குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/நாணம் தேவை

விக்கிமூலம் இலிருந்து
67. நாணம் தேவை

இனிய செல்வ,

திருக்குறளுக்கு உள்ள ஒரே பெருமை நாம் வாழும் காலத்தின் உலகத்தையும் திருக்குறளில் பார்க்க முடிகிறது என்பதுதான்! இனிய செல்வ, மானுட வாழ்க்கையின் சிறந்த அணிகலன் நாணம், பரதி, "நாணமும் அச்சமும் தாய்கட்கு வேண்டுமாம்" என்று பாடியுள்ளார். திருக்குறளும் பாரதியும் முரண்படவில்லை. நடைமுறை உலகியலில் முரண்படுகிறது. ஏன்? மனித குலத்தின் தரம் மிகமிகக் குறைந்து வருகிறது. நாணம் மனிதர்க்குத் தேவை! தீயவை எண்ண-செய்ய நாணப்படுதல் மனித வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், இன்று நாணமுடையோர் யார்? நாணத்தின் விலை என்ன? இன்றைய உலகம் நாணத்தை இழந்து மனம் போனபடியெல்லாம் வாழ்ந்து தன்னைத்தானே வெட்கமின்றி வியந்து போற்றிக் கொள்கிறது! இன்று ஏது நாணம்? இன்று நாணப்படுகிறவர்கள் ஏமாளிகள்; வாழத் தெரியாதவர்கள்; நெறிமுறை பிறழ்ந்த செயல்களே இன்று அங்கீகரிக்கப் பெறுகின்றன! இன்று நல்லவர்கள் இல்லை, சான்றோர்கள் இல்லை! உலகந்தழீஇய நிலையில் இன்று நாணப்படுவோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. தப்பித்தவறி நாணப்படுவோர் எவராவது இருந்தால் அவர்களைச் சமூகம் ஏற்காது. ஏற்காதது மட்டுமல்ல, பைத்தியக்காரப் பட்டமும் கட்டும்.

இனிய செல்வ. நாணமின்றி நடப்பது மட்டும் இன்று வளரவில்லை! இன்று வறுமையில் துஞ்சும் மானுடத்தைக் கண்டு நாணி அவர்தம் முன்னேற்றத்திற்கு உரிய நெறி முறைகளை நாடவேண்டும். நாணமும் வெட்கமுமில்லாத வாழ்க்கையிலிருந்து விலகி அறிவறிந்த ஆள்வினையை நாட வேண்டும். இன்று எத்தனை பேர் ஆர்வத்துடன் பொருள் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்? எங்கும் வேலை தேடும் படலம்! முச்சந்திகளில் கூட்டம்! வறுமொழியாளராக வம்பப் பரத்தரொடு கூட்டு: இது என்ன ஒரு வாழ்வா?

இனிய செல்வ, வாழும் மாந்தர் யார் மாட்டும் வேறுபாடின்றி அன்பு காட்டுதல் வேண்டும். அவர் தம் நல்வாழ்வுக்கு நாளும் உழைத்திடல் வேண்டும். அதுவே யோகம்! “ஊருக்கு உழைத்திடல் யோகம்" என்றான் பாரதி. இன்று இப்படி யோகம் செய்வார் யாருமில்லை. எங்கும் நிர்வாணமான சுயநலம்; தற்புகழ்ச்சி; தன்னைத்தானே வியந்து கூறிக் கொள்ளல், முதலிய குற்றங்கள் மலிந்துவிட்டன. இனிய செல்வ, பேணுதல் வாழ்க்கைக்குரிய இயல்புகளில் தலையாயது பேண வேண்டியன பலப்பல. முதலில் உடல் நலம், அறிவு நலம் பேணப்படுதல் வேண்டும். அடுத்து மனிதகுல உறவுகள் பேணப்பட வேண்டும். இன்று மனிதகுல உறவுகள் சீரழிந்துள்ளன. இன்று உறவுக்கு அடிப்படை தேவையாகிவிட்டது. தன்னலமுடையார் கூட்டம் ஒரோவழி ஒன்று சேர்கிறது! உண்மை! எத்தனை நாளைக்கு! சில நாட்களுக்கே இந்த உறவு! பின் கெடும். பகையாகமாறும்! இனிய செல்வ, இதுவா வாழ்க்கை? இல்லை! இல்லை!

நம்முடைய செயல் திறனும் பண்பாடும் இழிந்து போகும் நிலை கண்டு நாணவேண்டும். நல்லனவற்றையே நாடும் பண்பு வளர்தல் வேண்டும். யார்மாட்டும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செயல்பட்டாகவேண்டும். இவையெல்லாம் பேணிக் காத்துக்கொள்ளாதார் யாதொன்றும் அறியாதார்! பேதைமையுடையார்! என்று வள்ளுவம் கூறுகிறது! இன்று நாம் காண்பதென்ன? பேதமையைத் தவிர வேறு எதைக் காண்கிறோம்!

"நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

(833)
இன்ப அன்பு
அடிகளார்