தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/043-066

விக்கிமூலம் இலிருந்து

பெருங்கதைப் பதிப்பு

ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில் பெருங்கதை என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும், முடிவும் இல்லாமல் இருந்தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்கவில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அதைப் பதிப்பிக்க ஆசிரியர் எண்ணியிருப்பதை அறிந்து பலர் அதைப் பற்றி விசாரித்தார்கள். ஒருவர் பெருங்கதை முழுவதும் தம்மிடம் இருப்பதாகச் சொல்லி, அதை அனுப்பிவைப்பதாகப் பணம் வாங்கிப் போனார். பல நாட்கள் சென்றன. அவர் அனுப்பவில்லை. வடமொழியில் பிரகத்சம்கிதா என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்துகொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைப் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலே அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.