கொல்லிமலைக் குள்ளன்/3

விக்கிமூலம் இலிருந்து

3

டுத்த நாள் காலையில் தத்துவப் பேராசிரியர் வடிவேலின் மாளிகையில் ஒரே பரபரப்பாக இருந்தது. வஞ்சியூர் அங்காளம்மன் திருவிழாவிற்குப் புறப்படுவதற்காக அவசரம் அவசரமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லாரும் பறந்து பறந்து ஒவ்வொரு வேலையையும் கவனித்தார்கள். பத்து நாள்களுக்கு வேண்டிய துணிமணிகளையும் மற்றச் சாமான்களையும் பெட்டிகளில் அடுக்கிவைப்பதில் தங்கமணி, சுந்தரம். கண்ணகி ஆகிய மூவரும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். ஜின்கா தங்கமணிக்குச் சட்டை, சீப்பு முதலியவைகளை ஓடிஓடி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. கண்ணகி ஒரு சிறு கைப்பெட்டிக்குள்ளே தனக்கு வேண்டிய குங்குமம், பவுடர் முதலியவைகளை வைத்திருந்தாள். அந்தப் பெட்டியைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஜின்கா காரை நோக்கி ஓடிற்று. பெட்டியைக் காரில் வைத்துவிட்டு வருவதுதான் அதன் நோக்கம். ஆனால், அது போன அவசரத்தில் கைப்பெட்டி தானாகவே திறந்து, அதிலிருந்த பவுடர் டப்பா அதன் தலைமேல் விழுந்தது. ஜின்காவின் உடம்பு முழுவதும் டப்பாவிலிருந்த வாசனைப்பொடி சிதறி விழவே. அந்தக் குரங்கு விநோதமாகக் காட்சி அளித்தது. “அண்ணா , என் பவுடர் எல்லாம் போச்சு” என்று கண்ணகி அழாத குறையாகக் கூவினாள்.

"ஜின்காவிற்குத்தான் பவுடர் ஜோராக இருக்கிறது. இனிமேல் உனக்கு அது வேண்டாம்" என்று சுந்தரம் நகைத்தான்.

"போகும் வழியிலே வாங்கிக்கொள்ளலாம், கவலைப் படாதே” என்று தங்கமணி ஆறுதல் கூறிவிட்டு, டேய் சுந்தரம், உன் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டாயா? உன் பேனாக்கத்தி எங்கே? அதை மறந்துவிட்டாயா? என்று சுந்தரத்தைப் பார்த்துக் கேட்டான்.

"அதை மறப்பேனா? நீ ஜின்காவை மறந்தாலும் நான் என் பேனாக்கத்தியை மறக்கமாட்டேன்" என்று சுந்தரம் தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த கத்தியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு பதில் கூறினான்.

வஞ்சியூரில் தங்கியிருக்கும் நாள்களில் சமையல் செய்வதற்கு வேண்டிய உணவுப்பொருள்களையும், பாத்திரங்களையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்த வள்ளிநாயகி, "கண்ணகி, எல்லாரும் வாருங்கள். அப்பாவையும் கூப்பிடு. பலகாரம் சாப்பிட்டுவிட்டு விரைவில் புறப்படலாம்" என்று கூறினாள்.

உணவு முடிந்ததும் எல்லாரும் காரில் ஏறிக்கொண்டார்கள். சமையலுக்கு உதவியாக ஒரு சிறுவனும் வந்தான். பேராசிரியர் வடிவேல் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். சில வேளைகளில் அவருக்கு ஓய்வு தரும் பொருட்டு வள்ளிநாயகி கார் ஓட்டினாள்.

வழி நெடுகிலும் பல சிற்றூர்களையும் நாட்டுப்புறக் காட்சி களையும் கண்டு களித்துக்கொண்டே அவர்கள் அன்று மாலை பொழுது சாயும் நேரத்திற்கு வஞ்சியூர் போய்ச் சேர்ந்தனர்.

ஒரு சத்திரத்தில் வடிவேல் தங்குவதற்கு வசதியாக இடம் ஏற்பாடு செய்துகொண்டார். சமையல் செய்வதற்கும், சிறுவர்கள் தனியாக இருந்து இளைப்பாறுவதற்கும் அதில் சிறு அறைகள் இருந்தன.

வெளியிலே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அங்காளம்மன் திருவிழாவைப் பார்க்க வந்த மக்கள் வீதிகளிலும் திருவிழாக் கடைகளிலும் கோயில் பக்கத்திலும் திரண்டிருந்தார்கள். அன்றிரவு கோயிலுக்கு முன்னால் ஒயிலாட்டம் என்னும் நடனம் நடக்குமென்று தெரிந்தது. அதைப் போய்ப் பார்ப்பதென்று வடிவேலும் மற்றவர்களும் திட்டமிட்டார்கள்.

 வள்ளி திருமணக் கதையையொட்டி ஒயிலாட்டம் இரவெல்லாம் நடந்தது. வெவ்வேறு வகையான சந்தங்களில் பாடிக் கொண்டு, எதிரெதிராக இரண்டு வரிசைகளில் இளைஞர்கள் நின்று பல விதமாக ஆடுவதைப் பார்ப்பதில் எல்லோருக்கும் முதலில் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், நாள் முழுவதும் பயணம் செய்த அலுப்பினால் கண்ணகி முதலில் தூங்கி விழத் தொடங்கினாள். சிறுவர்களுக்கும் களைப்பேற்பட்டு விட்டது. ஜின்கா கொஞ்ச நேரம் கூடவே ஆடிக்கொண்டிருந்துவிட்டுப் பிறகு தங்கமணியின் மடியில் வந்து படுத்துக் கொண்டது. அதனால் வள்ளிநாயகி எல்லாரையும் அழைத்துக் கொண்டு சத்திரத்திற்குப் புறப்பட்டாள். வடிவேலுவும் பின் தொடர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கொல்லிமலைக்_குள்ளன்/3&oldid=1100263" இலிருந்து மீள்விக்கப்பட்டது