குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்/வளர்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

14. வளர்ச்சி

மிகச் சிறிய அண்டம் விந்தணுப்பாய்ந்து பூரிக்கின்றது; அதுவே குழந்தையின் வாழ்க்கைத் தொடக்கம் என்று கண்டோம். அண்டம் பூரித்தது முதல் அதன் வளர்ச்சி இடைவிடாது தொடர்ந்து கடந்துகொண்டே இருக்கிறது. கருவிலே இருக்கும்போது குழந்தையின் உடல் உறுப்புக்கள் மட்டும் வளர்ச்சியடைவதில்லை. அதன் உள்ளமும் வளர்ந்து கொண்டுதாணிருக்கிறது. தாயின் உணர்ச்சிகளும் அநுபவங்களுங்கூட. அந்தக் கருவின் உள்ளத்தைத் தொடு கின்றன என்றுகூட எண்ணவேண்டியிருக்கிறது. இதை ஒருவாறு உணர்ந்துதான் கருப்பமடைந்த பெண்களை எப்பொழுதும் சந்தோஷமாகவும் அமைதியான சூழ்நிலையிலும் உயர்ந்த எண்ணங்களும் லட்சியங்களும் கொண்டிருக்கும் படியாகவும் வைத்திருக்கவேண்டும் என்று நம் நாட்டில் வெகுகாலமாக அபிப்பிராயம் இருந்து வருகிறது. கவலையால் வாடும்படியான தாயின் பாலைக் குடிப்பதால் அது குழந்தையின் மன அமைதியைப் பாதிக்கின்றது என்று ஆராய்ச்சியால் கண்டிருக்கிறார்கள். அதைப் போலவே கருவிலிருக்கும் குழந்தையின் மனத்தையும் தாயின் உணர்ச்சிகள் பாதிக்கும் என ஊகிக்கலாம்.

பிறந்தவுடன் குழந்தையைப் பார்த்தால் அது ஒரு விதத்திலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளச் சக்தியற்றதாகக் காணப்படுகிறது. இருந்தாலும் அது பசி வந்தால் அதைத் தெரிவிக்க அழுகிறது. ஏதாவது தொந்தரவு ஏற்பட்டாலும் அழுகிறது. தனது உணர்ச்சிகளைத் தெரிவிக்க அப்பொழுது அதற்கு அழுகை ஒன்றுதான் பாஷையாக இருக்கிறது. இருந்தாலும் அதற்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணக்கூடாது.

குழந்தையின் உள்ளம் வெகு விரைவிலே வேலை செய்யத் தொடங்குகிறது. அது வெகு நுட்பமானது. அது உணர்ச்சிகளையெல்லாம் நன்கு பதிவுசெய்துகொள்ளுகிறது. இரண்டாவதாகக் குழந்தையின் உள்ளத்திலே இயல்பூக்கங்கள் மேலெழுந்து நிற்கின்றன. அவற்றையெல்லாம் அடக்கியாளச் சிறிது சிறிதாகவே குழந்தை கற்றுக் கொள்ளுகிறது. மூன்றாவதாகக் குழந்தையுள்ளம் மிகுந்த கற்பசைக்தி வாய்ந்தது. குழந்தைக்குக் கிடைத்துள்ள இந்தச் சக்தி மிகவும் ஆச்சரியமானது.

இவற்றையெல்லாம் நன்கு மனத்தில் வைத்துக் கொண்டோமானால் குழந்தை வளர்ப்பிலே நாம் எவ்வாறு கடந்து கொள்ளவேண்டுமென்பது தெரியும். குழந்தையின் உள்ளத்தில் பதிவாகும் அநுபவங்களையும் உணர்ச்சிகளையும் மாற்றுவது எளிதல்ல. ஆதலால் அதில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் பதிவாகவேண்டும் என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இயல்பூக்கங்களில் விரும்பத்தகா தனவற்றை அடியோடு களைந்து விடுவதென்பது முடியாத காரியம். ஆனால் அவற்றை நல்ல வழிகளிலே செல்லுமாறு மாற்றிவிடலாம். குழந்தையின் கற்பசைக்தியின்வலிமையை அதன் விளையாட்டிலும், சித்திரங்களிலும், செய்கைகளி லும் காணலாம். அவற்றைக் குழந்தையின் அறியாமையால் விளைந்தவை என்று அலட்சியம் செய்தால் அதன் கற்பனைத்திறன் குன்றிப்போய்விடும். குழந்தையின் கற்பனை உலகம் வேறு வயது வந்த நாம் காணும் உலகம் வேறு: அதனால் நமது கற்பனை உலகமும் வேறே. நமது அதுபவத்தையும் உணர்ச்சியையும் அளவைகளாகக் கொண்டு குழந்தையின் கற்பனையை அளவிடக் கூடாது. குழந்தைப்பருவத்திலே நாம் கொண்டிருந்த கற்பனையும் அப்போதைய நமது கவ்டத்தையும் மறந்து போய் விடுவதால் இப்பொழுது நம்மால் குழந்தையின் செய்கைகளே அறிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

அதுதாபத்தோடும் அன்போடும் பொறுமையோடும் குழந்தையை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு மனத் தத்துவர்கள் ஆராய்ந்து கூறியுள்ள பல உண்மைகள் பெருந்துணையாக நிற்கும். அவ்வாறு குழந்தையை அறிந்து கொண்டு வளர்த்தால் அதன் திறமைகளெல்லாம் நன்கு வளர்ந்து பிரகாசிக்க நாம் பெரிதும் உதவி செய்ய முடியும்.

குழந்தை நமது பெரிய செல்வம். அது நன்கு மலர்ந்து உலகில் புகழ்பெற்று வாழ எல்லா வகைகளிலும் உதவ வேண்டுவது நமது கடமை. அதுவே நமக்குப் பெரியதோர் இன்பந் தருவதுமாகும்.

குறிப்பு:-குழந்தை உள்ளத்தைப் பற்றியும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் சுருக்கமாக இங்கு எழுதியுள்ளேன். எல்லா அம்சங்களைப் பற்றியும் இச்சிறு நூலில் எழுதுவதென்பது முடியாது. குழந்தை உள்ளம் என்ற தலைப்புடன் முன்பே ஒரு நூல் வெளியிட்டிருக்கிறேன். அதற்குத் துணை நூலாகவே இதை எழுதுகிறேன். அந்நூலேயும் சேர்த்துப் படித்தால் பெரிதும் பயனடையலாகும்.