குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/வாழ்வாங்கு வாழ்க!

விக்கிமூலம் இலிருந்து

2. வாழ்வாங்கு வாழ்க!
(1)

வாழ்க்கை வெற்றி பெறவேண்டும், பயனுடையதாக வேண்டும் என்றால், அதற்குச் சில இன்றியமையாத பண்புகள் தேவை. அவற்றுள் தலையாயது பணிவு. அதாவது யார் மட்டும் பணிவாக நடந்து கொள்ளுதல். பணிவு என்பது அடக்கமுடைமையின் முதிர்ச்சியில் தோன்றுவது. பணிவு இயற்கையாக அமைதல் வேண்டும். அதற்கு வேறு பின்னணிகள் இருக்கக்கூடாது. இயலாமை காரணமாகப் பணிதல் பணிவுடைமையன்று. பணிவுடைமைக்குரிய இலக்கணத்தை எழுத்தில் எழுதிக்காட்ட இயலாது. உடல் வணக்கம் மட்டும் பணிவாகாது. உடல் வணக்கம் பணிவுடைமையில் சேராது என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் பணிவு அல்லது வணக்கம் பணிவின் பாற்பட்டதா அல்லது நடிப்பா என்பதை எளிதிற் பிரித்துக் காணமுடியும். உடல் வணக்கம் நாவடக்கம் ஆகியன பணிவின் பாற்சாரும்! ஏன்? மனஅடக்கமும் கூடத்தான்!

மற்றவர்களுடைய மதிப்பினைக் கருதியும் வருந்தா நிலை வேண்டியும் பணிவாக இருத்தல் வேண்டும். சில பொழுது பணிவின் காரணமாகத் தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக்கூட முற்றாக வெளிக்காட்டாது அடங்கியிருத்தலும் பணிவின்பாற் சாரும் பணிவுடையாரிடத்தில் தான் மற்றவர்கள் எளிதில் பழகுவர்; மனம் ஒப்பிப் பழகுவர். அப்பழக்கம் பல பண்பாடுகளையும் பயன்பாடுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.

பணிவு எளிதில் வாராது. பணிவு, வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த இலக்கணம். முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல்போல, நிறைந்த அறிவும் எதிரில் ஆற்றலும் உடையவர்கள்தாம் பணிந்துபோவர். அது கோழைமையன்று. குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி! மண்ணில் தாழ்ந்து தாழ்ந்து செல்லாத வேர்களைப் பெறாத மரங்கள் விரிந்து வளர்ந்து விண்ணோக்கிச் செல்ல இயலுமா? அவை பயன்தரும் மரங்களாகத்தான் விளங்க முடியுமா? ஒருவர் நிற்க, தான் அமராமை. ஒருவரைக் கண்டுழி மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவரை இருக்கை யில் அமர்த்தியபிறகு அமர்தல், அவர்தம் கருத்து இன்னதென்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வணங்கியவாயினராகக் கேட்டல், உடன்படாதவற்றைச் சொன்னாலும் உவப்புடன் கேட்டல், மற்றவர்கள் உவப்பக் கருத்தைத் தெரிவித்தல் ஆகியன பணிவிற்குறிய சில அடையாளங்கள். எங்கே பண்பில் முதிர்ச்சியிருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். எங்கே பழுத்த மனம் இருக்கிறதோ அங்கே பணிவு இருக்கும். ஆழ்கடலில்தானே அழகான முத்து! கட்டடத்தின் வலிமை அடிப்படைக் கல்லால்தானே!

எங்கே பணிவு இருக்கிறதோ அங்கே நிச்சயம் இன்சொல் இருக்கும். கொள்கை உயர்ந்ததாக இருந்தால் போதாது! அதை மற்றவர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துக்கூறும் ஆற்றல் வேண்டும். பணிவுக்கு இன்சொல் அரண். இன்சொல்லுக்குப் பணிவு அரண். இரண்டும் இரட்டைப் பண்புகள்! ஆனால் வாழ்க்கையைச் சிறப்பிப் பதில் ஒருமைநலம் சார்ந்த பண்புகள்! இவ்விரண்டு பண்புகளும் ஒருவர் வாழ்க்கைக்கு அழகூட்டுவன; மதிப்பூட்டுவன; உயர்வூட்டுவன. இவ்விரு பண்புகளையும் அணியெனப் பெற முயலவேண்டும், இவையே புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணிகள்! மற்றபடி கவர்ச்சியான ஆடைகள், தங்க அணிகலன்கள், வண்ணப்பூச்சுகள், வாசனைப்பூச்சுகள் முதலியனவற்றை அணியெனக் கருதி ஏமாறுதல் வேண்டா. அவற்றுக்காகப் பெரும்பொருளை இழக்கவேண்டா. அவற்றை மதிப்பார் யார்? பிணத்திற்குக் கூடப் பொன்னணி பூட்டப்படுவது உண்டு. பயன் என்ன? உயிர்ப்புள்ள, பொருளுள்ள, புகழ்மிக்க வாழ்க்கைக்கு அணி, பணிவும் இன்சொல்லுமேயாம். மக்களாட்சி நடைமுறை வாழ்க்கைக்குப் பணிவும் இன்சொல்லும் இன்றியமையாப் பண்புகள்! இந்த அணிகளை அணிவோமாக! காசின்றி எளிதில் முயன்று பெறக்கூடிய இந்த அணிகளை எவரும்

தி.15. அணிந்து கொள்ள முடியும் தேவை, உளமார்ந்த விருப்பமும் முயற்சியும் தான்!

"பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற"

என்பது குறள்.
12-9-86
வாழ்வாங்கு வாழ்க!
(2)

இனிய சொற்கள் இன்பத்தைத் தருவன. இனிய சொற்கள் சொல்வாருக்கும் இன்பம் தருவன: கேட்பாருக்கும் இன்பம் தருவன. இன்சொல் தப்பாமல் நட்பைத் தரும்; பெற்ற நட்பை வளர்க்கும்; பாதுகாக்கும். இன்சொல் குறித்த பயனைத் தவறாமல் தரும். பெரும்பான்மையான மனிதர்கள் இன்பத்தை விரும்புகிறார்கள். வளர்ந்த மனிதர்கள் சொற்களைப்பற்றிக் கவலைப்படாமல் பயன் இன்பமாக இருந்தால் சரி என்று கருதுவார்கள். இது பெருந்தகைமையின் பாற்பட்டது. ஆனால் சராசரி மனிதர்கள் பயன் எவ்வளவு இன்பமானதாக இருந்தாலும் சொல் கடுஞ்சொல்லாக இருந்துவிட்டால் மிகுந்த சங்கடப்படுகின்றனர். ஆதலால், நன்மைக்குத்தானே சொல்கிறோம் என்று கடுஞ்சொல்லால் கூறக்கூடாது. எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் நன்மையைக் காணவும் சரி, தீமையை அகற்றவும் சரி இனிய சொற்களையே பேசுதல் உயர்ந்த ஒழுக்கம்.

இனிய சொற்களை வழங்குவதன் மூலம் நல்ல பயன் விளையும். பகைவரையும்கூடத் தன்வயப்படுத்த முடியும். குற்றங்கள் - குறைகள் இல்லாத மானிடர் உலகில் இல்லை. இவற்றைக் கண்டுபிடித்துக் கூறுவதற்காக நமக்கு வாய் படைக்கப்படவில்லை, ஆனால் சமுதாய அளவில் நல்லன வளர வேண்டும் என்ற பெருநோக்கு இருக்குமானால் அவற்றை உரியாரிடத்திலேயே இனிய சொற்களால் பேசி நயந்த முறையில் திருத்தம் காண முயற்சி செய்யலாம். வருத்தம் தருகிற ஒரு கட்டி, உடலில் இருக்குமானால் அதை உடனே அறுக்க முடியாது. அந்தக் கட்டிக்குச் சில ராஜோபசாரம் செய்து மருந்துபூசிப் பழுக்கவைத்துப் பின்தான் அறுக்க வேண்டும். உடலில் வேண்டாத உரோமங்கள் இருப்பதை நீக்கும் முயற்சியில்கூட தண்ணீர் தடவிப் பதப்படுத்தித்தான் நீக்க வேண்டியிருக்கிறது. அது போலத்தான் குற்றமுடையாரைத் திருத்துவதற்கும் கூடச் செய்ய வேண்டும். முதலில் குற்றமுடையாரை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முழு அன்புடன் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்த நேசம் குற்றத்தின் இயல்புவழிச் செல்லாத மேலாண்மையுடையதாக இருக்க வேண்டும். குற்றமுடையாரை முதலில் அங்கீகரிக்க வேண்டும். மதிப்புயர் மனிதர்களாக நடத்த வேண்டும். அதன் பின்தான் நம்முடைய திருத்தப் பணிகள் கனியெனக் கனியும். ஆதலால், இன்சொல் எந்தச் சூழ்நிலையிலும் இன்பத்தைத் தரும்; வெற்றியைத் தரும்; புகழ்மையைத் தரும். எந்தச் சூழ்நிலையிலும் இன்சொல் பிழைபோகாது.

இங்ஙணமின்றி இவன் தகுதியில்லாதவன்; கீழானவன், பாடிக்கறக்கிற மாட்டைப் பாடித்தான் கறக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வன்சொல்லால் திட்டுவது பயன்தராது. பயன்தராதது மட்டுமின்றி எதிர் விளைவுகளையும் உருவாக்கும். மானுட வாழ்வின் அமைதி கெடும்; அவலம் பெருகும்; ஏன் வன்சொல் பேசுகிறீர்கள்? மற்றவர் கூறும் இனிய சொல் தனக்கு இன்பம் தருவதை அனுபவித்து அறிகின்ற ஒருவன், மற்றவரிடம் வன்சொல் சொல்வது என்ன பயன் கருதி? என்பது திருவள்ளுவர் எழுப்பும் வினா! ஆதலால் வன்சொல் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்! சுடுசொல் கூடாது! கூடவே கூடாது! இனிய சொற்களையே வழங்குங்கள்! மற்றவர் மனம் மகிழத்தக்க சொற்களையே சொல்லுங்கள்! இன்பத்திற்காகப் பேகங்கள்! அதுவே வாழ்க்கையின் வெற்றிக்குவழி!

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது”

என்பது திருக்குறள்.
13.9.86
வாழ்வாங்கு வாழ்க!
(3)

மானுட வாழ்க்கை இயற்கையாய் அமைந்தது; இன்பமாய் அமைந்தது. இயற்கை வாழ்க்கையில் இன்பமே! எந்நாளும் துன்பமில்லை! இனிய சொற்களை வழங்கும் இயல்பு இயற்கையிலேயே மனிதனுக்கு உண்டு. இன்சொல் வழங்குதலே இயற்கை; இயல்பாய வாழ்க்கை. ஆதலால், நமக்கே உரிமையுடையனவாய இன்சொற்களை வழங்கிப் பழக வேண்டும். இன்சொல் இயம்பும் இயல்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இனிதாக இல்லாத சொற்கள் - அதாவது கடுஞ்சொற்கள் செயற்கைத் தன்மையன; அழுக்காற்றில் தோன்றுவன; வெகுளியில் பிறப்பன. உள்ளுறுப்புகளையும் செங்குருதியையும் சூடாக்கித் தோன்றுவன; அதிக மூச்சுக் காற்றைக் குடிப்பன; உடற்பாதிப்பைத் தருவன; கடுஞ் சொற்களைத் தொடர்ந்து கூறுபவர்கள் காலப் போக்கில் நிறம் மாறுவர்; குணம் மாறுவர்; உடல் நலப் பாதிப்புக்கு ஆளாவர்; நோய்க்கு விருந்தாவர்; சமுதாயத்தில் தனிமைப் படுத்தப்படுவர். கடைசியில் அவர்களுக்குத் திறக்கப்படும் ஒரே வாயில் நரகத்தின் வாயிலேயாம்.

சிலர், தங்களிடத்தில் உள்ளனவற்றை நுகரார்; பயன் படுத்தமாட்டார்; ஆனால் மற்றவர்களிடத்தில் இருப்பதை விரும்புவர்; காமுற்று அலைவர். தம்மிடம் உள்ளதைவிட அது தரம் குறைந்ததாக இருந்தாலும் விரும்புவர். அதைப் பெறமுடியாது போனால் களவு செய்யவும் துணிவர். ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் நல்ல பழுத்த கனிகள் உள்ள மாமரங்கள் நிற்கின்றன. அந்த மாமரங்களிலிருந்து கனிகள் பழுத்து உதிர்ந்துள்ளன. இக்கனிகளை அவர் எடுத்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை; உரிமையாலும் தடையில்லை; சுவையாலும் தடையில்லை. ஆயினும் இந்தக் கனிகளின்மீது அவருக்கு நாட்டமில்லை. அடுத்த வீட்டுத் தோட்டத்து மாமரங்களிலுள்ள காய்களிலேயே அவருக்கு நாட்டம், வேலிக்கு அப்பாலுள்ளதிலேயே நாட்டம். அவை பிறருக்கு உரிமையுடைய காய்கள்! சுவையில்லாத காய்கள்! ஆயினும் அறியாமையின் வழித் தோன்றிய விருப்பத்தால் அக் காய்களைக் கவர்ந்துண்ண ஆசைப்படுகிறார். இப்படிக் கவரும் முயற்சி எத்தகைய இன்னல்களைத் தரும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. ஏன் இந்த அவலம்? இனிய சொற்களை வழங்குதல் நமது பிறப்பின் வழிப்பட்ட இயல்பு; கருவில் அமைந்த திரு. இனிய சொற்களையே வழங்குவோம்! காயினைப் போன்ற இன்னாச் சொற்களைக் கூறி மற்றவர்களைத் துன்பத்தில் ஈடுபடுத்த வேண்டாம்! அவ்வழி நாமும் துன்பத்திற்கு ஆளாக வேண்டாம்!

திருவள்ளுவர் நயம்பட,

"இனிய உளவாக இன்னாத கூறல் கன்னியிருப்பக் காய்கவர்ந் தற்று"

என்கிறார். கனி, இனிய சொல்லுக்கு உவமை. காய், கடுஞ் சொல்லுக்கு உவமை. இங்கு ‘இன்னாத’ என்றதால் சொல்லளவில் மட்டுமல்லாமல் பயனிலும் இன்னாதது என்பதை உணர்த்தினார். சொல்லிலும் பொருளிலும் ஒருசேர இன்பம் பயக்கத்தக்க சொற்களைத் தேர்ந்து சொல்வோர் சான்றோர். சொல் இனிமையாக இருந்து விளையும் பயன் இன்னாததாக இருந்தாலும் பயனில்லை. விளையும் பயன் இன்பமாக இருந்தாலும் பேசிய சொல் இன்னாததாக இருந்தால் அதனை முழுமையான பயனாகக் கருத முடியாது. ஆதலால், எல்லோருக்கும் இன்பம் வேண்டும் என்று விரும்புக, விழைவுறுக! மனம் குழைந்தால் இனிய சொற்கள் தோன்றும். எனவே மனத்தை நாள்தோறும் அன்பில் நனைத்து நனைத்துக் குழைத்துப் பக்குவப்படுத்திக் கொள்க! இனிய மனத்தில் - குழைந்த உள்ளத்தில் இனிய சொல் தோன்றும். எல்லாருக்கும் இன்பம் வேண்டும் என்ற இன்பக் குறிக்கோளை இனிய சொற்களால் எடுத்து விளம்புக! எங்கும் இன்பம்! யாண்டும் இன்பம் சூழ்க! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!
14-9-86