சரிந்த சாம்ராஜ்யங்கள்/சாம்ராஜ்ய மென்றால் என்ன ?

விக்கிமூலம் இலிருந்து

 இயேசு பிறப்பதற்கு முன் நான்காவது நூற்றாண்டில் மகா வீரன் அலெக்சாண்டர் எழுப்பிய சாம்ராஜ்யத்தைக் கொடுமையான தென்றும் ; அதே நூற்றாண்டில் அசோகன் எழுப்பிய சாம்ராஜ்யத்தை நல்ல வல்லரசென்றும் கூறலாம்.

அலெக்சாண்டரின் மண்ணாசை

தன்னுடைய அதிகாரத்தொனி தரணியெல்லாம் எதிரொலிக்க வேண்டும் என்றும், தன் குதிரையின் காலடிகள் படாத இடமே நானிலத்தில் இருக்கக் கூடாதென்ற முறையிலே, அன்று பூகோளத்திலே காணப்பட்ட இடங்களில் சரிபாதியைத் தன் வசப்படுத்தி ஒரு பெரிய கிரேக்க சாம்ராஜ்யத்தை எழுப்பினான் மாசிடோன்யாவின் மகாவீரன் அலெக்சாண்டர்.

கி. மு. நான்காவது நூற்றாண்டில் பூகோளத்தில் தெரிந்த பாதி உலகத்தை பதிமூன்று ஆண்டுகளில் வெற்றி கண்டான். அவன் வெற்றி முழக்கம் ஐரோப்பா, இந்தியாவின் பெரும் பகுதி (திராவிடம் தவிர) பஞ்சாப் முதலிய எல்லா இடங்களிலும் முழங்கின. தோற்றோடிய மன்னர்களை மேலும் மேலும் பயமுறுத்தாமல் அவர்களுடைய பரிபூரண அன்பைப் பெற்ருன். அப்படி அவன் செய்தது அவர்கள் மேலிருந்த அபிமானத்தாலல்ல, அகிலத்தையே கட்டியாளவேண்டுமென்ற தனது குறிக்கோளுக்கு இடையூராக இந்த குட்டி மன்னர்களின் எதிர்ப்பை வளரவிடக் கூடாதென்ற அரசியல் விவேகத்தால்.

இளமை

அலெக்சாண்டர் சிறுவனுயிருக்கும்போது அவன் தந்தை பிலிப் என்ற மன்னன் பல நாடுகளை வென்றான்.