சங்க இலக்கியத் தாவரங்கள்/144-150

விக்கிமூலம் இலிருந்து
 

வரகு
பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
(Paspalum scrobiculatum, Linn.)

“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
 சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையோடு
 இந்நான் கல்லது உணவும் இல்லை”
-புறநா. 335 : 4-6


என்று கூறுகின்றார் புலவர் மாங்குடி கிழார். வரகு ஓர் ஆண்டுச் செடி; வரகு அரிசிக்காகப் பயிரிடப்படுகின்றது.

சங்க இலக்கியப் பெயர் : வரகு
தாவரப் பெயர் : பாஸ்பாலம் ஸ்குரோபிகுலேட்டம்
(Paspalum scrobiculatum, Linn.)

வரகு இலக்கியம்

சங்க இலக்கியத்தில் வரகு மிகுதியாகக் கூறப்படுகிறது. கபிலர் வரகு விளைவிப்பதைச் சிறப்பாகப் பாடுகின்றார்.

“கார்ப் பெயற்கலித்த பெரும்பாட்டு ஈரத்து
 பூழி மயங்கப் பலஉழுது, வித்தி
 பல்லி ஆடிய பல்கிளைச் செவ்விக்
 களைகால் கழாலின் தோடு ஒலிபுகந்தி
 மென்மயில் புளிற்றுப் பெடை கடுப்ப நீடி
 கருந்தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து
 கீழும் மேலும் எஞ்சாமைப் பலகாய்த்து
 வாலிதின் விளைந்த புதுவரகு அரிய”

(பூழி-புழுதி; பீள்-சூல்) -புறநா. 120 : 2-9


கார்காலத்து மழைக்குப் பின் வரகு விதைப்பர் என்றும், வரகின் அடித்தண்டைக் ‘கருங்கால் வரகு’ என்றும், வரகின் கதிர் சுவையுடையதென்றும், புறாவின் கருவைப் போன்றது வரகு என்றும், நீண்ட பூங்கொத்தையுடைய பூளைப் பூக்களை ஒத்தது வரகுக் கதிர் என்றும், வரகை உரலிலிட்டு நன்கு குத்தி வரகு அரிசியாக்கி பால்விட்டுப் பொங்கிச் சோறாக்கித் தேனொடு உ ண்பர் என்றும், வரகுக் கதிரை மயில், மான் முதலியவை உண்ணும் என்றும், வரகு வைக்கோலைக் கொண்டு கூரை வேய்வர் என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.

“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்” -குறுந். 220 : 1
“வன்பா லான கருங்கால் வரகின்” -புறநா. 384 : 4
“கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே” -புறநா. 335 : 4

“கருங்கால் வரகின் இருங்குரல் புலர”
(குரல்-கதிர்) -மதுரைக். 272
“கவைக்கதிர் வரகின் கால்தொகு பொங்கழி” -அகநா. 393 : 5

“மாபுதல் சேர வரகுஇணர் சிறப்ப
 மாமலை புலம்ப கார்கலித்து அலைப்ப”
-ஐங். 496 : 1-2

“கவைக்கதிர் வரகின் யாணர்ப்பைந்தாள்” -அகநா. 359 : 13

“களைகால் கழீஇய பெரும்புன வரகின்
 கவைக்கதிர் இரும்புறம் கதூஉ உண்ட
 குடுமி நெற்றி நெடுமாத் தோகை”
-அகநா. 194 : 9-11
“விதையர் கொன்ற முதையல் பூழி
 இடுமுறை நிரப்பிய ஈர்இலை வரகின்
 கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை”
-நற். 121 : 1-3

“இதைப்புன வரகின் அவைப்பு மான்அரிசியொடு” -அகநா. 394 : 3

“கருவை வேய்ந்த கவின்குடிச் சீரூர்
 நெடுங்குரல் பூளைப் பூவின் அன்ன
 குறுந்தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி”
-பெரும்பா. 191-193

(கருவை-வரகின் வைக்கோல்; சொன்றி-சோறு)

வரகு தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : பாஸ்பாலம் (Paspalum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்குரோபிகுலேட்டம் (scrobiculatum)
சங்க இலக்கியப் பெயர் : வரகு
தாவர இயல்பு : ஓராண்டுச் செடி. கிளைத்து வளரும்; ‘கல்ம்’ என்ற தண்டுப்பகுதி 3 அடி வரை ஓங்கி வளரும்.
இலை : குறுகிய, நீண்ட இலை 18 அங்குல நீளமும், 1- 4 அங்குல அகலமும் உள்ளது. பளப்பளப்பானது. இலை விளிம்புகள் உள்வளைவாக இருக்கும்.
மஞ்சரி : தண்டின் நுனியில் கதிராக நுனி வளர் பூந்துணராக உண்டாகும். இணர்த் தண்டு தட்டையானது. கதிர்கள் இரண்டாகக் கிளைத்திருக்கும். ‘ஸ்பெக்லெட்’ என்னும் இது 0.09 அங்குல நீளமுள்ளது.
மலர் : இரு பாலான இதன் மலர் ‘குளும்’ என்ற உமிக்குள் உண்டாகும். மேற்புற ‘லெம்னாவும்’ ‘பாலியா’ செதில்களும் சொரசொரப்பானவை. 2 ‘லாடிக்கியூல்ஸ்’ இருக்கும்.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகள் தனித்திருக்கும்.
சூலக வட்டம் : லெம்னா, பாலியா ஆகிய செதில்களுக்குள், இருபக்க விரிவான வரகு அரிசி உண்டாகும். இதனைப் பல உமிகள் மூடியிருக்கும்.

வரகு இதன் அரிசிக்காகப்_பயிரிடப்பட்டு வருகிறது. வரகு அரிசி நல்ல சத்துள்ள உணவுப் பொருள். இதனை அரிசி ஆக்குதற்கு நன்கு குத்தி, மேல் உறைகளாகிய உமிகளைப் போக்க வேண்டும். இல்லாவிடில், இது ஒரு மயக்கந்தரும் நச்சுப் பொருளாகி விடும். இது 7000 அடி உயரமுள்ள மலைகளிலும் வளரும் இயல்புடையது. இதன் தழை வைக்கோலாகி, மாடுகளுக்கு உணவாகும். இதனைக் கூரை வேய்வதற்கும் பயன்படுத்துவர்.