கெடிலக் கரை நாகரிகம்/கூடலூர்த் துறைமுகம்

விக்கிமூலம் இலிருந்து
20. கூடலூர்த் துறைமுகம்

பெரிய துறைமுகங்களில் பெரும்பாலும் கப்பல்கள் கரையை யொட்டித் துறைமுகப் பகுதியிலேயே நிற்கும். சிறிய துறைமுகங்களிலோ, கரைக்கு வெகு தொலைவில் கடல் நடுவே கப்பல்கள் நின்றுகொண்டிருக்கும். பெரிய துறைமுகங்களில் கரைக்கும் கப்பலுக்குமாகப் பொறிகளின் துணைகொண்டு அப்படியே சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் செய்யலாம்; சென்னைத் துறைமுகத்தில் இப்படி நடப்பதை நேரில் காணலாம். ஆனால், சிறிய துறைமுகங்களிலோ, கரையோரத் துறைமுகப் பகுதிக்கும் - கடல் நடுவே நிற்கும் கப்பல்களுக்கும் இடையே படகுகள் தூதுபோய் வரும். படகுகளின் வாயிலாகவே சரக்குகளின் ஏற்றுமதி இறக்குமதி நடைபெறும்.

சிறிய துறைமுகங்களிலும் பல வகையுண்டு. கடற் கரையிலிருந்து படகுகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கப்பலுக்குச் செல்வதும், அதேபோல் கப்பலிலிருந்து ஏற்றிக்கொண்டு கரைக்கு வருவதுமாக உள்ளது ஒருவகை. இத்தகைய இடங்களில் கரைக்கும் படகுக்குமாகச் சில அடி தொலைவாயினும் சரக்குகளைக் கைகளால் தூக்கிக்கொண்டு கால்களால் நடந்து போகவும் வரவும் வேண்டும். மற்றும், சரக்குகளின் கனத்துடன் கரையின் மணற்பகுதிக்கும் - ஒரளவு ஆழமான தண்ணிர்ப் பகுதிக்குமாகப் படகுகளை நகர்த்திக்கொண்டு போவதற்கும் வருவதற்கும் மனித முயற்சி பெரிதும் தேவைப்படுகிறது. இந்த நிலைமையைக் காரைக்கால் துறைமுகம் போன்றவற்றில் காணலாம். (காரைக்காலில் மழைக்காலத்தில் மட்டும் அரசலாற்றின் வாயிலாய்ப் போக்குவரவு நடைபெறுவதுண்டு. மற்ற காலத்தில் முகத் துவாரம் அடைபட்டுவிடும்). இன்னன சிறிய துறைமுகங்களுக்குள் மிக மிகச் சிறிய வசதி குறைந்த துறைமுகங்களாம். இந்த வசதிக் குறைவைப் போக்குவதற்காக, கரையிலிருந்து கடலுக்குள் ஒரளவு தொலைவு வரையும் இரும்புப் பாலம் கட்டி ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்ற துறைமுகங்கள் மற்றொருவகை. இது செயற்கை முறைதான். இந்த நிலைமையைப் புதுச்சேரித் துறைமுகம், தூத்துக்குடித் துறைமுகம் முதலியவற்றில் காணலாம். இந்தப் பாலத்தின் முடிவில் கீழே கடலில் படகுகள் மிதந்து கொண்டிருக்கும். தரையிலிருந்து பாலத்தின் வழியாகச் சரக்குகளைக் கொண்டுசென்று படகுகளில் ஏற்றுவர். படகுகள் அவற்றைத் தொலைவில் நிற்கும் கப்பல்களில் கொண்டுபோய் ஏற்றும். அதேபோல் கப்பல்களிலிருந்து சரக்குகள் படகுகளின் வழியாகப் பாலத்தை யடைந்து பின்னர்த் தரைக்குக் கொண்டு வரப்படும். இந்தப் பாலத்திலிருந்து அண்மையிலுள்ள புகைவண்டி நிலையத்திற்குப் புகைவண்டிப் பாதை இணைப்பு இருப்பதும் உண்டு.

இவற்றினும் கூடலூர்த் துறைமுகம் வேறுபட்டது. இத் துறைமுகத்தில், மணலிலிருந்து படகுகளை வலிந்து ஒட்டிச் சென்று கப்பல்களை யடையவேண்டியதில்லை. செயற்கைத் துறைமுக அமைப்பான கடற் பாலமும் இங்கே கிடையாது தேவையும் இல்லை. கூடலூர்த் துறைமுகம் ஒர் இயற்கைத் துறைமுகமாகும். கடற்பாலத்தின் வேலையை இங்கே கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறு செய்து விடுகிறது. உப்பனாற்றிலிருந்து படகுகள் நேரே கடலுக்குள் புகுந்து கப்பல்களை அடைகின்றன. எனவேதான் இஃது இயற்கைத் துறைமுகம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதிகள் உப்பனாற்றின் மேற்குக் கரையில் நடக்கின்றன.இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு வடக்கும் தெற்குமாக உள்ளது: பின்னர்த் தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி வளைந்து திரும்பிக் கடலை அடைகிறது. கடல்நீரின் ஏற்ற வற்றத்திற்கு ஏற்ப உப்பனாற்றின் நீர் மட்டம் பார்த்துப் படகுகள் விடப்படும். உப்பனாற்றங்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்:

இதுதான் கூடலூர்த் துறைமுகத்தின் படம். இஃது, உப்பனாற்றின் மேற்குக் கரையில் நின்று கொண்டு எடுத்த படம். ஆற்றுக்கு அப்புறம் இருப்பது கிழக்குக்கரை. கிழக்குக் கரையில் ஒரு பெரிய தோப்பு தெரிவதைக் காணலாம். அந்தத் தோப்பில் மரங்கள் நீண்டு உயர்ந்திருப்பது தெரியும். ஆனால், அத்தனை மரங்களும் இலை தழை இல்லாத மொட்டை மரங்களே. இந்த மரங்களில் எப்போதுமே இலை தழைகள் இருப்பதில்லை. அப்படியென்றால் இஃது என்ன தோப்பு? இது தோணித் தோப்பு. அஃதாவது, தோப்பு ஒன்றுமில்லை; கிழக்குக் கரையில் நூற்றுக்கணக்கான தோணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்டு உயர்ந்து தெரியும் மரங்கள் எனப்படுபவை, தோணிகளின் நடுவே உள்ள பாய் மரங்களே. அந்தப் பாய் மரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு தோணிகளின் எண்ணிகையை அறியலாம். படத்தில் தோணிகள் தனித் தனியாகத் தெரியவில்லை. ஏதோ ஐந்து அல்லது பத்துத் தோணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் தோணிகளின் உருவம் தனித்தனியாகத் தெரியும். கணக்கற்ற தோணிகள் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கும்பலாய்க் குவிந்திருக்கும் இடத்தில் தனித்தனி உருவம் எப்படித் தெரியும்? இந்தக் காட்சியைக் கொண்டு, கூடலூர்த் துறைமுகத்தின் தகுதியை நாம் மதிப்பிட முடியும்.

படத்தில் நமது வலக்கைப் பக்கமாக அஃதாவது ஆற்றின் மேற்குக் கரையிலும் சில தோணிகள் நின்று கொண்டிருக்கக் காணலாம். அந்தத் தோணிகளில் சரக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் எடுத்தபோது, சேலம், ஹாஸ்பெட் ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்த இரும்புக் கணிக் கற்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இவை, சப்பானுக்கும், ஐரோப்பாவிலுள்ள மேற்கு செர்மனி முதலிய நாடுகட்கும் அனுப்பப் படுகின்றனவாம். ஏற்றுமதி இறக்குமதி குறித்து வாணிகப் பிரிவில் பின்னர் விரிவாகக் காணலாம்.

இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு ஏறக்குறைய ‘முக்கால் பர்லாங்கு’ அகலம் உள்ளது. அதனால் தோணிகள் வசதியாக இயங்க முடிகிறது. கூடலூர்ப் புகைவண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து துறைமுகப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு இருக்கிறது. சரக்குகளைச் சுமந்து கொண்டுவரும் புகைவண்டிப் பெட்டி ஆற்றின் கரையிலேயே வந்து நிற்கும். புகைவண்டிப் பெட்டியிலிருந்து சரக்குகளை எளிதாகத் தோணியில் இறக்கலாம்; அதேபோல் தோணியிலிருந்து பெட்டியில் ஏற்றலாம் சிறு பிள்ளைகளும் இந்த வேலையைச் செய்யும் அளவுக்கு அவ்வளவு அண்மையில் கரையை யொட்டித் தோணிகளும் உள்ளன - புகைவண்டிப் பெட்டிகளும் உள்ளன. இதற்கேற்றாற்போல், ஆற்றின் கரை படிப்படியான சரிவாயில்லாமல் செங்குத்தாய்த் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.

துறைமுகப் பகுதியில் நின்றுகொண்டு கிழக்கே நோக்கினால், இடையிலேயுள்ள அக்கரை எனப்படும் கழிமுகத் தீவுக்கு அப்பால் கடலிலே கப்பல்கள் நின்று கொண்டிருப்பதைக் காணலாம். அதைக் காட்டும் படம் வருமாறு:

இந்தப் படம், உப்பனாற்றின் மேற்குக் கரையில் இருந்துகொண்டு எடுக்கப்பட்டதாகும். துறைமுகப் பகுதிக்கும் கடலுக்கும் நடவே தீவு தெரிவதைக் காணலாம்.

பெரிய சிறிய துறைமுகம்

கூடலூர்த் துறைமுகம் சிறிய துறைமுகமே யெனினும் சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகமாகும். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நான்கு பெரிய துறைமுகங்கள் உள்ளன. அவை: (1) தமிழ் மாநிலத்திலுள்ள சென்னைத் துறைமுகம், (2) ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் துறைமுகம், (3) ஒரிசா மாநிலத்திலுள்ள பாராதிப் (Paradip) துறைமுகம், (4) மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கல்கத்தா துறைமுகம் ஆகியவையாம். இந் நான்கனுள் கல்கத்தா துறைமுகம் கடற்கரையில் இல்லை; உள்ளே வெகு தொலைவு தள்ளி ஃஊக்ளி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்றும் வங்கக் கடற்கரையில் உள்ளன. தமிழ் நாட்டின் தூத்துக்குடித் துறைமுகத்தை, இந் நான்கிற்கும் அடுத்தபடியாகப் பெரிய துறைமுகங்கள் பட்டியலின் இறுதியில் சேர்க்கலாம். அஃதாவது, இஃது இரண்டாந்தரப் பெரிய துறைமுகமாகும். இந்தப் பெரிய துறைமுகங்கள் தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கக் கடற்கரையில் சிறிய துறைமுகங்கள் சிற்சிலவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலுள்ள “ஃபால்சு பாயின்ட் (Faise Point) துறைமுகமும் தர்மா துறைமுகமும், ஆந்திர மாநிலத்திலுள்ள காகிநாடா துறைமுகமும் மசூலிப்பட்டினம் துறைமுகமும், தமிழ் மாநிலத்திலுள்ள கூடலூர்த் துறைமுகமும், நாகப்பட்டினம் துறைமுகமும், புதுவை மாநிலத்திலுள்ள புதுச்சேரி துறைமுகமும் காரைக்கால் துறைமுகமும் சிறியவை. இந்தத் துறைமுகங்களுக்குள் புதுச்சேரியில் கடற் பாலம் வழியாகவும், மற்றவிடங்களில் ஆற்றங் கழி வழியாகவும் ஏற்றுமதி - இறக்குமதிகள் நடைபெறுகின்றன. இந்தச் சிறிய துறைமுகங் களுக்குள் மிகப் பெரியது கூடலூர்த் துறைமுகம். அஃதாவது, இந்தியாவின் கிழக்குக் கரையிலுள்ள சிறிய துறைமுகங் களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகமே.

பாடல் பெற்ற பழைய துறைமுகம்

தமிழ் மாநிலத்தில் தொண்டை நாட்டின் துறைமுகமாயிருந்த மாமல்ல (மகாபலி)புரமும், சோழ நாட்டின் துறைமுகமாயிருந்த காவிரிப்பூம் பட்டினமும், பாண்டி நாட்டின் துறைமுகமாயிருந்த கொற்கையும், சேரநாட்டின் துறைமுகமாயிருந்த முசிறியும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே சங்க இலக்கியங்களில் பழம் பெரு முது புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்டுள்ளன. அந்தோ! அந்தத் துறைமுகங்கள் இப்போது எங்கே? அனைத்துலக நாடுகளுடன் பெரு வாணிகம் புரிந்த அந்தப் பழம்பெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? உலகின் பல நாட்டினரும் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டிருந்த அந்த மாபெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? அவற்றைப் பேணிக் காத்து வந்த தமிழரசர்கள் இப்போது எங்கே? அந்தோ தமிழகமே! நீ அளியை!

தமிழகத்தின் பழம் பெருந் துறைமுகங்கள் மறைந்து விடினும், நடு நாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் துறைமுகமாகிய பழைய கூடலூர்த் துறைமுகமாவது இன்னும் ‘கண்ணை மூஞ்சை ‘ காட்டிக்கொண்டிருப்பது ஒரு நற்பேறே! பழம்பெரு நூல்களில் இல்லாவிடினும், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில், கெடிலக் கிளையின் வாயிலாக நடைபெறும் கூடலூர்த் துறைமுகம் பாராட்டிப் பாடப் பெற்றுள்ளது. இங்கிருந்து சிங்களம், சோனகம், கொங்கணம், கன்னடம் முதலிய நாடுகளுடன் கப்பல் போக்கு வரவு இருந்ததாம். பல நாடுகளிலிருந்தும் பல்வகைப் பொருள்கள் வந்து குவிந்தனவாம். இச் செய்திகளை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் - திருநகரப் படலத்திலுள்ள,

[1]

‘சிங்களம் சோனகம் சென்று பின்னரும்

கொங்கணம் கன்னடம் குறுகி மீடரும்
வங்கம் வெந் நரகினுஞ் சுவர்க்க மற்றினும்
தங்கி மீள் சூக்குமத் தனுவை மானுமால்’. (15)

‘பன்னிறக் கோசிக மணிப் பரப்பு மற்று
உன்னரும் பொருளெலாம் ஒருங்கு தாங்கிவந்து
இந்நகர்க்கு உதவிய வங்கம் யாவையும்
தன்னிடம் தருமுரு மாயை சாலுமால்: (17)

‘எவ்வகைத் தேசத்தின் வளமும் இந்நகர்க்
கவ்வியந் தீர்தரக் கொணர்ந் தளிக்குமந்
நவ்வியை நால்வகைப் பொருளு நாட்டுநூற்
செவ்விய வென்னவே தெரிக்க லாமரோ;’ (20)

முதலிய பாடல்களால் அறியலாம். கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல், இலங்கை வழியாகத் துரக்கிழக்கு ஆசிய நாடுகட்குச் சென்றும், பின்னர் மேற்கு நாடுகட்குச் சென்றும், பின்னர்க் கொங்கணம் மைசூர் மாநிலக் கடற்கரை வழியாகக் கன்னியாகுமரி முனையைக் கடந்து மீண்டும் கூடலூர்த் துறைமுகத்தையடையும் என்ற குறிப்பு மேலுள்ள பாடல்களிலிருந்து புலனாகிறது. அஃதாவது, நுண்ணுடம்பு (சூக்குமத் தனு) செய்துள்ள தீவினையை நுகர நிரயத்திற்கும் (நரகத்திற்கும்) நல்வினையை நுகர வானுலகிற்கும் (சுவர்க்கத்திற்கும்) சென்று மீண்டும் மண்ணுலகத்திற்கு வருவதுபோல், கூடலூர்த் துறைமுகத்திலிருந்து புறப்படும் கப்பல் கீழை நாடுகட்கும் மேலை நாடுகட்கும் சென்று மீண்டும் கூடலூரை அடைவதாக முதல் பாட்டில் ('சிங்களம்......மா னுமால்') கூறப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராண ஆசிரியராகிய சிதம்பர முனிவர் நேரில் பார்த்தே எழுதியிருக்கவேண்டும். இப்பொழுதும் கூடலூர் மீனவர்கள் படகுகளின் வாயிலாகவே இலங்கை வரையும் சென்று சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்துவரும் திறல் உடையவராயிருக்கின்றனர்.

பாடல் பெற்றதும் பழமையானதுமாகிய இந்தத் துறைமுகத்தில், ஒரு துறைமுகத்திற்கு இருக்கவேண்டிய கலங்கரை விளக்கு, சுமை தூக்கிகள் (Cranes), ஏராளமான படகுகள், தொழிலாளிகள், சேமிப்புக் கிடங்கு, கப்பல் வாணிக நிலையங்கள், புகைவண்டி இணைப்பு முதலிய அனைத்து வசதிகளும் உள்ளன. மிக்க பொருட் செலவுடன் மேலும் முயன்றால், இந்தத் துறைமுகமும் ஒரு பெரிய துறைமுகமாக மாறலாம்; பக்கத்திலேயே நெய்வேலித் திட்டமும் அதன் இணைப்பான சேலம் உருக்காலைத் திட்டமும் இருப்பதால் எதிர் காலத்தில் இது நடைபெறலாம்.


  1. *15 - சிங்களம் = இலங்கை, சோனகம் = சீனம், மலாசியா, இந்தோனேசியா, அரேபியா, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளைக் குறிக்கும் பொதுப் பெயர். கொங்கணம் = மகாராட்டிரத்திற்கும் மைசூர் மாநிலத்திற்கும் இடையில் கொங்கணமொழி பேசும் பகுதி, கன்னடம் = கன்னடம் பேசும் மைசூர் மாநிலம்; வங்கம் = கப்பல். 20 - நவ்வி = கப்பல்.