குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7/குளிர் சாரற் கொடுங்குன்றம்

விக்கிமூலம் இலிருந்து

14
குளிர் சாரற் கொடுங்குன்றம்

திருக்கொடுங்குன்றம் மிக உயர்ந்த மலை; வானைத்தொட்டுத் தழுவி உயர்ந்திருக்கும் மலை. மலை முகட்டில் மஞ்சு தவழ்கிறது. மழைபொழி மேகம் மலை முகட்டைத் தழுவித் தவழ்ந்து கிடப்பதாலும் மலை குளிர்ச்சி பொருந்தியிருக்கிறது. ஆங்கு வெப்பமில்லை; குளிர் சாரலாக விளங்குகிறது. கரும் புயலைப் பிறைச் சந்திரன் கிழித்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறது! ஆம்! முழுமதியன்று; ஆனாலும் முழுமதி ஆகக்கூடியது. குறை வடிவம் நீங்கி நிறை நல் வடிவம் பெற விரைந்து முன்னேறுகிறது கூனற்பிறை. இந்த இனிய காட்சியைத் திருஞானசம்பந்தர் பார்க்கிறார். வண்மைத் தமிழில் எழிலுற இனிய கவிதை பிறக்கிறது! இயற்கை எழிலில் தோய்ந்து கவிதை வருகிறது! நம்மையும் கவிதைவழி மலையழகில் ஈடுபடுத்துகிறார். இல்லை, திருஞானசம்பந்தர் ஞானத்தின் திருவுரு புறத்தியல் இயற்கையில் மட்டும் தோய்பவரல்லர். அந்த இயற்கையில் உயிராக விளங்கும் தத்துவத்திலும் திளைப்பவர். நம்மையும் திளைக்கச் செய்பவர்.

பிறைச் சந்திரன் கருமேகத்தைக் கிழித்துக்கொண்டு நிறை வடிவம்பெற முன்னேறுகிறது. உயிர்கள் குறையுடையன. ஆனாலும் நிறை நலம் பெறுதற்குரியன. உயிர்கள் நிறை நலம் பெறுதற்குத் தடை, உயிரைப் பிணைத்து நிற்கும் கருமேகமனைய ஆணவம். ஆணவக் கருமேகத்தைச் சீலத்தாலும் தவத்தாலும் நீக்கிக்கொண்டு கொடுங்குன்றில் அமர்ந்துள்ள நல்ல மங்கை பாகன் திருவடிகளைச் சாரும் உயிர்கள் குறைகளினின்று விடுதலை பெறும்; நிறைநலம் பெறும்; திருவருட்பொலிவு பெறும்; வெப்பத்தினின்று நீங்கித் தண்ணளியுடையான் தாள்களைச் சேர்ந்ததால் இன்பத்தில் திளைக்கும்.

ஆணவம், உயிர்களுக்கு உடன் பிறந்தே கொல்லும் நோய். ஆணவம், அறிவை மறைக்கும்; நெறிகளைத் தடுக்கும்; அரக்கத் தன்மையை நல்கும்; நீதியொடு தழுவிய வாழ்க்கையினின்று அகற்றும். அநீதிக்கு அழைத்துச் செல்லும்; அடக்கம் அதற்கு இல்லை. அம்மம்ம! ஆணவத் துடிப்புடையார்க்கு நல்லதுமில்லை, தீயதுமில்லை; உறவுமில்லை, நட்புமில்லை; தவமுமில்லை, சீலமும் இல்லை. ஆணவம் முற்றாக முடிவில் தம்மைச் சார்ந்தாரையே அழிக்கும். இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி பிரான்மலை நல்ல மங்கைபாகன் தாளினைச் சார்தலேயாம்.

பிரான்மலை என்ற திருக்கொடுங்குன்றத்தில் எழுந்தருளியுள்ள நல்ல மங்கை பாகன், இன்பத் திருவுருவன்; தாயிற் சிறந்த தயாவுடையவன். நல்லறிவு கொளுத்துபவன். நன்னெறியில் நிறுத்துபவன். இன்பங்கள் வழங்குபவன். ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தையும் அருளுபவன். நல்ல மங்கை பாகனின் திருவடிகள் ஆணவ வெப்பக்காற்றில் தவிக்கும் உயிர்களுக்குத் தண்ணிழல்; குளிர் நிழல். அத்திருவடிகளே நமது உயிர்க்கு உற்ற துணை! அத்திருவடிகளையடைந்து அயரா அன்பில் வாழ்த்தி வணங்குவோமாக.

வானிற்பொலி வெய்தும்மழை
மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர்
சாரற்கொடுங் குன்றம்
ஆணிற்பொலி யைந்தும்அமர்ந்
தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு
மேயான்றிரு நகரே,

என்றார் திருஞானசம்பந்தர்.