கெடிலக் கரை நாகரிகம்/தொழில் - வாணிகம்

விக்கிமூலம் இலிருந்து
21. தொழில் - வாணிகம்

கைத்தொழில்கள்

கெடில நாட்டில் இப்போது பல வேறு பெருந்தொழில் களுக்கும் சிறு தொழில்கட்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பினும் அன்றும் இன்றுமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் பெரிய கைத்தொழில் நெசவுதான். இத்தொழில் பரவலாகப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

நெசவு

பண்டு நெசவுக்குரிய நூல்கள் கையாலேயே நூற்கப்பட்டன. இன்று ஆலைகளில் நூற்கப்பட்டு கிடைக்கின்றன. 20,40, 60, 80, 100 ஆம் எண்ணுள்ள நூல் வகைகளால் உடைகள் நெய்யப்படுகின்றன.

பண்ணுருட்டி, புதுப்பேட்டை ஆனத்துார், குடுமியாங் குப்பம், சென்னப்பநாய்க்கன் பாளையம், நடுவீரப்பட்டு, பட்டாம்பாக்கம், காராமணிக்குப்பம், குணமங்கலம், நல்லாற்றுார், கம்மியன் பேட்டை, வண்டிப்பாளையம், புருகேசு பேட்டை, வசந்தராயன் பாளையம், கூடலூர், குறிஞ்சிப்பாடி, கருங்குழி முதலிய ஊர்களில் நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. இங்கெல்லாம் வேட்டி, துண்டு, சேலை, கைலி (லுங்கி) முதலிய வகைகள் நெய்யப்படுகின்றன. இப்போது பெரும்பாலான ஊர்களில் கைலி மிகுதியாக நெய்யப்படுகிறது. கடலூர் - வசந்தராயன் பாளையத்தில் பட்டு நெசவு நடைபெறுகிறது. கடலூர் - கேப்பர் மலைச்சிறையில் சமக்காளம் - விரிப்பு முதலியவை நெய்யப்படுகின்றன. கள்ளக்குறிச்சி திருக்கோவலூர் வட்டங்களில் சில ஊர்களில் கம்பளி நூற்பும், கம்பளி நெசவும் நடைபெறுகின்றன. கள்ளக் குறிச்சி வட்டத்தில் சில இடங்களில் சணல் நூற்பும் சணல் பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன.

நெசவு பெரும்பாலும் கைத்தறிகள் வாயிலாகவே நடைபெறுகிறது. ஒரு சில இடங்களில் விசைத்தறிகள் இயங்குகின்றன. மின்சாரத்தால் ஒடும் விசைத்தறிகள் ஏற்படுவதற்கு முன் தோன்றி இப்போது கையால் நெய்யப்படும் கைத்தறிகள் விசைத்தறிகள் என்று சொல்லப்படுகின்றன.

இதற்கும் முன்பு கையாலேயே நாடாவைப்போட்டுக் கோத்து வாங்கி நெய்தார்கள்; அப்போது அதனைக் கைத்தறி என்றார்கள். பின்னர், கையாலேயே சுங்கு பிடித்து இழுத்து நாடாவைத் தானாகவே போய் வரும்படி செய்தார்கள்; இதற்கு விசைத்தறி என்னும் பெயர் கொடுக்கப்பட்டது; இப்போது இந்தக் கைவிசைத்தறியைத்தான் கைத்தறி என்கிறோம். மின்சாரத்தால் ஒடும் தறி விசைத்தறி எனப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலையில் வேலை பார்க்கிறார் என்றால், ஆலை வேலை அவரோடு சரி, ஒருவர் அலுவலகத்தில் (ஆபிசில்) வேலை பார்க்கிறார் என்றால், அந்த வேலை அவரோடு சரி. ஆனால் நெசவுத்தொழில் அப்படிப்பட்டதன்று. ஒரு வீட்டில் ஒரு தறி ஆடுகிறதென்றால், அந்தக் குடும்பம் முழுதும் அதற்காக வேலை செய்ய வேண்டும். நூல் இழைத்தல், பாவு ஒடுதல், பாவு தோய்தல், பாவு பிணைத்தல், தார் சுற்றுதல் முதலிய பல்வேறு தொழில்கள் நெசவுக்கு முன் செய்யப்படுகின்றன. இத் தொழில்களில் பெண்களுக்கும் சிறுவருக்கும் பங்கு உண்டு. பெண்கள் - சிறுவர்கள் - கிழங்கட்டுகள் எல்லோருமாகச் சேர்ந்து சில்லறை வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தால்தான் ஆடவன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருக்க முடியும். ஒரு சில ஏழைக் குடும்பங்களில் பெண்களும் தறி நெய்கிறார்கள்.

செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலிய இனத்தவர் நெசவு வேலை செய்கின்றனர். நெசவு இவர்களின் குலத்தொழிலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல்வேறு இனத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர்கள் குழு குழுவாக வாழ்கின்றனர். அவர்கள் வாழும் ஊர்களில் அவர்களே பெரும்பான்மையினராயுள்ளனர். மேலும் இந்தத் தொழில் கூடிச் செய்ய வேண்டிய குடிசைத் தொழிலாகும். மானங்காக்கும் இந்தத் தொழிலில் எந்தவகைத் தீமையும் இல்லையாதலின் இதனைத் திருவள்ளுவர் செய்தார் என்று சொல்லப்படுகிறது. ‘செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்கின், நெய்யுந் தொழிற்கு நிகரில்லை’ என்னும் முதுமொழியும் உண்டு.

முன்காலத்தில் கைத்தறித் துணிகள் தறியின் மேலேயே விற்பனையானதுண்டு. இப்போது நெசவாளர்கள் துணிக்கடைகளில் கொண்டுபோய்க் கொடுத்தும் சந்தைகட்குக் கொண்டு போயும், தலை மூட்டையாக ஊர் ஊராகத் தெருத் தெருவாகச் சுற்றியும் துணிகளை விற்பனை செய்கிறார்கள். இஃதன்றிப் பெரிய துணி வணிகர்கள் நெசவாளர்களிடமிருந்து துணிகளை வாங்கி வெளியூர்கட்கு அனுப்புவதோடு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

இப்பகுதியில் உண்டாக்கப்படும் கைலி வகைகள் வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு வெளிநாட்டுச் செலாவணியை நம் நாட்டுக்குத் தேடித்தருகின்றன. இந்த வகையில் கைலி நெசவு நாட்டுக்குப் பெருந்தொண்டு புரிகிறதென்று சொல்லலாம். கடலூர், குறிஞ்சிப்பாடி, சென்னப்ப நாய்க்கன் பாளையம் முதலிய இடங்களில் பெரிய கைலி வணிக நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்கட்கு நம் நாட்டில் சென்னையிலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஏடன் முதலிய நாடுகளிலும் கிளைநிலையங்கள் உள்ளன. கெடில நாட்டுக் கைலிகள், சிலோன், பெனாங்கு, மலேயா, சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, சாவா, சுமத்ரா, தாய்லாந்து, பர்மா, இந்தோ சைனா, ஹாங்காங், சப்பான், ஏடன், மோரிஸ், அமெரிக்கா, பாகிஸ்தான் முதலிய நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன - செய்யப்படுகின்றன. இப்போது இப் பகுதியிலிருந்து கைலிகள் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ என்னும் பெயரில் சென்னை வழியாக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு அமெரிக்க டாலரைப் பெற்றுத் தருகின்றன.

கைலி வாணிகம் புரியும் வணிக நிலையங்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய் முதலீட்டில் நடைபெறுகின்றன. அரை கோடி, முக்கால் கோடி, ஒரு கோடி ரூபாய் முதலீடுகளில் நடைபெறும் நிலையங்களும் உள எனலாம். இப்போது, பல்வேறு இடங்களிலும் நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றி நெசவாளர்க்கும் நெசவுத்தொழிற்கும் நன்மை புரிந்து வருகின்றன.

இந்தப் பகுதிக் கைலிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக அயல்நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சில ஆண்டுகட்கு முன்வரையும் கெடிலக்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடைபெற்று வந்தது.

நெசவைச் சார்ந்து, நூலுக்கும் துணிகளுக்கும் சாயம் போடும் தொழில் பலவிடங்களில் விரிவாக நடைறெகிறது. துணிகளுக்கு அச்சுக் குத்தும் தொழிலும் சில விடங்களில் ஒரளவு நடைபெறுகிறது. இது முன்பு விரிவாக நடைபெற்றதுண்டு.

பல்வேறு கைத்தொழில்கள்

துணி நெசவேயன்றி, கோரைப்பாய், ஈச்சம்பாய், பனையோலைப் பொருள்கள், மூங்கில் பொருள்கள், {hwe|{சூளை,|செங்கற்சூளை}} மண் பாண்டங்கள், செம்பு பித்தளைக் கலங்கள், வண்ணப் பொம்மைகள். மரவேலைப் பொருட்கள், தென்னங் கீற்றுகள், கயிறுகள், கயிற்றுப் பொருள்கள், மீன் வலைகள், படகுகள் முதலிய பொருள்களைச் செய்தலோடு பல தொழில்கள் பல்வேறிடங்களில் பரவலாகவும் விரிவாகவும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், வண்டிப்பாளையம் ஆகிய இடங்கள் பல வண்ண மண் பொம்மைகளுக்குப் பெயர் போனவை. உப்பள வேலை, துறைமுக வேலை, கயிறு திரித்தல், கயிற்றுப் பொருள்கள் செய்தல், மீன் பிடித்தல், மீன் வலை பின்னுதல், மரம் அறுத்தல், படகு செய்தல், படகோட்டுதல் ஆகிய தொழில்கள் கூடலூரில் நடைபெறுகின்றன. கள்ளக்குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் மரச்சிற்ப வேலையும், சந்தன மரத்தால் சீப்பு, விசிறி, ஊன்றுதடி முதலிய பொருள்கள் செய்தலும் நடைபெறுகின்றன. பண்ணுருட்டியில் பாக்குச்சாயம் ஏற்றல், செங்கல் சூளைபோடல், மண் பாண்டத்தொழில் முதலியவை நடத்தப் பெறுகின்றன.

சிறு தொழிற்சாலைகள்

செக்கில் எண்ணெய் ஆட்டும் தொழில் சிற்றுார்களில் நடைபெறுவதன்றி, நகரங்களில் ஆலைகளில் எண்ணெய் ஆட்டப்படுகிறது. திருக்கோவலூர், பண்ணுருட்டி, கூடலூர் முதலிய இடங்களில் எண்ணெய் ஆலைகள் பல உள்ளன. பண்ணுருட்டியில் மணிலா எண்ணெய் ஆலையுடன் முந்திரி எண்ணெய் ஆலையும் இருக்கின்றது; இவ்வூரிலிருந்து, முந்திரிப் பயறு தூய்மை செய்யப்பட்டு, அமெரிக்கா போன்ற வெளிநாடுகட்கு அனுப்பப்பட்டு அந்நாடுகளின் நாணயங்களை நம் நாட்டிற்குப் பெற்றுத் தருகிறது.

முன்பு திருவயிந்திரபுரத்தில் கையால் காகிதம் செய்யும் தொழிற்சாலை இருந்தது; இப்போது எடுபட்டு விட்டது. கடலூரில் காகிதப் பொம்மைத் தொழிற்சாலை இருக்கிறது. உரத்தொழிற்சாலைகள், சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை முதலியவை கூடலூரில் உள்ளன. அரசினரின் அம்பர் சர்க்கா நிலையம் வடலூரில் உள்ளது.

பெரிய தொழிற்சாலைகள்

கெடிலக்கரைப் பகுதியில் - தென்னார்க்காடு மாவட்டத்திலேயே ஒரே ஒரு பெரிய தொழிற்சாலைதான் இருந்து வந்தது; அதுதான் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை. பின்னரே அண்மையில் நெய்வேலியில் பெரிய தொழிற் சாலைகள் தோன்றியுள்ளன.

நெல்லிக்குப்பத்தில்

தாமஸ் பாரி (Thomas Parry), என்னும் ஆங்கிலேயர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக 1788இல் தமிழகம் வந்தார். இவர் நாளடைவில் தனி வாணிகம் புரியத் தொடங்கினார். இவர் பெயரைக் கொண்டதே ‘பாரி கம்பெனி’ என்னும் நிறுவனம். இந்நிறுவனம் தென்னார்க்காடு மாவட்டத்தில் பல இடங்களில் சர்க்கரை ஆலைகள் நிறுவிற்று. அவற்றுள் நின்று நிலைத்தது நெல்லிக்குப்பம் ஆலை ஒன்றுதான்; இது 1848இல் நிறுவப்பட்டது. இந்த ஆலைக்கு அளிக்கப்பட்ட பெயர் ‘East India Sugar Distilleries and Sugar Factories’ என்பதாகும். இது தொடக்கத்தில் சர்க்கரை உண்டாக்கியதுடன் ஆண்டொன்றுக்கு 1,60,000 ‘காலன்’ சாராயமும் காய்ச்சி விற்பனை செய்தது. பின்னர்ச் சாராயம் நிறுத்தப்பட்டது; இப்போது சர்க்கரை வேலை மட்டும் விரிவாகக் கவனிக்கப்படுகிறது. மிகப்பெரிய முதலீட்டில் மூவாயிரவர்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த ஆலை இந்தியாவின் மிகச்சிறந்த சர்க்கரை ஆலையாக மதிக்கப்படுகிறது. இங்கே பெரிய அளவில் தொழிலாளர் சங்கமும் இயங்கி வருகிறது.

இந்த ஆலை ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமானம் உள்ள மூன்றரை லட்சம் டன் (Tons) கரும்புகளை வாங்குகிறது; டிசம்பர் திங்கட்கு மேல் சூன் திங்கட்குள் உள்ள கால அளவில், மூன்றரைக் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள முப்பதாயிரம் டன் (Tons) சர்க்கரை உண்டாக்குகிறது. மற்றும் இங்கே, பத்து இலட்சம் காலன் (gallons) ‘ஸ்பிரிட்’ (Spirits), இருபது இலட்சம் பவுண்ட் (Pounds) ‘கார்பானிக் ஆசிட் காஸ்’ (Carbonic Acid Gas) ஆகியவையும் ஆண்டுதோறும் உண்டாக்கப்படுகின்றன. இங்கே உண்டாக்கப்படும் பொருள்கள் தமிழகம், கேரளம் முதலிய மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் சர்க்கரை ஆலையேயன்றி , 50,00,000 ரூபாய் முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலையும் நடத்துகின்றனர். இதன் பெயர் “Parrys Confectionary, Limited’ என்பதாகும். இங்கே உண்டாக்கப்படும் இனிப்பு வகைகள் (மிட்டாய் இனங்கள்) இந்தியா முழுவதிலும் விற்கப்படுகின்றன.

ஐ. டபிள்யூ. ஜே. புஷ் புரொடக்ட்ஸ் கம்பெனி லிமிடெட் (I.W.J. Bush Products Company Limited.) என்னும் நிறுவனத்தார் நெல்லிக்குப்பத்தில் 4,00,000 ரூபாய் முதலீட்டில் நறுமணப் பொருள் (Flavouring Essences) p_airl Tä65th Glåm golff firóðau ஒன்று அமைத்து நடத்தி வருகின்றனர். இது, ஆண்டொன்றுக்கு 2,50,000 பவுண்ட் நறுமணச்சாரப் பொருள் வகைகளை உண்டாக்குகிறது.

கூடலூரில்

கூடலூரில், ‘கடலூர் ஆயில் புரொடக்ட்ஸ் கார்ப்பொரேஷன்” என்னும் நிறுவனத்தார் ‘மணிலா எண்ணெய்த் தொழிற்சாலை’ ஒன்று நடத்துகின்றனர். இதில் நாள் தோறும் பத்து ‘டன் எண்ணெய் உண்டாக்கப்படுகிறது. இங்கிருந்து எண்ணெய் சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகட்குச் செல்கிறது.

நெய்வேலியில்

இந்திய அரசினரால் 1955ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு (Neyveli Lignite Corporation Private Limited.) நூற்றிருபது கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட முதலீட்டுடன் நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் செய்தி உலகறிந்த தொன்றாகும்; இங்கே ஆண்டுதோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு அச்சுக் கட்டியாக்கப்படுகின்றது. அடுப்புக் கரிக்கட்டிகளும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. ரஷிய உதவியுடன் அனல் மின்சார நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே தொடங்கப்பட்டுள்ள யூரியா உரத்தொழிற்சாலை உலகிலேயே மிகப் பெரியதென மதிக்கப்படுகிறது. நெய்வேலி நிலக்கரிக் கழிவைக் கொண்டு தார், டீசல் முதலியனவும், களிமண் வகைகளைக் கொண்டு சிமிட்டி, மின் கருவிகள், அழகுப் பொருள்கள் முதலியனவும் உண்டாக்கும் தொழில் நிலையங்கள் உருவாகியுள்ளன; நெய்வேலி நிலக்கரித் திட்டத்தின் சார்பாக இன்னும் எஃகு இரும்பு முதலிய பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்படலாம். இங்கே பல்லாயிரவர் பணிசெய்து வாழ்கின்றனர்.

வடலூரில்

வடலூர்ப் பகுதியில் ‘சேஷசாயி இண்டஸ்ட்ரீஸ்’ என்னும் நிறுவனம், மின்கருவித் தொழிற்சாலை நடத்தி வருகிறது. இதன் முதலீட்டை விசாரித்தபோது, முக்கால் கோடிக்கு மேல் இருக்குமெனத் தெரிய வந்தது. பக்கத்திலுள்ள நெய்வேலித் திட்டத்தின் துணையால் கிடைக்கும் களிமண்ணைக் கொண்டு மின்சார இன்சுலேட்டர் முதலிய மின் கருவிகள் இங்கே செய்யப்படுகின்றன. இன்னும் பல்வேறு வகைப் பொருள்களும் இங்கே உருவாக்கப்படுகின்றன.

இன்னும் எதிர்கலாத்தில், நெய்வேலி, நிலக்கரித் திட்டத்தின் பயனாய்க் கடலூர் வட்டத்தில் எத்தனையோ செல்வ நிலையங்கள் எழக்கூடும்.

கள்ளக்குறிச்சியில்

கள்ளக்குறிச்சியை யடுத்த மூங்கிலடித்துறை என்னுமிடத்தில், அண்மையில் கூட்டுறவு முறையில் ஒரு கரும்பாலை தொடங்கப் பெற்றுள்ளது.

வாணிக முறை

கெடில நாட்டு வாணிகப் பொருள்களைத் தொகுத்துச் சொல்லின், உணவு தானியங்கள், பயறு, கொட்டை வகைகள், கரும்பு, சர்க்கரை, இனிப்பு வகைகள், வெல்லம், உப்பு, எண்ணெய் விதைகள், எண்ணெய்கள், நறுமணப்பொருள்கள், பலசரக்குப் பொருள்கள், சாயப்பொருள்கள், துணிவகைகள், நிலக்கரி வகைகள், தோல் வகைகள், மரப் பொருள்கள், பாய் வகைகள், பாண்ட வகைகள், பொம்மைகள், பாக்கு, வெற்றிலை, சாக்கு, கயிற்றுப் பொருள்கள், மின் கருவிகள், உரம் முதலியவற்றைச் சொல்லலாம். இப்பொருள்கள் உள் நாட்டில் புகை வண்டி, பேருந்து, சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் வாயிலாகப் போக்கு வரவு செய்யப்பட்டு விற்பனையாகின்றன. பொருள்கள் கடைத்தெருக்களிலும், சந்தைகளிலும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. பண்ணுருட்டி, வளையக்காரன் குப்பம், காராமணிக்குப்பம், புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, உளுந்துார்ப்பேட்டை, மதகடிப் பட்டு, கூட்டேரிப்பட்டு முதலிய இடங்களில் சந்தை கூடும். பண்ணுருட்டி, கடலூர், நெய்வேலி, உளுந்துர்ப் பேட்டை ஆகிய இடங்களில் பெருவாரியாக வாணிகம் நடைபெறுகிறது.

ஏற்றுமதி - இறக்குமதிகள்

கெடிலநாடு கூடலூர்த் துறைமுகம், சென்னைத் துறைமுகம் ஆகிய இரண்டின் வாயிலாக வெளிநாடுகளுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்கிறது. முன்பு கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாக நடைபெற்ற சில ஏற்றுமதி - இறக்குமதிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக நடைபெறுகின்றன. அவற்றுள் கைலி ஏற்றுமதி குறிப்பிடத்தக்கது. சென்னைத் துறைமுகத்தில் நெரிசல் மிகுந்து விட்டதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித்திட்டம் நடைபெறுவதாலும் இப்போது மீண்டும் கெடிலக்கரைக் கூடலூர்த் துறைமுகம் சிறப்பிடம் பெறத் தொடங்கியுள்ளது.

இத்துறைமுகத்தில் முன்பு கைலி வகைகள், அச்சு குத்தின உடை வகைகள், மணிலாப்பயறு, மணிலா எண்ணெய், எள், இரும்பு, மட்பாண்ட வகைகள், கட்டடப் பொருள்கள் முதலியன ஏற்றுமதியாயின. தேக்கு, பாக்கு, பர்மா அரிசி, இந்தோனேசியாவிலிருந்து சர்க்கரை, இன்னும் பல நாடுகளிலிருந்து நூல், நிலக்கரி உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவை இறக்குமதியாயின. மொத்தத்தில் ஏற்றுமதியை விட இறக்குமதியின் பெறுமானமே கூடுதலாக இருந்தது எனலாம்; எடுத்துக்காட்டாக, 1955 - 56ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து கூடலூர்த் துறைமுகத்தில் வந்து இறங்கிய நிலக்கரி, உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 95 இலட்சம் ரூபாயாகும்; அதே காலத்தில் இங்கிருந்து வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கட்டடப் பொருள்கள், பொறியியற் பொருள்கள், மட்பாண்ட வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 5 இலட்சம் ரூபாயேயாகும். 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து அச்சு குத்தின துணிகள் இலங்கை, பிலிப்பைன்சு முதலிய நாடுகட்குச் சென்றன; இந்த நூற்றாண்டில் நின்று விட்டன. இப்படி இங்கிருந்து முன்பு ஏற்றுமதியான பொருள்கள் சில இப்போது நின்றுவிட்டன.

இப்போது கூடலுர்த் துறைமுகத்திலிருந்து இரும்புத் தாதுக்கட்டிகள், சர்க்கரை, சாக்லெட் போன்ற இனிப்பு வகைகள், முந்திரிப்பருப்பு, ஆசிட், மட்பாண்ட வகைகள், மணிலாப் பொருள்கள் முதலியவை ஏற்றுமதியாகின்றன. இரும்புத் தாதுக்கட்டிகள், ஹாஸ்பெட், பெல்லாரி ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்து, பின் இந்தத் துறைமுகத்தின் வாயிலாகச் சப்பான் நாட்டிற்கு ஏற்றுமதியாகின்றன. மேலை நாடுகளிலிருந்து புகைவண்டிக்கு வேண்டிய நிலக்கரி வந்து இறக்குமதியாகிறது. மேற்கு செர்மனி, பெல்ஜியம் முதலிய நாடுகளிலிருந்து உரவகைகள் வந்து இறங்குகின்றன. இன்னும் பல இடங்களிலிருந்து நூல் - துணிவகைகள், இரசாயனப் பொருள் வகைகள் முதலியவை வருகின்றன. இப்போது இத்துறைமுகத்தின் ஏற்றுமதி இறக்குமதி அளவு 5 இலட்சம் டன்’ எனலாம். எதிர்காலத்தில் இஃது இரட்டிப்பாகும்; இது, நெய்வேலித் திட்ட வளர்ச்சியின் அடிப்படையைப் பொறுத்து எதிர்பார்க்கப்படுகிறது.

கூடலூர்த் துறைமுகத்திலிருந்து நாவாய்கள் இந்தியத் துறைமுகங்கட்கும் அயல்நாடுகளின் துறைமுகங்கட்கும் சென்று வருவதாகத் திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் - பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருப்பது உண்மையான செய்தியே. வெள்ளைக்காரர் காலத்தில் வாணிகக் கப்பல்கள் இங்கிருந்தபடி இந்தியக்கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கட்கும் வழியிலுள்ள இலங்கைத் துறைமுகத்திற்கும் சென்று வந்தன; எனவே, இத்துறைமுகம் கப்பல்கட்கு ஒர் இன்றியமையா நிலையாக (முக்கியக்கேந்திரமாக) இருந்து வந்தமை புலனாகும். பாய்மரக்கப்பல்கள் இங்கிருந்து இரண்டு வார காலத்தில் இலங்கையை அடைந்துவிடும், சுருங்கக் கூறின், சப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பிரான்சு, பெல்சியம், செர்மனி முதலிய வெளிநாட்டுத் துறைமுகங்கள் இந்தியத் துறைமுகங்கள் ஆகியவற்றோடு கூடலூர்த் துறைமுகம் தொடர்பு கொண்டு வருகிறது எனலாம். ஒரு துறைமுகத்திற்கு இருக்க வேண்டிய தூக்கி இறக்கிகள், படகுகள், கிடங்குகள், கப்பல் வாணிக நிறுவனங்கள், கலங்கரை விளக்கம், புகைவண்டிப் பாதை தொடர்பு முதலிய வசதிகள் பலவும் இங்கே உள்ளன. இன்னும் இங்கே எத்தனையோ வளர்ச்சிகள் காத்து நிற்கின்றன. இந்தியக்கிழக்குக் கடற்கரை யிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம் என்பது ஈண்டு மீண்டும் நினைவு கூரத்தக்கது.

இங்குள்ள கப்பல் வாணிக நிறுவனங்களுள் பாரி கம்பெனி நிறுவனம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தார் கப்பல் வாணிக ஏற்றுமதி இறக்குமதித் தரகுப் பேராளராக இருந்து கொண்டு விரிவான முறையில் தொழில் - வாணிகம் நடத்தி வருகின்றனர். கூடலூர்த் துறைமுகத்தில் தொழிலாளர் சங்கங்களும் உள்ளன.

கூட்டுறவு

இந்தக்காலத்து வளர்ச்சியின் பயனாகக் கூட்டுறவு முறையில் வங்கி, வாணிக நிறுவனங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற் சாலைகள், தொழிற்சங்கங்கள் முதலியவை தோன்றித் தொழிற் பெருக்கத்திற்கும் வாணிக வளர்ச்சிக்கும் உதவி வருகின்றன.