குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வள்ளுவம் ஏன் பிறந்தது?

விக்கிமூலம் இலிருந்து

6
தமிழமுது

1. வள்ளுவம் ஏன் பிறந்தது?

தமிழினம் காலத்தால் மூத்த இனம்; நிலவுலகத்தை மூடியிருந்த நீர்ப்பரப்பு மறைந்து, கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி வீரத்தில் மட்டுமன்று, சிந்தனைத் திறத்திலும் சிந்தனையைச் செப்பும் மொழித் திறத்திலும், இலக்கியப் படைப்பாற்றலிலும் இலக்கியத்தின் பயனாகிய நனி நாகரிகத்திலும் சிறந்து விளங்கிய இனம், தமிழினம். செல்வச் செழிப்பும் இருந்தது. அதனால், காலப்போக்கில் மதோன்மத்தமான வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிட்டனர். கள்ளும், காமமும் இடம் பெற்றன. ஐந்திணை ஒழுக்கத்திற்குப் பதில் பரத்தையர் ஒழுக்கம் கால்கொண்டது. ஓரினத்திற்குள் உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் தலைகாட்டத் தொடங்கின. அவ்வழி, பல்குழுத் தோற்றமும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் வளரத் தொடங்கின. பொழுது விடிந்தால் பொழுது போனாற் போலப் பண்பாட்டை வளர்க்கும் சமய நெறிகளும் பல

தி.16. வாயினமையின் காரணமாகச் சமயநெறியாளர்களுக்குப் பதில் சமயக் கணக்கர்கள் சமுதாயத்தில் தோன்றினர்.

அவர்களும் சமுதாயத்தைப் பண்பியல் வழியில்-அமைதி நெறியில் ‘இவர் தேவர் அவர் தேவர்’ என்று இரண்டாட்டுகின்ற புன்னெறியை வளர்த்தனர். இங்ஙனம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழனத்தில் வீழ்ச்சியுறும் நிலை தலை காட்டிய பொழுது திருவள்ளுவர் பிறந்தார். இருள் கடிந்தெழுகின்ற ஞாயிறெனத் தோன்றினார் திருவள்ளுவர். திருவள்ளுவர் என்ற ஞாயிறு கனன்ற கதிரொளியே திருக்குறள், ஓரினத்தை அழிவு வராமல் பகைப்புலத்தில் காக்கும் போர் வீரனை விட வாழ்வியல் நெறியில் நயத்தக்க நாகரிகத்தினைக் கட்டிக் காப்பாற்றிய வள்ளுவர் போற்றுதற்குரியர். ஏழேழ் பிறப்பும் போற்றுதற்குரியர்; வடபுலம் கண்டு வாகை கொண்ட ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றியை விட செந்தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் புகழ் போற்றுதலுக்குரியது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வெற்றி ஒரு பொழுதே பகை தடுத்தது. நாவலர் வள்ளுவர் வெற்றி ஊழி ஊழிக் காலத்திற்கு வெற்றி கொண்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வெற்றி பகை மட்டுமே தடுத்தது; பண்பினை வளர்க்கப் பயன்படவில்லை, திருவள்ளுவர் செய்த திருக்குறளோ நந்தமிழ் நெறியினை நஞ்சனைய நெறியின் கலப்பினின்று தடுத்துக் காப்பாற்றியது. நமது சமுதாயத்தை வாழ்வாங்கு வாழும் நெறியில் வழிநடத்தியதன் மூலம் பண்பியலையும் பேணிக் காத்து வந்திருக்கின்றது.

வள்ளுவம் வையகத்து வரலாற்றின் சந்திப்பில் பிறந்தது; வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தப் பிறந்தது; தேங்கிக் கிடந்த சமுதாயத்தில் தெளிவு காணப் பிறந்தது; நூல்கள் பல கற்பதிலும் நுண்ணிய அறிவு ஆற்றலுடையதெனக் காட்டப் பிறந்தது. கல்வி, கற்கின்ற ஆற்றல்ைப் பொறுத்ததல்ல, கசடு அறுத்தலிலேயே இருக்கிறது. என்று உணர்த்தப் பிறந்தது; மண் வழிப்பட்ட உடைமைகளிலும் உள்ளம் உடைமையே உடைமையென உணர்த்தப் பிறந்தது; ஆனதைக் கதையாக்கிக் கவலையாக்கிச் சாகாமல், தடுக்க ஆவது காட்டப் பிறந்தது. நிலத்தில் துய்மை, உடலில் துய்மை, நெற்றியில் தூய்மை இவையனைத்தும் கைகள் செய்பவை. இந்தத் துய்மை பெருகி வளர்ந்தும், பேணும் சமுதாயம் பகையினின்றும் விடுதலை பெற்றபாடில்லை. நன்செயலின் தோற்றமும் நஞ்சையிலில்லை; புன்செயலின் தோற்றமும் புஞ்சையிலில்லை. காழ்ப்பின் தோற்றம் காசுகளிலில்லை. கலகங்களின் தோற்றம் கடவுள்களிட்டதில்லை. கொலையுணர்வின் தோற்றம் கொடுவாளிடத்திலில்லை. உருக்குலைக்கும் உட்பகையின் தோற்றம் உடலின்கண் இல்லை, ஆங்கிலங்கும் நீற்றிலில்லை. பின் எங்கு? நஞ்சின் நிலைக்களம் மனமேயாம். மனத்துக் கறுப்பு வைத்து மாநிலம் முழுதும் தூய்மை செய்தாலும் பயனில்லை என்று பாங்குறக் காட்டி மனத்தின் கண் மாசறுத்து மகிழ்வூட்டப் பிறந்தது வள்ளுவம்.

மனிதன், உருவெளித் தோற்றத்தால் தனி மனிதன்; மக்கட் கணக்கெடுப்பில் தனி மனிதன், வயிற்றால் வாயால் தனி மனிதன், ஆயினும், அவன் படைத்திடும் வாழ்க்கை தனி மனித வாழ்க்கையன்று; சமுதாய வாழ்க்கை-கூட்டு வாழ்க்கை அவனிடத்தில் உருவாகித் தோன்றும் உணர்வுகள் உலகம் தந்த உணர்வுகளேயாம். ஈண்டு உலகம் என்பது மனித சாதியை நினைத்தேயாம். எனவே, இயற்கை உலகம், மனித சாதியினைப்போல எளிதில் ஒழுக்கங்களைக் கடப்பனவல்ல; முறைகளை மீறுவன அல்ல; நீதிகளை நீப்பன அல்ல. இயற்கை உலகில் மாற்றங்கள் உண்டு; ஆனால் ஏமாற்றங்கள் இல்லை. மனித சாதியிலோ முறைகளை எளிதில் கடந்த சிலச் சிதைவினையும், ஏமாற்றங்களையும் வரலாறுகளே படம் பிடித்துக் காட்டுகின்றன; இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. கீழே விழுந்துவிடாமல் தம்மை அடிக்கடி தூக்கி நிறுத்திக் கொண்ட மனிதசாதி கெட்டதைப் போல செடிகள் உலகம் கெடவில்லை. கொடிகள் உலகம் கெடவில்லை. விலங்குகள் உலகமும் கெடவில்லை. ஆனால் மனிதனோ தம்பட்டம் அடித்துக்கொள்கிறான். விலங்குகளுக்கு ஐந்து அறிவாம். இவனுக்கு ஆறாவது அறிவாம் ஐயகோ, மனிதர்களே! வாயும் வார்த்தைகளும் கிடைத்தமையால் ஏன் இப்படி வையகத்தை ஏமாற்றுகிறீர்கள்? எங்கேயிருக்கிறது உங்கள் ஆறாம் அறிவு? நமக்கு அறிவு இருப்பதன் அடையாளம் என்ன? அதற்கு பதில் ஆரவாரம்தானோ? விலங்குகளும் துன்பம் அனுபவிக்கின்றன. ஆனால் ஓர் அதிசயம்! விலங்குகள் அனுபவிக்கும் துன்பங்கள் பெரும்பாலும் இயற்கை வழியில் வந்த துன்பங்கள். ஒரோவழி, அறிவின்மையின் காரணமாகச் சில அவலங்களையும் அடைகின்றன. ஆயினும் மனிதச் சாதியைப்போல செயற்கை இன்பங்களும் செயற்கைத்துன்பங்களும் விலங்கினத்திற்கு கிடையா! அறிவிருப்பதைக் காட்டுதற்குரிய அன்பு பிறந்திருக்கிறதா? "மேடையில் தான் பிறக்கிறது! வணிகம்தான் நடை பெறுகிறது!” என்று இடித்துக்கேட்க- “அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை" என்று வள்ளுவம் பிறந்தது.

வாழ்க்கையென்பது, ஒன்றரையடியில் பிறந்து ஆறடிக்கு வளர்ந்து மண்ணுக்கு உரமாகவோ? நிலத்தில் விளைந்தவைகளைத் தின்று திரிந்து கதை முடிக்கவோ? உண்ட உணவின் கொழுப்புகளால் விளைந்த உடலெரிச்சலைக் கூடித் தணித்துக் கொள்ளவோ? இல்லை, இல்லை! மனிதன்-அவனே வையகத்தின் நாயகன்! கடவுளின் சாட்சியாக விளங்க வேண்டியவன்! அவன் வாழ்வாங்கு வாழ்ந்தால், வையகம் வளரும்; வானகம் மண்ணுக்கு வரும். அங்ஙனம் வாழ்தல் வாழ்க்கை என்று காட்ட, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!” என்று வள்ளுவம் பிறந்தது.

மண்ணுக்கு இயற்கையில் உயிர்ப்பாற்றல் இருக்கிறது. அந்த உயிர்ப்பாற்றலின் வழி இழுத்தெறியப் படாமல் மேலே உயர உயர ஓங்கி வளர, இயற்கை ஆற்றலும் தந்தது. விலங்குகளுக்குக் கால்களும், மரம், செடி கொடிகளுக்கு வேர்களும் கிளைகளும் அந்த நோக்கத்துடனேயே அமைந்தனவாம். அவைகள் மண்ணிடை வேர் பாவிக் கிளைகள் விட்டு அதன் உயிர்ப்பாற்றலின் சக்தியைத் தடுத்து நிறுத்தித் தன்னை இழுத்தெறியும் ஆற்றலுடைய மண்ணையே, தான் நின்று நிறுத்தி வளரும் களமாக மாற்றித் தாம் வளர்வதோடன்றிப் பூத்துக் குலுங்கிக் காய்ப்பதோடன்றி விலங்குகளுக்கும் மனித உலகத்துக்கும் கூட வாழ்வளிக்கின்றன. ஆனால் மனிதனோ, மண்ணின் ஆற்றலால் உடல் மட்டுமின்றி உள்ளத்தையும் பறிகொடுத்துத் தானும் வாழாமல் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்காமல் பயனின்றி நடமாடுகிறான். அதனாலேயே வாழ்வாங்கு வாழ்தலைத் தெய்வமாக்கினார். வள்ளுவர் காலத்தில் மனிதர் பூசித்தது தெய்வத்தை பூசிப்பவன் ‘சாத்தான்’. ஆனால் பூசனையால் வரும் பயனென்ன? தெய்வ மணம் கமழும் இனநலம் உடையவனே தெய்வத்தைப் பூசித்தற்குரியவன். சாத்தானின் இடம் சுடுகாடு. தெய்வங்களின் இடம் மனித இனம் நடமாடும் மலர்ச்சோலை; திருக்கோயில்கள்; ஆதலால், சாத்தானாக விளங்கும் மனிதனைத் தெய்வமாக்கவே வள்ளுவம் பிறந்தது. ‘வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வம்’ என்று வள்ளுவம் பேசுகிறது.

வள்ளுவம் ஏன் பிறந்தது? என்று இதயத்தில் பட்டதை எழுதியிருக்கிறோம். வள்ளுவம், பதவுரை, பொழிப்புரைக்காகப் பிறக்கவில்லை; பாராட்டுரைகளுக்காகப் பிறக்க வில்லை. மண் செழிக்க மழை பொழிவதுபோல, மனிதகுலம் செழிக்க-மனித உள்ளங்கள் செழிக்க-உலகு செழிக்க-உயர்கடவுள் சிரித்து மகிழ வள்ளுவம் பிறந்தது! முடிந்தால்-மனமிருந்தால் வள்ளுவம் பிறந்ததன் பயனையடைய வழி காணுங்கள். வையகம் சிறக்கும்! அல்லது வழக்கம்போல வாழ்த்துரைகளில் வாழ்நாளை வீணாக்குங்கள்! அஃது உங்கள் விருப்பம்! வள்ளுவரே, ‘ஏவவும் செய்கலான் தான் தேரான்’ என்று நொந்து கூறியுள்ள பொழுது நாம்தான் என்ன செய்ய முடியும்? வளர்க வள்ளுவம்.