கெடிலக் கரை நாகரிகம்/போக்குவரவு - பாதைகளும் பாலங்களும்

விக்கிமூலம் இலிருந்து
19. போக்குவரவு

பாதைகளும் பாலங்களும்

கெடிலம் ஆற்றின் தோற்றத்திற்கும் முடிவிற்குமிடையே கி.மீ. கற்களுடன் கூடிய பெருநாட்டு நெடுஞ்சாலை (National Highways) ஒன்றும், மாவட்ட நெடும் பாதைகள் நான்கும் மாவட்டக் குறும் பாதைகள் நான்குமாக ஒன்பது தரைப்பாதைகளும், இரண்டு புகை வண்டிப் பாதைகளும் கெடிலத்தின் குறுக்கே கடந்து செல்கின்றன. ஒன்பது பெரிய தரைப் பாதைகளேயன்றி, ஆற்றின் அக்கரை வட்டாரத்திற்கும் இக்கரை வட்டாரத்திற்குமாகச் சிறிய சிற்றுார்ப்பாதைகள் பல உள்ளன. ஒன்பது பெரிய தரைப் பாதைகளுள் ஐந்து பாதைகளில் ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. புகைவண்டிப் பாதைகள் இரண்டிலும் புகைவண்டித் தொடர்ப் பாலங்கள் இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும். இனி கெடிலத்தின் தோற்றத்திலிருந்து முறையே பாதைகளும் பாலங்களும் பற்றிய விவரம் வருமாறு:

தரைப் பாதைப் பாலங்கள்

கள்ளக்குறிச்சி வட்ட எல்லையில்

திருக்கோவலூர் வட்டத்தின் வடமேற்கு மூலையிலிருந்து மணலூர்ப் பேட்டை, மாடன் பூண்டி முதலிய ஊர்களின் வழியாகக் கள்ளக்குறிச்சி வட்ட எல்லையை ஒட்டித் தெற்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் மாவட்டக் குறும்பாதை ஒன்று, திருக்கோவலூர் வட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி வட்டத்திற்குள் புகும் எல்லைக்கருகில், வாய்க்கால் உருவத்தில் சிறியதாயுள்ள கெடிலம் ஆற்றைக் கடக்கிறது. இந்த இடத்தில் ஆற்றில் பாலம் இல்லை. இந்தப் பாதை நேர் தெற்காகச் சென்று, திருக்கோவலூரிலிருந்து தியாக துருக்கம் வழியாகக் கள்ளக்குறிச்சி நோக்கிச் செல்லும் மாவட்ட நெடும்பாதையுடன் கலந்து விடுகிறது.

திருக்கோவலூர் வட்டத்தில்

அரியூர் எல்லையில் (பாலம்)

திருக்கோவலூரிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு மாவட்ட நெடும்பாதை, திருக்கோவலூருக்குத் தெற்கே 12 கி.மீ. தொலைவில் அரியூர் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே ஆற்றில் பாலம் உள்ளது. இந்த அரியூர்ப் பாலம் இந்த வட்டாரத்தில் போக்குவரவுக்கு மிகவும் இன்றியமையாததாகும். -

இங்கே பாலத்தைக் கடந்ததுமே ஆற்றின் தென் கரையில் பாதை இரண்டாகப் பிரிகிறது. அப்படியென்றால், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி - அஃதாவது திருக்கோவலூரை நோக்கி வந்து கொண்டிருக்கும் இன்றியமையாத இரண்டு மாவட்ட நெடும்பாதைகள் இங்கே அரியூர்ப் பாலத்தின் அருகில் ஒன்று கூடுகின்றன என்றும் சொல்லலாம்.

இவ்வாறு திருக்கோவலூரிலிருந்து வந்து அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் இரண்டாகப் பிரிந்த பாதைகளுள் மேற்குப்பாதை, தென்மேற்காகச் சென்று கள்ளக்குறிச்சி வட்டத்திற்குள் புகுந்து ரிஷிவந்தியம் என்னும் ஊரைக் கடந்து தெற்குநோக்கி வளைந்து சென்று தியாக துருக்கம் என்னும் ஊருக்கு அருகில், கள்ளக்குறிச்சி வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையுடன் (State Highways) சேர்ந்து விடுகிறது. மேற்குப் பாதை இப்படியென்றால், கிழக்குப் பாதையோ, தென்கிழக்காகச் சென்று இறையூர் என்னும் ஊருக்கருகில் மீண்டும் தெற்கு நோக்கி வளைந்து எலவானாசூர்க்கோட்டை வழியே ஆசனூர் என்னும் ஊர் வனர சென்று, சென்னையி லிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் செல்லும் பெரு நாட்டு நெடுஞ்சாலையுடன் (National Highways) கூடி விடுகிறது.

அரியூர்ப் பாலத்தைக் கடந்ததும் பிரியும் இந்த இரு பாதைகளும் நோக்கிச் செல்லும் குறி ( இலக்கு) இத்தகையது என்றால், அரியூர்ப் பாலத்தின் இன்றியமையாமை எத்தகையது என்பது புலனாகுமே!

களமருதூர் அருகில்

திருவெண்ணெய் நல்லூர்ப் பக்கத்திலிருந்து களமருதுார் வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று இவ்விரண்டு ஊர்கட்குமிடையே கெடிலத்தைக் கடக்கிறது. ஆற்றுக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் களமருதூர் உள்ளது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. இந்தப் பாதை தெற்கு நோக்கிச் சென்று கீரனூருக்கருகில் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலையுடன் சேர்கிறது.

சேர்ந்த மங்கலம் அருகில் (பாலம்)

சென்னையிலிருந்து திருச்சி வழியாகத் தென்கோடிக்குச் சென்றுகொண்டிருக்கும் பெருநாட்டு (தேசிய) நெடுஞ்சாலை, சென்னைக்கு 185 கி.மீ (114 மைல்) தொலைவில், திருநாவலூரை அடுத்துள்ள சேந்தமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் அழகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது வன்மையானது; இருபக்கங்களிலும் இரும்புச் சுவர் உடையது. இந்தப் பாலம் இல்லையெனில் நாட்டு நெடுஞ்சாலை இல்லை. நாட்டின் நெடுஞ்சாலையின் இன்றியமையாமையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனவே, கெடிலத்தின் பாலங்களுக்குள் இந்தப் பாலமே மிகமிக இன்றியமையாததென்பது போதரும்.

கடலூர் வட்டத்தில்

பன்னுருட்டிக்கு அருகில் (பாலம்)

விக்கிரவாண்டி - விழுப்புரம் பக்கத்திலிருந்து தெற்கு நோக்கிக் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டி - காடாம்புலியூர் வழியாக நெய்வேலிப் பக்கம் செல்லும் விக்கிரவாண்டி லோயர் அணைக்கட்டு ரோடு என்னும் மாவட்ட நெடும்பாதை ஒன்று, பண்ணுருட்டிக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே பாலம் இல்லாதிருந்தது பெருங்குறையாயிருந்தது. அக்குறை 1962 ஆம் ஆண்டு போக்கப்பட்டது. இப்பக்கத்திலிருந்து நெய்வேலிக்குச் செல்ல வேண்டிய ஊர்திகள், பாலம் இல்லாத போது கடலூரைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பண்ணுருட்டிப் பகுதிக்கு, நெய்வேலி நகர் விரிவுப் பகுதி மிகவும் நெருக்கத்தில் வந்து விட்டது. நெய்வேலி நிலக்கரித் திட்டத்திற்கு இப் பாலம் பெரும்பயன் விளைப்பதாகும். தென்பகுதியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ஊர்திகளும் சிதம்பரம் - கடலூர் வழியாகச் சுற்றிக்கொண்டு செல்லாமல், நெய்வேலி பண்ணுருட்டி வழியாகச் சென்று தொலைவை மிச்சப்படுத்திக் கொள்வதற்கும் இப்பாலம் பேருதவி புரிகிறது.

பாலூர்ப் பக்கத்தில் (பாலம்)

பண்ணுருட்டிக்கும் கடலூருக்கும் நடுவில் உள்ள பாலூர் என்னும் ஊரிலிருந்து புறப்பட்டு, நடுவீரப்பட்டு வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று, புறப்படும் இடத்திற்கு அண்மையிலேயே பாலூருக்குப் பக்கத்திலேயே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே 1965 ஆம் ஆண்டில்தான் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாதை தெற்கு நோக்கிக் குறிஞ்சிப்பாடி வரையும் சென்று, கடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி - நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும் பாதையில் (குறிஞ்சிப்பாடிக்கு அருகில்) கலந்துவிடுகிறது.

பாலூர்ப் பாலத்திற்குத் தெற்கே அஃதாவது ஆற்றின் தென்கரையில் சென்னப்ப நாயக்கன் பாளையம் - நடுவீரப்பட்டு என்னும் இரட்டை ஊர்கள் உள்ளன. இந்தப் பகுதி சென்னப்ப நாயக்கருக்கு உரியதாயிருந்த ‘பாளையப்பட்டு’ ஆகும். இந்தப் பாளையப்பட்டில் 8 பேட்டைகளும் 16 குப்பங்களும் அடங்கியிருந்தன. எனவே, இப் பகுதி மிகப்பெரியது என்பது புலப்படும். இப் பகுதியினர் இன்றியமையாத் தேவைகளை முடித்துக்கொள்வதற்குக் கடலூருக்கே வரவேண்டும். சில தேவைகளைப் பண்ணுருட்டியிலும் முடித்துக் கொள்ளலாம். பண்ணுருட்டி, கடலூர் இரு நகரங்களையுமே ஆற்றைக் கடந்தால்தான் அடையமுடியும். மழைக்காலத்தில் வெள்ளப் பெருக்கான நாள்களில் இப் பகுதி மக்கள் அடைந்த அல்லலுக்கு அளவேயில்லை; இந்தக் காலத்தில் உறவினர் குடும்பங்களில் நல்லது கெட்டது நடந்தாலும் அக்கரையினர் அக்கரையிலேயே இக்கரையினர் இக்கரையிலேயே இருக்க வேண்டியதுதான்! உடல் தெம்பும் உள்ள உறுதியும் உடையவர்கள் வேண்டுமானால், ஆற்றின் தென் கரையை ஒட்டிச் செல்லும் மலை வழியாகக் கல்லிலும் முள்ளிலும் ஒற்றையடிப் பாதையிலும் நடந்து கடலூரை அடைய முடியும். பன்னெடுங்காலமாகத் தீராதிருந்த இப் பெருந்தொல்லை 1965 ஆம் ஆண்டு கட்டிய பாலத்தின் வாயிலாகத் தீர்ந்தது. மக்கள் மட்டில்லா மகிழ்வெய்தினர்.

மற்றும், இந்தப் பாலத்திற்குக் கிழக்கே சிறிது தொலைவில்தான் வானமாதேவி அணைக்கட்டு உள்ளது அப்பகுதியில் ஆற்றின் தென்கரையில் வானமாதேவி, திருமாணிகுழி முதலிய ஊர்கள் உள்ளன. இந்தச் சூழ்நிலையையும் இணைத்துப் பார்க்குங்கால், பாலூர்ப் பாலத்தின் இன்றியமையாமை இன்னும் நன்கு புலப்படும்.

வானமாதேவிக்கு

நெல்லிக் குப்பத்திலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்லும் ஒரு சிறு குறும் பாதை கெடிலத்தைக் கடந்து, தென்கரைக்கு அப்பால் சிறிது தொலைவிலுள்ள வானமாதேவிக்குச் செல்கிறது. மிக மிகக் குறுகிய இச் சிறுபாதையில் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லை.

திருவயிந்திரபுரம் அருகில்

கடலுரரின் ஒர் உட்பிரிவாகிய திருப்பாதிரிப் புலியூர் என்னும் நகரிலிருந்து ஒரு மாவட்ட நெடும்பாதை புறப்பட்டு, திருவயிந்திரபுரம், பண்ணுருட்டி, திருவெண்ணெய் நல்லூர் முதலிய ஊர்களின் வழியாகச் சென்று கடலூருக்கு வடமேற்கிலுள்ள திருக்கோவலூரை அடைகிறது. இந்தப் பாதை, தான் புறப்படும் திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள திருவயிந்திரபுரம் என்னும் ஊருக்கு அண்மையில் - திருவயிந்திரபுரம் அணைக்குக் கீழ்ப் பக்கத்தில் - கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. பாலம் இல்லாவிடினும், ஆற்றுப் படுகையின்மேல் பேருந்து வண்டிகள் (பஸ்) செல்கின்றன. திருவதிகைப் பக்கத்திலிருந்து கிழக்குநோக்கி ஓடிவரும் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் வடக்குநோக்கித் திரும்பித் திசைமாற்றம் பெற்றிருப்பதாக முன்பு (பக்கம் : 50 - 51) பார்த்தோமே - அந்த வடக்கு நோக்கிய ஆற்றோட்டத்தின் குறுக்கேதான் இந்தப் பாதை செல்கிறது. இந்தப் பாதைக்கு மேல்புறம் மிக அண்மையில் திருவயிந்திரபுரம் அணை இருப்பதால் ஆற்று நீர் அணைக்கு மேல்புறம் தேக்கப் பட்டுள்ளது; அதனால் அணையின் கீழ்புறம் ஆற்றில் மிக மிகக் குறைந்த நீரே கசிந்து ஒடிக் கொண்டிருக்கிறது; இதனால்தான் இப் பாதையில் பாலம் இல்லாமலேயே பேருந்து வண்டிகள் எளிதில் செல்ல முடிகிறது. ஆனால், மழைக்காலத்தில் மட்டும் செல்ல முடியாது.

கடலூர் நடுவண் (பாலம்)

மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், கூடலூர் என்னும் மூன்று பெரும் பிரிவுகளையுடையது கடலுர் நகராட்சி. இவற்றுள் கூடலூருக்கு ‘முதுநகர் (Old Town) என்றும், ஏனையவற்றிற்குப் ‘புதுநகர்’ (New Town) என்றும் பெயர். புதுநகர்ப் பகுதியில் மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கு தெற்காக ஒடுகிறது. ஆற்றின் கிழக்குக் கரையில் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும், மேற்குக் கரையில் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியும் உள்ளன. இரு பகுதிகட்கும் இடையே தெற்கு நோக்கிச் செல்லும் ஆறு, மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம் பகுதிக்குத் தெற்கே கிழக்கு நோக்கித் திரும்பி ஓடுகிறது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கூடலூர்ப் பகுதி உள்ளது; இவ்விரண்டிற்கும் இடையே ஆறு இல்லை.

கெடிலத்தால் பிரிக்கப்பட்டுள்ள மஞ்சக்குப்பம் -புதுப்பாளையம் பகுதியையும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியையும் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் இணைக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரம் கடலூர் தலைநகரின் உறுப்புகளும் நகராட்சி அலுவலகம் முதலியனவும் மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியில் உள்ளன. பாடல் பெற்ற திருக்கோயிலும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் பெரிய கடைத் தெருவும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியிலும், துறைமுகமும் வாணிகக் கூடங்கள் முதலியனவும் கூடலூர்ப் பகுதியிலும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், இந்தப் பகுதிகளை இணைக்கும் ஆற்றின் பாலம் எவ்வளவு இன்றியமையாதது என்பது சொல்லாமலே விளங்கும்.

பரந்த கடலூர் நகராட்சியிலுள்ள மக்களுக்கும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்களுக்கும் - இன்னும் சொல்லப் போனால் கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்து மக்களுக்கும் உதவுவதோடு இப் பாலத்தின் இன்றியமையாமை அமைந்துவிடவில்லை. பிற மாவட்ட மக்களுக்குங்கூட போக்குவரவுத் துறையில் இப் பாலம் பேருதவி புரிகிறது. சென்னையிலிருந்து மரக்காணம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - புதுச்சேரி வழியாகவோ, அல்லது திண்டிவனம் - விழுப்புரம் வழியாகவோ சிதம்பரத்திற்கும் அதற்கும் தென்பகுதிக்கும் செல்ல வேண்டியவர்களும், அதேபோல் அத்தென்பகுதியிலிருந்து இந்த ஊர்களின் வழியாகச் சென்னை செல்பவர்களும் இடையிலுள்ள கடலூரைக் கடந்தேயாக வேண்டும். இவ்வாறு கடலூரைக்

கடக்க உதவும் மாவட்ட நெடும் பாதை, கடலூர் நகருக்கு நடுவண் உள்ள கெடிலத்தின் பாலத்தின் மேல்தான் செல்கிறது. மற்றும், நெய்வேலி வழியாக விருத்தாசலம் - கடலூர்த் தலைநகர்ப் பகுதியிடையே பயணம் செய்பவர்களும் இப் பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டும். எனவே, போக்குவரவுப் பயனில் இந்தப் பாலம் மிக்க இன்றியமையாமை உடையது என்பது தெளிவு.

இந்தப் பாலத்தில் இரும்பு மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர் இரும்பால் ஆனது. இதில் காலையிலும் மாலையிலும் நெரிசல் மிகுதியாக இருக்கும். அந்நேரத்தில் இப்பாலத்தைக் கடப்பதில் மிக்க விழிப்புத் தேவை. இதற்காகச் சில ஆண்டுகட்கு முன், இந்தப் பாலத்தின் இருமருங்கிலும் நடப்பவர்கட்கெனத் தனியே நடை பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் இதன் நெரிசல் மிகுதி விளங்கும்.

மேலுள்ளது, கடலூர் நடுவண் உள்ள கெடிலப் பாலம். ஆற்றின் கிழக்குக்கரையில் பாலத்தின் தென்புறம் இருந்து கொண்டு எடுத்த படம் இது. இதை எடுத்த நேரம் நடுப்பகல்; ஆதலால் பாலத்தில் போக்குவரவு நெரிசல் காணப்படவில்லை. படம் எடுத்த நாள் 7-1-1967 ஆகும்.

இந்தப் பாலத்தின் தென்பக்கத்தில், சிதைந்து போன சிறிய பாலம் ஒன்று தரை மட்டத்திற்குச் சிறிது உயரமாக இருக்கக் காணலாம். படத்தில் இப்போது தெரிகிற பெரிய பாலம் கட்டுவதற்கு முன் இருந்த பழைய பாலம் இது 7-1-1967 ஆம் நாளைய நிலவரம் இது.

சிதைந்து காணப்படும் இந்தப் பழைய பாலம் இப்போது (1970) புதிய பாலமாகவும் - பெரிய பாலமாகவும் மாற்றப் பட்டுள்ளது. இதை நோக்க, படத்தில் தெரியும் பெரிய பாலம் இப்போது (1970) சிறிய பாலமாகவும் பழைய பாலமாகவும் காணப்படுகிறது. அஃதாவது சிதைந்து போன சிறிய பழைய பாலம் உள்ள இடத்தில், 30,00,000 (30 இலட்சம்) ரூபாய் செலவில் ஒரு பெரிய அகலமான புதிய பாலம் கட்டப்பட்டு 1969 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு ‘அண்ணா பாலம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிகவும் அகலமாக இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதால், ஊறு இன்றிப் போக்குவரவு செம்மையாய் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராயிருப்பதன்றி, நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதையும் கெடிலத்தின் கிளையில் துறைமுகம் இருப்பதையும் ஈண்டு நினைவு கூர்ந்தால், இந்தப் புதிய பாலத்தின் இன்றியமையாமை புலப்படும்.

கெடிலம் ஆறு கள்ளக்குறிச்சி வட்டத்தில் மையனூரில் தோன்றும் இடத்திலிருந்து கடலூரில் கடலில் கலக்கும் இடம் வரைக்கும் இடையிடையே ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளுள் இறுதிப்பாதை கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாதைதான் - இறுதிப் பாலம் கடலூர் நடுவண் உள்ள இந்தப் பாலம்தான்.

ஆற்றின் தோற்றம் தொடங்கி முடிவுவரை இடையிடையே ஐந்து அணைகள் உள்ளமை போலவே ஐந்து பாலங்கள் உள்ளன. அணைகளைப்போலவே பாலங்களும், திருக் கோவலூர் வட்டத்தில் இரண்டும் கடலூர் வட்டத்தில் மூன்றுமாக அமைந்துள்ளன.

மாநில நெடுஞ்சாலை

கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி வட்டத்திலும் திருக்கோவலூர் வட்டத்திலும் கடலூர் வட்டத்திலும் உள்ள இன்றியமையாப் பாதைகளுள் பெரும்பாலன இதுவரை கூறப்பட்டுள்ளன. பெருநாட்டு நெடுஞ்சாலைக்கு (National Highways) அடுத்த படியான இன்றியமையாமையுடைய ஒரே ஒரு பாதைதான் இன்னும் கூறப்படவில்லை. அதுதான் மாநில நெடுஞ்சாலை (State Highways) யாகும். இது கடலூர் - மஞ்சக் குப்பத்தில் புறப்பட்டுத் திருக்கோவலூர்ப் பக்கமாகச் செல்கிறது. இதையொட்டி மாவட்ட நெடும்பாதை ஒன்றும் செல்கிறது. அது முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநில நெடுஞ்சாலை எங்கும் கெடிலத்தைக் குறுக்கிட்டுக் கடக்காததால் இதுவரை இங்கே குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இந்த மாநில நெடுஞ்சாலை கெடிலக்கரைக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்; ஏனெனில் கடலூரில் புறப்படும் இந்த நெடுஞ்சாலை, கடலூரிலிருந்து திருக் கோவலூர்ப் பக்கம் வரைக்கும் ஏறக்குறையக் கெடிலக் கரையை ஒட்டியே எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, பலமுனைப் பயன் நோக்கி இந்த மாநில நெடுஞ்சாலை கெடில நாட்டிற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

பேருந்து வண்டி போக்குவரவு

மேற்கூறிய பாதைகளுள் பெரும்பாலனவற்றில் பேருந்து வண்டி (பஸ்) போக்குவரவு நடைபெறுகிறது. மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரிலிருந்து எல்லாப் பக்கங்கட்கும் போக்கு வரவு நடைபெறுகிறது. புதுச்சேரி காரைக்கால் பேருந்து போக்குவரவு, அரசின் சென்னை - தஞ்சாவூர் பேருந்து போக்குவரவு முதலியன கடலூர் வழியாக நடைபெறுகின்றன. கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வண்டி உண்டு. பண்ணுருட்டிக்கும் கடலூருக்குமிடையே சிமிட்டியால் போடப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலையில் (State Highways) பேருந்து வண்டி, பேருந்து சுமை வண்டி (லாரி), மாட்டு வண்டி, முதலியவற்றின் நெரிசல் மிகுதி. இங்கே அடிக்கடி ஊறுகள் (விபத்துகள்) நேர்வதும் உண்டு. காரணம்: பண்ணுருட்டியும் கடலூரும் பெரிய வணிக நிலையங்களாக இருப்பதும், இரண்டிற்கும் இடையே நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை இருப்பதும் ஆகும். இந்தப்பகுதியில் கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் பேருந்துகளும் மாட்டு வண்டிகளும் மிகுதி.

கடலூர் வட்டத்தில் கடலூரிலும் நெய்வேலியிலும் அகநகர்ப் பேருந்து (டவுன் பஸ்) வசதி உண்டு.

புகைவண்டிப் பாதைப் பாலங்கள்

சேந்தமங்கலம் அருகில்

சென்னைப் பக்கத்திலிருந்து திருச்சி வழியாகத் தென் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலை (National Highways) சென்னைக்கு 185 கி.மீ. தூரத்தில் சேந்தமங்கலம் என்னும் ஊடுக்கருகில் கெடிலத்தைக் கடப்பதாகவும் அங்கே ஒரு தரைவழிப்பாலம் கட்டப் பட்டிருப்பதாகவும் பார்த்தோமே அந்தப் பாலத்திற்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் குறுக்கே புகைவண்டித் தொடர்ப்பாலம் இருக்கிறது. தரைவழிப்பாலத்தில் நின்று கொண்டு பார்த்தால், புகைவண்டித் தொடர்ப்பாலம் நன்றாகத் தெரியும். சென்னைப் பக்கத்திலிருந்து புகைவண்டித் தொடர்ப் பாதையும் தரைவழி நெடுஞ்சாலையும் பக்கத்தில் பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புகைவண்டித் தொடர்ப் பாதை சேந்தமங்கலத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், விழுப்புரம் விருத்தாசலம் பாதையிலுள்ள பரிக்கல் (Station) நிலையத்திற்கும் பாதுார் நிலையத்திற்கும் நடுவே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே உள்ள பாலம் கெடிலத்தின் குறுக்கே உள்ள புகைவண்டிப் பாலங்கள் இரண்டனுள் முதலாவதாகும். இரண்டாவது கடலூர் அருகே உள்ளது.

கடலூர் அருகில்

விழுப்புரம் (Junction) சந்திப்பிலிருந்து கூடலூர் (கடலூர் முதுநகர்) சந்திப்பிற்குச் செல்லும் புகைவண்டித் தொடர்ப் பாதையொன்று, வார்க்கால்பட்டு நிலையத்திற்கும் திருப்பாதிரிப் புலியூர் (கடலூர்ப் புதுநகர்) நிலையத்திற்கும் நடுவே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே ஒரு பெரிய புகைவண்டித் தொடர்ப் பாலம் இருக்கிறது. திருவயிந்திர புரத்திலிருந்து வடக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் மீண்டும் கிழக்கு நோக்கி வளையும் இடத்தில் இந்தப் பாலம் இருக்கிறது. இதற்கு மேல் புகைவண்டிப் பாலம் இல்லை.

புகைவண்டிப் போக்குவரவு

கெடிலக்கரை நாட்டில் இன்றியமையாத இரண்டு புகைவண்டி நிலையச் சந்திப்புக்கள் (Junctions) உள்ளன அவற்றுள் ஒன்று விழுப்புரம் மற்றொன்று கூடலூர். இரண்டுமே ஒவ்வொரு வகையில் மிகவும் இன்றியமையாதனவா யுள்ளன. விருத்தாசலம் சந்திப்பும் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்ததுதான்.

விழுப்புரம் சந்திப்பிலிருந்து ஐந்து பாதைகள் பிரிகின்றன. அவை: (1) செங்கற்பட்டு சந்திப்பு வழியாகச் சென்னை செல்வது; இப்போது இது மின் பாதையாக்கப்பட்டுள்ளது; (2) கூடலூர் சந்திப்பு வழியாக மாயவரம் பக்கம் செல்வது;

(3) விருத்தாசலம் சந்திப்பு நோக்கிச் செல்வது; (4) வேலூர் - காட்பாடி பக்கம் செல்வது (5) புதுச்சேரிக்குச் செல்வது. பல பக்கங்கட்கும் செல்லும் பெரிய சந்திப்பு ஆதலின் விழுப்புரம் சந்திப்பு இன்றியமையாததாய்க் கருதப்படுகிறது.

கூடலூர்ச் சந்திப்பிலிருந்து நான்கு பாதைகள் பிரிகின்றன. அவை: (1) விழுப்புரம் செல்வது; (2) மாயவரம் செல்வது; (3) நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்வது, (4) கூடலூர்த் துறைமுகத்திற்குச் செல்வது. இந்தக் கூடலூர்ச் சந்திப்பு, தன் அருகில் துறைமுகம் உடைமையாலும், நிலக்கரி தோண்டும் நெய்வேலியைப் பக்கத்திலே உடைமையாலும் மிகவும் இன்றியமையாததாய் மதிக்கப்படுகிறது.

விருத்தாசலம் சந்திப்பிலிருந்து கூடலூருக்கு ஒரு பாதையும், திருச்சிக்கு ஒரு பாதையும் சேலத்திற்கு ஒரு பாதையுமாக மூன்று பாதைகள் பிரிகின்றன. அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் செயல் படுவதால் இந்தச் சந்திப்பும் இன்றியமையாமை பெற்று வருகிறது.

மற்றும், நெய்வேலிப் புகைவண்டி நிலையத்திலிருந்து நெய்வேலிக்குள்ளே பொறிகளையும் பொருள்களையும் கொண்டு போவதற்காக 8 கி.மீ. தொலைவு அளவிற்கு ஒரு குறும்பாதை அமைக்கப்பட்டுள்ளது. புகைவண்டி நிலையமே இல்லாது கிடந்த நெய்வேலி, தன் நிலக்கரித் திட்டத்தால், 1961 ஆம் ஆண்டு ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் அளவு பெறுமானமுள்ள புகைவண்டி நிலையக் கட்டடங்களைப் பெற்றிருப்பது பெருவியப்பிற்குரியது.

அடுத்து, கடலூர் வட்டத்தில் கூடலூர்ச் சந்திப்பு இருந்தாலும், அதன் வடக்கே அடுத்தாற்போல் உள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையம் கூடலூர் நிலையத்தினும் ஒருவகையில் சிறப்புடையதாகும். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்கோயிலுக்கும், திருவயிந்திரபுரம் திருமால் கோயிலுக்கும், மஞ்சக்குப்பம் புதுப்பாளையம் பகுதியிலுள்ள மாவட்டத் தலைநகர்த் தலைமைச் செயலகங்கட்கும் செல்பவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் தான் இறங்கவேண்டும். இங்கே விரிவான கட்டடங்களும் மேம்பாலமும் உண்டு. தெற்கேயிருந்து வந்து கூடலூர்ச் சந்திப்போடு முடிந்து நின்றுவிட வேண்டிய வண்டிகள், கூடலூர்ச் சந்திப்பைத் தாண்டித் திருப்பாதிரிப் புலியூருக்கும் வந்துதான் பின்னர் ஒருமுறை கூடலூர்ச் சந்திப்புக்குச் சென்று நின்று தங்கிவிடும். அதேபோல், முதல் முதலாகக் கூடலூர்ச் சந்திப்பிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய வண்டிகளும் கூடலூரிலிருந்து வடக்கு நோக்கித் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்துதான் பிறகு ஒரு முறை கூடலூரை அடைந்து பின்னர்த் தெற்குநோக்கிச் செல்லும். இதிலிருந்து திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தின் இன்றியமையாமை பெரிதும் புலப்படும்.

கூடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டிபோகியும், இட நெருக்கடி மிகுதியாயுள்ளது. இந் நெருக்கடியைக் குறைக்கவேண்டுமாயின், கூடலூர்ச் சந்திப்பிலிருந்து புதுச்சேரிக்குப் புகைவண்டி விடவேண்டும். அவ்வாறு இந் நாள்வரை விடப்படாமைக்குக் காரணம், கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே பல ஆறுகள் இருப்பதே. பொருட் செலவைப் பொருட் படுத்தாமல் இந்த ஆறுகளின்மேல் பாலங்கள் கட்டிப் புகைவண்டிப் பாதை அமைத்தால், இந்தப் பகுதி மக்கள் பெரும்பயன் எய்துவர்.

கெடிலக்கரைப் பகுதிகளிலுள்ள புகைவண்டிப் பாதைகள். 3 அடி 3 3/8 அங்குலம் அகலங்கொண்ட குறுகிய ‘மீட்டர் கேஜ்’ (Metre Gauge) பாதைகளே.

நீர்வழிப் போக்குவரவு

படகு

கூடலூரில் துறைமுகம் இருக்கும் கெடிலக் கிளையாகிய உப்பனாற்றிற்கும் கடலுக்கும் இடையே ஒரு தீவு உள்ளது. அத்தீவை அக்கரை என்று இக்கரையில் உள்ளவர் அழைப்பர். அந்த அக்கரைத் தீவில் கோரி, சிங்காரத் தோப்பு முதலிய சிற்றுார்கள் உள்ளன. கூடலூருக்கும் அக்கரைத் தீவிற்கும் இடையேயுள்ள உப்பனாற்றின் அகலம் ‘முக்கால் பர்லாங்கு’ இருக்கும். ஆற்றைக் கடந்து அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்றுவரப் படகுப் போக்குவரவு நடை பெறுகிறது. படகு என்றால் ஒன்று - இரண்டு அல்ல; ஆறு படகுகட்குமேல் பயன்படுத்தப் படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராட்சி அலுவலர்க்கும் கட்டணம் இல்லை; ஏனையோர் பணங் கொடுத்தே படகுகளில் பயணஞ் செய்ய வேண்டும்.

கப்பல்

இந்தியக் கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறை முகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம்.

இந்தத் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பிறதுறைமுகங்கட்கும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலுமுள்ள சில நாடுகட்கும் கப்பல் போக்குவரவு நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விவரங்களைக் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பிலும், தொழில் வாணிகத் துறைகள் என்னும் தலைப்பிலும் விரிவாகக் காணலாம். இந்தத் துறைமுகத்தில் கப்பல்கள் கரைக்குக் கிழக்கே இரண்டு கி.மீ. தொலைவில் நின்று கொண்டிருக்கும்; துறைமுகத்திற்கும் கப்பல்களுக்கும் இடையே, உப்பனாற்றின் வழியாகப் படகுகள் இயங்கிப் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும். கடல் நீரின் ஏற்றவற்றத்திற்கு இயைய, உப்பனாற்றில் நீர்மட்டம் உயர்ந்திருக்கும்போது படகுகள் விடப்பட்டு நன்கு போய்வரும்.

விண்வழிப் போக்குவரவு

திருக்கோவலூர் வட்டத்தில் செடிலம் ஆற்றிற்குத் தென்மேற்கே ஆறு கி.மீ தொலைவில் உளுந்துர்ப் பேட்டை புகைவண்டி நிலையத்திற்கருகில் ஒரு விண்ணூர்தி நிலையம் (விமானநிலையம்) உள்ளது. இஃது, இரண்டாவது உலகப் பெரும்போரின்போது 1942ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந் நிலையத்தின் வாயிலாக விண்ணுர்திப் போக்குவரவு இப்போது நடைபெறவில்லை இருப்பினும், இன்றியமையாத் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக இது நன்கு காக்கப்பட்டு வருகிறது.

இடைக் காலத்தில் இருமுறை இந் நிலையம் பயன்படுத்தப் பட்டது. 1954ஆம் ஆண்டு சனவரித் திங்களில், இந்தியத் தலைமையமைச்சராயிருந்த நேரு பெருமான் அவர்கள் தமிழகம் வந்தபோது, விண்ணுரர்தியில் சென்னையிலிருந்து இந்த உளுந்துார்ப்பேட்டை நிலையத்தில் வந்திறங்கிப் பின்னர் அங்கிருந்து சிதம்பரம் முதலிய இடங்கட்குச் சென்றார்கள். நேரு அவர்களைப் போலவே, ருசிய நாட்டுத் தலைவர் பிரெஷ்னோ அவர்களும் 1961 ஆம் ஆண்டில் விண்ணுர்தியில் வந்து இந்த நிலையத்தில் இறங்கி நெய்வேலி முதலிய இடங்கட்குச் சென்றார்கள்.

இஃதன்றி, இடையிடையேயும் அடிக்கடி இங்கே வானவூர்திகள் வந்து இறங்குவதுண்டு. அண்மையில் 1966 நவம்பர்த் திங்களில் ஒரு முறையும் 1967 மார்ச்சுத் திங்களில் ஒரு முறையும் இங்கே விண்ணுர்தி இறங்கிற்று. இப்படி ஏதோ தேவையுள்ள போதெல்லாம் இறங்குவது உண்டு. இதிலிருந்து, இந்த நிலையம் தொடர்ந்து காக்கப்பட்டு வருமாற்றை அறியலாம்.

இப்போது வறிதே கிடக்கும் இந் நிலையம், இரண்டாவது உலகப்பெரும் போர்க் காலத்தில் மிக்க நெரிசல் உடையதாயிருந்தது என்பதைப் புதிதாக அறிபவர் பெருவியப்பு அடையாமலிருக்க முடியாது. அப்போது இங்கே நூற்றுக் கணக்கான விண்ணூர்திகள் இருந்தன. போர்ச் சூழ்ச்சிகட்கு ஏற்ற அமைப்புக்களும் இங்கே இருந்தன. இதைக்கொண்டு, இந் நிலையத்தின் பரப்பையும் வன்மை - திண்மையினையும் அறிய முடிகிறது. அந்தப் பரப்பும் வன்மையும் இப்போதும் உள்ளன. போனது வந்ததைப் பழுது பார்த்துச் சீர்திருத்திப் போக்குவரவுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால், தென்னார்க்காடு மாவட்டத்திற்கு வருபவர்களும் இங்கிருந்து செல்பவர்களும் புகைவண்டியிலும் பேருந்து வண்டியிலும் நெடுந்தொலைவு சென்று படும் தொல்லை குறையலாம். இந் நிலையம் நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதாலும் பிற காரணங்களாலும் இனி எதிர்காலத்தில் பெரிய அளவில் விரிவாக்கப் படலாம் என உய்த்துணரலாம். [1]இப்போது, நெய்வேலி நிலக்கரித் திட்டப் பகுதியிலிருந்து இந்தப் பகுதிக்கு ஒரு சிறந்த நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.


  1. *இந்தச் செய்திகள் எழுதிய நாள் : 5.5-1967