால் ஏற்பட்ட நம்பிக்கை; நம்பிக்கைகள் விளைவித்துத்தந்த கற்பனைகள், கற்பனைகள் வடித்துத் தந்த காட்சி அமைப்புகள்; காட்சிகளில் லயித்த மனங்கள் உற்பத்தி செய்த பெயர்கள் எல்லாம் நமக்கு இன்று ஆச்சரியத்தையே அளிக்கின்றன.

கடவுள்களை மனிதர்கள் படைத்தார்கள் என்பதிலே சுவாரசியமான செய்திகள் உண்டு. அதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால், கடவுள்களுக்கும் குடும்பம் உண்டு. அவர்களுக்கும் பந்த பாசம், கோபதாபம், வேதனைகள் சோதனைகள், விவகாரங்கள் விமரிசனங்க்ள என்று நிறைய இருக்கின்றன.

நமது நாட்டிலே பரமசிவன் பார்வதி, முருகன், கணபதி, இப்படியெல்லாம் குடும்பத்தைப் பார்ப்பது போல, உலகத்திலே அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய சில நாடுகளின் கடவுள்கள் பெயர்களையும் குடும்ப உறவையும் இனி காண்போம்.

1. கானான் தேசத்துக் கடவுள்கள்

1. பால் (Baal) - மழை, பனி, அறுவடைக்கான கடவுள்

2. அனாட் (Anat) - பால் கடவுளின் மனைவி காதல் கடவுள்

3. எல் (EI) - கடவுள்களின் தலைவன்

4. அஷெரா (Asherah) - எல் கடவுளின் மனைவி, கடல் தெய்வம்

5. ஷமாஷ் (Shamash) - சூரியக் கடவுள்

6. ரெஸ்கெப் (Reshef) - போருக்கும், பாதாள லோகத்துக்கும் கடவுள்.

7. டேகன் (Dagan) - பயிர்களுக்குக் கடவுள்
2. பாபிலோனிய தேசத்துக் கடவுள்கள்

1. அனு (Anu) - வானுலகை ஆளும் கடவுள்

2. என்லில் (Enlil) - அனுவின் மகன். கடவுள்களின் அரசன்

3. என்கி (Enhi) - தண்ணீர்க் கடவுள்

4. ஷமாஷ் (Shamash) - சூரியக் கடவுள், நீதிக் கடவுள்

5. சின் (Sin) - சந்திரக் கடவுள்.

6. அடாட் (Adad) - மழைக்கும் புயலுக்கும் கடவுள்

3. கிரேக்க - ரோம் நாட்டுக் கடவுள்கள்

1. சீயஸ் (Zeus) - கிரேக்க கடவுள்களின் தலைவன். ஜூபிடர் (Jupiter) - ரோமானியர்களுக்குரிய கடவுள் தலைவன்.

2. ஹீரா (Hera) - சீயசின் மனைவி, பெண் கடவுள்
ஜூனோ (Juno) - ரோமானியப் பெண் கடவுள்

3. என்கி (Poseidon) - கிரேக்க கடல் தெய்வம்.
நெப்டியூன் (Neptune) - ரோமானிய கடல் தெய்வம்.

4. ஏரிஸ் (Aries) போர்த்தெய்வம்

5. ஹெர்மஸ் (Hermes)-கிரேக்க கடவுள்களின் தூதுவன்
மெர்குரி (Mercury) - ரோமானிய கடவுள்களின் தூதுவன்

6. ஹேட்ஸ் (Hades) - இறப்பின் கடவுள்
புளுட்டோ (Pluto) - ரோமானிய இறப்புக் கடவுள்.

7. ஹெபாஸ் டஸ் (Hephaestus) - கைத்தொழில் கடவுள்.
வல்கன் (Vulcan) - ரோமானியக் கைத் தொழில் கடவுள்.

8. அப்போலோ (Appollo) - அறிவு தெய்வம்.

9. ஆர்டமிஸ் (Artemis) - வேட்டை தெய்வம்.
டயானோ (Diana) - ரோமானிய வேட்டை தெய்வம்.

10. அதீனா (Athena) - போர்த்தெய்வம்
மினர்வா (Minerva)- ரோமானிய போர்த்தெய்வம்.

11. அப்ரோடைட் (Aphrodite) - காதல் தெய்வம்
வீனஸ் (Venus) - ரோமானிய காதல் தெய்வம்.

12. டெமிட்டர் (Demiter)- அறுவடை தெய்வம்
சிரிஸ் (Ceres) - ரோமானிய அறுவடை தெய்வம்.

4. எகிப்திய நாட்டுக் கடவுள்கள்

1. ரீ(Re) - சூரியக் கடவுள்

2. தாத், கோன்ஸ் (Thoth, Khons) - சந்திரக் கடவுள்கள்.

3. நட் (Nut) - வான மண்டலக் கடவுள்.

4. ஜெப் (Geb) - மண்ணுலகக் கடவுள்

5. ஹேபி (Hapi) உணவுக்கான கடவுள்.

6. அமுன் (Amun) - இயற்கைத் தெய்வம்.

7. மாட் (Maat)- உண்மை, நீதி, ஒழுங்குக் கடவுள்.

8. தோத் (Thoth) - கல்விக் கடவுள்

9. டா (Path) - கைத்தொழில் கடவுள்

10. ஆசிரிஸ் (Osiris) (இறப்புப் பிறகு) நம்பிக்கை கடவுள்

கடவுள்களின் பெயர்கள் அந்தந்த நாட்டுக்குரியவை. கடவுள்களின் பொறுப்புக்கள், வகித்த இலாக்காக்கள் பற்றி அறிகிறபோது நமக்கு இரண்டு உண்மைகள் தெரிகின்றன.

பெரிய சக்தி என்று பயந்ததற்கும், தேவை என்று பயன்பட்டதற்கும், உருவங்கள் கொடுத்து, கடவுள்களைப் படைத்து விட்டார்கள் என்பது தான்.

சூரியன், சந்திரன், இயற்கை, மழை, பனி, புயல், வெள்ளம், கடல், இடி, மின்னல், நெருப்பு, இறப்பு, போன்றவற்றிற்கு பயந்து படைத்த கடவுள்கள்.

காதல், அன்பு, உணவு, அறுவடை, போர், உண்மை, நீதி, ஒழுக்கம், அறிவு என்கிற அன்றாட வாழ்வில் பயன்படுத்தியவற்றிற்கு உருவம் தந்து உருவாக்கிய கடவுள்கள்.

சரித்திரங்களையும், சாம்ராஜ்யங்களையும் உருவாக்கிப் பெயர் படைத்த சில நாடுகளின் கடவுள்களை இதுவரை பார்த்தோம்.

இந்திய நாடும் எந்த நாட்டிற்கும் இளைத்ததல்லவே?

வீர புராணங்களாகட்டும் இதயம் கவரும் இதிகாசங்களா கட்டும்! எல்லா நாடுகளுக்கும் இணையான, அல்ல அல்ல, இணையற்ற நாடாகவே, நமது தாய்த்திரு நாடு விளங்குகிறது.