தாய்மொழி காப்போம்/கொள்கை வாள்

விக்கிமூலம் இலிருந்து

கொள்கை வாள்!

இனமானச்செம்மல் புலவர் இளஞ்செழியன் எம்.ஏ.,

“தாய்மொழி காப்போம்” என்ற
தண்டமிழ்க் கவிதைக் காட்டுள்,
தோய்ந்ததென் உள்ளம்! சங்கத்
தொகைநூலைப் படிப்பதைப்போல்
பாய்ந்ததென் விழிகள்! பாட்டின்
பகர்பொருள் யாவற் றையும்
ஆய்ந்ததென் அறிவு! ஆகா,
அற்புதம் கவிஒவ் வொன்றும்!


முடியா சாயி ருந்த
முத்தமிழ்க் கவிஞர், பாடி
முடிக்கா தெதுவும் இல்லை!
முழுவதும் தமிழைக் காக்கும்
அடிகளே யாகும்! கையால்
ஆகாத தமிழர்க்கெல்லாம்
தடியடி தருகின் றாரே,
தரும்ஒவ்வொர் கவிதை தோறும்!


செந்தமிழ்க் கவிஞர், செப்பும்
சேதிகள் சிலிர்க்க வைக்கும்!
இந்தியை எதிர்க்கும் பாடல்
இப்போதே கிளம்ப வைக்கும்!
வந்ததைக் கவிதை யாக்கும்
வரம்பிலார் நடுவில், யாப்புச்
சந்தனக் கவிஞர், அன்னார்
சங்கத்துப் புலவர் என்பேன்.

'ஐக்கூ'என் றாடு வோரை
'அடிமைகள்' எனக்கு றித்தார்.
மைக்குழல் தமிழ்ப்பெண் ணாள்மேல்
மலையென மனம்கு வித்தார்!
தைக்கவே எழுது கின்ற
தனித்திறன் என்னே! என்னே!
வைக்கவே முடிய வில்லை
வாசித்தேன் சுவாசித் தேனே!

உணவினை ஊட்டு தல்போல்
உணர்வினை ஊட்டு கின்றார்!
பணம்பண்ணப் பாடி டாத
பண்பாட்டுக் கவிஞர், நாளும்
கணந்தோறும் சிந்த னையால்
கவிதையாய் வாழ்ந்திட் டாரே!
மணந்திட்ட மரபு முல்லை!
மறைந்தது இன்று இல்லை!

பலரையும் பாட்டுக் குள்ளே
பாவலர் போற்று கின்றார்!
இலரையும் உளராய், அன்னார்
எழுத்துரு வாக்கும்! இந்தப்
புலவரைப் பின்தொ டர்வேன்!
போர்க்குணம் பெறுவேன்! எந்தக்
களரையும் கழனி யாக்கும்
கவிதைகள் தருவேன் நானும்!

வார்த்தைகள் அல்ல, தெற்கு
வரலாறு, மானம், வீரம்,
வார்த்தெடுத் துள்ளார் பாட்டில்!
வழிவழித் தமிழர் வாழ்வைச்
சேர்த்துச்சேர்த் தெழுது கின்றார்
சிந்திக்க வைக்கின் றாரே!
நேர்த்திகொள் வீணை செய்தே
நீட்டினார் என்று சொல்வேன்!

கோஇள வழகன், தமிழ்மண்
கொண்டலாய்த் தோன்றி யிங்கே
பாமுடி யரசர் கீர்த்தி
பாரெலாம் பரவு தற்கே
தாவெனக் கூறா முன்னம்
தருகிறார் அவர்ப டைப்பை!
மாபெரும் பதிப்புத் தொண்டில்
மணிமுடி சூடு கின்றார்!

காரைக்கு டியார்ந மக்குக்
கவிதைகள் என்னும் பேரில்
கூரிய வாள்தந் துள்ளார்!
கொள்கைவாள் அதுதான்! அந்த
ஆரிய சூழ்ச்சி தன்னை
அடித்துமே நொறுக்கி யுள்ளார்!
நீர் இதைப் படித்துப் பாரீர்!
நிமிருவீர்! தமிழன் ஆவீர்!