கொல்லிமலைக் குள்ளன்/2

விக்கிமூலம் இலிருந்து
2

பொம்மைக்கூத்திற்குப் போனபோது வீர்சீங் இவர்களை அன்போடு வரவேற்று, வசதியான இடத்திலே அமரச் செய்தார். “அப்பா வரமாட்டாங்கோ?” என்று அவர் கொச்சைத் தமிழிலே கேட்டார். "அப்பாவுக்கு இந்தத் தேர்விலே மாணவர்கள் எழுதிய விடைகளைத் திருத்தும் வேலை இருக்கிறது என்றாள் கண்ணகி. வீர்சிங் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பொம்மைக்கூத்தைத் தொடங்குவதற்குப் போய்விட்டார்.

"கண்ணகி, அப்பா நம்மிடம் சொல்லியிருப்பதை மறந்து விட்டாயா? அவர் செய்கின்ற வேலையை யாரிடமும் சொல்லக் கூடாது" என்று தங்கமணி கடிந்துகொண்டான்.

"இவரிடம் சொன்னால் என்ன? இவர் நம்ம ஊர்க்காரர் அல்லவே!" என்றாள் கண்ணகி.

"இதே பழக்கந்தான் எல்லாரிடமும் வரும். அதனால் தான் சொல்லக்கூடாது" என்று தங்கமணி எச்சரிக்கை செய்தான்.

இதுவரை சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம், ஜின்காவின் முதுகிலே தட்டிக்கொடுத்து. “ஜின்கா, அதோ மேடையிலே பார், உன்னைப்போல ஒரு பொம்மைக்குரங்கு ஆட்டம் போட வந்திருக்கிறது என்று உற்சாகமாகக் கூவினான்.

பேச்சை விட்டுவிட்டு எல்லாரும் பொம்மைக்கூத்தின் தொடக்கக் காட்சியிலேயே கவனம் செலுத்தினார்கள். ஜின்காவிற்கு ஒரே உற்சாகம். பொம்மைக்குரங்கு ஆடுவதையும், மற்ற பொம்மைகள் ஆடுவதையும் பார்த்து அதுவும் ஆடத் தொடங்கிவிட்டது.

எல்லாருக்கும் பொம்மைக்கூத்து மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்குத் திரும்பிய பிறகும் உறங்கச் செல்லாமல் மூன்று பேரும் அந்தக் கூத்தைப் பற்றியே உற்சாகத்தோடு வெகு நேரம்வரை பேசிக்கொண்டிருந்தார்கள். ஜின்கா அந்த பொம்மைகளின் ஆட்டங்களையெல்லாம் ஆடிக் காண்பித்துக் கொண்டிருந்தது.

பொம்மைக்கூத்தைப்பற்றிப் பேசுவதிலும், ஜின்கா ஆடுவதைக் கண்டு களிப்பதிலும் இரண்டு நாள்கள் இன்பமாகக் கழிந்தன.

மூன்றாம் நாள் காலையிலே வடிவேல் அன்றையச் செய்தித்தாளைப் புரட்டிக்கொண்டிருந்தார். சென்னைப் பொருட்காட்சி சாலைக்கு அருகிலிருக்கும் கலைக்கூடத்திலிருந்து வெண்கலச் சிலையொன்று இரவிலே களவு போய் விட்டதாம். திருடன் எப்படி உள்ளே நுழைந்தான், எப்படிக் களவாடினான் என்று ஒரு விவரமும் தெரிந்துகொள்ள முடிய வில்லையாம். அது போலீஸ் இலாகாவிற்கே பெரிய திகைப்பை உண்டாக்கிவிட்டது என்று கொட்டை எழுத்தில் காணப்பட்டது.

சில மாதங்களாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலே கோயில்களிலிருந்தும் கலைக்கூடங்களிலிருந்தும் இவ்வாறு சிலைகள் திருட்டுப் போய்க்கொண்டிருந்தன. இந்தச் சிலைகளை எப்படியோ அமெரிக்கா முதலிய வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று, அங்கு நல்ல விலைக்கு யாரோ விற்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்திருந்தது.

இந்தியாவின் கலைப்பொருள்களுக்கு உலகத்திலுள்ள எந்த நாட்டிலும் மதிப்புண்டு. அமெரிக்கர்கள் ஏராளமான பொருள் கொடுத்து நமது நாட்டுப் பழங்காலச் சிற்பங்களையும் சிலைகளையும் செப்புப் பதுமைகளையும் வாங்க ஆவலோடிருக்கிறார்கள். சென்னைக் கலைக்கூடத்தில் இப்பொழுது களவு போன சிலையோ, உலகப்புகழ் பெற்ற நடராஜர் சிலையாகும். உலகிலேயே அதற்கு இணையான சிலை இல்லையென்றும் கூறுவார்கள். அதற்கு விலையே மதிக்க முடியாது. அது இப்பொழுது எப்படியோ மாயமாக மறைந்துபோய்விட்டது. போலீஸ் நாய்களாலும் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகத் திறமையாக இந்தத் திருட்டு நடந்திருக்கிறது. இப்படித் திருடக்கூடியவன் கொல்லிமலைக் குள்ளன் ஒருவனே என்று பொதுவாக அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால், அவன் எங்கிருக்கிறான், எப்படி அவனைக் கண்டுபிடிப்பது, ஆளைக் கண்டுபிடித்தாலும் அவன்தான் திருடன் என்று எப்படி

 ஐயத்திற்கிடமின்றிக் காட்டுவது என்பன போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

வடிவேல் கல்லூரியிலிருந்து வீடு திரும்பும்போது கண்ணகியும் சிறுவர்கள் இரண்டு பேரும் பாதி உறக்கத்தில் இருந்தார்கள். அவர்களைப் பார்த்து அவர், “நாளைக்குக் காலையிலே நாம் வஞ்சியூர் என்ற கிராமத்திற்குப் போகலாம். அங்கே அங்காளம்மன் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது” என்றார் வடிவேல்.

"கிராமத்துக்கா? நாளைக்கே போகலாமா?" என்று உற்சாகமாகத் தங்கமணியும் சுந்தரமும் கூவினார்கள். "இப்பவே போகலாம், அப்பா" என்று கத்தினாள் கண்ணகி. “எத்தனை நாளைக்குத் திருவிழா? அங்கேயே இந்த விடுமுறை முழுவதும் இருக்கலாமா?" என்று கேட்டான் சுந்தரம், "அப்பா, ஜின்காவையும் அழைத்து வருகிறேன்" என்றான் தங்கமணி. இவர்கள் போடுகின்ற சத்தத்தைக் கேட்டு வள்ளிநாயகி, அவர்கள் குதூகலத்திற்குக் காரணம் என்ன என்று அறிந்து கொள்ள அங்கே வந்து சேர்ந்தாள். எப்பொழுது புறப்படுவது, என்ன சாமான்கள் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் வடிவேல் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். வள்ளி நாயகியைக் கண்டதும், விடைத்தாள்களையெல்லாம் நேற்று இரவே திருத்தி முடிந்தது. எனக்குக் கொஞ்சம் ஓய்வு வேண்டும். குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று அவர் சொன்னார்.

“எத்தனை நாளைக்குத் திருவிழா?” இது வள்ளி நாயகியின் கேள்வி.

"திருவிழா பத்து நாள்கள் நடக்கும். வஞ்சியூர் என்ற கிராமம் கொல்லிமலைக்கு அருகிலே இருக்கிறது. அங்கேயே பத்து நாள்களும் தங்குவோம். இங்கிருந்தால் சென்ற ஆண்டைப் போல இப்பவும் மார்க்குக்கு அலையும் உத்தமர்கள் தொல்லை இருக்கும். நாம் போகும் இடமும் யாருக்கும் தெரியக்கூடாது" என்று தம் மனைவிக்கு அவர் விளக்கம் கூறினார்.

எதிர்பாராமல் இந்தப் பயணம் ஏற்பட்டதைக் கண்டு எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி. "டேய் ஜின்கா, உன்னுடைய குரங்குவேலையை அங்கே காண்பிக்கலாம். மரங்கள் ஏராளமாக இருக்கும்" என்று தட்டிக் கொடுத்தான் சுந்தரம். இரவில் அவர்களுக்கு உறக்கமே வரவில்லை. "அண்ணா , அங்கே ஆறு இருக்குமா? அதிலே எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா?" என்று கேட்டாள் கண்ணகி. "நான் வட்டத் தோணியிலே துடுப்புப் போடப் போகிறேன்" என்று சுந்தரம், பரிசல் தள்ளத் தெரிந்தவன் போலக் கூறினான். "நான் அந்தக் குள்ளனைக் கண்டுபிடிக்கப் போகிறேன்" என்று தங்கமணி துப்பறியும் வேலையில் தனக்குள்ள ஆர்வத்தைக் காட்டினான். "மாமா, துப்பறியும் நாவல்தான் படிக்கிறார். நீ, துப்பறியும் சாம்புவே ஆகிவிட்டாய்" என்று கேலி செய்தான் சுந்தரம். இவர்களுடைய உற்சாகத்தைக் கண்டு ஜின்கா, எதையோ புரிந்துகொண்டது போலப் படுக்கையின் மேல் ஏறி 'ஜிங்ஜிங்' என்று குதிக்கத் தொடங்கிவிட்டது. வள்ளிநாயகி எழுந்து வந்து, “இப்படித் தூங்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. புறப்படுவதற்கு நேரமாகிவிடும்" என்று எச்சரிக்காவிட்டால் அவர்கள் தூங்கியேயிருக்க மாட்டார்கள். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/2&oldid=1100158" இலிருந்து மீள்விக்கப்பட்டது