உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/இம்மையும் மறுமையும் இன்பந்தரும்

விக்கிமூலம் இலிருந்து

13. இம்மையும் மறுமையும் இன்பந் தரும்


மனித வாழ்வின் இலட்சியம் இன்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுதல். சில ஒழுக்கங்கள் இம்மைப் பயன் மட்டுமே தரும். மிகச் சிலவே இம்மை மறுமை ஆகிய இரண்டுக்கும் இன்பந் தரும்.

இருமையும் இன்பம் தரும் அம் மிகச் சிலவற்றுள்ளும், பெரும் முயற்சியின்றி எளிமையில் கைவரக் கூடிய ஒழுக்கம் இனியவை கூறல்.

மனித குலத்தின் உறவுக்கும் இன்பத்திற்கும் அடிப்படை இனியவை கூறலேயாகும். இனியவை கூறினும், இனிய வார்த்தைகளைப் பேசினும், அகமும் புறமும் ஒத்துப் பேசுதல் பெரும் தவ ஒழுக்கமாகும்.

சிலர் உதட்டில் இனிய வார்த்தைகளைப் பேசுவர். ஆனாலும் அகத்தே கருப்பு வைத்து வாழ்வர். அதனாலேயே திருவள்ளுவர், 'சிறுமையுள் நீங்கிய இன் சொல்' என்று குறிப்பிடுகின்றார்.

இதற்குச் சிறுமைப் பண்புகள் நீங்கிய மனிதன் சொல்லும் இன்சொல் என்றும் பொருள் காண்லாம். சொல்லும் சொற்களின் விளைவினால் தீமையில்லாத— தீமை பயவாத நற்சொல்லும் இன்சொல்லேயாம். சிறுமை—சிறுமிய மரபுகள் அகத்திலும்கூடா—செயல்களிலும் கூடா. சிறுமையினின்றே சிறுமை தோன்றும். பிறருக்குச் சிறுமை தரத்தக்க செயலைச் செய்கின்றவனும் சிறுமை உடையவனேயாம்.

இனிய பண்புகளிலிருந்தே இனிமை பிறக்கிறது. இனிமை—இனிய சொற்கள் இம்மை வாழ்வில் நண்பர்களைக் கூட்டுவிக்கும்; துன்பத்தை நீக்கும். இன்பத்தைப் பெருக்கும். அவ்வழி மறுமையும் கூட்டுவிக்கும். மறுமை இன்பத்தை அளிக்கவல்ல இறைவனும் இனிமை தவழும் புன்சிரிப்புடையவன். ஆதலால், வருந்தி உழைத்துப் பெறக்கூடிய மறுமை இன்பத்தையும் இனிய சொற்களை வழங்குவதன் மூலமே எளிதிற் பெற்றுவிட முடியும் என்பது திருவள்ளுவர் கருத்து.

ஆனால் உலகியலில் இந்த இனிய—எளிய பண்புகூட வளராதது வியப்பாக இருக்கிறது.

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.