குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8/திருவாசக உவமைகள்

விக்கிமூலம் இலிருந்து

3
திருவாசக உவமைகள்

இரைதேர் கொக்கு

ஆற்றங்கரைகளிலும் - குளத்தங்கரைகளிலும் கொக்கு அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கும். பரபரப்பின்றி - தவம் செய்வது போல உட்கார்ந்து கொண்டிருக்கும். ஏன்? இரையை எதிர்பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. கொக்குக்கு இரை மீன்! அம்மீன்கள் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரையில்தான் அது உட்கார்ந்து கொண்டிருக்கின்றது. ஏன் ஓடுகிற மீன் குஞ்சுகளை-மீன்களைப் பிடிக்கக் கூடாதா? பிடிக்கலாம்; தடையில்லை. ஆனால், வயிற்றுக்குப் போதுமானதாக-திரும்பத் திரும்பப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாதபடி ஒரே முயற்சியில் பிடித்து உண்ணும் அளவிற்குப் பெரிய மீன் வரும்வரைக் காத்திருக்கின்றது. இந்தக் காட்சியும் கொக்கின் வாழ்க்கை முறையும் கவராத கவிஞர்கள் கிடையா? மாணிக்கவாசகரும் இந்தக் காட்சியில் - வாழ்க்கையில் கவர்ச்சிக்கப்பட்டுள்ளார். தாமும் இரைதேர் கொக்குபோல வாழ்ந்ததாகக் கூறுகிறார்.

உயிருக்கு இரை இறைவனின் திருவருளேயாம். உடற்பசிக்கு எடுக்கும் இரை-மீண்டும் மீண்டும் பசியைத் தோற்றுவிக்கும். ஆதலால், உயிர் மீண்டும் பசிக்காத அனுபவிப்பதால் மேலும் மேலும் இன்பப் பெருக்கினைத் தருகின்ற இறைவனின் திருவருளையே உணவாக ஏற்று உண்டு தேக்கெறிந்து வாழ்தல் வேண்டும். இந்த வேட்கை மாணிக்கவாசகளின் பெருவிருப்பம். மாணிக்கவாசகப் பெருமான் உடல் தாங்கி உல்வினாலும், உடம்பு நீங்கி விடுதலை பெறுதலையே விரும்பினார். அவரது விருப்பம் கை கூடுவதற்குரிய காலத்தை அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இடைவெளியில் அமைச்சு அதிகாரம் பரிகள் வாங்குதல் ஆகிய பல்வேறு கவர்ச்சிகளுக்குரிய பேறுகள் கிடைத்தும் மாணிக்கவாசகர் அவற்றில் நின்று நிலைத்து அனுபவிக்கவில்லை. சமய வாழ்க்கையின் சிறந்த நோக்கம் இம்மையும் மறுமையும் ஒருங்கே நலம் பெறுதலேயாகும். மாணிக்கவாசகர் இம்மை நலன்களை தம்மைத் தேடி வந்தவற்றைத் துச்சமென உதறித் தள்ளினார். “பொன் வேண்டேன்; புகழ் வேண்டேன்; பொருள் வேண்டேன்” என்று பாடுகின்றார்.

கொக்கின் நிறம்போல மாணிக்கவாசகர் அகத்தாலும் புறத்தாலும் தூயவர்-கொக்கு உட்கார்ந்திருக்கும் ஆற்றில் புனலும், போகத்துக்குரிய மீன்களும் ஓடுதல்போல, மாணிக்கவாசகர் அமர்ந்திருந்த அரசவை வாழ்க்கையில் பொருள்களும் போகமும் புரண்டன. கொக்கு, ஓடிய எல்லா மீன்களையும் பிடிக்காதது போல அவர், தமக்குக் கைக்கு எட்டினவாக இருந்த எந்தப் பொருள்களையும் போகங்களையும் விரும்பினாரில்லை. கொக்கிற்குத் தனக்குத் தேவையானதும் போதுமானதுமான மீன் என்று தேர்ந்தெடுக்கும் அறிவு இருப்பதால் ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடிக் காத்திருக்கிறது. மாணிக்கவாசகரும் ஞானம் கைவரப் பெற்ற வரானமையால் நிலையில்லாதவற்றைத் தெளிவுற உணர்ந்து நிலையான திருவருட் பேற்றை விரும்பி நிற்கிறார். நாம் விரும்புவதொன்று விரும்பியவுடன் கிடைத்துவிடுவதில்லை. அதற்காகப் பலகாலும் காத்திருக்கவேண்டிவரும். அதுமட்டுமின்றி, கொக்கு ஆற்றங்கரையில் பெரிய மீனுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மீன் கிடைக்குமளவு இரவுபகல் என்று பாராமல் காத்திருக்கின்றது. காற்று, வெயில் மழை, இன்னபிற இயற்கைத் துன்பங்களை ஏற்றுப் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அதுமட்டுமா? அந்தக் கொக்கையே கொல்லும் பகை மனிதனும் நடமாடுகிறான். அவனுடைய குறியிலிருந்தும் அது தப்பி, இடம்மாறித் தற்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெற்று ஆரத் துய்க்க வேண்டும் என்று விரும்புகிற ஆன்மா இரவு பகல் என்று பாராமல், முயற்சிக்கவேண்டும். மாணிக்கவாசகர் கங்குல் பகற்பொழுது எல்லாம் கரைந்து அழுது திருவருளைப் பெற முயற்சித்தார். திருவருள் பெறும் முயற்சியில் உலகும், உலகியலும் தீராத் தொல்லைகள் தரும். அத்துன்பங்களையும் இன்பமாகக் கருதி ஏற்றுக்கொள்ளாவிடில் திருவருட்பேறு சித்திப்பதில்லை. மேலும், எப்படி கொக்கையே சுடும்மனிதன், நடமாடுகிறானோ அப்படியே நம்மையே தன்னுணர்வளித்து நெறியல்லா நெறிதன்னில் பயின்று மூர்க்கராகி முதலிழந்து அழியச் செய்யும் பொறிகளும் புலன்களும் பகை காட்டுகின்றன. மாணிக்கவாசகர் தாம் இப்படி அலைக்கப்பட்டதாகத் தம்மீது ஏற்றிக் கூறுகின்றார். ஒன்றைப் பெறாமையினால், துன்பம் உண்டாக வேண்டும். அத் துன்பத்தினால் நாம் வாடுதலும் வேண்டும். அப்பொழுது தான் பெறாமைக்குரிய காரணங்களை நீக்கி, பெறுதற்குரிய முயற்சிகளைக் கவலையுடனும் அக்கரையுடனும் மேற்கொள்ள முடியும். ஆதலால், இறைவனுடைய திருவருளைப் பெறாது அல்லற்படுபவர்கள் அதற்காகத் துக்கப்பட வேண்டும்; வாடுதல் வேண்டும். மாணிக்கவாசகர் இப்படித் துக்கித்தார் - வாடினார் என்பதை அவருடைய நூலாகிய திருவாசகமே நமக்குணர்த்தும். இரைதேர் கொக்கொத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் என்பது மாணிக்கவாசகரின் மணிமொழி. முழுப்பாடலையும் அனுபவிப்போம்:

அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலில் நெய்போலப்
பேசா திருந்தால் ஏசாரோ?

பொற்கிண்ணம்

சிவானந்த அனுபவத்தில் திளைத்த மாணிக்கவாசகருக்கு உலகியல் சான்றுகள் எளிதில் கிடைக்கின்றன; அவர் மிகச் சிறந்த உண்மைகளை விளக்க எடுத்தாளும் உவமைகள் எளியனவாக இருக்கின்றன. நடைமுறையை ஒட்டியன வாகவும் இருக்கின்றன என்பது உணர்ந்தின்புறத்தக்கது.

உலகியலில் அறியா மக்கள் தாம் முயன்று பெற்றவற்றையேகூட அருமை கருதித் தொடர்ந்து போற்றிக் காப்பாற்றுவதில்லை. மிக மோசமான இயல்புடைய மக்கள் தங்களுக்கு எளிதில் கிடைக்கும் எதையும் அதனுடைய தகுதியறிந்து போற்றுவதில்லை. பன்றியின் முன்னே முத்தை வாரியிறைத்தது போலவும், கழுதையின் மீது குங்குமப் பூவைச் சுமத்தியது போலவும் ஆகிவிடும், அறியா மாக்களுக்குச் சான்றோர் செய்யும் உதவிகள். பலகால் கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பு பொதுவாக மக்களிடத்து இருப்பதில்லை. அருமையை உணர்ந்து பாராட்டுவதற்குப் பதிலாக அந்த உதவியைச் செய்யும் இயல்புக்கும் ஏதாவதொரு உள்நோக்கம் கற்பித்துக் களங்கப் படுத்தவும் செய்கின்றனர் இவ்வாறு, கேட்டுப் பெறுவதைவிடக் கேளாமல் கிடைப்பதைப் போற்றும் இயல்பினை, மாணிக்கவாசகர் தம்முடைய அனுபவத்தின் மீதேற்றி விளக்குகிறார்.

ஒரு செல்வந்தரின் வீடு-தங்கம் தாராளாகப் புழங்கும் வீடு-ஒரு நாள், வீட்டுத்தலைவி சாமான்களை எண்ணிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது அவள் அருகில் இருந்த அவளுடைய அருமைக் குழந்தை அங்கிருந்த பொருள்களில் ஒன்றாகிய தங்கக் கிண்ணத்தை விரும்பிக் கேட்டது. தாயும் கொடுத்தாள். குழந்தை தங்கத்தின் மதிப்பறிந்து கேட்கவில்லை. ஏதோ ஒரு பொருள். மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்; அது தனக்கும் வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறது; குழந்தை அந்தத் தங்கக் கிண்ணத்தை வாங்கியதும் விளையாட்டுப் போக்கில் வீதிப்பக்கம் வருகிறது. அப்போது அது, தனக்கு மிக உவப்பான - பிடித்தமான கற்கண்டு கட்டிகளையோ, வைத்து விளையாடுதற்குரிய விளையாட்டுப் பொருள்களையோ யாராவது தந்து தங்கக்கிண்ணத்தைக் கேட்டால் கொடுத்துவிடும். அதற்குத் தங்கக் கிண்ணத்தின் மதிப்புத் தெரியாது. பொம்மைகளைப் போட்டு உடைத்து விளையாடுவது போலத் தங்கக் கிண்ணத்தைப் போட்டு விளையாடவும் செய்யலாம். காரணம், அது அறியாக் குழந்தை.

அது போல,

இறைவன் உயிர்களுக்குக் கருணையினால் மாறிலாக் கருணையை வழங்குகின்றான். எனினும் பல உயிர்கள் அதைப் போற்றிப் பாதுகாத்துக் கொள்வதில்லை. இறைவன் கருணை நிறைந்தவன் என்பதையுணர்த்தும் வண்ணம். அவன் அம்மையப்பனாகவே விளங்குகின்றான். அவன் உயிர்கள் இருக்கும் இடம்தேடி, இல்லங்கள்தோறும் எழுந்தருளித் திருவடித் தாமரைகளைக்காட்டி ஆட்கொள்ளுகின்றான். மாணிக்கவாசகப் பெருமானையும், பெருந்துறையில் பிச்சதியற்றி ஆட்கொண்டதாகவும், தான் அதன் அருமையை உணராததாகவும் மேற்கண்ட உவமையின் வாயிலாக விளக்குகின்றார். இக்கருத்தமைந்த அழகிய பாடல் இதோ:

மையி லங்குநற் கண்ணி பங்கனே
வந்தெ னைப்பணி கொண்ட பின்மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை என்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்குவெண் ணீற்று மேனியாய்
மெய்மை யன்பருள் மெய்ம்மை மேவினார்
பொய்யி லங்கெனைப் புகுத விட்டு நீ
போவ தோசொலாய் பொருத்த மாவதே!”

தங்கத்தின் மதிப்பறியாக் குழந்தைபோல தன்னைக் கற்பனை செய்து கொள்ளுகின்றார் மாணிக்கவாசகர். தங்கக் கிண்ணம் போன்றது இறைவன் வழங்கிய தண்ணருள்.

அடுத்து, குழந்தை தங்கக் கிண்ணத்தின் மதிப்பறியாது கெடுத்தாலும் குழந்தையின்மீது யாரும் குற்றம் சொல்ல மாட்டார்கள். ஆதலால், குழந்தையின் கையில் கொடுக்கப் பெற்ற தங்கக் கிண்ணத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அத்தாய்க்கு இருக்கிறது. அதையுணர்ந்த தாய் குழந்தையைத் தொடர்ந்து சென்று அந்தப் பொற் கிண்ணத்தைக் காப்பாற்றுவது போல தன்னையும் காப்பாற்ற வேண்டும் என்று மாணிக்கவாசகர் விண்ணப்பிக்கின்றார். காரணம், இறைவன் வெண்ணீற்று மேனியன் அவ்வாறு வெண்ணீற்று மேனியனாக இருக்கின்றான் என்று குறிப்பதன் பொருள் ஆன்மாக்கள் வினை நீக்கம் பெறவேண்டும் என்பதற்காகவே அவன் வெண்ணீறணிகின்றான் என்றுணர்த்தலேயாகும். ஆதலால் குழந்தையின் அறியாமைக்குத் தாய் பொறுப்பேற்று ஈடுசெய்தல் போல தன்னுடைய அறியாமைக்கும் இறைவனே பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். அறியாக் குழந்தையின் தவறைத் தாய் திருத்திப் பாதுகாப்பது போல பொய்யிலங்குகின்ற தன்னை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார். ஒரு தாய் குழந்தைக்கு உவப்பான பொருள்களைக் குழந்தைகளிடத்துக் கொடுத்தும், அனுபவிக்கச் செய்தும், அழிவு வராமல், அனுபவம் இடையறாமல் பாதுகாத்து அனுபவிக்கச் செய்வது போல தனக்கு இறைவன் வழங்கிய திருவருளின்பத்தை இடையறாமல் அனுபவிக்கும்படி செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கின்றார். எவ்வளவு அழகான உவமை!

ஐயோ பாவம்!

ஒரு சிலருக்குப் பிறப்பின் சார்பினாலே பெருந்தன்மை பெருங்குணம் முதலியன இயல்பிலேயே அமைந்து கிடக்கின்றன. ஒரு சிலர் மேற்கூறிய நல்லியல்புகளைப் போராடிப் பெறுவார்கள். இன்னும் ஒரு சிலர் அற்பத்தனத்திலேயே பிறந்து அற்பத்தனத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து, அற்பத்தனத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளுவார்கள். அவர்கள் சிறியவர்கள்-அற்பர்கள். அவர்களுக்கு-இக்கடை இனத்தார்க்கு நலன் தெரியாது; அவர்கள் நலன் நினைக்க மாட்டார்கள்; நலன் செய்யமாட்டார்கள். ‘சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிக் காட்சி தருவார்கள். செயலற்று அற்பமாக ஏமாற்றியும் புறம் சொல்லியும் வாழ்வார்கள். ஆக்கத்தில் வாழத் தெரியாமல் அழிவில் ஆதாயம் எடுப்பார்கள். எரிகின்ற பிணத்தை நரி பிடுங்குவது போல, இத்தகையோர் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த வரிசையைச் சார்ந்த மக்களை மாணிக்கவாசகர் ஒரு சிறந்த உவமையால் விளக்குகின்றார்.

கடலில் தண்ணீர் நிறையக் கிடக்கின்றது - நாய் நிற்பதோ கடற்கரை. நாய்க்கு மிகுதியான நீர்வேட்கை, நாவறண்டு தொங்க அது நீரைத் தேடிக் கடற்கரைக்கு வந்தது. நிறையக் குடிக்க வேண்டும் என்ற ஆசை- தேவையும் கூட. கடலிலும் தண்ணீர் நிறைந்து கிடக்கின்றது எனினும் அது நக்கியே குடிக்கின்றது. அது போலவே சிலர் நல்ல இடத்தில் இருப்பார்கள்-அவர்களுக்குத் தேவையும் ஆசையும்கூட நிறைய இருக்கும். எனினும், அற்பத்தனமாகவே பிழைப்பு நடத்துவார்கள்.

இறைவனுடைய திருவருளால் இந்த உலகம் இயங்குகின்றது. அவனுடைய திருவருள் வைப்பின் காரணமாக எத்தனையோ கோடி இன்பங்கள் இந்த உலக அரங்கில் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும், மனிதர்கள் உழைத்து இன்பத்தைப் பெற முயற்சிப்பதில்லை. அற்பமாகவே நடந்து கொள்ளுகிறார்கள். இறைவனையும் எண்ணிப் பார்ப்பதில்லை. நாய் கடல் நீரை நக்கிக் குடிப்பது போலவே, மனிதர்களில், பலரும் திருவருளின்பம் மலிந்து கிடக்கும் இந்த உலகியலில் நக்கி வாழும் சிறுமையைச் செய்கிறார்கள் என்று கூறுகின்றார் மாணிக்கவாசகர்.

கடலில் நாய் நக்கிக் குடித்தல் இயற்கை. அது மாற்ற முடியாத ஒன்று. ஆனால், மனிதனின் இயற்கை பெருந்தன்மைக்குரியது. மனிதனின் வாழ்க்கையில் சிறுமை இருப்பது இயற்கைக்கு முரண்பட்டது. செயற்கையும் கூட என்ற குறிப்பையும் அவர் உணர்த்துகின்றார்.

நாய்க்கோ நீர் வேட்கை-வேட்கையைத் தணித்துக் கொள்ள அது கடற்கரையினருகிலுள்ள சிறிய தெண்ணீரூற்றுக்களுக்குப் போகாமல் ஆசை மிகுதியால் நிறை நீர்ப்பரப்புள்ள கடலையே நோக்கி வந்திருக்கிறது. கடல் நீரோ உப்பு நீர். நக்கித்தான் பார்க்க முடிந்ததே தவிர குடிக்க முடியவில்லை. வேட்கையைத் தணித்துக் கொள்ள முடியவில்லை. அதுபோல மனிதர்கள் பேராசையின் காரணமாக-அற்பத்தனங்களின் சின்னமாக தீமைக் கடல்களையே நாடுகின்றார்கள். எனினும் அவர்களால் முடிவதில்லை என்ற கருத்தையும் மாணிக்கவாசகர் உணர்த்துகின்றார்.

“ஒன்று பரம்பொருள்-நாமதன் மக்கள்-உலகின்பக் கேணி” என்ற பெருவட்ட நோக்கோடு ஒருவரோடொருவர் ஒத்தும், ஒத்துழைத்தும் வாழ்ந்தால் நினைத்தவை கைகூடும்-இன்பமாக வாழலாம்-இறையருளைப் பெறலாம் என்பது மாணிக்கவாசகரின் கருத்து. இதோ பாடலைப் பாருங்கள்:

கடலினுள் நாய்நக்கி யாங்குன்
கருணைக் கடலினுள்ளம்
விடலரி யேனை விடுதிகண்
டாய்விட வில்லடியார்
உடலில் மேமன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
மடலின்மட் டேமணி யேயமு
தேயென் மதுவெள்ளமே!

ஆன்மாவும் கொடியும்

உலகியலில் எந்த ஒன்றும் தனித்து இருப்பதில்லை. தனித்திருப்பது வளர்ச்சிக்கு இடையூறு-முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. இதே தத்துவம் சமய இயலுக்கும் பொருந்தும். உயிர் தனித்திருப்பதில்லை. உயிருக்குச் சார்பின்றித் தனித்திருக்கும் இயல்பும் ஆற்றலும் இல்லை. ஒன்று, உலகப் பொருள்களைச் சார்ந்து அவற்றை அனுபவிக்க வேண்டும்; அல்லது, இறைவனுடைய திருவருளைச் சார்ந்து திருவருளின்பத்தை அனுபவிக்க வேண்டும். இஃது உயிரின் இயற்கை உயிர் திருவருளைச் சார்ந்திருப்பது திருத்தத்திற்கும் உய்திக்கும் வழி வகுக்கிறது. அப்படியின்றி உலகியலை மட்டும் சார்ந்திருப்பது துன்பத்திற்குக் காரணமாக அமைகின்றது. உலகியல் வசப்பட்ட உயிர் எரியுள் அகப்பட்ட கட்டை போல அழிக்கப்படுகிறது. திருவருட் சார்பினைத் தழுவிய உயிர், விளையும் நிலத்திலே இட்ட வித்துப்போல விளைகின்றது-பயன் தருகின்றது. முன்னைய வாழ்க்கையை நினைந்து நொந்து மாணிக்கவாசகர் பாடும் இடங்கள் பற்பல!

“தனியனேன் பெரும்பிறவிப்
பெளவத் தெவ்வத்
தடந்திரையால் எற்றுண்டு
பற்றொன் றின்றிக்
கனியைநேர் துவர்வாயார்
என்னுங் காலால்
கலக்குண்டு காமவான்
சுறவின் வாய்ப்பட்டு
இனியென்னே உய்யுமாறு
என்றென் றெண்ணி
அஞ்செழுத்தின் புணைபிடித்துக்
கிடக்கின் றேனை
முனைவனே முதலந்தம்
இல்லா மல்லற்
கரை காட்டி யாட்கொண்டாய்
மூர்க்க னேற்கே!”

என்ற பாடல் இதற்கு எடுத்துக் காட்டு. ‘தனியனேன்’ என்று குறிப்பிடுவது திருவருட் சார்பின்றி உயிர் தனித்திருக்கும் நிலையினையேயாம். உயிர் எந்த ஒன்றையாவது சார்ந்து தானே இருக்கும். அப்படியிருக்கத் தனியனேன் என்று கூறுவானேன்? உயிர் திருவருட் சார்பின்றி உலகியல் சார்பில் வாழ்வது உண்மைதான். ஆயினும், பயன்தராத சார்பைச் சார்பென்று கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அந்தத் துணை இருந்தும் இல்லாதது போலவே! ஆதலால், ‘தனியனேன்’ என்று குறிப்பிடுகின்றார். அதுவும் மயக்க உணர்வில் துணை என எடுத்துக் கொண்ட ஒன்று தன்னையே திரும்ப அழிக்க முற்படும்பொழுது அந்த உயிருக்குத் துணை நிற்பார் யாருமில்லை. அந்தக் கால கட்டத்தில் உயிர் தனித்தே நிற்க வேண்டியிருக்கிறது. இந்த அழகான தத்துவத்தை ஒரு சீரிய உவமையின் மூலம் மாணிக்கவாசகர் எடுத்துக்காட்டி விளக்குகின்றார்.

கொடிகள் படர கொம்புகள் தேவை! கொம்பில் ஏறிப் படரும் கொடியே வளமாக இருக்கும். பூக்கும், மணக்கும் அங்ஙனம் படர்தற்குக் கொம்பு கிடைக்காத கொடி தரையில் படரும். கொம்பில் படர்வதைப் போல தரையில் பண்ணப் பிணைந்து அடர்ந்து படராது. நரைத்து நலிந்து காட்சியளிக்கும். பூக்கவும் செய்யாது. மணக்கவும் செய்யாது. ஆதலால், கொடி வளர, மலர, மணம்வீச, காய்கனிகளாகிய பயனைத் தர கொம்பு தேவை. அங்ஙனம் கொம்பின்றி வாடிய முல்லைக் கொடியின் இயல்பறிந்துதானே பாரி முல்லைக்கொடி படரத் தேரை நிறுத்தினான்? பற்றிப் படரக்கொம்பு கிடைக்காத கொடி படராமல் கிடந்து அழியும். உயிர்க்கொடி - உயிருக்குப் பற்றுக்கோடாக இருக்கிற இறைவனுடைய திருவருள் கொம்பு இறைவனின் திருவருளைச் சார்பாகக் கொண்டு தழுவி வாழும் உயிர் சிவஞானம் மணக்கும். திருவருட்சார்பு கிடைக்காமல் ஏமாற்றமடையும் உயிர் அலமந்து அழியும். இதனை, ‘கொம்பரிலாக் கொடிபோல அலமந்து’ என்று குறிப்பிடுகின்றார். இதனை,

கொம்பரில் லாக்கொடி போல்அல
மந்தனன் கோமளமே
வெம்புகின் றேனை விடுதிகண்
டாய்விண்ணர் நண்ணுகில்லா
உம்பருள் ளாய்மன்னும் உத்தர
கோசமங் கைக்கரசே
அம்பர மேநில னேயனல்
காலொடப் பானவனே.

இப்பாடலின் மூலம் நாம் உணர்வது கொடிக்குக் கொம்பு இன்றியமையாததுபோல, உயிருக்குத் திருவருட் சார்பு பற்றுக்கோடு. கொடி என்றமையால், கொம்பில் ஏறிப் படர்வதற்கு உரியதகுதிப்பாட்டை அடைந்த ஒன்றினைத்தான் கொடி என்று அழைப்பது மரபு. படரும் தகுதி பெறாமல் குழியளவிலேயே இருப்பதையோ அல்லது முளைக்காமல் மக்கி மண்ணில் மறைந்து கிடக்கும் ஒன்றினையோ கொடி என்று குறிப்பிடுவதில்லை. இங்கு கொடிபோல அலமந்தனன் என்று உயிரைக் கொடி போல என்று குறிப்பிடுவதால் உயிர் மலைநீக்கம் பெற்று திருவருட் சக்தியின் பதிவு பெற்று (சத்தினி பாதம்) இறைவனுடைய திருவருளைச் சார்ந்து நின்று ஒழுகுதற்குரிய தகுதிப்பாட்டை அடைந்திருக்கிறது என்பது பெறப்படுகிறது. கொம்பரில்லாக் கொடி என்ற உவமை அழகிய உவமை! சிறந்த தத்துவ விளக்கத்தைத் தரும் உவமை! நாமும், கொழு கொம்பில்லாக் கொடியாக அலமந்தழியாமல் இறைவனுடைய திருவருட் சார்பெனும் கொம்பினைப் பற்றிப் படர்ந்து உய்தி பெற வேண்டும். கொம்பில் படரும் கொடிகள் தமது மெல்லிய உறுப்புக்களால் கொம்பை இறுகச் சுற்றிக் கொண்டு கொம்போடு இணைந்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல, நாமும், நம்முடைய உயிரை- ஆன்மாவை “கன்றாப் பூர் நடு தரி” என்று அப்பரடிகளால் குறிக்கப்பெறும் கொம்பினைத் தழுவிச் சிக்கெனப் பிடித்துக் கொள்ளவேண்டும். கொம்பினைத் தழுவிய கொடிபோல, இம்மை மறுமை இன்பங்களைப் பெற்றுத் தழைத்து விளங்க முயற்சிப்போமாக!

நாங்கூழ்

சிவஞானத்திற் சிறந்த-அறிவாற் சிவனே ஆய மாணிக்கவாசகப் பெருமான் மிக்குயர்ந்த தத்துவங்களை மிக எளிய உவமைகளால் விளக்குகின்றார். உயர்ந்த அறிவு கடுமையாக இருக்கும். ஆனால், உயர்ந்த அறிவோடு அனுபவமும் இருக்குமானால் நிச்சயமாக அந்த அறிவு எளிய வடிவம் பெறும். மாணிக்கவாசகர் சிறந்த அனுபவம் உடையவர்.

நாங்கூழ், உழுத நிலங்களிடையே ஊர்ந்து திரியும் புழு-எலும்பில்லாதது மெல்லிய தசைகளிலேயே ஆயது. ஆயினும், உழவியல் தொழில் வேளாண்மை செய்யும் குடிமக்களுக்குப் பெருந்துணை செய்வது; மண்ணைக் கிண்டி வளமுறச் செய்வது; அதன் எச்சில் பட்ட மண் நல் உரமுடையது-பல் வளங்கொழிப்பது என்று உழவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். ‘உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து’ என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை பேசுகின்றார்.

நாங்கூழ் புழுவோடு உயிரை உவமிக்கின்றார். நாங்கூழ் பூச்சியைப்போல அன்பினால் தகுதிப்பாடடையாத உயிர்கள் எலும்பில்லாப் புழுக்களைப் போன்றனவேயாம் மனித உயிர்கள், பயனுடையன; மனித உயிர்களின் அறிவும் ஆற்றலும் உலகத்திற்கும் பயனுடையன-இறைமைத் தன்மைக்கும் பயனுடையன. கழனிகளுக்குப் பயன்தரக்கூடிய நாங்கூழ் எறும்புகளிடையே அகப்பட்டுக்கொண்டது; எறும்புகள் நாங்கூழ் புழுவை அரித்துத் தின்னுகின்றன. இக்கருத்தினை உயிரியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றது. அன்பு என்ற எலும்புரம் பெறாத உயிர் தன்னல வேட்கையின் நிலைக்களனாக இருக்கும். எலும்பில்லாத உடம்பையுடைய நாங்கூழ் புழுவை எறும்புகள் சுலபமாக அரித்துத் தின்பது போல, அன்பில்லாத உயிர்களைப் புலன்கள் அரித்துத் தொல்லைப்படுத்தும். நாங்கூழ் புழுவை எறும்பு அரித்தல் மூலம் அதன் வடிவைச் சிதைக்கிறது-பயன்படு தன்மையை அழிக்கிறது. அதுபோல, புலன்களால் அரிக்கப்பெறும் உயிர்கள் உயிர்களின் இயற்கைத் தன்மைத்தாய வளர்தல், பயன்பெறுதல், நிறைவு பெறுதல் ஆகிய தன்மைகளினின்றும் அழிகின்றன.

எறும்பிடை நாங்கூழ் பட்டு அரிக்கப்படுதலினும் உயிர் புலன்களால் அரிக்கப்பெறுதல் வேதனைக்குரியது என்று மாணிக்கவாசகர் கண்டார். ‘எறும்பு இடை நாங்கூழ்’ என்று குறிப்பிட்டதால், நாங்கூழ் எறும்புகளால் சூழப்பெற்று விட்டன-நாங்கூழால் தப்ப முடியவில்லை என்று பொருள் பெறப்படுகிறது உயிர்கள் புலன்களால் சூழப்படுவதில்லை. சூழ முடியாது; புலன்களினும் ஆற்றல்மிக்க-புழுவுக்கில்லாத அறிவு மனித உயிர்களுக்கு இருக்கிறது. இருந்தும், பயன்படுத்தாமையால் எலும்பற்ற புழு எறும்புகளிடையே சிக்கியது போல, உயிர் புலன்களிடையே சிக்கிக் கொள்ளுகிறது என்ற குறிப்பை உணர்த்துகின்றார்.

நிலத்தை உழுது பயன்காணும் உழவன் நாங்கூழ் புழு தன் நிலத்தில் நெளிவதை விரும்புவான். அதற்குப் பகையாகிய எறும்பை விலக்குவான். அதுபோல, மனித உயிர்களைப் பாதுகாத்துப் பயன்பெறுதல், ஞான உழவு செய்கின்ற ஞான ஏருழவனாக இருக்கின்ற இறைவன் உயிர்களைப் பாதுகாத்துப் பயன்கொள்ளக் கடமைப்பட்டவன். மனித உயிர்களுக்குப் பகையாகிய புலன் அரிப்பைத் தடுத்துப் பாதுகாக்க வேண்டியவன் அவன். புலன் வாழ்க்கை வேறு; புலன் அரிப்பு வேறு. சமய வாழ்க்கை புலன் வாழ்க்கையை மறுக்கவில்லை; புலன் அரிப்பையே மறுக்கிறது. அதனாலேயே ‘அரித்தல்’ என்ற சொல் வழக்கைக் கையாளுகிறார் மாணிக்கவாசகர்.

நாங்கூழ் புழு எறும்புகளிடையே அகப்பட்டால் அரித்துத் தின்னப்பெறும்; பயன்படும் புழுவாயினும் அழிக்கப்பெறும். மனித உயிர் அன்பு, அறிவு என்ற எலும்புகளைப் பெறாவிடின் புலன்களால் அரிக்கப்பெறும். எறும்புகளின் அரிப்பிலிருந்து நாங்கூழ் புழுவை விவசாயிகள் காப்பாற்றிப் பயன் அடைவது போல, இறைவன் உயிர்களைப் புலன்களின் அரிப்பிலிருந்து பாதுகாத்து பயன் கொள்ளுதல் வேண்டுமென்ற கருத்தை மாணிக்கவாசகர் வலியுறுத்துகிறார். அந்த அழகிய பாடல் இதோ:

“எறும்பிடை நாங்கூ ழெனப்புல
னாலரிப் புண்டலந்த
வெறுந்தமி யேனை விடுதிகண்
டாய்வெய்ய கூற்றொடுங்க
உறுங்கடிப் போதவை யேயுணர்
வுற்றவர் உம்பரும்பர்;
பெறும்பத மேயடி யார்பெய
ராத பெருமையனே!”


மரப்பொந்தும் மனப்பொந்தும்

சாலை ஓரத்தில் வழிச் செல்வோர் நலனுக்காக நிழல் தரும் மரங்கள் வைத்து வளர்க்கப் பெற்றுள்ளன. அம்மரங்களிற் சிலவற்றில் கவனக் குறைவின் காரணமாகவும், வலிமையான உள்ளீடின்மையின் காரணமாகவும் பொந்துகள் விழுவதுண்டு. வழிப்போக்கர்களில் பொறுப்புணராத மனிதர்கள், தாம் புகைத்ததுபோக எஞ்சிய துண்டுப் பீடியை அந்தப் பொந்தில் போட்டுச் சுற்றிலும் கிடக்கும் சருகுகளையும் அள்ளிப் போடுவார்கள். மற்றவர்கள் கட்புலனுக்கு வராத இடத்தில் துண்டு பீடியில் இருந்த தீ, உள்ளூரப் புகைந்து எரிந்து அம்மரம் அழியக் கூடிய-அல்லது முறிந்து விழக்கூடிய நிலையில்தான் தீ வெளிப்படும். அந்த நிலையில் அந்த மரத்தை என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாது. இது அன்றாடம் சாதாரணமாக நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்த எளிய காட்சி அரிய பொருளை விளக்கும் உவமையாகத் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளது.

உயிர், இறவாத இன்ப அன்பில் திளைத்து இன்புற வேண்டும்-நலமுற வேண்டும் என்ற திருவருள் நோக்கத்தினாலேயே உயிருக்குப் பொறி புலன்களோடு கூடிய வாழ்க்கை கிடைத்தது. ஆனாலும், கவனக் குறைவின் காரணமாகவும் கருத்து இன்மையாலும் உயிர் இன்புறுதலுக்குப் பதிலாக ஆராத் துயரில் ஆழ்கிறது. இதற்குக் காரணம் பொறிபுலன்களோடு கூடிய வாழ்வியல் நடத்தும் உயிரிடத்தில் ஆசையென்ற பொந்து விழுந்து விடுகிறது “ஆசை மோசம்” என்பது அனுபவ மொழி.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்”

என்கிறது திருமந்திரம். தமிழ்மறை தந்த திருவள்ளுவரும் “மேன்மேலும் துன்பச் சார்புடைய பிறப்பை விளைக்கும் வித்து ஆசையே” என்கின்றார். மாணிக்கவாசகரும் “அவா வெள்ளக் கள்வனேனை” என்று குறிப்பிடுகின்றார். ஆதலால், உயிரியல் நல்வாழ்க்கையைக் கெடுக்கும் பொந்து ஆசையேயாகும். இங்கு ஆசை என்று குறிப்பிடும்பொழுது, இறைவனாலேயே வழங்கியருளப் பெறுகின்ற பொன், பொருள், போகத்தை விரும்புவதா கூடாதா என்ற வினா எழும். தேவையை விரும்புதல் ஆசையென்று சொல்லப் பெறுவதில்லை. மாணிக்கவாசகரும், “வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” என்று குறிப்பிடுவது சிந்தித்து உணரத் தக்கது. தகுதியில்லாத ஒன்றினை விரும்புதல் ஆசை. அதுமட்டுமல்ல, சாதனத்தையே சாத்தியமாகக் கருதிக் காமுறுதலும் ஆசையே. உதாரணமாகப் பொருள்களைப் பெற்றுத் துய்த்து வாழப் பொன் தேவை. அந்த அளவிற்குப் பொன்னை விரும்புதல் பிழையன்று. அளவிற்கு மேலாகத் துய்க்கவும், அத்தோடு தானும் துய்க்காமல் பிறரையும் துய்க்கச் செய்யாமல் பொன் காக்கும் பூதமாக வாழ்தலும் ஆசையின் பாற்பட்ட வாழ்க்கை. கடுங்கோடை-மண் சுடுகிறது-அந்த நேரத்தில் காலில் அணிந்து கொள்ளும் செருப்பைப் பெற்ற ஒருவன், செருப்பைக் கையில் தூக்கிக்கொண்டு சுடுமணலில் நடந்து துயர்ப்படுவானானால் அது இரங்கத்தக்கதல்லவா? அவனுடைய உணர்வில் செருப்பின் பயனைவிட செருப்பு அதிகப்படியான இடத்தைப் பெற்றுவிடுகிறது. இத்தகு வாழ்க்கை ஆசைக்கோர் எடுத்துக்காட்டு.

இத்தகைய ஆசையென்ற பொந்தில் துய்த்தல் என்ற நெருப்பை யாராவது இட்டுவிட்டால் அந்தத் தீ உள்ளுக்குள்ளேயே புகைந்து எரிகிறது. புலன்கள், வேட்கை என்ற வெப்பத்தால் புகைந்து எரிந்து வெதும்புகின்றன. இந்த நிலையில் திருவருளே உயிரைக் காப்பாற்ற வேண்டும்; அதுவும் உடனடியாகக் காப்பாற்ற வேண்டும். வருந்தும் போது காப்பாற்றுதலே முடியும். அழிந்து போன பிறகு காப்பாற்றுதல் என்பது இயலாத ஒன்று. ஆதலால், ஆசை என்ற பொந்து ஏற்பட்டு அதில் துய்த்தல் என்ற தீ பற்றி எரிவதன் மூலம் தான் அழிந்துபடாமல் காப்பாற்று என்று விண்ணப்பிக்கின்றார் மாணிக்கவாசகர். இத்தகைய கருத்தை விளக்கும் பாடல் இதோ:

“பொதும்புறு தீப்போற்
புகைதெரி யாப்புலன் தீக்கதுவ
வெதும்புறு வேளை
விடுதிகண் டாய்விரை யார்நாறவத்
ததும்பிமந் தாரத்திற்
றாரம் பயிற்றுமத் தம்முரல்வண்
டதும்புங் கொழுந்தேன்
அவிற்சடை வானத் தடலரைசே”

– திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம்–36

ஊர் நாய்

மாணிக்கவாசகர் நாடுமுழுவதும் சுற்றிப் பார்த்து நாட்டு மக்களின் நாடி பிடித்து, நன்மை தீமைகளை இனம் காட்டுகிறார்-பிறர்மீது வைத்துக் காட்டவில்லை-தன்மீதே வைத்துக் காட்டுகிறார். இஃது ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரின் இயல்பு. அடியவர்கள் தம்மையுடைய தலைவனை-சிவபெருமானை நினைந்து உருகிக் காதல்மீக் கூர்ந்து அவனடியை நாடுகிறார்கள். ஆனாலும் அறிவிலாத மனிதனோ, தன்னையுடைய தலைவனை உணராமையின் காரணமாக அன்பு காட்டுவதில்லை. தலைவனை நாடிச் செல்வதில்லை. இறைக்கும் கிணறு ஊறுவதுபோல அன்பு காட்டுதலே அன்பைப் பெற்றுத் தரும்.

இங்ஙனம், தன்னுடைய தலைவனை ஏத்தி வாழ்த்தி வாழத்தெரியாத மனிதனை ஊர் நாய் என்று ஏன்? ஊர் நாயினும் மோசமானவன் என்றும் திருவாசகம் கூறுகிறது.

நாய்ப் பிறப்பு இழிவான பிறப்பு. எனினும் தனிப்பட்டவர்களுடைய வளர்ப்பால்-அரவணைப்பால் அது நலமாக வாழும். இன்பமாக இருக்கும். பாற்சோறும் பஞ்சணையும் பெறும். வளர்ப்பவரின் விருந்தினர்கள் தட்டிக் கொடுத்துத் தகுதியுண்டாக்குவார்கள். அவர் தம் வீட்டுக் குழந்தைகள் கொஞ்சிக் குலாவுவர். இத்தனை அரிய வாய்ப்புக்களையும் இழக்கும், வளர்ப்பார் ஒருவர் இன்றித் தானே வளர்ந்து வாழும் ஊர் நாய். ஊர் நாய் நற்சோறு உண்ண முடியாது. காரணம், போடுவார் இல்லை. அதனால் இழிந்த கழிவுப் பொருட்களை உண்டு வாழும் ஈனநிலை ஏற்படுகிறது. ஆன்மாவும் தக்க அறிவு தந்து நல்லாற்றுப்படுத்தும் தலைவன் இன்மையின் காரணத்தால் மும்மலத்திற் கிடந்து உழலும்; மும்மல வழிப்பட்ட உணர்வுகளைப் புசிக்கும்.

தக்க ஒருவரின் பாதுகாப்பின்மையால்தான் ஊர் நாயை எல்லோரும் அடிப்பர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க நாதியில்லை. சட்டப்படிகூட கேட்க முடியாது. அதுபோல உற்றுழி உதவி உறுதுணையாக நின்று வாழ்வளிக்கும் இறைவனுடைய பாதுகாப்பில் அமர்ந்தால் அவர்களை யாரும் தாக்க முடியாது; தாக்கினால் தலைவன்-இறைவன் பாதுகாப்பான். “நமன் தமரும் இவன் தமர்” என்று தீண்ட அஞ்சி ஓடுவர். மார்க்கண்டேயர் வரலாறு இதற்குத் தக்க சான்று.

ஊர் நாய் ஊர் சுற்றித் திரிதலின் காரணமாக நிலையான உணர்வும், நினைப்பும், வாழ்க்கையும் அதற்கு இருக்காது. அதுபோல, இறைவனின் திருவடிச் சிந்தனையில் நிலையான நினைப்பில்லாதவர்கள் உலகியலில் நினைப்பு மாறி, நிலை மாறி சுற்றித் திரிகுவர்.

ஊர் நாய்க்கு முறையாகச் சோறிடுவோர் இல்லாமையின் காரணத்தாலும், சில பொழுது உண்டும் பல பொழுது உண்ணாமலும் வாழ்வதாலும் இளைத்துக் கிடக்கும் குளிப்பாட்டிச் சீராட்டுவார் இல்லாத காரணத்தாலும் கண்ட கண்ட இடத்தில் படுத்துப் புரள்வதின் காரணத்தாலும் வங்கு பிடித்துக் கிடக்கும். அது போலவே, இறைவனின் திருவருள் நினைவு இல்லார் அந்நினைவு இன்மையின் காரணத்தால் உணர்வால் இளைத்து ஒழுக்கத்தால் இளைத்துக் கயமை நிலையடைவர்.

வங்கு பிடித்த ஊர் நாய் அரிப்பு மிகுதியால் தன்னைத் தானே கடித்துக்கொள்ளும். அதுபோல, திருவருட் சிந்தனையற்ற மனிதன் பேராசைகளால் அரிக்கப்பெற்று அவ்வழிப்பட்ட குற்றங்கள் பல செய்து அதற்குரிய துன்பங்களைத் தானே பெற்று அநுபவிப்பான்.

நாய் இழிவான பிறப்பு. எனினும் நன்றி காட்டும் பண்பு அதனிடத்தில் சிறப்பாக உண்டு. நன்றி காட்டும் இந்தச் சிறப்பியல்பும்கூட ஒரு தலைவனிடத்தில் வளர்ந்தாலன்றோ விளங்க முடியும்? ஊர் நாயாக இருப்பதால் நன்றி காட்ட வேண்டிய அவசியமில்லாமற் போகிறது. மனிதனும், அந்த ஊர் நாய்போல் வாழ முடிவதில்லை. எந்த மட்டத்திலும் எந்தக் கட்டத்திலும் அவன் பலரின் உதவிகளைப் பெற்றே வாழுகிறான்-வாழவேண்டியவன். அதனால் அவன் நன்றி காட்ட வேண்டியவனாக இருக்கிறான். ஆனால் அவன் நன்றி காட்டுவதில்லை. காரணம், அவன் ஊர் நாயினும் தரங் கெட்டவனாகத் தரணியில் உலவிக்கொண்டிருக்கிறான்.

ஊர் நாய் ஊரைச் சுற்றிக்கொண்டேயிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருக்கும் பயன் என்ன? நாலு எச்சில் இலையை நக்கிப் பார்க்கும்-தன் இனத்தைச் சார்ந்த வேறு நாய்களோடு தேவையின்றிக் குரைத்துக் கடித்தும் கடிப்பட்டுவரும். அது போலவே, சிவச்சிந்தனை இல்லாத மனிதர்கள் ஒன்றிய சிந்தனையில் திளைக்காமல்-உறுதியான தொண்டுகளில் ஈடுபடாமல் ஊரைச் சுற்றுவர்-உடம்பாலும் சுற்றுவர்-உள்ளத்தாலும் சுற்றுவர். பயன் என்ன? வம்பளத்தல்-தீமொழி பேசல்-கலகம் விளைவித்தல்-கேவலமான முறையில் வயிற்றைக் கழுவிக் கொள்ள நான்கு காசு கிடைக்காதா என்று ஏங்கி நிற்றல் ஆகியனவேயாகும்.

வளர்ப்பு நாய் அருமையாகக் குரைக்கும். காரணத்தோடு குரைக்கும்-கள்வரைக் காட்டிக் கொடுக்கும். ஆனால் ஊர் நாயோ எப்பொழுதும் குரைக்கும். அச்சத்தாற் குரைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திருவருட் சிந்தனையில்லாதவர்கள்-உறவில்லாதவர்கள் நிறையப் பேசுவர்-பயனற்ற சொற்களையே பேசுவர்-பகைகாட்டும் சொற்களையே பேசுவர்-அச்சத்தினால் பேசித் திரிகுவர்-ஆனால் ஒரு பயனும் காணார்.

நாய் இயல்பாக அறிவில்லாதது. அறிவிடைச் செயல்கள் செய்யும் ஆற்றல் இயல்பில் இல்லை. ஆனாலும் அது ஒரு வளர்ப்பு நாயாக இருந்தால்-வளர்ப்பவர்கள் முறையாக வளர்த்தால் சொன்னதைக் கேட்கும், செய்யும்! அறிவோடு தொடர்புடைய காரியங்களை கூடச் செய்யும் இயல்பாக இல்லாத ஒன்றை வளர்ப்பின் மூலம் பெற்று விடுகிறது. ஊர் நாய் இந்த வாய்ப்பை இழந்து வருகிறது. அதுபோலவே மனிதனும் தக்கவர்களைச் சார்ந்து வளர்வதன் மூலம் தன்னிடத்தில் இயல்பில் இல்லாத அறிவு, ஆற்றல் போன்ற பண்புகளைப் பெற்றுச் சிறக்க முடியும். தக்கோரைச் சார்ந்து வாழாதவன் அத்தகு அறிவு ஆற்றல் பண்புகளைப் பெறமாட்டான்.

வளர்ப்பு நாய்க்குத் தன்னுடைய வளர்ப்புத் தலைவனுக்கு நன்றி காட்டவேண்டும்-அவனையும் அவனுடைய உடைமையையும் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கடமையுணர்வு இருக்கும். ஊர் நாய்க்கோ ஒருவர் ஏது? அதுதான் வீதிமுழுதும் சுற்றுமே ஆதலால் கடமையுணர்வு அரும்பித் தோன்ற வழியில்லை. அதுபோல, கடவுள் நினைவும், உறுதியான மனித இயல்பும் உடையோர் ஒரு தலைவனை-நண்பனை நாடி வாழ்வர். அவனுக்குரிய கடமைகளைச் செய்வர். அங்ஙனம் அல்லாதவர்கள் ஒரு எச்சில் இலையை முடித்து, அடுத்த எச்சில் இலைக்கும் ஓடும் ஊர் நாய் போல் அடிக்கடி ஆளை மாற்றுவார்கள். ஆதலால் அவர்களுக்குக் கடமையுமில்லை; உரிமையுமில்லை. எனவே, திருவருட் சிந்தனையோடு நல்லியல்புகள் பெற்று வாழ்க்கை வாழ்தலே சிறப்புமிக்கது. இதனை மாணிக்கவாசகர் கூறுகிறார், பாருங்கள்:

உடையா னேநி ன்றனையுள்கி
உள்ள முருக்கும் பெருங்காதல்
உடையா ருடையாய் நின்பாதம்
சேரக் கண்டிங்(கு) ஊர்நாயின்
கடையா னேனெஞ் (சு) உருகாதேன்
கல்லா மனத்தேன் கசியா தேன்
முடையார் புழுக்கூ டிதுகாத்திங் (கு)
இருப்ப தாகவடித்தா யே!

ஊர் ஆவும் குருட்டாவும்

மாலைநேரம். மேயச் சென்றிருந்த பசுக்கள் வயிறார மேய்ந்துவிட்டு வீடுகளை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. தூரத்தில் தன்னுடைய கன்றுகளைப் பார்த்தவுடன் கனைக்கின்றன. இப்பசுக்களுடன் வந்த ஒரு குருட்டுப் பசுவும் கனைத்தது. மற்ற பசுக்கள் கன்றைப் பார்த்து உறவு மேலிட்ட உணர்ச்சியால் கத்தின. குருட்டுப் பசுவோ, கன்றைப் பார்க்காமல் உறவு உணர்வு இல்லாமல் மற்றவை கத்துவதனால் கத்தியது என்ற இந்த எடுத்துக்காட்டை மாணிக்கவாசகர் பொய்யடியார் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டுகிறார். இறைவன்மீது தணியாத காதல் கொண்டு ஒன்றாகி, உடனாகி இருந்து உள்உள்கி நினைந்து அனுபவிப்பவர்கள் மெய்யடியார்கள். அதன் காரணமாக, அவர்கள் இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெறுகிறார்கள். பொய்யடியார்களோ இறைவனை நினைந்து காதலாகிக் கசிந்து அழுவதில்லை; அழ நினைப்பதுமில்லை. ஆனாலும் மெய்யடியார்கள் பெற்றனுபவிக்கும் இன்பத்தைப் பெற விரும்புகின்றார்கள். விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முழுதும் முயற்சி செய்வதில்லை. அடியார்கள் இறைவனுடைய நாமத்தைச் சொல்லுவதைப் பார்த்து இவர்களும் சொல்லுகிறார்கள். ஆனாலும், மெய்யடியார்கள் நினைந்து நினைந்து நெக்கு நெக்குருகி உளங் கலந்து ஓதுதல் போல், இவர்கள் ஓதவில்லை. உதற்றால் ஓதுகிறார்கள். ஒலிக்குறிப்புத் தோன்றுகிறதே தவிர உள்ளுணர்வு தோன்றவில்லை. இறைவனுடைய திருவருளின்பம் உள்ளத்தால் அனுபவிக்கக் கூடிய ஒன்று. அஃது எப்படி வெறும் போலித்தனமான பொறிகளின் இயக்கத்திற்குக் கிடைக்கும்? பொறிகள், ஒன்றின் குறையினை இன்னொன்று நிரப்பமுடியும். ஆனால் உள்ளம் அப்படியல்ல-இதே கருத்தினை,

‘கோவுடனே கூடியதோர் குருட்டாவும் ஊர்புகுதும்’ என்று உமாபதி சிவமும் குறிப்பிடுகின்றார்.

மேலும், கண்ணுள்ள பசுக்கள் நன்றாக மேய்ந்து வந்திருப்பதால் அதனிடத்தே பால் வளம் இருக்கும். அது, கன்றை நோக்கிக் கனிந்தழைத்து ஊட்டமுடியும். குருட்டுப் பசுவோ, வழக்கத்தினால் மேய்ச்சல் தரைக்குப் போயிற்று. எனினும் கண் குருடானமையினால் நல்ல வண்ணம் மேய்ந்திருக்க முடியாது-பால்வளம் இருக்காது. அது எப்படி கன்றுக்கு அன்பு காட்டமுடியும்? அதுபோல மெய்யடியார்கள் ஞானப் பசியுடையராயிருத்தலால் ஞான நூல்களைக் கற்றும் கேட்டும் தனக்குவமை இல்லாத தலைவன்மீது முருகிய அன்பை வளர்க்கிறார்கள். இறைவனைக் கண்ணப்பர் முழுக்காட்டியதுபோல அன்பினால் முழுக்காட்டிப் பரவசப்படுத்த முடியும். பொய்யடியார்க்கு ஞானப்பசி இல்லை. இறைவன் மீது தணியாத காதலும் இல்லை, ஞான நூல்களைக் கற்கவும் கேட்கவும் வாய்ப்பில்லை. பழக்கத்தினாலேயே பெயர் சொல்லுவார்கள். எனினும் மெய்யுணர்வில்லை. அவர்கள் எங்ஙனம் இறைவனை மகிழ்வித்துத் திருவருளைப் பெற முடியும்?

ஆதலால் நாடகத்தால் அடியார் போல் நடிப்பவர்கள் உண்மையான திருவருள் இன்பத்தைப் பெறமுடியாது. உண்மைத் திருவருள் இன்பத்தைப் பெற வேண்டுமென்றால், இறைவனிடத்தில் உண்மையான அன்புகொள்ள வேண்டும். அத்தகு அன்பினை உளத்தில் தோற்றுவித்து அருள் வழங்கி ஆட்கொள்ளும் வண்ணம் மாணிக்கவாசகர் பிரார்த்திக்கிறார். பாடலைப் பாருங்கள்:

தாராயுனயா யடியேற்கு
உன்தாள் இணையன்பு
பேரா வுலகம் புக்காரடியார்
புறமே போந்தேன் யான்

ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்தாங்கு
உன்தாள் இணையன்புக்
காராயடியேன் அயலே
மயல்கொண் டெழுகேனே!

–திருவாசகம்

இருகை யானை

சிவநெறி சிந்தைக்கினியது-உயிர்களுக்கு உய்வு தரும் நெறி மயக்கங்களினின்றும் விடுபெற்ற ஒருநெறி. சிவநெறி, தத்துவம் விளக்கும் சாத்திரங்களும் அருளார்ந்த அனுபவத்தைத் தந்து உயிர்களை விளக்கமுறச் செய்யும் திருமுறைகளும் பெற்றுத் திகழும் பெருநெறி.

சைவத் திருமுறைகளுள் மிகச் சிறந்தது திருவாசகம். திருவாசகம் ஒரு அனுபவப் பொதிவு-ஞானப் புலம்பல். அது, உணர்த்தும் நூலன்று-உணரச் செய்யும் நூல். அனுபவத்தைச் சொல்லும் நூலன்று - இன்ப அனுபவத்தை விளைவிக்கும் நூல். இத்தகு திருவாசகம் ஓதுவோரை உயர்த்தும்! திருவாசகம், சைவம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் மூன்று பொருள்களை (இறை, உயிர், தளை)யும் தக்க உவமைகளுடன் காட்டி விளக்குவதில் சிறந்தது. ஆன்மாவை, உயிர் நெறியைப் பற்றித் திருவாசகம் காட்டும் உவமை இருகை யானையை ஒத்திருந்தும் என் உள்ளக் கருவைக் கண்டிலேன் என்பது, மாணிக்கவாசகர் வாக்கு. உவமை மிகமிக அழகானது.

யானை மிகப் பெரிய உடலையுடையது. ஆனாலும் இத்தகு பேருடலுக்குள் இருக்கும் உயிர் நிலையையோ உயிருக்கு உயிராக விளங்கும் இறைநிலையையோ தெரிந்து தெளியும் ஆற்றல் அதற்கில்லை. அது போலவே மனிதர்கள் அறிவாலும், வேறு பிறவற்றாலும், சிறந்த மனித உடம்பைப் பெற்றிருந்தும் தன்னைப் பற்றியே அறியாமல்-அறிந்து கொள்ள முயற்சிக்காமல் இருந்துவிடுகிறார்கள். சீரிய சமய வாழ்வின் தொடக்கம் தன்னை அறிதலிலும் உணர்தலினுமே தொடங்குகிறது. அமைகிறது. இதனை மெய்கண்ட நூல் தம்மையுணர்ந்து தலைவனையுணர்ந்து என்றருளுமாற்றால் உணரலாம்.

அடுத்து, யானை நீண்ட கையையுடையது. தொலைவிலிருந்தும் உணவெடுக்கும். தும்பிக்கையாலும் உணவெடுக்கும் - வாயினாலும் வாங்கும். நிறையத் தின்னும். எனினும் பருத்த தன்னுடலையே பார்க்கமுடியாத குறையுண்டு. அதேபோல மனிதன் உண்டுடுத்து வாழ்ந்தாலும் தன்னைப்பற்றியே அறிந்து கொள்ள முடியாத “அறியாமை நிலை” எண்ணியிரங்கத் தக்கது.

யானை இவ்வளவு பருத்த உடலுடையதாக இருந்தும், மிக நீண்ட கையையுடையதாக இருந்தும் தன்னுடைய முதுகில் உட்கார்ந்து தன்னை இயக்கும் மாவுத்தனை அறிந்து கொள்ள முடியாமல் இருப்பதுபோலவே, மனிதன் கூர்த்த அறிவுடையனாக இருந்தும், தன்னுள் இருந்து தன்னை இயக்கும் இறைவனை உணர முடியாத நிலையில் இருக்கின்றான்.

யானை மதம் பிடித்தபோது, பிற உயிர்களுக்குத் துன்பமும் தொல்லையும் விளைவித்து தன் போக்கில் திரிகிறது. அதுபோலவே, மனிதன் ஆணவம் பிடித்தாட்டும் பொழுது தன்னைச் சார்ந்தவர்கட்குத் துன்பங்களும் தொல்லைகளும் விளைவிக்கின்றான். தன்னிச்சையாகத் திரிகின்றான். தன்னுடைய தலைவனாகிய இறைவனையே மறுக்கின்றான்.

யானை சில பொழுது தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்ளும். அதுபோலவே மனிதனும் தன்னை வினைச் சேற்றில் அழுத்திக் கொள்ளுகிறான். யானை, தன்னைக் கட்டுதற்குரிய சங்கிலியைத் தானே எடுத்துக் கொடுப்பதுபோல மனிதனும் வினைவழித் தொடர்புடைய பிறப்புக்களுக்குத் தன்னையே ஆட்படுத்திக் கொள்கின்றான். வினைகளும் வினைகளால் வரும் துன்பங்களும் உயிர்களின் சொந்தச் செயலே தவிர, இன்னொருவர் தந்தவையல்ல. நமக்குரிய ஒன்றை ஊழியர் கொண்டுவந்து தருவதுபோல, நம்முடைய சொந்த பலா பலன்களைக் காலத்தால் தோன்றும் நியதித் தத்துவங்களும் தலைவர் வழி நம்மிடம் கொணர்ந்து சேர்க்கின்றன. கொணர்பவர்மீது காய்தலும் உவத்தலும் தேவையில்லை. அவர்கள் அஞ்சற்காரர்போல அலுவல்களைச் செய்பவர்கள் - நாமே நம்முடைய நிலைமையையுணர்ந்து சிந்தையால் சிவனை நினைந்து உரிய தொண்டுகளைச் செய்து உயர்வும், உய்தியும் பெற முயற்சிக்கவேண்டும். பாடலைப் பாருங்கள்:

“இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெய்வமே
வருக வென்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே”

எள்ளும் எண்ணெயும்

திருவாதவூரடிகள் சிறந்த உலகியல் அனுபவம் உடையவர்; அந்த உலகியல் அனுபவம் அருளியலை நோக்கி, வளர்ந்தமையால் பயனுடையதாக அமைந்தது! அனுபவ முதிர்ச்சியினின்று பாடுவதால் கருத்துக்களை இனிதாக - எளிதாக விளக்குகிற உவமைகள் திருவாசகத்தில் மலிந்து காணப்பெறுகின்றன.

வழிபடும் தெய்வத்திற்கு இறைவன் என்ற அருமையான பொருள் பொதிந்த தத்துவப் பெயரை அனுபூதிமான்கள் சூட்டினார்கள். தென்னாடுடைய சிவனே என்று அகங்குளிர வாழ்த்தும் மணிவாசகர், “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று ஏற்றிப் போற்றுகிறார். எந்நாட்டவர்க்கும் என்னும் சொல், நாடு, மொழி, இனம், சமய வேறுபாடுகளைக் கடந்த பொருளைக் காட்ட எடுத்தாண்ட வலிவுபெற்ற ஒரு சொல். இறைவன் எங்கணும் தங்கியிருக்கிறான். எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருக்கின்றான். எப்போதும் இருக்கிறான். இந்த அருமையான இறைவன் கலந்துறையும் காட்சியைக் காண்பவர் சிலரே. காணப் பெறாதவர் பலர். ஏன்? பலர் காணமுயற்சிப்பது கூட இல்லை. அங்கனம் காண முயற்சிக்காதவர்களில் சமய நெறியைச் சார்ந்தோரும் உண்டு-சாராதவர்களும் உண்டு. சமயநெறியைச் சார்ந்தோரினும் பலர் இந்த உண்மையை மறந்துவிட்டு வெறும் ஆரவாரத் தன்மையுடைய-சமயம் போல் தோற்றமளிக்கக் கூடிய சடங்கு நிகழ்ச்சிகளிலேயே ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீங்காதுறைகின்றான் எனக்கருதி அன்பு காட்டும் இயல்பை மறந்து விடுகின்றனர்-மாறாக தீமையும் புரிந்தொழுகுகின்றனர். கள்ளுள்ள மலர்களிலெல்லாம் நிச்சயமாக வண்டுகள் வந்து தங்கும். அதுபோல அன்புடைய மனிதர்களிடத்திலெல்லாம் இறைவன் வந்து தங்குவான் என்ற குறிப்பையுணர்த்த “கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்” என்று குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர். மது நிறைந்த மலரும் வண்டும் பிரிக்கப்படாதன. அதுபோல அன்பு சார்ந்த மனிதனும் கடவுளும் பிரிக்கப்படாதவர்கள். மேலும், இறைவன் எந்த இடம் என்று வரையறுத்துக் கூற இயலாவண்ணம் நடு, கீழ்மேல் ஆகிய எல்லா இடங்களிலும் கலந்து உறைகின்றார். அது மட்டுமல்ல - யாவுள்ளுந் தங்கியிருக்கிறான் என்றும் குறிப்பிடுகின்றார். யாவுளும் என்பதனால் உயிரின வேறுபாடின்றி, இழிவு உயர்வு வேறுபாடின்றி கலந்து உறைகின்றான் என்பது பெறப்படுகிறது. இந்தக் கருத்தை விளக்க எள்ளும் எண்ணெயும் போல என்ற உவமையை எடுத்தாளுகின்றார். எள்ளுக்கு எண்ணெய் இடவேறுபாடின்றி, ஒன்றித்து இருக்கிறது. உள்-உலகம் உலகப் பொருள்கள். எண்ணெய்-இறைவன் எள்ளினுள் எண்ணெய் கலந்திருந்தாலும் வெளிப்படையாகத் தெரியா வண்ணம் மறைந்தே இருக்கிறது. அதுபோல இறைவன் உயிர்களுக்குள் உறைதலை எளிதற் காணமுடியாதவாறு மும்மலங்கள் மறைத்துக் கொண்டிருக்கின்றன. வலிய முயற்சிகளால் தோலையும் சக்கையையும் நீக்கிக் கடையும்பொழுது தோலும் சக்கையும் ஒதுங்கி எண்ணெய் வெளிப்படுகிறது அது போல, உயிர்களும் தவத்தால், நோன்பால்-அகம் நிறைந்த பக்தியால் முருக வாங்கிக் கடையும் பொழுது இறைவனும் வெளிப்படுகிறான்.

எண்ணெய் உடல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்போல், இறைவன் திருவருள் உயிர்வளர்ச்சிக்குப் பயன்படுகிறது. இங்ஙனம் இறைவனுடைய இருப்பையும், அவனை அடையும் முறையையும் அவனால் அடையத்தக்க பயனையும் ஒரே உவமையில் திருவாசகம் தெளிவாக உணர்த்துகிறது. பாடலைப் பாருங்கள்:

கொள்ளுங் கில்லெனையான் பரிற் கூய்ப்பணி
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்
நள்ளுங் கீழுலா மேலுளும் யாவுளும்
எள்ளும் எண்ணெயும் போனின்ற எந்தையே!