உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/சந்திரன்

விக்கிமூலம் இலிருந்து

21. சந்திரன்

மீனினம் ஓடிப் பரக்குதம்மா! - ஊடே
     வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறுதம்மா! - இந்த
     மாட்சியி லுள்ளம் முழுகுதம்மா! 1

முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ? - தேவர்
     முத்து விதானம் அமைத்தனரோ?
வெல்லு மதியின் திருமணமோ?-அவன்
     விண்ணில் விழாவரும் வேளையிதோ? 2

அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா! - அயல்
      ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்ப ருலகின் இயல்பிதம்மா! - மதிக்கு
      இன்னார் இனியாரும் உண்டோ அம்மா? 3

மாற்றம் உலகின் இயற்கையென - இங்கு
      மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம் - விண்ணில்
      பூத்து நிலவ விதித்தனனே! 4

அம்புலிக் கூட்டில் முயல்வருமோ? - ஈதோர்
      அண்டப் புளுகோ? அறியேன், அம்மா!
பம்பி யெழுமலை அங்குளதும் - மேலைப்
      பண்டிதர் கண்ட கனவே, அம்மா! 5

கூனக் கிழவி நிலவினிலே - ராட்டில்
      கொட்டை நூற்கும்பணி செய்வதைஇம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
      மாமதி யோங்கி வளருதம்மா! 6

சின்னஞ் சிறுவில்லாய்க் கணடதம்மா! - பின்னர்
      செம்பொற் குடம் போலே தோன்றுதம்மா!
என்ன அதிசயம் பாராயம்மா!-ஈதோர்
      இந்திர சாலமோ கூறாயம்மா! 7

வளர்ந்து வளர்ந்து பெருகுதம்மா!
      வட்டந் திருந்தி வருகுதம்மா ! - உடல்
தளாந்து தளர்ந்துபின் போகுதம்மா!- கண்ணில்
      சற்றுந் தெரியாமல் ஆகுதம்மா! 8

பாலாழி மீது படர்ந்தவெண்ணெய் - ஒரு
      பந்தா யுருண்டு திரண்டதுவோ?
மேலா யுலகில் ஒளிசெயவே - ஈசன்
      விண்ணக மிட்ட விளக்கிதுவோ? 9

இரவைப் பகலா யியற்றுதம்மா! - வெப்பம்
      இல்லா திளைப்பெலாம் ஓட்டுதம்மா!
அரவம் விழுங்கினும் அஞ்சாதம்மா!-எங்கள்
      ஆண்டவன் சூடும் மணியே அம்மா! 10

பொன்மரம் காய்த்த கனியிதுவோ? - இந்தப்
      பூமகள் ஆடும் கழங்கிதுவோ?
கன்மன முங்களி கொள்ளக் - கவினொளி
      காட்டி விளங்கும் மதியிதுவோ? 11

கண்ணுதல் உள்ளக் கருணையதோ? - கொற்கைக்
      காவலர் கண்ட புகழதுவோ?
மண்ணகஞ் செய்திடு புண்ணியமோ?- இன்று
      வானகம் வந்து நிலவுதம்மா! 12