சங்க இலக்கியத் தாவரங்கள்/136-150

விக்கிமூலம் இலிருந்து
 

வேரல்–சிறுமூங்கில்
டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ்
(Dendrocalamus strictus, Nees.)

வேரல்: இது ஓங்கிய மலைப்புறத்தில் அடர்ந்து, கிளைத்துத் தழைத்து வளரும் புதர்ச் செடி. உட்கூடில்லாத வலிய இம்மூங்கில் கழிகள் பல்லாற்றானும் பயன்படுவன.

சங்க இலக்கியப் பெயர் : வேரல்–சிறுமூங்கில்
தாவரப் பெயர் : டென்ரோகாலமஸ் ஸ்ட்ரிக்டஸ்
(Dendrocalamus strictus, Nees.)

வேரல்–சிறுமூங்கில் இலக்கியம்

‘வேரல்’ எனப்படும் சிறு மூங்கிலுக்குக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் இடங்கொடுத்துள்ளார்.

“விரிமலர் ஆவிரை வேரல் சூரல்” -குறிஞ். 71

கூத்தர் பாணர் முதலியோரை ஆற்றுப்படுத்திய பெருங்கௌசிகனார் அவர்கட்கு அறிவுரை கூறுகின்றார். ‘இழுக்கலுடைய வழியிலே செல்லுங்கால் அங்கு வழி முழுதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல்களை உடைய சிறு மூங்கிலோடே வேழத்தினது மெல்லிய கோல்களையும் பற்றுக்கோடாகப் பிடித்துக் கொண்டு போவீராக’ என்கிறார்.

“முழுநெறி பிணங்கிய நுண்கோல் வேரலொடு
 எருவை மென்கோல் கொண்டனிர் கழிமின்”

-மலைப. 223-224


‘நுண்கோல் வேரல்’என்று இதனைக் குறிப்பிடுகின்றமையின் வேரல் சிறுமூங்கிலாதலும் பெற்றாம். மேலும் வேரல், வேலியாக அமையுமென்பதைப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

“வேரல் வேலி வேர்க்கோட் பலவின்” -குறுந் 18 : 1
“வேரல் வேலிச் சிறுகுடி” -நற். 232 : 4
“. . . . . . . . . . . . வேரல்
 பூவுடை அலங்குசினை புலம்ப”
-திருமு. 297-298

என்று ‘சிறுமூங்கிலினது பூவுடைத்தான அசைகின்ற கொம்பு’ என்று நக்கீரரும், இதன் பூவைக் குறிப்பிடுகின்றார். ஆதலின் உந்தூழின் பூவும் வேரலின் பூவும் பயன்பட்டன என அறியலாம். எனவே, வேரல், பெருமூங்கிலைப் போலவே அடர்ந்து, கிளைத்து, மலைப்புறத்தில் செழித்து வளரும் புதர்ச் செடி என்பது போதரும்.

வேரல்—சிறுமூங்கில் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : டென்ரோகாலமஸ் (Dendrocalamus)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்ட்ரிக்டஸ் (strictus)
சங்க இலக்கியப் பெயர் : வேரல்
உலக வழக்குப் பெயர் : மலை மூங்கில், சிறு மூங்கில், கல் மூங்கில்
தாவர இயல்பு : தரைமட்டத் தண்டிலிருந்து கிளைத்து, அடர்ந்து, மலைப்புறத்தில் செழித்து வளரும் புதர்ச் செடி; பல்லாண்டு வரை வளர்ந்து, பெருமூங்கிலைப் போல ஒரு தரம் பூக்கும். 300 முதல் 4,800 அடி வரை உயரமுடைய மலையில் வளரும்.
தண்டு : ‘கல்ம்’ எனப்படும் கோல்கள் 20 முதல் 50 அடி உயரம் வரை ஓங்கி வளரும். உள் துளை இராது. 1 முதல் 3 அங்குலத் தடிப்பு உடையன; கணுக்களில் கிளைகள் வளர்வதில்லை.
மஞ்சரி : 10 அங்குல நீளமும், 0.5-1.5 அங்குல, அகலமுமான பூந்துணர். மங்கிய வெண்ணிறம்.
மலர் : பெருமூங்கிலைப் பெரிதும் ஒத்தது.
விதை : பெருமூங்கிலரிசியைப் போல, இதிலும் மூங்கிலரிசி உண்டாகும்; இதனை மலைவாழ் மக்கள் உணவாகக் கொள்வர் .

இதன் கோல்கள், கம்புகளாகவும், கூரை வீடு கட்டுதற்கும், தடியடிப் பணிக்குக் காவலர்களுக்குக் கொடுக்கப்படும் ‘லத்தி’ என்ற கைக் கம்புகளாகவும் பயன்படும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 70 என பார்த்தசாரதி (1946a) என்பாரும், 2n = 72 என, டிஷ்லர் (1927) ரிக்காரியா, கோட்வால்(1940b) என்போரும் கணக்கிட்டுள்ளனர்