குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/இட ஒதுக்கீடு1

விக்கிமூலம் இலிருந்து

86. இட ஒதுக்கீடு

இனிய செல்வ,

தமிழகம் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறது. ஆம்! இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தான்! 1924-ல் தொடங்கிய இடஒதுக்கீடு தொடர்ந்து நடக்கிறது; என்றென்றும் தொடரும் போல இருக்கிறது! இனிய செல்வ, பின் தங்கியதற்குரிய நிலைகள் மாற்றப்படாமல் நாற்காலிகள் வழங்கப்படுவதால் மட்டும் பின்தங்கிய நிலை மாறுமா?

இன்றைய கல்விப் போக்கு என்ன? ஆரம்பப் பாடசாலைகள் முதல் சேர்கிற மாணவர்கள் அனைவரும் உயர்நிலைக் கல்விக்கும் அதற்கு மேல் கல்லூரிக் கல்விக்கும் வருவதில்லை. இனிய செல்வ, உன்னுடைய கேள்வி சரியானது! இடைத்தங்கல் ஏராளம்; இடைமுறிவுகளும் ஏராளம்! தோராயமாகக் கணக்கிட்டால் 10 விழுக்காடு மாணவர்கள் தான் கல்லூரிக் கல்விக்கு-ஆராய்ச்சிப் படிப்புக்கு வருகிறார்கள். இதிலும் சராசரி மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குறிய மதிப்பெண் பெற்று வருவதில்லை. தேர்ச்சிக்குரிய மதிப்பெண் அளவே குறைக்கப்பட்டு விட்டன! அதிலும் ‘தான மார்க்கு’கள் வேறு. இனிய செல்வ, இந்த நிலை நீடித்தால் எங்ஙனம் பின்தங்கிய நிலை மாறும்?

நுண்மாண் நுழைபுலம் வேண்டாமா? அறிவும் நுழைபுலமும் வழங்கும் முயற்சிகளை மேற்கொள்ளாமல் நாற்காலிகளைத் தரும் முயற்சி போதிய பயனைத்தருமா? பின் தங்கிய நிலைதான் மாறுமா?

இந்த ஆண்டும் மேல்நிலைப் பள்ளித் தேர்ச்சிகளை நீ கூர்ந்து படித்திருந்தால் ஒன்றை உணர்ந்திருப்பாய்! அதாவது 80 விழுக்காட்டுக்கும் மேலாக நகர்ப்புற மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கிராமப்புற மாணவர்கள் போதிய அளவு தேர்ச்சி பெறவில்லை. அதிலும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு. இந்த நிலை தரும் படிப்பினை என்ன? கல்வியின் தரத்தைக் குறிப்பாக ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தித் தரமாகக் கல்வியும் பயிற்சியும் தந்தால் பின்தங்கிய நிலை மாறும். நமது பிள்ளைகள் மேட்டுக் குடியினரின் பிள்ளைகளை விடப் புத்திசாலிகள் தான்! ஆனால் அவர்களுக்கு வாய்ப்புதான் வழங்கப்படவில்லை.

இனிய செல்வ, மேலும் ‘பின்தங்கிய நிலை’ என்பது ஒட்டு மொத்தமாக ஒரு சமூகமே பின் தங்கியிருக்காது. அது போலவே முன்னேறிய நிலை என்பதும் ஒரு சமூகம் முழுதுக்கும் பொருந்தாது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில்தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட நிலையும் பின்னடைவும் இருக்கும். தாழ்த்தப்பட்ட சமூகத்திலும் கூடத் தீண்டாமை கடுமையாக இருந்த காலத்தில் டாக்டர் அம்பேத்கார் தோன்றினார் என்பது நினைவுக்குரியது. அது போலவே முன்னேறிய சமூகத்திலும் அனைவரும் முன்னேறியவர்கள் அல்ல; இருக்கவும் முடியாது. இனிய செல்வ, தமிழ் நாட்டிலேயே பழைய சாமான் விற்பனைக் கடைகள் செட்டி நாட்டில்தான் அதிகம். நகரத்தார்கள் குடும்பங்களில் பலர் வீட்டை இடித்து விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். வீட்டில் உள்ள பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். தமிழ் நாட்டில் தொழில் மேதைகளும், பெரிய மூலதனம் உள்ளவர்களும் இலட்சாதிபதிகளும் நகரத்தார் சமூகத்தில் உண்டு. இது உண்மை. ஆனால், சமூகத்தில் ஒரு சில நூறு குடும்பங்கள் வசதி பெற்றிருந்தால் அந்தச் சமூகத்தையே முன்னேறிய சமூகம் என்று கூற முடியுமா? அல்லது கூறலாமா? அதுபோலவே, பிற்பட்டோர் என்ற சமூகப் பட்டியலில் தான் ஜமீன்தார்கள் அனைவரும் உள்ளனர். அதனால் அந்தச் சமூகம் முழுதும் முன்னேறியது அல்லது பிற்படுத்தப்பட்டது என்று கூற இயலாது.

ஆதலால், இடஒதுக்கீடு அவசியமில்லை என்பது நமது கருத்து அல்ல. இட ஒதுக்கீட்டிற்குக் கால நிர்ணயம் வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை சமூக ரீதியில் அமைவது கடை கோடி மனிதன் முன்னேறத் துணை செய்யாது. குடும்ப அடிப்படையில் அமைய வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு, பிறந்த சாதியை-சமூகத்தை ஆதாரமாகக் கொள்ளாமல் பின்னடைவு நிலையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளத்தில் கிடப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்காது போயினும் சமூகம் கெடும்! உண்மையை ஓர்ந்து உரியவாறு செய்யாது போனால் சமூகம் கெடும்!

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்"

இன்ப அன்பு
அடிகளார்