தமிழில் சிறு பத்திரிகைகள்/மணிக்கொடியின் பிற்காலம்

விக்கிமூலம் இலிருந்து



4. மணிக்கொடியின் பிற்காலம்

மணிக்கொடி இலக்கியத் தரத்துடன் சிறுகதைத் துறையில் அரிய சாதனைகள் புரிந்து கொண்டிருந்த போதிலும், பொருளாதார வெற்றி காண முடிந்ததில்லை.

‘நான்கு வருஷ அனுபவ'த்துக்குப் பிறகு, 1937 அக்டோபர் 15-ஆம் தேதி இதழில், முதல் அத்தியாயம் என்ற பகுதியில், அதன் ஆசிரியர் இவ்வாறு எழுதியிருக்கிறார்

“இதுவரை, பல்வேறு காரணங்களால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த ‘மணிக்கொடி' இனி ஒரு கட்டுப்பாடான ஸ்தாபனத்தின் நிர்வாகத்தில், நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்டின் பிரசுரமாக வெளிவரும். ஆரம்பம் முதல் இதுவரை இப்பத்திரிகை அடைந்த கஷ்டங்களுக்கெல்லாம் முக்கியமான காரணம் முதலின்மைதான்.

தனிமனிதனின் சக்தி எட்டும் எல்லைவரை மணிக்கொடி யைத்தாங்கி நிற்கும் முயற்சி நடந்தது. ஆயினும் அந்த சக்தி போதவில்லை. பத்திரிகையின் வெளியீட்டில் அடிக்கடி சோர்வு ஏற்பட்டது. . . . . . .

சிற்சில சமயங்களில் மணிக்கொடியை நிறுத்திவிடலாமென்று கூட யோசிக்க நேர்ந்ததுண்டு. அந்த சமயங்களிலெல்லாம், நாம் அந்தக் கடைசிப் படியை மிதிக்காமல் தடுத்து, மேலும் மேலும் முயல உற்சாகமும் பலமும் அளித்தது நமது அன்பர்களின் கடிதங்கள்தான். ஒவ்வொரு தடவையும் நாம் அத்தகைய முடிவைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் அன்பர்களின் ஆதரவு நிறைந்த கடிதங்கள் வந்து சேரும்.

இந்த நிலைமையில் மணிக்கொடியை ஒரு கூட்டு ஸ்தாபனமாக்கி, அந்த லட்சியத்தில் மற்றும் பலருக்குப் பங்கு கொடுத்தாலென்னவென்று சில நண்பர்கள் எழுதினார்கள். அவர்கள் யோசனையை ஏற்று ஒரு கூட்டுறவு ஸ்தாபனம் நிறுவ முயற்சிகள் செய்யப்பட்டன.

‘மணிக்கொடி' தோன்றிச் சரியாக நான்கு வருஷங்களாகின்றன. முதல் பதினெட்டு மாதம் ராஜீய வாரப் பதிப்பாக வெளியிடப்பட்டு வந்தது. பின்னர், தமிழ் இலக்கிய வளர்ச்சித் துறையிலிருந்த தேவையையுணர்ந்தும், மணிக்கொடி ஊழியர்களுக்கு இந்தத் துறையிலிருந்த உற்சாகத்தினாலும் மாதமிருமுறை சிறுகதைப் பத்திரிகையாக மாற்றப்பட்டது. . . . .

கூட்டு ஸ்தாபனம் தற்காலிகமாக இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 'மணிக் கொடி' யைச் சீர்திருத்தி அபிவிருத்திகளுடன் தொடர்ந்து பிரசுரிப்பது. இரண்டாவது, தமிழில் எல்லோரும் வாங்கக் கூடிய விலையில் உபயோககரமான புஸ்தகங்களைப் பிரசுரித்து, சுலபமாக எங்கும் கிடைக்கக் கூடிய முறையில் பரப்புவது.”

கூட்டு ஸ்தாபனம் 'நவயுகப் பிரசுராலயம் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கியது. அது முதலாவதாக, ஏ. என். சிவராமன் எழுதிய 'மாகாண சுயாட்சி' என்ற நூலை எட்டணா விலையில் பிரசுரித்தது. தொடர்ந்து, ப. ராமஸ்வாமி எழுதிய 'மைக்கேல் காலின்ஸ்', கி. ரா. வின் 'தேய்ந்த கனவு' (சார்லஸ் டிக்கன்சின் 'இரு நகரங்களின் கதை' மொழிபெயர்ப்பு), கு. பா. ரா. வின் 'இரட்டை மனிதன்' (டாக்டர் ஜெகில் அண்ட் மிஸ்டர் ஹைட் மொழிபெயர்ப்பு ) போன்றவற்றை வெளியிட்டது. எட்டணா விலையில், அதிகப் பக்கங்களுடன் பிரசுரமான இவ்வெளியீடுகள் வாசகர்களின் வரவேற்பை மிகுதியாகப் பெற்றன.

அதே சமயம், பெரிய புத்தகங்களாக, வெவ்வேறு விலை விகிதங்களில், புதுமைப்பித்தன் கதைகள், 'உலகத்துச் சிறுகதைகள்' (பு. பி. மொழி பெயர்த்தவை), 'பாஸிஸ்ட் ஜடாமுனி' ( சொ. விருத்தாசலம் என்ற பெயரில் பு: பி. எழுதியது. சர்வாதிகாரி முசோலினியின் வரலாறு), 'கப்சிப் தர்பார்' ( புதுமைப்பித்தனும் ந. ராமரத்னமும் சேர்ந்து எழுதிய ஹிட்லர் வரலாறு) போன்றவற்றையும் வெளியிட்டது.

‘மணிக்கொடி' பத்திரிகை சுயமான சிறுகதைப் படைப்புகளுடன், உலக இலக்கியங்களின் சிறந்த கதைகளையும், இந்திய மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளையும் மொழிபெயர்ப்புகளாக வழங்கிக் கொண்டிருந்தது.

வாசகர்களின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் பகுதியாக 'தெரிந்ததும் தெரியாததும்' அமைந்திருந்தது. இலக்கியங்களிலிருந்து தொகுக்கப்பட்ட கேள்விகளும், வேறு பல வினாக்களும் இப்பகுதியில் இடம் பெற்றன. அவற்றுக்கு உரிய விடைகள் விரிவாக மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன.

பிற்காலத்தில், வாசகர்களை வசீகரிப்பதற்காக சினிமா நடிகைகள், நடிகர்கள், படக்காட்சிகளின் படங்களும், திரைப்பட விமர்சனங்களும் மணிக்கொடியில் சேர்க்கப்பட்டன.

பத்திரிகை லிமிடெட் கம்பெனியின் நிர்வாகத்துக்கு வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பி. எஸ். ராமையா ஆசிரியப் பொறுப்பை விட்டுவிட நேரிட்டது. மணிக்கொடி நிர்வாகத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 1938 ஜனவரி 27-ம் நாளுடன், ‘மணிக்கொடி'யோடு ராமையாவுக்கு இருந்த தொடர்பு முடிந்தது. ப. ராமஸ்வாமி (பரா. ) அதன் ஆசிரியரானார். தமிழில் சிறு பத்திரிகைகள்

ப. ரா. முதலில் ஒரு அரசியல்வாதி. இலக்கிய ஈடுபாடு அடுத்தபட்சம்தான் அவருக்கு. அவருடைய பொறுப்பில், மணிக்கொடியில் அரசியல் விவகாரங்களும் மிகுந்த கவனிப்பைப் பெற்றன. ஏ. ஜி. வெங்கடாச்சாரியின் அரசியல் விமர்சனக் கட்டுரைகள் பல பக்கங்களை எடுத்துக் கொண்டன. அரசியல் கார்ட்டுன்கள் வெளியிடப் பெற்றன.

ராமையா காலத்தில் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மணிக் கொடிக்குக் கதைகள் எழுதி, அதற்குத் தனிச்சிறப்பு அளித்துவந்த படைப்பாளிகள் சிறிது சிறிதாகத் தங்கள் தொடர்பைக் குறைத்து, அப்புறம் எழுதாமலே இருந்துவிட்டார்கள். புது எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் வந்துள்ளன. உலகத்துக் கதைகளின் மொழிபெயர்ப்புகள் வேறு சிலரால் ( முக்கியமாக, ப. ரா. வின் தம்பி சஞ்சீவியால்) செய்யப் பட்டிருக்கின்றன.

இந்த விதமாக 'மணிக்கொடி' 1930 கடைசிவரை வெளிவந்திருக்கிறது. பிறகு நின்றுவிட்டது. நவயுகப் பிரசுராலயம் லிமிடெட் நிறுவனத்தினர் புத்தகப் பிரசுரத்தில் மட்டுமே கருத்துச் செலுத்தலாயினர்.

‘மணிக்கொடி' ஒரு வரலாறு ஆகிவிட்டது. இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை அது அமைத்துக் கொண்டது.

பின்வந்த இலக்கியவாதிகள் மணிக்கொடி எழுத்தாளர்களைத் தங்கள் முன்னோடிகளாகக் கொண்டார்கள். பின்னர் இலக்கியப் பத்திரிகை நடத்த விரும்பியவர்கள் மணிக்கொடி மாதிரி பத்திரிகை நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த அளவுக்கு மணிக்கொடி ஒரு முன்மாதிரி ஆகத் திகழ்ந்தது.

சிறுகதைக்குச் சீரிய பணி ஆற்றியதோடு, மணிக்கொடி, யாப்பில்லாக் கவிதையான வசனகவிதைக்கும் அரங்கம் அமைத்துக் கொடுத்தது. ந. பிச்சமூர்த்தியும், கு. ப. ராஜகோபாலனும் தங்கள் கவிதை முயற்சிகளை இப்பத்திரிகையில் வெளியிட்டார்கள்.

‘மணிக்கொடி' படைப்பாளிகளின் எழுத்துக்களை வெளியிடுவதற்கென்று 1939-ல் சென்னையில், க நா. சுப்ரமண்யம் சூறாவளி பத்திரிகையை ஆரம்பித்தார்.

இது சிறு பத்திரிகை இனத்தைச் சேர்ந்தது அல்ல. இலக்கிய நோக்குடனும் இதர பல விஷயங்களோடும்-கனமான விஷயங்களைக் கொண்டு-ஒரு வாரப் பத்திரிகையை, 'ஆனந்த விகடன்' மாதிரி, விகடனுக்குப் போட்டி மாதிரியும் நடத்த முடியுமா என்று பார்க்கும் ஒரு சோதனை முயற்சியாகவே அது இருந்தது.

இச் சோதனை 1939 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. க. நா. சுப்ரமண்யம் ஆசிரியர். கி. ரா. துணை ஆசிரியர். இவ் வாரப் பத்திரிகையில் புதுமைப்பித்தன், கு. ப. ரா. ந. சிதம்பரசுப்ரமண்யன், ராமையா ஆகியோர் கதைகள் எழுதினார்கள். ச. து. சுப்பிரமணிய யோகியார், பாரதிதாசன் கவிதைகள் வந்தன. க. நா. சு. நிறையவே எழுதியிருக்கிறார். புத்தக மதிப்புரை இதழ்தோறும் இடம் பெற்றது குறிப்பிடத்தகுந்தது. அரசியல் செய்திகள், அரசியல் கட்டுரைகள், பெரிய மனிதர்களைப் பற்றி, சினிமா விமர்சனங்கள், சினிமா சம்பந்தமான படங்கள் எல்லாம் உண்டு.

வசன கவிதை குறித்து ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை முதன் முதலில் சூறாவளிதான் வளர்த்தது.

‘சூறாவளி' வியாபார வெற்றியாக விளங்கவில்லை. காலம் தவறாது தொடர்ந்து பிரசுரம் பண்ணவும் இயலவில்லை. 20 இதழ்களுடன், 1939 செப்டம்பரில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

சூறாவளி அட்டைச் சித்திரத்தில் புதுமை பண்ணியது குறிப்பிடத் தகுந்தது. சூறாவளிக் காற்றின் வேகத்தை-அதன் வலிய சக்தியைபுலப்படுத்துவது போன்ற ஓவியங்கள் அட்டைப் படமாக அச்சிடப்பட்டன. ஒவ்வொரு மாதமும், நான்கு வாரங்களுக்கும் ( அல்லது ஐந்து வாரங்கள் ஒரே ஓவியமே. வாரம்தோறும் வெவ்வேறு வர்ணத்தில் அச்சாவது வழக்கம். இவ் ஒவியங்கள் வசீகர வனப்புடன் திகழ்ந்தன.