சொன்னால் நம்பமாட்டீர்கள்/தமிழ் ஹரிஜன்

விக்கிமூலம் இலிருந்து
தமிழ் ஹரிஜன்

மகாத்மாஜி கடைசியாகச் சென்னைக்கு வந்திருந்தபோது அவரிடம் ராஜாஜி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். “பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் பகல் 12 மணிக்கு மக்களால் பகிரங்கமாகச் சிறையை உடைத்து விடுதலை செய்யப்பட்ட முதல் ஆள் இவர்” என்று கூறினார்.

மகாத்மாஜி “எந்த ஊரில் நடந்தது?” என்றார். “திருவாடானையில்” என்றேன் நான் சுருக்கமாக, “இவர் இப்போது சிறந்த தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தங்கள் ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் வெளியிட விரும்புகிறார்.” என்று ராஜாஜி சொன்னார்.

காந்திஜி சிரித்துக்கொண்டு “அச்சா அச்சா” என்று சொல்லி “நஷ்டம் வராமல் நடத்துவாயா?” என்று கேட்டார்.

அதற்கு ராஜாஜி, “இவரும் உங்களைப் போல வைசிய சமூகத்தைச் சேர்ந்தவன்தான். அதனால் அதைப்பற்றிக் கவலை வேண்டாம்.” என்றார். உடனே மகாத்மாஜி “அச்சா” என்று கூறி இப்போதே, தமிழ் ஹரிஜன் துவக்க விழா நடத்தி விடலாமே, எனக்கு 10 நிமிஷம் ஓய்விருக்கிறதே?” என்றார். எனக்குக் கையும் காலும் ஓடவில்லை.

ராஜாஜி தலைமையில் காந்திஜியே ‘தமிழ் ஹரிஜன்’ பத்திரிகையைத் துவக்கும் முதல் நடவடிக்கையாக, ‘தமிழ் ஹரிஜன்’ என்று தமிழில் எழுதித்துவக்கி வைத்தார். நான் அதைப் பக்தியுடன் பெற்றுக் கொண்டு நன்றி கூறினேன். எப்படி நன்றி கூறினேன் என்று நினைக்கிறீர்கள். காந்தியடிகள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து அவர் பாதத்தைக் கண்ணில் ஒற்றிக்கொண்டேன்.

அதன் பின்னர் தமிழ் ஹரிஜன் பத்திரிகையைத் துவக்கினேன். சிறந்த தேசபக்தரும்-அறிஞருமான திரு பொ. திருகூட சுந்தரம் பிள்ளை அவர்கள் தமிழ் ஹரிஜன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார்கள். காந்திஜி அமரராகும் வரை அந்தப் பத்திரிகையை விடாமல் நடத்தினேன். மகாத்மாஜி என்னை சென்னையில் சந்தித்த மறுவாரம் ஹரிஜன் பத்திரிகையில் என்னைப்பற்றி கீழ்க்கண்டவாறு ஒரு குறிப்பு எழுதினார்.

“ஹரிஜன் பத்திரிகையைத் தமிழில் நடத்துவதற்கு ஒரு இளைஞரை ஸ்ரீ ராஜாஜி சென்னை இந்தி பிரசாரசபையில் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த இளைஞர் பெயர் சின்ன அண்ணாமலை என்று ராஜாஜி சொன்னார். அதன் பின் ஸ்ரீ சின்ன அண்ணாமலையைப் பற்றி ஸ்ரீ சத்யநாராயணா மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை சிறை சென்றவர் என்றும், குறிப்பாக 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் இவர் இருந்த திருவாடானைச் சிறையை உடைத்து, மக்கள் இவரை விடுதலை செய்தனர் என்றும் அறிந்து ஆச்சரிய மடைந்தேன்.

அந்தப் போராட்டத்தில் பல பேர் உயிர் இழந்தனரென்றும் ஸ்ரீ சின்ன அண்ணாமலை கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிர் தப்பியவர் என்றும் கேள்விப்பட்டேன். இப்படிப்பட்ட இளைஞர்களை நினைத்துப் பெருமை அடைகிறேன். ஸ்ரீ ராஜாஜி சாதாரணமாக யாரையும் சிபாரிசு செய்யமாட்டார். ஸ்ரீ சின்ன அண்ணாமலையைச் சிபாரிசு செய்திருப்பது ஒன்றே அவர் ரொம்பப் பொருத்தமானவர் என்பதில் சந்தேகமில்லை.

எனவே ‘ஹரிஜன்’ பத்திரிகையைத் தமிழில் நடத்த ஸ்ரீ சின்ன அண்ணாமலைக்கு நான் அனுமதி வழங்கி என் வாழ்த்துதலையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.-எம்.கே.காந்தி