குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பெருமை பெருமிதம் இன்மை

விக்கிமூலம் இலிருந்து

55. பெருமை பெருமிதம் இன்மை

இனிய செல்வ,

அயல்நாட்டுப் பயணத்தின் விளைவாக, சென்ற மடல் எழுத இயலவில்லை. பொறுத்துக்கொள்க. நமது நாடு எங்கோ திசைமாறிச் சென்றுகொண்டிருக்கிறது; தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. மக்களாட்சி முறையில் கொலை பயிலும் கொடியோர், இழிவுபடுத்தும் இழி மனத்தினர் நடைபயில்வது விரும்பத்தக்கதல்ல. அவை அறவே வெறுத்து ஒதுக்க வேண்டியன. நம் நாட்டு மக்களுக்கு இந்தத் துணிவு என்று வரும் ?

இனிய செல்வ, தமிழ் நாட்டின் அரசியலில் புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்கள் இழிவு, அவமானம் இவைகளைத் தாங்கிக்கொண்டு போர்க்குணத்துடன் போராடி மாபெரும் வெற்றியைப்பெற்று முதல்வராகியுள்ளார். அவர் தம் கொற்றம், நாளும் நன்மைபெருகி வளரும் வகையில் பணிகளை இயற்றும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார்கள்.

புரட்சிச் செல்வி ஜெயலலிதா அவர்களின் வெற்றியைப் பயனுடையதாக்கும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சித் தொண்டர்களும் நடந்து கொள்ளவேண்டும். "நிறை கர்ப்பிணி நிறை குடத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பது போல நடக்க வேண்டும்” என்பது அறிஞர் அண்ணா தந்த அறிவுரை. இனிய செல்வ, வெற்றியைப் பெறுவது எளிது. அந்த வெற்றியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு நல்ல பண்புகளும் கூடுதலான முயற்சியும் தேவை. இனிய செல்வ, பெருமை எளிதில் வரலாம்; கிடைக்கும். அந்தப் பெருமை நம்மிடம் செருக்கைத் தந்துவிடக் கூடாது, யார் மாட்டும் எளியராக, இரவன் மாக்களைப் போல எளிய மொழிகளைப் பேசி உறவுகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். பெருமிதம் என்ற தவறான குணம் வந்து சாராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இந்த இனிய பண்பாட்டை மாண்புமிகு முதல்வர் அவர்களின் தொலைக்காட்சிப் பேட்டி எடுத்துக் காட்டியிருக்கிறது. அதாவது ஆட்சியின் உறுப்புக்கள்-காவல் துறையினர். ஆட்சித்துறை அலுவலர்கள் மீது எந்தக் குறையும் சொல்லாதது மட்டுமின்றி அவர்களுடைய திறமையை வியந்து கூறியமை உணர்த்துகிறது. இது ஒரு நல்ல மரபு. ஆதலால், வெற்றி பெற்றதைவிட இந்த வெற்றியைப் பாதுகாத்துக் கொள்வதிலும் பயனுடையதாக்குவதிலும் அதிகக் கவனம் தேவை; ஆற்றல் மிக்க முயற்சி தேவை.

பெருமை பெருமிதமின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடல்

(979)
இந்த இயல்பை, அ.இ.அ.தி.மு.க. கட்சியினர் பெற்று விளங்கி மாண்புமிகு முதல்வருக்கு உற்ற துணையாக அமைய வேண்டும் என்பது நமது விருப்பம்.
இன்ப அன்பு
அடிகளார்