தந்தையும் மகளும்/175

விக்கிமூலம் இலிருந்து


175அப்பா! பைத்திய நாய் கடித்தால் நாய்போல் குரைப்பார்கள் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பைத்திய நாய் என்றால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கிறதே, அதுபோல் பைத்தியம் பிடித்த நாய் என்பதன்று ஆயினும் நரம்புகளில் உண்டாகும் ஒருவகை விஷத்தால் அது தனியாகத் திரியவும் எதைக் கண்டாலும் குரைக்கவும் செய்வதால் அதைப் பைத்திய நாய் என்று கூறுகிறார்கள்.

அந்த நாய் ஒருவரைக் கடித்தால் அவ்விஷம் நிறைந்த அதன் உமிழ் நீர் அவருடைய இரத்தத்தில் கலந்து அவருக்கும் நாய்க்குள்ள நோய் வந்துவிடுகிறது. பலவிதமான பொறுக்க முடியாத துன்பங்கள் உண்டாகி விடுகின்றன. அதிலும் முக்கியமாகச் சுவாசிப்பதும் விழுங்குவதுமே அசாத்தியமாகி விடுகின்றன. நோயாளிக்குப் பொறுக்க முடியாத தாகம் உண்டாகும். ஆனால் தண்ணிரை விழுங்க முடியாது. தண்ணிரை நினைத்தால் கூடப்போதும். உடனே தொண்டை அடைத்துக் கஷ்டப்படுவார். இறுதியில் மூச்சுவிடக் கஷ்டப்படுவார். அப்பொழுது அவர் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் போது நாய் குரைப்பது போன்ற சப்தம் கேட்கும். அதைக் கொண்டுதான் பைத்தியக்கார நாயால் கடிக்கப் பட்டவர்கள் நாய்போல் குரைப்பார்கள் என்ற எண்ணம் உண்டாயிருக்கிறது. ஆனால் அவர் வாய் குரைப்பதில்லை,

அவருடைய வாயில் ஊறும் உமிழ்நீர் அதிகக் கட்டியாக இருக்கும். அதை அவர் விழுங்க அஞ்சி வெளியில் துப்பிக்கொண்டே யிருப்பார். அத்துடன் அவருடைய வாயின் தாடைகளில் வலிப்புக்காணும். அப்பொழுது பார்த்தால் அவர் எதையோ கடிக்கப் போவது போலத் தோன்றும். அதை வைத்து நாயால் கடிக்கப்பட்டவர்கள் நாய்போல் கடிக்க வருவார்கள் என்றும் கூறுவதுண்டு.

இந்நோய்கண்டால் அது நாலைந்து நாளில் கொன்று விடும். ஆதலால் எந்த நாய் கடித்தாலும் உடனே டாக்டரிடம் சென்று காட்டுதல் நல்லது. உடனே டாக்டரிடம் காட்டுவதால் நோயைக் குணமாக்கி விடமுடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/175&oldid=1538630" இலிருந்து மீள்விக்கப்பட்டது