குழந்தை இலக்கியம்/தமிழ்

விக்கிமூலம் இலிருந்து
70 தமிழ் 151
71 தமிழ் வாழ்க! 153
72 தமிழன் 156
73 தமிழன் II 159
74 தமிழ் நாடு 160
75 வணக்கம் 162
70

தமிழுங்கள் மொழியே!- அதை
தமிழுங்கள் விழியே!
தமிழுங்கள் உயிரே! – உயர்
தமிழுங்கள் பயிரே!

1

தமிழ்வானப் பரிதி!– இசை
தருமின்பச் சுருதி!
தமிழும்மை ஈன்றாள்!– அவள்
அமிழ்தினைப் போன்றாள்!

2

தமிழ்நறுங் காற்று – பிறர் .
தரும்மொழி கூற்று!
தமிழுங்கள் சோலை – தன்னில்
தழைத்திட்ட மாலை!

3

தமிழ்காப்போர் வாழ்வார்! — தனித்
தமிழ்சாய்ப்போர் வீழ்வார்!
தமிழின்பம் சேர்க்கும்!— தூய
தமிழ்துன்பம் போக்கும்!

4
71



அன்னாய் வாழ்க! அன்னாய் வாழ்க!
அன்னைக் கொளிதரும் அன்பே! வாழ்க!
தென்னாட் டவரின் திருவே! வாழ்க!
செந்தமிழ் மொழியே! உயிரே! வாழ்க!

1

உலகுக் கொளிதரு விளக்கே! வாழ்க!
உயிருக் கினிமை ஒலியே! வாழ்க!
பலகலை நுணுக்கப் பைந்தமிழ்! வாழ்க!
பல்சுவை அமுதே! தேனே! வாழ்க!

2

அன்பை அறத்தை அகத்தை வகுத்தாய்!
அழியாக் கன்னித் தமிழே! வாழி! -
இன்பப் புறமும் இயலிசை கூத்தும்
ஈன்றாய்; எம்மை ஈன்றாய்! வாழி!

3

மொழியே! தமிழர் விழியே! வாழி!
முக்கனி வாழி! சர்க்கரை வாழி!
வழியும் தேனடைப் பிழிவே! வாழி!
மணமலர்ச் சோலைக் குளிரே! வாழி!

4


மங்கா ஒளியே! மலையிளங் காற்றே!
திங்கட் குழவி! செவ்வாய்க் குயிலே!
பொங்கல் அமுதே! புதுத்தைப் பூவே!
சிங்கத் தமிழர் தீந்தமிழ் வாழி!

5


கன்னடம் தெலுங்கு கவின்மலை யாளம்
உன்னிடம் பிறந்த துணர்ந்தேன்! வாழி!
தென்னிடம் சிறக்க வளர்ந்தோய்! வாழி!
செந்தமிழ் கொடுந்தமிழ் தந்தோய்! வாழி!

6


இத்தரைத் தமிழர்க் கேற்றம் சேர்த்த
எழிலே! மலையிடைப் பொழிலே! வாழி!
தித்திக்கும் தேனே! முத்தமிழ் அன்னாய்!
திரைகடல் தாண்டியும் பறந்ததுன் புகழ்க்கொடி!

7

வடக்கை வென்றாய்! மலைகடல் வென்றாய்!
பணிமுடி நெரித்தது கணக்கிடப் போமோ?
கிடக்கும் குமரிக் கீழ்நா டெங்கும்
அடக்கி ஆண்ட அரசே! வாழி!

8

முடிபுனை வேந்தர் மூவர் தம்மின்
மடியில் வளர்ந்த வரிக்குயில்! வாழி!
அடிமுடி காணா வான்கடல்! வாழி!
அன்னாய் தமிழே அன்னாய்! வாழி!

9

முன்னூல் பன்னூல் தந்தாய்! வாழி!
முத்தே! பவழக் கொத்தே! வாழி!
இந்நாள் பன்னாள் எந்நா ளுக்கும்
கன்னி கழியாக் கருவே வாழி!

10



72



தமிழன் என்றும் மனம்குழையான்!
தமிழன் என்றும் அறம்பிழையான்!
தமிழன் எவர்க்கும் தவறிழையான்!
தமிழன் எவர்க்கும் தலைகுனியான்!

1

தமிழன் எவர்க்கும் வழிகாட்டி!
தமிழன் எவர்க்கும் உணவூட்டி!
தமிழன் பகைக்குக் கூர்ஈட்டி!
தமிழன் அன்பிற்(கு) அருள்காட்டி!

2

தமிழன் தோள்கள் மலைத்தோளே!
தமிழன் வாள்கள் கொலைவாளே!
தமிழன் நண்பர் வாழ்வாரே!
தமிழன் பகைவர் வீழ்வாரே!

3


தமிழன் கொடையே பால்ஏனம்!
தமிழன் பண்பே பூங்கானம்!
தமிழன் சிறப்பே முன்வானம்!
தமிழன் உயிரே தன்மானம் !

4


தமிழன் துயரில் கலங்கானே!
தமிழன் பிறர்பொருட்(டு) ஏங்கானே!
தமிழன் உழைப்பான்; தூங்கானே!
தமிழன் கொடுப்பான்; வாங்கானே!

5

தமிழன் அறியான் சிறுகள்ளம்!
தமிழன் கண்கள் அருள்வெள்ளம்!
தமிழன் உள்ளம் தனிஉள்ளம்!
தமிழன் மொழியே தேன்பள்ளம்!

6

தமிழன் பிறர்நல மழைகாற்று;
தனையேய்ப் பவர்க்கோ சுழற்காற்று!
தமிழன் மாற்றார்க்(கு) அனற்காற்று!
தமிழன் என்றும் குளிர்காற்று!

7

தமிழன் தெய்வம் தனித்தெய்வம்!
தமிழன் காதல் தனிக்காதல்! -
தமிழன் வீரம் தனிவீரம்!
தமிழன் பண்பு தனிப்பண்பே!

8

தமிழச் சிறுவர் பொற்புடையோர்!
தமிழப் பெண்கள் கற்புடையோர்!
தமிழ மறவர் விற்புடையோர் !
தமிழ வேந்தர் வெற்புடையோர் !

9

தமிழன் இயலோ அறிவாக்கம்!
தமிழன் இசையோ தேன்தேக்கம்!
தமிழன் கூத்தோ நல்லூக்கம்!
தமிழன் இலக்கியம் பெருநோக்கம்!

10



73

ண்னெதிர் கண்டபல-இயற்கைக்
காட்சியின் தோற்றமெலாம்
மண்ணதில் தீட்டிவைத்தான்-தமிழன்
வண்ணக் கலவையதால்! 1

தெள்ளிய தெள்ளமுதாய்த்-தமிழைச்
சீருடன் செப்பனிட்டான்!
உள்ளங் கவர்கவிதை-அளித்தான்
உணர்வுப் பெருக்கதனால2

கல்லை உயிர்ப்பித்தான்-தமிழன்
கற்பனை உச்சியெட்டி!
வில்லின் துணைவலியால்-உலகில்
வெற்றி முரசடித்தான்! 3

முன்னவர் காலமென்பார்-இவையெலாம்
முற்றும் அறியாதார்!
இன்னும் வலியுடையான்-தமிழன்
இமயமும் சாடுதற்கே! 4

74

ன்னரும் நாடு தமிழ்நாடே!
உலகிற் கெல்லாம் பழநாடே!

தென்னை செந்நெல் விளைநாடே!
தீஞ்சுவைக் கன்னல் நிறைநாடே! 1

தாயை ஈன்ற தமிழ்நாடே!
தம்பி உனது தாய்நாடே!
பாய்புலித் தந்தைப் பொன்னாடு!
பாட்டி பிறந்த தமிழ்நாடு! ! 2

முல்லை பூத்த மலர்க்காடும்,
முன்றில் இருண்ட உன்வீடும்,
கொல்லை உழுத உன்மாடும்,
குளிர்ந்த நிழலும் தாய்நாடே! 3

ஆர்கடல் உலகப் பெருவிளக்காம்!
அன்னை நாடு தாய்நாடு!
கார்இருள் ஒட்டும் விண்விளக்காம்!
கடற்கரை ஓரச் சுழல்விளக்காம்!4

வாழை கமுகு மலர்த்தோட்டம்!
வற்றா ஆற்றின் நீர்ஒட்டம்!
ஏழை மலையும் தேன்ஈட்டம்!
எங்கும் என்றும் கார்ஆட்டம்! 5

குளத்துள் எருமை கற்குன்றம்!
குயிலின் பாட்டோ இசைமன்றம்!
களத்து மேடோ பொதுமன்றம்!
கழனி யோரம் பூமன்றம்! 6

கிழக்கு மேற்கு நீள்கடலும்,
தெற்குக் குமரிப் பெருங்கடலும்,
அழகில் வேங்கட வடத்திடலும்
அமைந்த நாடுன் உயிர்உடலும்! 7

மன்னர் வாழ்ந்த பொன்னாடே!
வழங்கி வாழ்ந்த நன்னாடே!
இன்னல் அறியாப் பெருநாடே!
இமயம் வென்ற துன்நாடே! 8

கற்றோர் வாழ்ந்த கலைநாடு!
கடராம் வென்ற சிலைநாடு!
பொற்றேர் அளித்த பொன்னாடு!
புறம்அகம் கண்ட உன்நாடு! 9

வள்ளல் பிறந்தது. உன்நாடு!
வரிசிலை கண்டது உன்நாடு!
அள்ளும் சிலம்பும் மேகலையும்
குறளும் அளித்த துன்நாடே! 10

75

ணக்கம் வணக்கம வகைகம் தாயே!
மலர்த்தேன் தமிழே! மருந்தே! வாழ்வே!
வணக்கம் வணக்கம் வணக்கம் தாயே! 1

குணகடல் வேங்கடம் குமரி மேற்கடல்
குரல்ஒலி தந்த உயிரே! தமிழே!
வணக்கம் வணக்கம் வணக்கம் தாயே!

அன்னை அறையை அகற்றி வந்தே
‘அம்மா’ என்றது. தீந்தமிழ் மொழியாம்!
உன்னை வணங்குவன் வணங்குவன் தாயே! 2

பின்னர்த் ‘தாத்தா,’ ‘அத்தை’ என்றே
பிதற்றிய சொல்லும் தீந்தமிழ் நன்றே
உன்னை வணங்குவன் வணங்குவன் தாயே!

கையினை ஊன்றிக் காலிரண் முழுத்து
மைவிழி நீர்முகம் செவ்விதழ் கறுக்க
‘ஐயா’, ‘அம்மா’ என்றது தமிழாம்! 3

பொய்புனை மாற்றார் இன்றுள் புலவர்
உய்யும் வழிசெய் ஒண்டமிழ்த் தாயே!
கையைக் கூப்பி வணங்குவன் வணங்குவன்!

தத்தி நடந்து தளிர்க்கை நீட்டி
‘அக்கா’ என்றதும் அழகுத் தமிழாம்!
பத்தரை மாற்றுப் பொன்னே! தமிழே!

இத்தரை மக்களும் இன்றும் உன்னை
இறைஞ்சி வணங்கிப் பயிலுதல் கண்டேன்!
சித்திரைத் தென்றலே! வணக்கம் வணக்கம்! 4

துள்ளித் திரியும் துடுக்கு நாட்களில்
புள்ளியிற் பயின்றது பைந்தமிழ் மொழியாம்!
உள்ளம் இனிக்கும் அமிழ்தே! தமிழே!

வள்ளலை வளர்த்தோய்! வரைபயன் நிறைத்தோய்!
எறிகடல் முத்தே! மணியே! வாழி!
உள்ளம் உருகி வணங்குவன் தாயே! 5

பூத்த சோலைப் பூவண் டோடு
புதரிடை ஆடி இசைத்ததும் தமிழாம்!
காய்த்த பலாவே! கரும்பே! தமிழே!

மேத்திசை கீழ்த்திசை விரிகடல் சூழ்ந்த
எத்திசை எங்கும் நடத்தினாய் அரசு!
வாழ்த்தி வணங்குவன் வணங்குவன் அம்மா! 6

அகமும் புறமும் உலகுக் களித்தாய்!
அணியாம் சிலம்பு குண்டலம் மேகலை
திகழ அணிந்தாய் திருவே! தமிழே!

பகைவர்க் கருளிப் பண்பினை வளர்த்தாய்!
தொகைதொகை யாக நூல்பல அளித்தாய்!
நகைமுகத் தமிழே! வணக்கம், வண்க்கம்!

ஓடை அருவி உயர்மலைச் சாரல்
ஆடும் மூங்கில் அலைக்கும் காற்றும்
பாடும் குயிலும் பயிலுமுன் தேமொழி! 8

ஈடிலா மொழியே! ஈன்றாய் மொழியே!
இயலிசை கூத்தை அளித்தாய்!
வாழி கோடி வணக்கம் வணக்கம் தாயே!

பொன்னொளி வீசும் புதுவான் பரப்பும்
புதரிடை ஆடும் புட்கள் விளிப்பும்
என்னென் றுரைப்பேன்! என்னென் றுரைப்பேன்! 9

கன்னித் தமிழே! உன்னைப் போலக்
கண்செவி மூக்கு மெய்வாய்க் கென்றும்
மன்னிய இன்பம் வழங்கிய தில்லை!

தென்றல் இனிமை செழுநிலாக் குளிர்மை
செவ்விதழ்ச் சிறுவர் சிரிப்பின் வளமை
என்றும் தமிழ்மொழிக் கிடா கும்மோ? 10

மன்றில் இசைக்கும் யாழும் குழலும்
மத்தள முழக்கும் கைத்தாள ஒலியும்
என்றும் ஈடோ? ஈடோ? வணக்கம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தை_இலக்கியம்/தமிழ்&oldid=1249330" இலிருந்து மீள்விக்கப்பட்டது