உள்ளடக்கத்துக்குச் செல்

குறட்செல்வம்/எது தவறு?

விக்கிமூலம் இலிருந்து


33. எது தவம்?


திருக்குறள் ஓர் ஒழுக்க நூல்—அற நூல். ஆயினும், விஞ்ஞானப் பார்வையில் தலைசிறந்து விளங்கும் நூல். திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி அற நெறி. மனித இயல்புகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தக்கூடியவையாகவே கூறப்பெற்றிருப்பது எண்ணி உணரத்தக்கது.

வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட—நடைமுறை சாத்தியமற்ற ஒழுக்க நெறிகளைத் திருக்குறள் கூறவில்லை. “வாழ்வாங்கு வாழ்தல்” என்பதையே திருக்குறள் சிறந்த அறமாகப் பாராட்டுகிறது. அங்ஙனம் வாழ்பவர்கள் தெய்வமெனப் போற்றப்படுவார்கள் என்றும் திருக்குறள் கூறுகிறது.

வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று முடிவில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது.

எல்லா உயிர்களும் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவியனவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதிகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத—பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளே உண்டு. இங்கு விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம்.

ஆயினும், இவ்விரு வகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலேயாகும். துறவறம் அல்லது தவ வாழ்க்கை என்றால் கடமைகளினின்றும் விடுதலை பெறுவதல்ல.

கதே என்ற தத்துவ ஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடி விடுவதன்று. உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் வீழாமல்—வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.

திருவள்ளுவர் துறவற இயலில் ‘தவம்’ என்ற அதிகாரத்தில்,

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்றவர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙனம் செய்யாதவர்கள் ஆசையுட்பட்டும் பாவம் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

இந்தத் திருக்குறளுக்கு இன்னும் சற்று ஆழமாக—விரிந்த நிலையில் பொருள் காண்பது நல்லது. "தம் கருமம் செய்வார் தவம் செய்வார்" என்று கொண்டு கூட்டிப் பொருள் காண்பது சிறப்பாக இருக்கும்.

மனித வாழ்வியலில் அவர்களுக்கென்று கடமைகள் அமைந்துள்ளன. அவர்களும் அவரவர் கடமைகளை உணர்ந்து செய்யாமையினால் தம்மையும் கெடுத்துக் கொள்கிறார்கள், அவர்களோடு தொடர்புடையதாக இருக்கிற சமூகத்திற்கும் கேடு செய்கிறார்கள்.

இதன் விளைவாகச் சமூகச் சிக்கல்கள் பெருகி, அழுக்காறு, அவா, வெகுளி போன்ற இழி குணங்கள் பெருகி வளர்ந்து, மனித சமுதாயத்தை அலைக்கழிக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, கடமைகளைச் செய்தவன் மூலமே உயிர்களைப் பரிணாம வளர்ச்சியில் ஈடுபடுத்தித் தகுதிப்படுத்தி ஆட்கொண்டருளும் இறைவனுடைய திருவுள்ளத்திற்கும் மாறாக வாழ்ந்து, பாவத்தை விளைவித்துக் கொள்கின்றனர்.

ஆதலால், தமக்குரிய கடமைகளைச் செய்தலையே திருவள்ளுவர் ‘தவம்’ என்று கருதுகின்றார். இல்லறத்தாராக இருப்பாராயின் தமது மனைவி, மக்கள், சுற்றம் தழுவிப் பாதுகாத்து வாழ்தல் கடமை.

துறவறத்தாராக இருப்பாராயின் மனித சமுதாயத்தையே தழுவி, அவர்கள் நன்னெறி நின்றொழுகி நல்லின்பத்தோடு வாழ சிந்தனையாலும் செயலாலும் கடமைகளைச் செய்தல் வேண்டும். இஃதன்றி, உலகியலை ஒழித்த தவம் என்று பொருள் கொள்ளுதல் சிறப்புடையதன்று. “கடமைகளை முறையாகச் செய்தல் சிறந்த கடவுள் வழிபாட்டுக்கு ஈடு அல்லது இணையானது” என்னும் பொருள்படச் சான்றோர் பலரும் பேசியிருக்கிறார்கள்.

‘கடமையே மிகச் சிறந்த நோக்கம் ஏனெனில் அது கடவுட் கருத்தைத் தழுவியதாக இருக்கிறது’ என்று லக்கார் டயரும்,

‘கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்போதும் உதவியாக இருக்கிறார்’ என்று கெய்லரும்,

‘கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும் மனத்தையும் பலவீனப்படுத்தித் தூய்மையான தவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது' என்று ட்ரயான் எட்வர்ட்ஸ் என்பாரும்,

‘உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி’ என்று பேகனும் பேசியிருக்கின்றனர்.

பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும் தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுவதும் பரக்கக் காணலாம்.

சங்கிலியாருக்குச் சுத்தரரைச் சில்பெருமான் அறிமுகப்படுத்தும் போது, “மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்” என்று கூறுவதாக சேக்கிழார் பெருமான் சித்தரித்திருப்பது அறிந்து இன்புறத்தக்கது.

ஆதலால், திருக்குறள் காட்டும் தவம், தத்தம் கடமைகளைச் செய்தல்; அவம், கடமைகளைச் செய்யாதொழித்துப் பிறவற்றைச் செய்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=குறட்செல்வம்/எது_தவறு%3F&oldid=1509594" இலிருந்து மீள்விக்கப்பட்டது